20 Feb 2026

விஜய் – ராஷ்மிகாவின் யாயும் ஞாயும் யார் ஆகியரோ?!

விஜய் – ராஷ்மிகாவின் யாயும் ஞாயும் யார் ஆகியரோ?!

தெலுங்குத் திரையுலகின் அர்ஜுன் ரெட்டி விஜய் தேவரகொண்டாவும், கன்னடத்தின் கிரிக் பார்ட்டி ராஷ்மிகா மந்தனாவும் கீதா கோவிந்தம் பாடப் போகிறார்கள்.

இத்தனை காலமாய் இன்ஸ்டாகிராம் பைனரி கோடுகளில் ஒளித்து வைத்திருந்த காதல், இப்போது ஒரு கல்யாணப் பத்திரிகையாக உருமாறி இருக்கிறது. இருவரும் ராஜஸ்தானில் உள்ள உதய்பூர் அரண்மனையில் பிப்ரவரி 26 இல் டும்டும்க்குத் தயாராகி விட்டார்கள்.

இவர்கள் இருவருக்கும் பொருத்தமான ஒரு சங்கப் பாடலைத் தேடினால், சட்டென நினைவுக்கு வருவது குறுந்தொகையின் அந்தப் புகழ்பெற்ற வரிகள்தான்.

யாயும் ஞாயும் யார் ஆகியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

விஜய் தேவரகொண்டாவுக்கும் ராஷ்மிகாவுக்கும் இது அப்படியே பொருந்துகிறது. அவர் ஆந்திரா, இவர் கர்நாடகா. இருவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், சினிமா என்கிற அந்த செம்புலத்தில் விழுந்த மழைத்துளிகளாய் இப்போது ஒன்றாகக் கலந்துவிட்டார்கள்.

இவர்கள் காதல் என்னவோ மாலத்தீவில் மலர்ந்திருக்கலாம், ஆனால் கல்யாணம் என்னவோ ராஜஸ்தானில். அப்படித்தான் நடக்க வேண்டும் என்று இப்போது சினிமா நட்சத்திரங்கள் ஓர் எழுதாத விதியையே வகுத்து வைத்து விட்டார்கள்.

ஒட்டகங்கள், வண்ணமயமான தலைப்பாகைகள், மற்றும் கேசரி பால் மணம் வீசும் அந்த ராஜஸ்தான் வெயிலில், திரை ரசிகர்களின் செல்லமான ரவுடி பாய் ப்ளஸ் அர்ஜுன் ரெட்டி விஜய் தேவரகொண்டா ஷெர்வானி அணிந்து காட்சியளிக்கப் போகிறார். புஷ்பாவில் ஆட்டம் பாட்டம் எனக் கொண்டாட்டம் போட்ட ராஷ்மிகா தன் சாமீ சாமீ ராகத்தை நிஜ வாழ்க்கையில் பாடப்போகிறார்.

விஜய் தேவரகொண்டாவின் அந்தத் திமிர் கலந்த ஸ்டைலும், ராஷ்மிகாவின் அந்த வசீகரச் சிரிப்பும் இணையப் போகும் அந்தத் தருணம், தென்னிந்தியத் திரையுலகின் மிகப்பெரிய கிளைமாக்ஸ். ஆந்திரா மீல்சும் கர்நாடகப் பொன்னியும் கலக்க இருக்கும் கலக்கலான தருணம்.

இத்தனை காலம் நாங்கள் வெறும் நண்பர்கள் என்று இவர்கள் சொல்லி வந்ததெல்லாம், சங்கப் பாடலில் வரும் எவ்வழி அறிதும் என்கிற பாவனைதான். ஆனால் இப்போது பிப்ரவரி 26 இல் அன்புடை நெஞ்சம் ராஜஸ்தான் மணலில் அக்னி சாட்சியாக இணையப் போகிறது.

ராஜஸ்தான் மணலில் அந்த அர்ஜுன் ரெட்டி தன் காதலைக் கனிய வைத்து கல்யாணம் செய்யப் போவதுதான் அன்புடை நெஞ்சம் தாம் கலப்பது. சினிமா திரையில் பார்த்த அதே கெமிஸ்ட்ரி, சங்க இலக்கியப் பாடலின் ஆழத்தோடு நிஜமாகப் போகிறது.

வாழ்க்கையும் கூட ஒரு பெரிய தியேட்டர்தான். இதில் இது ஒர் அழகான சுபம் கார்டு இவர்களின் திருமணம். அந்தச் செம்புலப் பெயல் சிவப்பு நகரமான ராஜஸ்தான் நகரங்களிலும் தெறிக்கிறதே. அந்தச் சங்கப் புலவர் செம்புலப்பெயர் நீரார் எவ்வளவு தீர்க்கதரிசனத்தோடு பாடி விட்டார்! சிவப்பு – சிவப்பு நன்றாகவே பொருந்துகிறது அல்லவா!

அடுத்து விஷால் – தன்ஷிகா திருமணம்தான். அதற்கும் ஒரு பாடல் இருக்கிறது. நடிகர் சங்கக் கட்டிட வேலைகள் முடிந்து, திருமணத் தேதி நெருங்கட்டும். அதை எழுதுகிறேன்.

*****

No comments:

Post a Comment