27 Apr 2025

குழந்தைகளின் உணவு ஆசைகளை நிறைவேற்றுவது நல்லதா?

குழந்தைகளின் உணவு ஆசைகளை நிறைவேற்றுவது நல்லதா?

ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்றார் புத்தர்.

குழந்தைகளின் உணவு ஆசைக்கு இது ரொம்பவே பொருந்திப் போகும் போலிருக்கிறது.

இந்தத் தலைமுறைக் குழந்தைகள் கடந்த தலைமுறைக் குழந்தைகளைப் போல இல்லை. தங்களுக்கு விருப்பமானதை அவர்களே தேர்ந்தெடுக்கிறார்கள். இந்தத் தலைமுறை பெற்றோர்களும் கடந்த தலைமுறை பெற்றோர்களைப் போல இல்லை. குழந்தைகளின் விருப்பங்களுக்கும் ஆசைகளுக்கும் எவ்வித தடையும் போடாமல் தங்கள் சக்திக்கு மீறியும் நிறைவேற்றுகிறார்கள்.

குழந்தைகளின் சுதந்திரமும் குழந்தைகளுக்கான உரிமைகளும் முக்கியமானவை என்றாலும் அவர்களுக்குத் தாங்கள் தேர்ந்தெடுப்பது குறித்த அறிவும் விழிப்புணர்வும் இருக்குமா? குறிப்பாக உணவை எடுத்துக் கொண்டால் அவர்களின் தேர்வும் சுதந்திரமும் நொறுக்குத் தீனிகளாகவே இருக்கின்றன. பொட்டலங்களில் அடைக்கப்பட்ட உணவுகளையும் பலவித வண்ணங்களில் கவர்ச்சிகரமான தோற்றத்தோடு மிகு சுவை தரும் உணவுகளையுமே அவர்கள் நாடுகிறார்கள்.

இன்றைய தலைமுறையில் புரோட்டா என்ற உணவே மறைந்து போய் அது சில்லி புரோட்டா, கொத்து பரோட்டா, ஆலு பரோட்டா, முட்டை பரோட்டா, மலபார் பரோட்டா, சிலோன் பரோட்டா, வீச்சு பரோட்டா, லாப்பா பரோட்டா பல புதுப்புது அவதாரங்களை எடுத்து விட்டது. உணவகம் ஒன்றில் அமர்ந்து இரண்டு பரோட்டா கேட்டால் நீங்கள் காலவதியாகி விட்ட மனிதர்களாகக் கருதப்படுவீர்கள். ஆனால் புரோட்டா என்பதே உடல்நலத்துக்கு உவப்பான உணவா என்ன?

புரோட்டாவுக்கே இவ்வளவு அவதாரங்கள் இருக்கும் போது, பிரியாணிக்குக் கேட்க வேண்டுமா? ஒவ்வொரு ஊர் பெயரிலும் இருக்கும் பிரியாணி போதாது என்று தலைப்பாக்கட்டில் தொடங்கி மட்பாண்டத்தில் தொடர்ந்து வாளி (பக்கெட்) வரை பல்வேறு பெயர்களில் நாளுக்கொரு பிரியாணி வகைக் கண்டுபிடிக்கப்பட்டு நெகிழி (பிளாஸ்டிக்) டப்பாக்களில் அடைபட்டு வருகிறது.

கோழிக்கறியானது சிக்கன் 65, சில்லி சிக்கன், ஷவர்மா என்று பல்வேறு பெயர்களில் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டு இருக்கிறது.

எண்ணெய்ப் பதார்த்தங்களின் வடிவங்களைக் கணக்கிடவே முடியாத அளவுக்கு நுண்ணுயிரிகளின் பெருக்கத்தையும் விஞ்சும் வகையில் புதுப்புது பதார்த்தங்கள் உருவாகிக் கொண்டு இருக்கின்றன.

உணவகங்களில் இட்டிலி, தோசை, பொங்கல், பூரி, அடை போன்ற உணவு வகைகள் காலத்தால் பின்தங்கிய உணவு வடிவங்களாகக் கருதப்பட்டு நூடுல்ஸ், மஞ்சூரியா, பர்கர், பீட்சா, பாவ்பாஜ் என்று இன்னும் என்னனென்னவோ பெயர்களில் பல்வேறு துரித உணவு வகைகள் உணவகங்களை ஆட்கொண்டிருக்கின்றன, குழந்தைகளை ஆட்டுவித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த உணவு வகைகள் குழந்தைகளை என்ன செய்யும் என்று அவர்களுக்குத் தெரியுமா? அவர்களின் விருப்பங்களையும் ஆசைகளையும், அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்ற வேட்கையை மட்டும் கருத்தில் கொண்டு இவ்வுணவு வகைகளைத் தொடர்ச்சியாக வாங்கிக் கொடுத்தால் குழந்தைகளின் உடல் அவற்றைத் தாங்குமா?

குழந்தைகள் இவ்வகை உணவு வகைகளின் ருசிகளில் மயங்குகிறார்கள். இவ்வித ருசியிலேயே காலை உணவு, மதிய உணவு, மாலை உணவு, இரவு உணவு என்ற அனைத்து உணவுகளையும் வேண்டி என்று அடம் பிடிக்கிறார்கள்.

அப்படிப்பட்ட ருசி வடிவில் கிடைக்காத போது காலை உணவை, மாலை உணவை, மதிய உணவை, இரவு உணவைத் தவிர்க்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். விளைவு துரித உணவை மட்டும் உண்டு வாழும் குழந்தைகள் இன்று உருவாகியிருக்கிறார்களா, உருவாக்கப்பட்டிருக்கிறார்களா என்பது சிந்தனைக்குரிய வினாவாக மாறியிருக்கிறது.

இதன் விளைவுகள் எப்படி இருக்கிறது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வந்த மாரடைப்பு இன்று குழந்தைகளைத் தாக்குகிறது. அறுபது வயதுக்கு மேல் ஏற்படும் சிறுநீரகக் கோளாறுகள் இன்று குழந்தைகளுக்கு உண்டாகின்றன.

உடல்பருமன், சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு போன்றவை நடுத்தர வயதுக்குப் பிறகே ஏற்படும் என்ற நிலை மாறி இன்று குழந்தைகள் பலர் இந்நோய்களால் அவதிப்படுகிறார்கள்.

அநேகமாகக் குழந்தைகளுக்கான உணவில் நாம் பாட்டிமார்களைப் போல மீண்டும் அக்கறை காட்ட வேண்டிய காலம் உருவாகி விட்டதோ?

உணவு வகைகளில் குழந்தைகளின் விருப்பங்களும் சுதந்திரங்களுக்கும் நாம் ஒரு கட்டுப்பாட்டையும் எல்லைக்கோட்டையும் நிர்ணயிக்க வேண்டிய நிலைக்கு வந்து விட்டோமோ?

குழந்தைகளுக்கு நாம் அவர்கள் உண்ணும் உணவு குறித்த உண்மைகளையும்,  அறிவையும், விழிப்புணர்வையும் சிறிது சிறிதாக உணவை ஊட்டுவதைப் போல ஊட்ட வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோமோ?

நாம் இது குறித்து யோசிக்கத்தான் வேண்டும்.

இது குறித்து நாம் இந்தத் தலைமுறையில் யோசிக்கவில்லை என்றால், இதுவே தலைமுறைகளின் தொடரும் பிரச்சனையாகவும் மாறி விடலாம்.

என்ன செய்யப் போகிறோம் நாம்?

*****

No comments:

Post a Comment