நதியின்
முதுகுப் பக்கம்
வறட்சியில்
கழியும் நாட்கள்
வெள்ளம்
வந்தால் ஓடப் போகிறது
வறட்சி
வந்தால் வாடப் போகிறது
நதிகளின்
கையில் என்ன இருக்கிறது
இயற்கை
உருட்டி விளையாடும்
பகடைக்
காய்களில்
நதிகளின்
மடியில் எது வேண்டுமானாலும் விழலாம்
நிறைய
ஆசைப்படுவதால் நிறைய நடந்தேறி விடாது
அறையை
விரிவாக்கினால் இருப்பவை சுருங்கும்
இருப்பைச்
சுருக்கினால் சிறு அறையே போதும்
எல்லாம்
கொஞ்ச கொஞ்ச காலம்
இருக்கும்
இல்லாமல் போகும்
எதற்கு
யார் என்ன செய்ய முடியும்
பசியில்லாத
போது தானியங்கள் விளைந்து கிடக்கும்
பசிக்கின்ற
போது வறட்சி தாண்டவமாடும்
எல்லாம்
கொஞ்ச காலம் இருக்க பிரியப்படும்
இருக்க
வந்ததெல்லாம்
இருக்க
பிரியமின்றி ஒரு நாள் ஓடி விடும்
வருவதும்
போவதும்
இருப்பதும்
இழப்பதும்
யாவற்றின்
இயல்பு
நிலையெனப்
பிடித்துக் கொள்வது
மனிதரது
அலும்பு
இயன்றதைச்
செய்
இயலாததை
விட்டு விடு
எல்லாவற்றையும்
உன்னால் முடியாது
முடியுமானால்
உன்
முதுகில் இருக்கும் மச்சத்தை
உன்
கண்களால் பார்
*****
No comments:
Post a Comment