இயற்கையின் இரண்டு செய்திகள்
1. திணிப்பது எடுபடாது
வாழ்க்கையில்
அடக்குமுறைக்கு வேலை இல்லை. அடக்குமுறைக்கான அவசியம் ஏற்படுகிறது என்றால் அங்கு ஏதோ
திணிக்கப்படுகிறது.
திணிக்கப்படுவதை
யார்தான் விரும்புவார்கள்? எதிர்க்கவே செய்வார்கள். எதிர்ப்பை அடக்க வன்முறையைக் கையாள
வேண்டியிருக்கும்.
ஒரு
பெட்டியில் எவ்வளவு துணிகளை வைக்க முடியுமோ அவ்வளவே வைக்க முடியும். அதற்கு மேல் வைக்கப்பட்டால்
பிதுங்கி வெளியே வந்து விழுந்து விடும்.
உயிருள்ளவை
மட்டுமல்லாது உயிரற்றவையும் கூட அளவுக்கதிகமாகத் திணிக்கப்படுவதை விரும்புவதில்லை.
அங்கே எவ்வளவு கொள்ளுமோ அவ்வளவே கொள்ளும். அதற்கு மேல் என்றால் வெளியே தள்ளவே செய்யும்.
குழந்தைகளுக்கும்
இது பொருந்தும். அளவுக்கதிகமாகக் கற்க அவர்களை வற்புறுத்தக் கூடாது. அவர்களிடம் திணித்தலை
மேற்கொள்ள முயற்சிக்கக் கூடாது.
குழந்தைகள்
திணிப்பதை ஏற்றுக் கொள்ளாத போது அவர்களிடம் நாம் அடக்குமுறைகளைக் கையாள்வோம். அடக்குமுறை
அதிகப்படியான எதிர்ப்புணர்வையே கொண்டு வருமே தவிர இணக்கத்தைக் கொண்டு வராது.
2. இயற்கையின் போஷாக்கை மனிதன்
தர முடியாது
இவ்வளவு
புற்களை, செடிகளை, கொடிகளை, மரங்களை, பறவைகளை, மீன்களை, விலங்குகளை ஏன் மனிதர்களை கூட
இயற்கைதான் வளர்த்திருக்கிறது. அது இது எதற்காகவும் பெருமை கொண்டாடவில்லை. மனிதன் ஒரு
கோழிப்பண்ணையை வைத்துக் கோழிகளை வளர்ப்பதற்கே பெருமை கொண்டாடுகிறான். ஒரு ‘மா’ நிலம்
விவசாயம் செய்து விட்டு தன்னால் எவ்வளவு நெற்பயிர்கள் வளர்ந்திருக்கின்றன என்று மார்
தட்டுகிறான். இவன்தான் என்னவோ மரங்களை நட்டு, காடுகளை வளர்ப்பது போலவும், சரணாலயங்களை
அமைத்து விலங்குகளைப் பாதுகாப்பது போலவும் பேசுகிறான். மனிதர்களிடமிருந்து இவற்றைப்
பாதுகாப்பதற்காகவே மனிதன் இவற்றைச் செய்கிறான். தன்னிடமிருந்து பாதுகாப்பதற்காகச் செய்யும்
ஒன்றை என்னவோ அவற்றைப் பாதுகாப்பதற்காகச் செய்வதாகச் சொல்கிறான். அவனிடமிருந்து அவனைப்
பாதுகாத்துக் கொள்வதற்காகவே சண்டைகளைச் செய்வதாக, போர்களை முன்னின்று நடத்துவதாகச்
சொல்கிறான். உண்மையைச் சொல்வதென்றால் மனிதர்களிடமிருந்து ஒவ்வொன்றையும் காப்பதற்காகவே
மனிதன் போராடிக் கொண்டிருக்கிறான்.
******
No comments:
Post a Comment