24 Jun 2025

ஏன் இந்த விவசாய முறை தவறானது?

ஏன் இந்த விவசாய முறை தவறானது?

இது லாபத்திற்கான விவசாய முறை. அந்த லாபம் விவசாயிக்கானதன்று என்றாலும் நிச்சயமாகத் தற்போதைய விவசாய முறை வாழ்க்கைக்கானது கிடையாது.

இது வாழ்க்கைக்கான விவசாய முறை என்றால், இவ்வளவு ரசாயனங்களைப் பயன்படுத்தாது. முக்கியமாகக் களைக்கொல்லிகளைப் பயன்படுத்தாது.

இந்தக் களைக்கொல்லிகள் என்ன செய்திருக்கின்றன தெரியுமா?

மூலிகைகளை அழித்திருக்கின்றன. ஆடுகள், மாடுகளுக்கான உணவை அழித்திருக்கின்றன. எத்தனையோ புழு, பூச்சிகளை அழித்து விட்டன. பல்லுயிர்ப் பெருக்கத்தைக் காலி செய்து விட்டன. நெற்பயிரைக் கூட சுணங்க வைத்திருக்கின்றன.

எவ்வளவோ பேர் உழைத்த விவசாயம் இன்றில்லை. பல பேர் என்பதற்குப் பதிலாக இயந்திரங்கள் உழைக்கின்றன.

களைக்கொல்லிகள் மற்றும் ரசாயனங்கள் மூலமாக உருவாகும் விளைபொருட்கள் உடலுக்கு ஊறு விளைவிப்பன என்பது நிரூபணமாகி விட்டது. என்றாலும் நாம் ஏன் இந்த விவசாயத்தை நிறுத்த முடியவில்லை.

நாம் யாரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்? நம்மையேவா?

ஒரு கேள்விக்கான பதிலை இப்படி கேள்வியிலேயே முடிப்பது கொடுமையானதுதான் இல்லையா?

*****

No comments:

Post a Comment