28 Apr 2025

இயல்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா?

இயல்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா?

கிராமப்புறங்களில் ஒருவர் தனக்குத் தெரிந்த தொழிலை வைத்து வாழ முடியுமா?

முன்பு நிலைமை இப்படி இல்லை. ஆனால் முன்பிருந்த நிலைமை இப்போது இல்லை.

கிராமங்கள் தமது சுயசார்புகளை இழந்து விட்டு, நகரங்களைப் போல நுகர்வுத்தன்மைக்கு மாற்றியமைக்கப்பட்டு விட்டன.

ஒருவருக்கு அப்பளம் செய்யத் தெரிகிறது, வற்றல் போடத் தெரிகிறது என்றால் அதை வைத்து வாழ முடியுமா?

அவற்றைச் செய்து வாழ்வதில் என்ன பிரச்சனை என்று கேட்கலாம். பெருநிறுவனங்கள் என்று சொல்லப்படுகின்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிலும் போட்டி போடுகின்றன. அவற்றோடு போட்டிப் போட்டு ஒரு கிராமத்தவர் இதில் வெற்றி பெற முடியுமா என்ன?

கிராமப்புறங்களில் பிரமாதமாக முறுக்கு செய்வோரும் அதிரசம் செய்வோரும் இருக்கிறார்கள். அவர்களின் நிலையும் இதுதான். அவற்றைச் செய்து விற்றுப் பிழைக்க அவர்களால் முடியாது.

சாதாரண பெட்டிக் கடைகளில் நாட்டுப் பலகாரங்களை விட சுவையான நொறுக்குத் தீனிகள் பெருநிறுவனங்களால் தயார் செய்யப்பட்டு பொட்டலங்களில் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன.

பெட்டிக் கடைகளையே எடுத்துக் கொண்டாலும் அவற்றின் நிலையும் மோசமாக உள்ளன. பெரிய பெரிய மளிகைக் கடைகள், மால்கள் என்ற பெயரிலான வியாபார அமைப்புகள் சிறு சிறு வணிகக் கடைகளைக் கபளீகரம் செய்து வருகின்றன.

அனைத்து வகை உற்பத்திகளையும் வணிகங்களையும் பெருநிறுவனங்களின் போக்கிலும் கட்டுபாட்டிலும் விட்டு விட்டு அனைவரையும் நுகர்வோர் ஆக்கும் முயற்சியில் தெரிந்தும் தெரியாமலும் அரசாங்க மற்றும் நிர்வாக அமைப்புகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

இங்கு ஒருவர் ஒரு பைசா சம்பாதிக்கிறாரோ இல்லையோ, அவர் பத்து பைசாவுக்கு நுகர்வோர் ஆக இருக்கும் நிலைக்குக் கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கிறார்.

தற்போதைய நிலையில் உழைக்கிறோம், சம்பாதிக்கிறோம், வாழ்கிறோம் என்று இயல்பாக இருந்து விட முடியாது. உழைத்துச் சம்பாதிப்பதற்கும் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டாக வேண்டியிருக்கிறது. அந்தச் சம்பாத்தியமும் வாழ்க்கைக்குப் போதுமானதாக இருக்காது.

இது ஒரு பெருத்த முரண்பாட்டை இருத்தலுக்கும் பிழைத்தலுக்கும் இடையே ஏற்படுத்தி விடுகிறது. இயல்பாக வாழ்வதில் பல முட்டுக்கட்டுகளை உண்டாக்கி விடுகிறது. போராடி வாழ்வதே சாத்தியம் என்ற நிலையை உருவாக்கி விடுகிறது. இது மனிதர்களை இயல்பாக இருப்பதா, போராட்டத்தோடு வாழ்வை எதிர்கொள்வதா என்ற இருபக்க பேரிடியை எதிர்கொள்ள வைத்து விடுகிறது.

சம்பாத்தியமும் அச்சம்பாத்தியத்துக்கான பெரும் போராட்டமும் இல்லையென்றால் வாழ்க்கை இல்லை என்றாகி விடுகிறது. விளைவு மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே வாழ்க்கையிலிருந்து அந்நியப்பட்டுப் போகிறார்கள்.

பெரும் போராட்டம் இல்லாத இயல்பான இருத்தலுக்கான வாய்ப்புகளும் இந்தப் பூமியில் இருக்க வேண்டும். இதற்கான நெறிகளையும் கட்டுப்பாடுகளையும் வகுத்துக் காப்பது அரசாங்கத்திடம்தான் இருக்கிறது. மக்களுக்குப் பொறுப்பான அரசாங்கங்கள் இதில் கவனம் எடுத்துக் கொண்டு ஆவன செய்ய வேண்டியது அவசியமாகும்.

ஒருவர் உயிர் வாழ்வதற்கான சம்பாத்தியத்தை உழைத்துப் பெறுவதற்கான தேவையான வாய்ப்புகள் எப்போதும் எங்கும் இருக்க வேண்டும்.

*****

No comments:

Post a Comment