31 May 2025

தலையணையிடம் கதை சொல்லுங்கள்!

தலையணையிடம் கதை சொல்லுங்கள்!

செய்ய நினைக்கும் போது செய்ய முடியாது

நின்று கொண்டே தூங்க வேண்டியிருக்கும்

இயலாமை பாடாய்ப் படுத்தும்

கவலைகள் மனதை அரித்துக் கொண்டிருக்கும்

ஒரு பாதி அங்கீகரிக்கப்படலாம்

மறுபாதியில் அசிங்கப்படுத்தப்படுத்தப்படலாம்

இரட்டிப்பு வேலையில் அலைக்கழிக்கப்படலாம்

மன அமைதி நூலறுந்த பட்டமாகலாம்

உட்கார்ந்து யோசித்தால் எந்தப் பிரச்சனையும் நினைவில் நிற்காது

சரிதான் போ நல்லதென்று நினைத்தால்

ஒவ்வொரு பிரச்சனையாக நினைவுக்கு வரும்

தூக்கில் தொங்கி விடக் கூட நினைக்கலாம்

அப்படி ஒரு நினைப்பு வரும் போது

கட்டிப் பிடிக்க யாராவது இருந்தால் நல்லது

இல்லாது போனாலும் தலையணையைக் கட்டிக் கொள்ளுங்கள்

அதனிடம் ஒரு கதையைச் சொல்லுங்கள்

உங்கள் பாரம் தலையணைக்குள் இறங்கியிருக்கும்

அதை இனி தலைக்கு வைத்துப் படுக்காமல்

பக்கத்தில் வைத்துப் படுங்கள்

ஒவ்வோர் இரவிலும் உங்கள் தலையணை நண்பரிடம்

உங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே வாருங்கள்

உங்கள் கதை வளர்ந்து கொண்டிருக்கும்

உங்கள் தூக்குக் கயிறு காணாமல் போயிருக்கும்

*****

27 May 2025

கிளி பச்சைக் கூண்டு

நடிப்பெனப்படுவது…

நடிப்பெனப்படுவது யாதெனில்

நடிப்பது

நடிப்பு வராமலிருப்பதும் ஒரு நடிப்பு

நடிப்பு வருவதும் ஒரு நடிப்பு

சுமாராக நடிப்பதும் ஒரு நடிப்பு

ஜோராக நடிப்பதும் ஒரு நடிப்பு

நடிப்பென்பது எது

நடிப்பில்லை என்பது எது

கோலிவுட்டில்

சுமாரெனச் சொல்லப்பட்டவர்

பாலிவுட்டில்

கலக்கிக் கொண்டிருந்தார்

*****

கூண்டு

எத்தனை பச்சை

எவ்வளவு சிவப்பு

என்னே அழகு

பச்சை சிவப்பை மிஞ்சும்

பஞ்சவர்ணமும் உண்டென

எவ்வளவுதான் வியந்தாலும்

அடைபட்டு விட்டால்

கூண்டுதான் கிளிக்கு

*****

26 May 2025

காலத்தையும் உங்களையும் புரிந்து கொள்ளுதல்!

காலத்தையும் உங்களையும் புரிந்து கொள்ளுதல்!

சில நேரங்களிலா, பல நேரங்களிலா என்று எனக்குத் தெரியவில்லை. அது உண்மையில் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். உங்களுடைய முயற்சிகள் தவறாகப் போகின்றன. ஏன் அப்படிப் போக வேண்டும்? அதற்கெனக் காலம் இருக்கிறது. அதுவரை காத்திருக்க வேண்டும். முயற்சியால் எதையும் சாதித்து விடலாம் என்று காலத்தைக் கருதாமல் இருந்தால் அந்த முயற்சி பலனற்றுதான் போகும். இங்கு நீங்கள் காலத்தோடு உங்களையும் சேர்த்துப் புரிந்து கொள்ள வேண்டும்.

முயற்சிகளைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்த்தால், உங்களுக்கு சில உண்மைகள் புலப்படும். உண்மையில் சில பல முயற்சிகளை நீங்கள் செய்யவே வேண்டியதில்லை. இதற்குக் காரணம் இருக்கிறது. எப்போது முயற்சி செய்ய வேண்டும், எப்போது முயற்சி செய்யாமல் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். அது புரியாமல் எல்லாவற்றையும் முயற்சி செய்து மாற்றலாம் என்று நினைத்தால் தோல்வியையும் ஏளனத்தையும்தான் சந்திக்க வேண்டும்.

உங்களால் சில பல நேரங்களில் சும்மா இருக்க முடியாது. உங்கள் அவசரம்தான் பிரச்சனை. நோயைக் கூட தாங்கிக் கொள்வீர்கள். அவசரத்தை உங்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அதற்குத்தான் நீங்கள் உங்கள் மனதைப் பழக்க வேண்டும். உங்கள் அவசரத்தால் எதுவும் நிகழ்ந்து விடாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பல நேரங்களில் நீங்கள் எதையும் செய்யாமல் பொறுமையாக உங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். ஒரு கொக்கைப் போல நேரம் வாகாக அமையும் போதுதான் நீங்கள் உங்கள் முயற்சியில் இறங்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் முயற்சிக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் கூட சேதாரம் ஏற்படலாம். வாழ்க்கையில் எல்லாம் முயற்சியால் மட்டுமே மாறி விடாது. எப்போது முயற்சி செய்ய வேண்டுமோ, அப்போது முயற்சி செய்தால் மட்டுமே மாறும்.

ஓர் அழகான உண்மை என்னவென்றால் நீங்கள் அவசரப்பட்டு எதையும் செய்திருக்க வேண்டாம். அவசரப்பட்டு எதையும் புரிந்து கொண்டிருக்க வேண்டாம். எதார்த்தம் என்னவென்றால், உங்களது அவசரம் தவறு தவறாகச் சிந்திக்கிறது. காரணம் சில பல நேரங்களில் போகும் பாதையில் தவறு இருக்கிறது. பாதை தவறாக இருக்கும் போது அடையும் இடமும் தவறாகத்தான் இருக்கும். உங்கள் அவசரம் உங்கள் தவறுகளை அதிகப்படுத்தும். தவறான பாதையில் துணிச்சலோடு செல்ல வைத்து விடும். நீங்கள் அப்போது உணர்வுபூர்வமான நிலையில் பயணித்துக் கொண்டிருப்பீர்கள்.

எல்லாவற்றையும் நீங்கள் உங்களது உணர்வுபூர்வமான தன்மையைக் கொண்டு மட்டுமே அணுகி விட முடியாது. அறிவுப்பூர்வமாக யோசித்து அதற்கு ஒத்து வந்தால் நீங்கள் உணர்வுபூர்வமாக அணுகுவது வெற்றி தரும்.

ஒரு காரியத்தில் இலக்கை அடைவதற்குள் மற்றவர்களோடு கொள்ளும் தொடர்பு முக்கியமானது. இதில் என்ன பிரச்சனை என்னவென்றால், உங்கள் வேகத்திற்குக் காரியம் நடக்காது. பலவற்றை நீங்கள் பொறுமையாக விளக்க வேண்டியிருக்கும். நீங்கள் எல்லாவற்றையும் விளக்கிய பிறகும் காரியத்தைக் குட்டிச்சுவர் ஆக்குவதற்கென்று சிலர் இருப்பார்கள். அதற்காக நீங்கள் உங்களை விட்டுக் கொடுத்து விட வேண்டியதில்லை. ஆனால் யாரையும் மரியாதைக் குறைவாக நடத்தி விடாதீர்கள். அதற்காக நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டும் என்று கூட அவசியம் இல்லை. நீங்கள் பேசாமல் இருந்தால் கூட போதுமானது. நீங்கள் எதுவும் செய்யாமல் இருந்தாலும் போதுமானது.

வாழ்வின் அடிப்படை அறத்தைப் பொருத்த வரையில் நீங்கள் ஒரு தவறிலிருந்து தொடங்கி விட்டு சரியாக நடக்க வேண்டும் என்ற எதிர்பார்க்க முடியாது.

நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். வஞ்சிக்கப்பட்டிருக்கலாம். உங்கள் இழப்பு மிக மோசமானதாகக் கூட இருக்கலாம். அதற்காக நீங்கள் தவறான எதையும் தொடங்கி விடாதீர்கள். நீங்கள் மிகச் சரியாகவே நடந்து கொள்ளுங்கள். உங்களுக்கான நியாயத்தைக் கேட்டுக் கொண்டே இருங்கள்.

சரியான பாதையில் உங்கள் இழப்புக்காக, பாதிப்புக்காக, வஞ்சிப்புக்காக நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கலாம். அதில் எந்தத் தவறுமில்லை. ஆனால் உங்கள் பாதை தவறாகப் போய் விடக் கூடாது என்பதில் மட்டும் எப்போதும் கவனமாக இருங்கள். உங்களது பொறுமையையும் நீங்கள் எப்போதும் கைவிட்டு விடக் கூடாது என்பதிலும் எச்சரிக்கையாக இருங்கள்.

உங்கள் பொறுமை தொலையும் நேரம் ஆபத்தானது. அது உங்களது எதிரிகளுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும்தான். பொறுமையைத் தொலைப்பவர்கள் தங்களைத் தொலைத்து விடுகிறார்கள். நீங்கள் உங்களைத் தொலைத்து விட்டு நீங்கள் எதை அடைந்து என்ன செய்யப் போகிறீர்கள்? இந்தக் கேள்வியை நீங்கள் எப்போதும் கேட்டுக் கொள்ளுங்கள். காலத்தையும் உங்களையும் புரிந்து கொள்ள இந்த அற்புதமான கேள்வி உங்களுக்கு எப்போதும் உதவும்.

*****

25 May 2025

இயந்திரச் சிக்கல்கள் இரண்டு

இயந்திரச் சிக்கல்கள் இரண்டு

நான் கணக்கில்

நூற்றுக்கு நூறு என்கிறேன்

அப்படியா

இந்தக் குக்குர் விசில்களை

எண்ணு பார்ப்போம்

என்கிறாள் மனைவி

எனக்கு ஐந்து வந்தால்

அவளுக்கு ஆறு வருகிறது

என்ன குக்கர் இது

கணக்குக்கு ஒத்து வராத குக்கர்

விசில் அடிக்க குக்கருக்குக் கற்றுக்கொடுத்தவர்கள்

ஏன்

ஒன்று, இரண்டு, மூன்று, …

கற்றுக் கொடுத்திருக்கக் கூடாது

*****

செயற்கை நுண்ணறிவு என்றால்

இயந்திரத்திற்கும்

மனிதருக்கும்

இடையே உள்ள உறவுச்சிக்கல்

என்று சொன்னால்

நீ ஏன் கோபப்படுகிறாய்?

நீ மனிதனாகவே இருக்கிறாய்

கொஞ்சம் ரோபோவாக மாறி யோசித்துப் பார்.

கோபப்பட மாட்டாய்.

கோபப்படுவது எப்படி இயந்திரமாகும் சொல்.

நான் எழுதுவதை இனி இயந்திரம் எழுதும்

எழுதட்டுமே

என்னைப் போல பல்டி அடிக்க முடியுமா

சொன்னதைச் சொல்லவில்லை என்று

திருப்பிச் சொல்ல முடியுமா

*****

24 May 2025

நடப்புக் கணக்கு

நடப்புக் கணக்கு

உங்கள் கணிப்புகள் தவறாகின்றன

என்று தெரிந்தும்

எப்போதாவது நிறுத்தி இருக்கிறீர்களா

யாரிடமிருந்து ஆர்வமும் வெறியும்

எப்போது எப்படி புறப்பட்டு வரும் என்று

யாருக்குத் தெரியும்

வரலாற்றில் கணிப்புகள் முறியடிக்கப்படுகின்றன

வரலாற்றைத் தர்க்க ஒழுங்கோடு

எழுத முற்படும் போது

எதிர்பார்ப்பவர்கள் எதிர்பாராததை

எதிர்கொள்ளும் போது

அதிர்ச்சிக்கு உள்ளாகிறார்கள்

அதிர்ச்சிகள் கணிப்புகளால் நேர்கின்றன

கணிப்புகளைத் தூர எறியுங்கள்

எதிர்பார்ப்புகளை எடுத்து வையுங்கள்

புதியதைப் புதியதாக எதிர்கொள்ளுங்கள்

அதை ஏன் பழையதாக எதிர்கொள்ள வேண்டும்

நினைக்கின்ற வேகத்தில்

விசயங்கள் நடக்காமல் இருக்கலாம்

ஏதோ ஒருவேகத்தில்

எல்லாம் நடந்து கொண்டு இருக்கின்றன

மெதுவாகவாவது

நடப்பது நடந்து கொண்டு இருக்கிறது

வேகத்தைக் காரணம் காட்டி

நடக்கவில்லை என்றோ

நடக்காது என்றோ எப்படிக் கூறுவது

*****

21 May 2025

வெடித்துச் சிதறுவதிலிருந்து வெளியே வாருங்கள்!

வெடித்துச் சிதறுவதிலிருந்து வெளியே வாருங்கள்!

மனச்சோர்வின் அதி தீவிர நிலையைக் குறிக்கும் ஆங்கிலச் சொற்களில் ஒன்று ‘Burn Out’.

1970களில் அமெரிக்க உளவியலாளர் ஹெர்பர்ட் ப்ரூடென்பெர்கர் உருவாக்கிய வார்த்தை இது.

துவக்கத்தில் இந்த வார்த்தையானது ஒரு வேலையில் இதற்கு மேலும் தொடர முடியாது என வெடித்துச் சிதறும் நிலையைக் குறித்தது. இன்றோ வாழ்க்கையில் எதிலெல்லாம் இதற்கு மேல் முடியாது என வெடித்துச் சிதறுகிறீர்களோ அத்தனையையும் குறிக்கிறது.

இன்று வேலையில் மட்டுமல்லாது வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் மனச்சோர்வால் வெடித்துச் சிதறும் நிலை ஏற்படும் நிலை உள்ளது.

முன்பெல்லாம் சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு போன்றவை எல்லாம் உடல் சார்ந்த நோய்கள் என்ற நிலை இருந்தது. இன்று அந்நிலை மாறி விட்டது. மனச்சோர்வால் அடிக்கடி வெடித்துச் சிதறுவதால் கூட அந்நோய்கள் ஏற்படலாம்.

இதைக் கேட்டவுடன் நான் கூட மனச்சோர்வால் அப்படித்தான் வெடித்துச் சிதறுகிறேன் என்று நீங்கள் கூறலாம். நீங்கள் மட்டுமல்ல, உலகில் 80 விழுக்காடு மக்கள் அப்படித்தான் ஒவ்வொரு நாளும் வெடித்துச் சிதறிக் கொண்டிருக்கின்றனர்.

சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு மட்டுமல்லாது வயிறு சார்ந்த பிரச்சனைகள், தோல் சார்ந்த பிரச்சனைகள், முடி உதிர்தல், ஒவ்வாமை சார்ந்த பிரச்சனைகள் போன்ற பல உடல் நலம் சார்ந்த சிக்கல்கள் மனச்சோர்வால் ஏற்படும் வெடித்துச் சிதறுதலால் ஏற்படுகின்றன.

மன அழுத்தம், தூக்கமின்மை, அதீத சிந்தனை, மனப் பிறழ்வுகள் போன்ற மனநலம் சார்ந்த பிரச்சனைகளும் மனச்சோர்வால் ஏற்படும் வெடித்துச் சிதறுதலால் உண்டாகின்றன.

இதை எப்படித் தடுப்பது?

வேலையில், படிப்பில், நுகர்வில், குடும்பத்தில், சமூகத்தில் என்று வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் இன்று போட்டி, பொறாமை, ஒப்பீடு, அதீத எதிர்பார்பபுகள், அதீத இலக்குகள் என்று விஷமத்தனமான கலாச்சாரம் பரவி வருகிறது. இயல்பாக இருத்தலும், இயல்பாக வாழ்தலும் அர்த்தமற்றவை என்ற கருதப்படுகின்றன. மன அமைதியும் இணக்கமாக வாழ்தலும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டன. பொருளாதர ரீதியான போட்டிகளும், மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என்ற ஒப்பீடுகளும் இன்று அதிகமாகி விட்டன.

இன்றை வாழ்க்கை முறையில் மன அமைதியை விடவும் பொருளாதார எதிர்பார்ப்புகளும், அந்தஸ்து, அதிகாரம் போன்ற மேற்பூச்சுகளுக்குத் தரும் முக்கியத்துவங்களும் அதிகரித்து விட்டன. எல்லாம் சேர்ந்து மனிதர்களை மன அழுத்தம் மிகுந்த சூழ்நிலையில் வாழப் பழக்கி விட்டு விட்டன. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அதைத் தாங்க முடியாத மனம் மனச்சோர்வுக்கு உள்ளாகி விடுகிறது.

தொடரும் மனச்சோர்வு ஒரு கட்டத்துக்கு மேல் தாங்க முடியாமல் வெடித்துச் சிதறுகிறது. அது எப்படி வேண்டுமானாலும் வெடித்துச் சிதறலாம். வேலையை விடச் செய்யலாம். வாழ்க்கையிலிருந்து தப்பி ஓடச் செய்யலாம். மனநலத்தைப் பிறழச் செய்யலாம். தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்ளச் செய்யலாம். குற்றவுணர்வில் குமைந்து போகச் செய்யலாம். தன்னைத் தானே அழித்துக் கொள்ளவும் முயலலாம்.

இதிலிருந்து நாம் எப்படி வெளியே வரப் போகிறோம்? வழிகள் இல்லாமல் இல்லை. இதுவரை நாம் பழகிய வழிகளுக்கு எதிராக அந்த வழி இருக்கிறது. அதை விவேகத்தோடு தேர்ந்தெடுக்க வேண்டிய தேவையும் அவசியமும் நமக்கு இருக்கிறது.

நாம் எளிமையான வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மன அமைதிக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். நம் பொருளாதாரத்துக்குப் பொதுமான அளவு வருமானம் தரும் ஒரு சரியான வேலையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். தேவைக்கு அதிகமாகப் பொருளாதாரத்தைப் பெருக்க வேண்டும் என்ற எண்ணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

சக்திக்கு மீறித்தான் வாழ வேண்டும் என்றில்லை, நம் சக்திக்கு உட்பட்டு வாழலாம். யாரையோ மனதில் வைத்து நாம் உருவாக்கி வைத்திருக்கும் அந்தஸ்து, கௌரவம் என்கிற மனபிம்பத்திலிருந்து வெளிவந்து நகலாக வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையைப் புரிந்து கொண்டு அசலாக வாழ முயற்சிக்கலாம்.

நாம் எளிமையாகி விட்டால் வாழ்க்கையில் எல்லாம் எளிமையாகி விடும். நாம் சிக்கலாகும் போது மனமும் சிக்கலாகிறது. அந்தச் சிக்கல் தாங்க முடியாத அளவுக்குப் போகும் போது மனம் தன்னைத் தானே அறுத்தெடுத்துக் கொள்கிறது. நாம் ஏன் நம்மை அவ்வளவு சிக்கலாக்கிக் கொள்ள வேண்டும்?

*****

20 May 2025

ஓய்வின் பெரும்பொழுது

ஓய்வின் பெரும்பொழுது

கணவர் இறந்து விட்டார்

மகன் வெளிநாடு போய் விட்டான்

மகள் கட்டிக் கொண்டு போய் விட்டாள்

யாருமில்லாத வீட்டில்

தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருக்கிறது

யாதொரு உறுத்தல் இல்லாமல்

நெடுந்தொடர் பார்ப்பதில்

சுதந்திரமாகக் கழிந்து கொண்டிருக்கிறது

அடிமைப்பட்டுக் கிடந்த

பெண்ணொருத்தியின் ஓய்வுக் காலம்

*****

போதாமைகள்

அரசியல் தெரிந்த பெண்ணுக்குச்

சமையல் தெரியவில்லை

சமையல் தெரிந்த பெண்ணுக்கு

பரதநாட்டியம் தெரியவில்லை

பரதநாட்டியம் தெரிந்த பெண்ணுக்கு

பாண்டித்யம் வரவில்லை

நீ மட்டுமென்ன

பெண்ணுரிமை தெரிந்த அளவுக்கு

புருஷ லட்சணம்போதவில்லை

*****

13 May 2025

சங்கடத்தின் பின்னுள்ள காரணங்கள்

சங்கடத்தின் பின்னுள்ள காரணங்கள்

எவ்வளவோ விளக்கங்கள்

எத்தனையோ தத்துவங்கள்

எண்ணிச் சொல்ல முடியாது

அவ்வளவு ஆறுதல்கள்

அத்தனை அழுகைகள்

கணக்கிட்டுக் கொள்ள முடியாது

சிலர் சோகமாக இருப்பார்கள்

சிலர் சிரித்துக் கொண்டு இருப்பார்கள்

கண்ணீர் அஞ்சலி பதாகைக்காக

மெனக்கெடுவார்கள்

பெரிய மாலை கிடைக்கவில்லையே என்று

விசனப்படுவார்கள்

எல்லாம் ஒரு முறை

நேர்ந்துவிட்ட மரணத்துக்காக

இன்னொரு முறை நேரும் என்றால்

யாரும் அவ்வளவு சங்கடப்பட்டிருக்க மாட்டார்கள்

*****

6 May 2025

கதைக்கும் கதைகள்

கதைக்கும் கதைகள்

எது ஒரு கதை என்பதற்கு

ஒவ்வொருவருக்கும்

ஒவ்வொரு கோணம் இருக்கிறது

கோணத்தை அளந்து கொண்டிருந்தால்

கதை சொல்ல முடியாது

கதை சொல்ல வேண்டிய

நிர்பந்தம் ஏற்பட்டு விடும் போது

சொல்லித்தான் ஆக வேண்டியிருக்கிறது

ஒரு கொலைகாரர்

குற்றவாளிக் கூண்டில் கதை சொல்கிறார்

தர்மசங்கடத்தில் நிலைகுழைந்து போயிருப்பவர்

தன்னிலையை விளக்க கதை சொல்கிறார்

கூனிக் குறுகி நிற்பவர்

குற்றவுணர்வைப் போக்கிக் கொள்ள கதை சொல்கிறார்

இயலாமையால் நெளிபவர்

இதற்கு மேல் என்ன செய்ய முடியும் என்று கதை அளக்கிறார்

தோல்வியில் மேற்கொண்டு துவள முடியாவர்

கழிவிரக்கம் கண்டு கதை சொல்கிறார்

கதை சொல்லி விடும் போது

தீவிரம் இறங்கி விடுகிறது

அது தீவிர கதையா

சோதா கதையா என்பது வேறு விசயம்

*****

1 May 2025

அவனவன் கிரகம்!

அவனவன் கிரகம்!

இந்த ஜோதிடர்கள் ஒவ்வொருவரும் எம்எஸ், எம்டி டாக்டர்களைத் தாண்டி சம்பாதிக்கிறார்கள். ஜோதிடர் ஆவதற்கான நீட் தேர்வு குறித்து அறிந்து கொள்ள வேண்டும். இனி வரும் தலைமுறையை அந்தப் படிப்பைத்தான் படிக்க வைக்க வேண்டும்.

எல்லாம் எதற்காக? பிறந்து தொலைத்தாயிற்று என்றால் ஜாதகம் பார்க்க வேண்டியது கட்டாயம் ஆகி விடுகிறது.

ஒரு மனிதம் பிறக்கும் போதே தலையில் ஜோதிடருக்கு எடுத்து வைக்க வேண்டிய தொகை எழுதப்பட்டு விடுகிறது.

பிறகு கல்யாணம் செய்வது அவசியமாகி விடுகிறது. கல்யாணம் செய்வதென்றால் ஜாதகப் பொருத்தமெல்லாம் முக்கியம்.

காதல் கல்யாணம் என்றால் ஜோதிடர் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டு விடலாம். பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணத்தில் அதையெல்லாம் செய்ய முடியாது. அவருக்கு ஒரு தண்டம் அழுதுதான் ஆக வேண்டும். பிறகு இப்படியொரு துணையைச் சேர்த்து விட்டானே பாவி என்று பின்னர் ஒரு அழுகை அழுது கொள்ள வேண்டும்.

எல்லாம் எதற்காக? மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் என்று எல்லாம் தொண்ணூறு நாளுக்காக. பிறகு, இதற்காகவா ஜாதகமெல்லாம் பார்த்தோம் என்று அலுப்பு தட்டி விடும்.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கப்பட்டாலும் நரகத்தில்தான் வாழப்படுகின்றன என்பது அனுபவப்பட்டவர்களுக்கே தெரியும். அதையெல்லாம் பார்த்தால் முடியுமா? கடவுள் இந்த ஜோதிடர்களுக்கு ஆறு பொருத்தங்களுக்கு மேல் இருந்தால் சேர்த்து வைக்கலாம் என்கிற உரிமத்தை (லைசென்ஸை) கொடுத்து விட்டார். அவர்கள் சேர்த்து வைத்துக் கொண்டே இருப்பார்கள். திருமணம் செய்து கொள்பவர்கள்தான் இதை சர்வ ஜாக்கிரதையாக அணுக வேண்டும்.

இதிலிருந்து தப்பிக்கவும் முடியாது? தப்பித்து எல்லாரும் அப்துல் கலாம் ஆகி விடவும் முடியாது. காமராசராகவும் ஆகி விட முடியாது. ஆகையால் எல்லாரும் மாட்டிக் கொண்டு அனுபவிக்க வேண்டியதை அனுபவித்து விடுங்கள். மறுபிறவியில் அனுபவிக்கலாம் என்று எதையும் மிச்சம் வைக்க நினைக்காதீர்கள்.

ஜோதிடர் எம்.எஸ்., எம்.டி.கள் ஜோதிட பல்நோக்கு சம்பாத்திய முனையங்களில் (மல்ட்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக்குகளில்) சம்பாதித்து விட்டுப் போகட்டும்.

என்ன செய்வது? அவர்களுடைய கிரகம் அப்படி இருக்கிறது. நம்முடைய கிரகம் இப்படி இருக்கிறது.

ஒன்பது கிரகம் உச்சம் பெற்ற ஒருவன் எம்.எஸ்., எம்.டி. படிக்காமலும் ஜோதிடராகிச் சம்பாதிக்க இந்தியாவில் முடியும்.

*****