31 Mar 2018

வளமைக்கு இன்சொற்கள்! வறுமைக்கு வன்சொற்கள்!


குறளதிகாரம் - 10.4 - விகடபாரதி
வளமைக்கு இன்சொற்கள்! வறுமைக்கு வன்சொற்கள்!
            எந்தச் சூழ்நிலையிலும் எவரிடமும் இன்பம் தரக் கூடிய இனியச் சொற்களைச் சொல்வதைத்தான் வாழ்வில் கற்க வேண்டும்.
            சூழ்நிலைகள் மாறும். அச்சூழ்நிலைகளில் சொல்லிய சொற்களின் தாக்கம் மாறாது.
            மனிதர்கள் யாரும் சொல்லிய சொற்களை மறக்கத் தயாராக இல்லை. அதுவும் குறிப்பாக அவமானப்படுத்தும் வகையில் சொல்லிய சொற்களை எப்போதும் மறக்கத் தயாராக இல்லை.
            பிறரை அவமதிக்கும் சொற்களை மறந்தும் கூட சொல்லி விடக் கூடாது. அது ஏற்படுத்தும் தாக்கம் அழிவு வரை அழைத்துச் செல்லக் கூடியது.
            கோபப்படாமல் இருப்பது சிறந்தது. கோபப்பட்டாலும் ஆத்திரத்தில் இனிமையற்ற சொற்களைச்  சிந்தாமல் இருப்பது நல்லது. 
            கோபத்தில் கொப்புளிக்கும் இனிமையற்ற வார்த்தைகளுக்கு பின்விளைவு தெரியாது, கேட்பவர் மனம் எப்படிப் புண்படும் என்பது அறியாது, அச்சொற்களுக்கு பின்னர் மாபெரும் விலை கொடுக்க வேண்டி வரும் என்பது புரியாது.
            பிச்சைக் கேட்டு வந்த முதியவர் ஒருவரைக் கோபமாகத் திட்டித் தீர்த்தார் கோடீஸ்வரர் ஒருவர்.
            பிச்சைப் போடா விட்டாலும் பரவாயில்லை, கோபப்பட்டு மட்டும் இனிமையில்லாமல் திட்டிப் பேச வேண்டாம் என்று அறிவுரைச் சொல்ல ஆரம்பித்து விட்டார் அந்தப் பிச்சைக்கார முதியவர்.
            "பிச்சைக்கார நாயே! எனக்கே அறிவுரை சொல்கிறாயா! நான் யார் தெரியுமா? பத்துக் கப்பல்களுக்கு முதலாளி!" என்றார் அந்தக் கோடீஸ்வரர்.
            அதனால்தான் கோபப்பட்டு இனிமையில்லாதவைகளைப் பேச வேண்டாம் என்கிறேன் என்றார் அந்த முதியவர் மீண்டும் சாந்தமாக.
            "அட ஒன்றுமில்லாத நாயே! மறுபடியுமா அறிவுரைச் சொல்கிறாய்? ஏன் பத்துக் கப்பலுக்குச் சொந்தக்காரன் கோபப்பட்டு இனிமையில்லாமல் கூடப் பேசக் கூடாதா?" என்றார் கோடீஸ்வரர்.
            "நிச்சயமாக! நான் இருபது கப்பல்களுக்குச் சொந்தக்காரனாக இருந்தவன். கோபப்பட்டு இனிமையில்லாமல் பேசிக் கொண்டிருந்தனால் இப்போது பிச்சைக்காரனாய் நிற்கிறேன்! அதனால் தயவு பண்ணிச் சொல்வதைக் கேளுங்கள்!" என்றால் பிச்சைக்கார முதியவர்.
            இனிமையற்றச் சொற்களைப் பேசும் ஒவ்வொரு கணத்திலும், இனிமையற்ற வாழ்க்கைக் காத்திருக்கிறது.
            ஆறுதல் சொற்களை கூற முடியாவிட்டாலும், இனிய சொற்கள் அல்லாதவைகளைச் சொல்லாமல் இருக்க முடியும்.
            பிறரை அவமதிக்கும் வகையில் பேசும் இனிமையற்றச் சொற்கள்,
            கோபப்பட்டுப் ஆத்திரத்தில் கண்மூடித் தனமாகப் பேசும் இனிமையற்றச் சொற்கள்,
            என்னப் பேசுகிறோம் என்பது புரியாமல் பேசி விடும் இனிமையற்றச் சொற்கள் - இவைகள் எல்லாம் வாழ்வில் ஒருவருக்கு வறுமையைத்தான் கொண்டு வருகின்றன. அந்த இனிமையற்றச் சொற்களை எதிர்கொள்பவர் சொன்னவரைக் காலை வாரி விட நேரம் பார்த்துக் கொண்டிருப்பார். பழி வாங்க சரியான காலத்துக்கு எதிர்நோக்கிக் காத்திருப்பார். இனிமையற்றச் சொற்களுக்கு அப்படி ஓர் எதிர்மறைச் சக்தி உண்டு.
            எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும், இனிமையற்றச் சொற்களைச் சொல்லாமல் இருப்பது நல்லது. இனிமையற்றச் சொற்கள் அதிகாரத்தையும் வீழ்த்தும்.
            எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் இனிமையற்றச் சொற்களைச் சொல்லாமல் இருப்பது நல்லது. இனிமையற்றச் சொற்கள் எவ்வளவு பெரிய பதவியையும் காலி செய்யும்.
            எவ்வளவு பெரிய மாவீரனாக இருந்தாலும் இனிமையற்றச் சொற்களைச் சொல்லாமல் இருப்பது நல்லது. இனிமையற்றச் சொற்கள் வீரத்தையும் ஒன்றுமில்லாமல் ஆக்கி விடும்.
            எவ்வளவு பணம், சொத்து, செல்வாக்கு இருந்தாலும் இனிமையற்றச் சொற்களைச் சொல்லாமல் நல்லது. இனிமையற்றச் சொற்கள் இறுதியில் எவ்வளவு இருந்தாலும் அவ்வளவையும் சுழியத்தில் கொண்டு வந்து நிறுத்தி விடும்.
            வாழ்க்கையில் வறுமை ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இனிமையற்றச் சொற்களைப் பேசுவதால் ஏற்படும் வறுமைக்கு பேசுபவரே காரணம்.
            இனிமையற்றச் சொற்களைப் பேசுவதினால் ஏற்பட்ட வறுமைக்கு இனியச் சொற்களே மருந்து.
            இனிமையானச் சொற்கள் கேட்பவர் மனதைக் கவரும். அதைக் கேட்பவருக்கு இவ்வளவு இனியச் சொற்களைப் பேசுபவர்க்கு வறுமையா? என்ற எண்ணத்தை உருவாக்கி அதைப் போக்க ஏதேனும் செய்வதற்கும் தூண்டும்.
            இனிமையற்றச் சொற்கள் கேட்பவர் மனதைக் கவ்வி வவ்வும். அதைக் கேட்பவருக்கு இவ்வளவு இனிமையற்றச் சொற்களைப் பேசும் இவருக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கக் கூடும்? என்ற எண்ணத்தை உருவாக்கி வறுமையை ஏற்படுத்த ஏதேனும் செய்யத் தூண்டும்.
            இனிமையானச் சொற்கள் வறுமையையும் வளமையாக்கும்.
            இனிமையற்றச் சொற்கள் வளமையையும் வறுமையாக்கும்.
            வறுமை இல்லாமல் போக, வளமை உருவாக இனிமையானச் சொற்களையே எல்லாரிடமும் பேசுவோம். இனிமையானச் சொற்களையே எல்லாரிடமும் பேசி வறுமை இல்லாத வளமையான வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வோம்.
            துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார் மாட்டும் இன்புறூஉம் இன்சொல் அவர்க்கு.
            வளமைக்கு இன்சொற்கள்.
            வறுமைக்கு வன்சொற்கள்.
*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...