26 Jan 2026

நாமும் நம் பண்டிகைகளும்!

நாமும் நம் பண்டிகைகளும்!

குழந்தைகளுக்கு எப்போதும் பண்டிகைகள் குதூகலமாக இருக்கின்றன. பெரியவர்களுக்கு பொதுவாகப் பண்டிகைகள் அப்படி இருப்பதில்லை. அவர்களுக்கு அது பொறுப்புகள் நிறைந்த ஒன்று. ஒரு சுமையைப் போன்றது. வழக்கமான நாட்களில் சுமக்கக் கூடிய சுமையை விட கூடுதல் சுமையைச் சுமக்க வேண்டிய நாள் அது.

பள்ளிகளுக்கு விடுமுறைகள் விடுபடுகின்ற ஒரு காரணமே குழந்தைகளைப் பண்டிகைகள் வசீகரித்து விடுகின்றன. அத்துடன் புத்தாடைகள், தின்பண்டங்கள், கேளிக்கைகள் என்று பண்டிகைகள் குழந்தைகளை வசியம் செய்து விடுகின்றன.

பண்டிகைகளுக்கான ஏக்கம் முடியும் போது ஒருவருக்குக் குழந்தைதைத் தன்மையும் முடிந்து விடுகிறது.

பணக்காரர்களுக்குப் பண்டிகைகள் வழக்கமான ஒரு நாளாக இருக்கலாம். காரணம் அவர்களுக்கு இருக்கும் பண வசதிகள் காரணமாக அவர்களுக்கு எல்லா நாட்களுமே புத்தாடைகளை அணிந்து கொள்ளலாம். தினம் தினம் விதவிதமான தின்பண்டங்களை வாங்கித் தின்னலாம். அவர்களுக்கு இருக்கும் பண வசதி அவர்களுக்குத் தினம் தினம் புதுப்புதுக் கேளிக்கைகளைத் தேட வாய்ப்பாக இருக்கலாம்.

ஏழைகளுக்குப் பொருளாதாரச் சுமைகள் இருந்தாலும் பண்டிகை நாட்கள் அற்புதமானவைதான். அவர்கள் அன்றைய பலகாரங்களை ரசித்து ருசித்து உண்கின்றனர். அன்று வாங்கி வைத்திருக்கும் புத்தாடைகளை மகிழ்ச்சி பொங்கி அணிந்து கொள்கின்றனர். அன்றொரு நாளின் விடுமுறையில் சொர்க்கத்தைக் காண்கின்றனர்.

நடுத்தர வர்க்கத்தினருக்குப் பண்டிகையானது கடன் சுமையை ஏற்படுத்தினாலும் அது அவர்களுக்கு மனத்தளர்வைத் தருகிறது.

பெண்களுக்கு வழக்கமான நாட்களை விட பண்டிகை நாட்கள் சுமையானவை. அவர்கள்தான் வீட்டில் உள்ள அனைவருக்கும் அன்றும் உணவுப் பண்டங்களையும் பலகாரங்களையும் தயார் செய்ய வேண்டியிருக்கிறது. வீட்டைத் தூய்மை செய்ய  வேண்டியதாக இருக்கிறது. அனைவரையும் உபசரித்து அவர்களின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டியதாக இருக்கிறது. அவர்கள் பண்டிகையின் மனநிலைக்கு வரும் போது அன்றைய பொழுது முடிந்து விட்டிருக்கும். இந்திய மனநிலையின் சாராம்சம் இது. பண்டிகைக் கால வேலைகளைப் பகிர்ந்து கொள்ளும் தன்மை பெரும்பாலான ஆண்களுக்கு இருக்காது. அவர்கள் பெரும்பாலும் பண்டிகை தினத்தைக் கொண்டாடி விட்டு படுத்து உறங்கி விடுவதிலோ அல்லது மது அருந்தி விட்டு மட்டையாகி விடுவதிலோ கழித்து விடுகின்றனர்.

கோமதிநாயகம் சென்னையில் இருப்பவர். தீபாவளி, பொங்கல் என்றால் ஊருக்கு வருபவர். அதுவும் தொடர்வண்டியிலோ, பேருந்திலோ உட்கார இடம் கிடைக்காமல் கூட்டத்தில் தொத்திக் கொண்டு வருபவர். இதில் எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் ஊருக்கு வருவது மட்டும் நிற்காது.

ஏன் அண்ணே இவ்வளவு சிரமப்பட்டு வர வேண்டுமா என்றால், பொங்கல், தீபாவளிக்குக் கூட வரவில்லை என்றால் அப்புறம் எப்படி என்பார். விடுமுறையின் இரண்டு தினங்களோ, மூன்று தினங்களோ ஊர் முழுவதையும் ஒரு சுற்று சுற்றி வந்து விடுவார். உறவுகளையும் நட்புகளையும் விசாரித்து விடுவார். ஒவ்வொராண்டும் வாழ்வதே இப்படி பண்டிகை நாட்களில் உங்களை எல்லாம் வந்து பார்க்க முடிகிறதே என்பதில்தான் என்பார்.

*****

No comments:

Post a Comment