25 Jan 2026

டிஜிட்டல் திருடர்களும் சைபர் மடையர்களும்!

டிஜிட்டல் திருடர்களும் சைபர் மடையர்களும்!

இந்தத் தலைப்பைப் பார்த்ததுமே உங்களுக்குப் புரிந்திருக்கும். இந்தியாவே அலறிக் கொண்டிருக்கும் கீழே உள்ள நான்குமே டிஜிட்டல் டகால்டிகள்.

1) ஆதார் எண்ணைச் சொல்லி போதைப் பொருளுக்குப் பொறுப்பாக்குவது!

2) வீடியோ காலில் அழைத்து டிஜிட்டல் கைது செய்வது!

3) உங்கள் பிள்ளைகளின் குரலில் பேசி பணம் அனுப்பச் சொல்வது!

4) பகுதி நேர வேலை கோடீஸ்வரன் ஆகலாம் என தில்லாங்கடி பண்ணுவது!

இந்த நான்குமே டிஜிட்டல் கத்திகள். பதம் பார்த்தால் ரத்தமாக வராது. ஆனால் பணம் சுத்தமாகப் போய் விடும்.

இந்த நான்கு கத்திகளும் எப்படி வீசப்படுகின்றன? ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

முதல் கத்தி இப்படி வீசப்படுகிறது.

“உங்கள் முகவரிக்கு ஒரு போதைப்பொருள் பொட்டலம் வந்திருக்கிறது. உங்கள் ஆதார் எண் இதுதானே?” – இதுதான் ஆதார் அட்டையில் ஒளிந்து இருக்கும் போதைப் பொருள். உங்கள் ஆதார் எண்ணை ஜாதக சுத்தமாகப் பிரித்து மேய்வதெல்லாம் இந்த டிஜிட்டல் யுகத்தில் ஒரு பெரிய விசயமே இல்லை எனும் போது, உங்கள் ஆதார் எண் யாருக்கோ தெரிந்திருப்பதைக் கண்டு நீங்கள் வியப்படையவே வேண்டியதில்லை. இப்படி ஓர் அழைப்பு வந்தால், “நானே வெத்தலைக்குப் புகையிலை இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறேன். சீக்கிரமே அதை அனுப்பித் தொலையுங்கடா டுபுக்குகளா!” என்று தெனாவெட்டாகவே பேசலாம். ஒருவேளை இதை கேட்டு நீங்கள் நடுங்கினால், நீங்கள் இதுவரை சேர்த்து வைத்த பணத்துக்கு டெங்கு காய்ச்சல் எடுப்பதை யாராலும் தடுக்க முடியாது.

இரண்டாவது கத்தி இப்படி வீசப்படுகிறது.

உங்களை ஸ்கைப் அல்லது வாட்ஸ்அப் அழைப்பில் வரச் சொல்வார்கள். உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்து விட்டதாக மிரட்டுவார்கள். அதற்கு அடிபணிந்தீர்கள் என்றால், தவித்த வாய்க்குச் சாக்கடைத் தண்ணீர் கூட கிடைக்காது. கதற கதற கோவணம் வரை உருவி விட்டுதான் அனுப்புவார்கள். அதன் பின் சிக்குன்குன்யாவை விட மோசமான காய்ச்சல் வந்து நீங்கள் அவதிப்பட வேண்டியிருக்கும்.

மூன்றாவது கத்தி இப்படி வீசப்படுகிறது.

“அப்பா நான்தான் பேசுறேன். ஆக்சிடென்ட் ஆயிடுச்சுப்பா! அர்ஜெண்டா ஐம்பதாயிரம் பணத்தை இந்த லிங்குக்கு அனுப்புங்க. இல்லன்னா இப்போதைக்கு ஆபரேஷன் பண்ண மாட்டாங்க!”

பேசியது யார்? சாட்சாத் உங்கள் பிள்ளையின் குரல்தான், ஆனால் உங்கள் பிள்ளையில்லை எனும் நான் அவனில்லை பாணி இது. பேசியது பிள்ளையின் குரல் இல்லையென்றால், யார் குரல் இது? செயற்கை நுண்ணறிவின் குரல். உங்கள் பிள்ளையின் குரல் எப்படி செயற்கை நுண்ணறிவு டிஜிட்டல் திருடர்களின் கைகளுக்குப் போனது? எல்லாம் உங்கள் பிள்ளையின் சோசியல் மீடியா திருவிளையாடல்கள்தான். அதற்கு நீங்கள் அவரது முகநூல், இன்ஸ்டாகிராமில் எத்தனை பதிவுகள் போட்டுள்ளார் என்பதை புலனாய்வு செய்ய வேண்டும். என்ன இப்படியெல்லாமா செய்வார்கள் என்றால், எப்படியும் செய்வார்கள். இணைப்பில் போய் பணத்தை அனுப்பினால், மீண்டும் அனுப்பிய பணத்துக்குப் பிணைப்பே கிடைக்காது. அதன் பிறகு அந்தப் பணம் பாளையத்து அம்மன் உண்டியலில் விழுந்த கதைதான். திடீரென ஏற்படும் டயேரியாவுக்கு நீங்கள் சிகிச்சை செய்து கொள்ள வேண்டியதுதான்.

நான்காவது கத்தி இப்படி வீசப்படுகிறது.

தினம் ஒரு மணி நேரம் வேலை செய்தால் பத்தாயிரம் சம்பாதிக்கலாம். அதுவே இருபத்து நான்கு மணி நேரம் வேலை செய்தால் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம். கேட்கவே பிரமிப்பாக இருக்கும் இச்செய்திகள் உங்களுக்கு வாட்ஸ்ஆப்பிலோ, டெலிகிராமிலோ, குறுஞ்செய்தியாகவோ வரலாம். இனியென்ன முழு நேர வேலை, இனி பகுதி நேர வேலையோ போதும் என்று களத்தில் இறங்கினால், நீங்கள் அதன் பின் கண்ணீர் குளத்தில் குளிக்க வேண்டியதுதான். முதலில் முன்பணம் என ஐநூறும், ஆயிரமும் அனுப்பச் சொல்லி, அதை நீங்கள் பார்த்த வேலைக்கான ஊதியம் என இரட்டிப்பாகத் தருவார்கள். அதுவே பத்தாயிரம், லட்சம் என ஆகும்போது போட்ட பணம் பணால் ஆகி விடும். பிறகு நீங்கள் என்ன முயற்சித்தாலும் அவர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் போவதை அமெரிக்காவின் நாசாவே நினைத்தாலும் தடுக்க முடியாது. பிறகு நீங்கள் இதை மனஉறுதியோடு தாங்கிக் கொள்வதோ, தாங்கிக் கொள்ள முடியாமல் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆவதோ உங்கள் கையில்தான் இருக்கிறது.

இந்தக் கத்திகளை எப்படி எதிர்கொள்வது என்கிறீர்களா? அதற்கும் நான்கு தங்க விதிகள் இருக்கின்றன.

முதல் தங்க விதி என்னவென்றால், பதற்றப்படாமல் இருப்பது. எந்த காவல் அதிகாரியும் உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்ய முடியாது. சட்டத்தில் அதற்கான இடமே இல்லை. ஆகவே, வீடியோ அழைப்பில் வரச் சொன்னால், கேமராவை ஆன் பண்ணி விடாமல், முதலில் மூளையை ஆன் பண்ணுங்கள்.

இரண்டாவது தங்க விதி என்னவென்றால், எந்த அழைப்பு வந்தாலும், அதை அப்படியே நம்பி விடாமல், அதை ஆராய்ந்து பாருங்கள். உங்கள் பிள்ளையின் குரலே என்றாலும், அவர் எண்ணுக்கு அழைத்து விசாரியுங்கள். அது உங்கள் பிள்ளையின் குரலைச் செரித்த சாப்ட்வேர் குரல் என்பதால், உங்கள் பிள்ளை அப்போது பாப்கார்ன் தின்று கொண்டு அதைச் செரித்துக் கொண்டிருப்பார். உண்மை உங்களுக்கு விளங்கி விடும். உங்கள் பணத்துக்கும் பாதுகாப்பு கிடைத்து விடும்.

மூன்றாவது தங்க விதி என்னவென்றால் யார் கேட்டாலும், அது உங்கள் உயிருக்கு உயிரான மனைவியே கேட்டாலும் கடவுச்சொல், ரகசிய எண்களை (ஓடிபி நம்பர்) சொல்லி விடாதீர்கள். ஆம், உங்களை அடித்துக் கேட்டாலும் சொல்லி விடாதீர்கள். அத்துடன் லிங்குகளைக் கிளிக்க சொன்னால் கிளிக்காதீர்கள். விஷப்பாம்பு இருக்கும் புற்றுக்குள் கைவிட்டுச் சாகசம் செய்வதைப் போன்றவை அவை. இந்த டிஜிட்டல் யுகத்தில் பணத்தை விட பாஸ்வேர்டையும், ஓடிபி நம்பரையும்தான் மனதில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

நான்காவது தங்க விதி என்னவென்றால், நீங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தால் தயங்காமல் 1930க்கு அழையுங்கள். அதுதான் அப்போதைய உங்கள் நிலைக்கான அவசரகால ஆம்புலன்ஸ்.

இதைத் தவிர, இந்த டிஜிட்டல் திருடர்கள் மத்தியில் நாம் சைபர் மடையர்களாக ஆகாமல் இருப்பதற்கு வேறு வழிகள் இருந்தால் சொல்லுங்கள். படிப்பவர்களுக்குப் பயன்படட்டும்.

*****

No comments:

Post a Comment