6 Mar 2026

வழுக்கையா? வாழ்க்கையா? தடுமாற்றம் தேவையா?

முடி மாற்று சிகிச்சையில் கலப்பட கலவரங்கள்!

தலையில் முடி கம்மியாக இருக்கிறது என்று அமேசான் காட்டு மூலிகை எண்ணெயைத் தலையில் தேய்த்த காலம் போய், இப்போது ஹேர் டிரான்ஸ்பிளான்ட்  எனும் நவீன அறுவை சிகிச்சை ஜரூராக நடக்கிறது.

பத்தாம் வகுப்பு வரை படித்தவர்கள் கூட இதற்கான கிளினிக்குகளை ஆரம்பித்து சக்கை போடு போடுகிறார்கள். அப்படியெல்லாம் இந்தக் கிளினிக்கை ஆரம்பிக்க முடியாதுதான். அதற்கென்று படிப்புகள், மருத்துவ உரிமங்கள் எல்லாம் இருக்கின்றன.

அப்புறம் எப்படி எஸ்எஸ்எல்சிக்கள் இந்தக் கிளினிக்கை நடத்துகிறார்கள் என்றால், இந்தச் சிகிச்சை முறை சிக்கலானது அல்ல, ஆனால் பொறுமை தேவையானது.

ஒரு டாக்டர் பல மணி நேரம் குனிந்து வேலை செய்யும்போது, அவருக்கு உதவியாக இருக்கும் டெக்னீஷியன்கள் இதை வேடிக்கை பார்த்துப் பழகிவிடுகிறார்கள். டாக்டர் பண்றதை நாமும் பண்ணலாமே என்று கிளம்பி, சொந்தமாக ஒரு போர்டை மாட்டி விடுகிறார்கள்.

பிளாஸ்டிக் சர்ஜன் அல்லது முறையாகப் பயிற்சி பெற்ற தோல் மருத்துவர் செய்ய வேண்டிய வேலையைப் பியூட்டி பார்லர் லெவலுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். ஜாக்கிரதை, இது வெறும் ஹேர் கட்டிங் கிடையாது, மயக்க மருந்து கொடுத்துச் செய்ய வேண்டிய மைனர் சர்ஜரி!

இப்போது விசயத்திற்கு வருவோம். அது ஏன் முன்தலை வழுக்கை நாட்டில் அதிகமாகத் தலைவிரித்து ஆடுகிறது. அறிவியல்படி அதற்கு காரணம் இருக்கிறது. முதலில் கொஞ்சூண்டு முடி கொட்டுவதற்கு வில்லன் டிஹெச்டி என்கிற ஹார்மோன். இது தலையில் இருக்கும் ஆண்ட்ரோஜென் ரிசப்டார் என்கிற சாக்கெட்டுக்குள் புகுந்து உட்கார்ந்துகொள்ளும். ஒருமுறை பிளக் பாயிண்ட் லாக் ஆகிவிட்டால், அந்த முடிக்கு குட்பைதான்.

சுவாரஸ்யம் என்னவென்றால், தலையின் பக்கவாட்டிலும் பின்புறமும் இருக்கும் முடிகளுக்கு இந்த ரிசப்டார் கிடையாது. அவை சேஃப் ஜோன். அங்கிருந்து முடியை எடுத்து வழுக்கை விழுந்த இடத்தில் நடுவதுதான் இந்தச் சிகிச்சை. இது புது முடியை உருவாக்குவது அல்ல, இருக்கும் செடியை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடும் கார்டனிங் வேலைதான்.

இன்னொரு முக்கிய மேட்டர். அது முடிக்கு மீட்டர். அதுதான் மெலட்டோனின். நள்ளிரவு வரை போனில் ஸ்க்ரோல் செய்துகொண்டிருந்தால் இந்த ஹார்மோன் சுரக்காது. உடல் தன்னைத்தானே பழுதுபார்க்கும் நேரத்தை நீங்கள் கெடுத்தால், உடல் முதலில் கைவிடுவது உங்கள் முடியைத்தான். வழுக்கை விழுவதற்குப் பரம்பரை மட்டும் காரணமல்ல, உங்கள் லைஃப் ஸ்டைலும்தான்.

வழுக்கை விழுந்தால் மன உளைச்சல் வருவது சிலருக்குத் தவிர்க்க முடியாதது. அதற்காகத் தெரிந்த கிளினிக்கில் எல்லாம் தலையைக் கொடுத்து விடக் கூடாது. இந்த விசயத்தில் மூளைக்கு மேல் முடி இருக்கிறதோ இல்லையோ முடிக்குக் கீழ் இருக்கும் மூளையில் அறிவு முக்கியம்.

முடி போனாலும் வழுக்கைத் தலையோடு வாழ்ந்து விடலாம். வழுக்கைத் தலை முடிக்காகக் கண்ட கிளினிக்கில் தலையைக் கொடுத்து வாழ்க்கை முடிந்து விட்டால் கடவுள் கொடுத்து ஒரு பிறவி டஸ்ட் பின்னுக்குப் போய் விடும்.

முடிக்காகத் தலையைக் கொடுப்பதற்கு முன்பு, அந்தக் கிளினிக்கை டாப் டூ பாட்டம் கம்ப்ளீட் இன்வெஸ்டிகேஷனை முடித்து விட்டு, உங்கள் தலையைக் கொடுப்பது உத்தமம். தலை முக்கியம் அல்லவா! ஒரு நடிகரைத் தல என்று அழைக்கும் அளவுக்குப் புகழ்பெற்ற மாநிலம் அல்லவா நம் மாநிலம்! தல என்ற பெயரில் அஜித்தை அழைப்பது இடுகுறித் தன்மையோடு அல்ல, காரணத் தன்மையோடுதான் இல்லையா!

*****

No comments:

Post a Comment