கடனில் புகா மனை!
பல நேரங்களில்
சட்டென்று ஓர் அறிவுரையை வழங்கிட துடிப்பதில் மனதைப் போன்ற ஒரு போதை மிருகத்தை இந்த
உலகத்தில் வேறெங்கும் பார்க்க முடியாது. பொதுவாக இந்த வியாதியால் மனிதர்கள் பலரும்
அவதிப்படுகிறார்கள். அதுவும் பாடம் சொல்லிக் கொடுக்கும் பணியில் இருப்போருக்கு இந்த
வியாதி கூடுதலாகவே இருக்கும். அதிகப்படியாக இருக்கும் என்று சொன்னாலும் மிகையில்லை.
ஓர்
அறிவுரையை வழங்குவது மிகவும் சுலபமானது. ஆனால் அந்த அறிவுரை வழங்கப்பட வேண்டுமா, வேண்டாமா
என்பதுதான் எப்போதும் ஆய்வுக்குரிய ஒன்று.
என்னுடைய
நண்பர்களில் ஒருவர் வீடு வாங்கி விட்டார். அது சரியா, தவறா என்பது குறித்த என்னுடைய
கருத்தை அறிய விரும்பினார். அது நிச்சயம் அறிவுரை சொல்வதற்கான நேரமில்லை என்பது எனக்குப்
புரிந்தது. எனக்கும் அறிவுரை சொல்வதில் இருந்த ஆர்வமெல்லாம் வடிந்து ஆண்டுகள் பலவாகி
விட்டன.
வீட்டை
வாங்கியாயிற்று. ஒரு சம்பவம் நடந்தேறி விட்டது மீண்டும் திருத்திக் கொள்ள வாய்ப்பில்லாத
வகையில். நான் அவரிடம் அவரது முடிவு சரியானது என்றுதான் கூறினேன். ஆனால் எனக்கு இது
உடன்பாடான முடிவன்று. என்னைப் பொருத்த வரையில் அந்த நேரத்தில் அவர் வீடு வாங்கியது
மிக மிக தவறான முடிவு. அதை நான் சொல்லியிருந்தால் என்னை அவருடைய எதிரிகளின் பட்டியலில்
சேர்த்துக் கொள்ள அவருக்குச் சில நொடிகள் கூட ஆகியிருக்காது. இப்போது அவரது முடிவு
தவறானதாக இருந்தாலும், நீண்ட கால நோக்கில் அது சரியான முடிவாக மாறவும் வாய்ப்பிருக்கிறது.
அப்படியானால்
இங்கு என்னதான் தவறு நேர்ந்திருக்கிறது? அவரிடம் வீட்டை வாங்குவதற்கான பணம் ஒரு சதவீதம்
கூட அவர் கையில் இல்லை என்பதுதான் எனக்குத் தவறாகப் பட்டது. எல்லாமே கடன். எல்லாரும்
அப்படித்தானே வாங்குகிறார்கள் என்பதால் அதிலொன்றும் தவறில்லை என்று கூட நீங்கள் நினைக்கலாம்.
அப்படி நீங்கள் நினைப்பதையும் தவறென்று சொல்லி விட முடியாது.
ஆனால்
அவருக்கு ஏற்கனவே பலவித கடன்கள் எட்டு திசைகளிலும் இருந்தன. அதற்கான அத்தனை தவணைகளையும்
கட்டிக் கொண்டு அவர் தடுமாறிக் கொண்டிருந்தார். தற்போது வீட்டை வாங்குவதற்கான கடனையும்
அவர் சேர்த்துக் கொண்டார். இந்த நிலைதான் நான் தவறென்று சொல்வதற்குக் காரணம்.
அநேகமாக
அவர் வீட்டை வாங்குவதற்கு முன் இந்த யோசனையைக் கேட்டிருந்தால், நான் நிச்சயம் அந்த
யோசனையைக் கைவிடுவதே தற்சமயம் உசிதமாக இருந்திருக்கும் என்று கூறியிருப்பேன். ஆனால்
அவரோ வீட்டையெல்லாம் வாங்கி முடித்து விட்டு, புதுமனை புகுவிழாவையும் முடித்து விட்டு,
ஆர அமர அது குறித்த அபிப்ராயத்தை கேட்டார். இனி நான் எந்த அபிப்ராயத்தைக் கூறியிருந்தாலும்
அதனால் அவருக்கு எந்தப் பிரயோசனமும் ஏற்படப் போவதில்லை. அவர் அவருக்கு இருந்த கடன்தொகையோடு
வீட்டுக்கடனையும் இனி சுமந்துதான் ஆக வேண்டும்.
அவர்
40 லட்ச மதிப்பீட்டில் அந்த வீட்டை வாங்கியிருந்தார். அவரது நிரந்தரப் பணி மற்றும்
மாதாந்திர ஊதியத்தில் நம்பிக்கை வைத்து வங்கி அவ்வளவு பெரிய கடன் தொகையை அவருக்கு வழங்கியிருந்தது.
நண்பர்
40 லட்சம் கடன் தொகையைக் கட்டி முடிப்பதற்குள் 60 லட்ச ரூபாயைக் கட்ட வேண்டியிருக்கும்.
அதை விட கூடுதலாகவும் அவர் கட்ட வேண்டியிருக்கலாம். எப்படியும் 20 லட்சத்துக்கு மேல்
20 ஆண்டுகளில் அவர் கடனைக் கட்டி முடிப்பதற்குள் வட்டியாக அவர் செலுத்த வேண்டியிருக்கும்.
அதாவது வருடத்துக்கு ஒரு லட்சமோ அல்லது அதற்கு மேலோ அவர் வட்டியாகச் செலுத்த வேண்டியிருக்கும்.
இத்துடன் அசல் தொகையையும் அவர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இப்படித்தான்
நண்பரின் வீடு வாங்கிய விசயத்தில் அறிவுரை என்றில்லை, அபிப்ராயம் கூறுவதில் கூட அர்த்தமில்லை
என்று உணர்ந்த பின்பு, அவர் ஏன் வீடு வாங்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் என்பதை
விசாரித்தேன்.
உறவினர்கள்
மத்தியில் அவருடைய நிலை தாழ்ந்து போயிருந்ததாகவும், அதை மீட்கவே வீடு வாங்கியதாகவும்
அவர் குறிப்பிட்டார். உண்மையில் அவருடைய பொருளாதார நிலை அதல பாதாளத்திற்கு வீழ்ந்திருப்பதை
அவர் நினைத்துப் பார்க்கவே இல்லை. வீட்டை வாங்கியதால் உறவினர்கள் மத்தியில் அவருடைய
நிலை உயர்ந்திருப்பதையே பெருமிதமாகக் கூறிக் கொண்டிருந்தார். ஒரு பெருமிதத்தின் விலை
20 லட்ச ரூபாய்க்கு மேலான வட்டித்தொகை என்பது எனக்கு அநியாயமாகவே தெரிந்தது.
அவரிடம்
நான் இன்னொன்றையும் கேட்டேன். நீங்கள் வீடு வாங்குவதற்கு முன் என்னிடம் அது குறித்துக்
கேட்டிருக்கலாமே என்றேன். அப்படியெல்லாம் சொல்லி விட்டுச் செய்தால் எந்தக் காரியமும்
நடக்காது என்றார் அவர். அத்துடன் அவர் விட்டிருக்கலாம். அவர் கூடுதலாக இன்னொன்றும்
சொன்னார். இந்த விசயம் குறித்து என்னிடம் அவர் முன்பே கூறியிருந்தால், நான் அவர் மீது
பொறாமை பட்டிருப்பேன் என்றார். அப்படியானால் அவர் ஏன் என்னிடம் வீடு வாங்கியது குறித்து
அபிப்ராயம் கேட்க வேண்டும்? இப்போது மட்டும் நான் பொறாமைபட மாட்டேனா என்ன?
நான்
பொறாமைப்படுவேன் என்றால் இப்போது மட்டும் ஏன் என்னிடம் கருத்துக் கேட்கிறீர்கள் என்பதையும்
நான் விட்டு விடாமல் கேட்டேன்.
இப்போது
எப்படிச் சமாளிக்கப் போகிறேன்? மாதா மாதம் எப்படிக் குடும்பத்தை நடத்தப் போகிறேன்?
என்கிற பயம் வந்துவிட்டதாகக் கூறினார் நண்பர். அந்தப் பயத்தைப் போக்கிக் கொள்ள என்னுடைய
கருத்து உதவும் என்றார் அவர்.
அதுதான்
எப்படி என்றேன் நான்.
நான்
எதையும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் சரியாகத்தான் சொல்வேன் என்பதால் நானே சரியானதென்று
சொல்லி விட்டதால் சரியான ஒன்றுக்காகக் கஷ்டப்படுவதில் தவறில்லை என்று தான் ஆறுதல் கொண்டு
விட்டதாக அதற்கும் ஒரு பதில் சொன்னார் நண்பர்.
அவரைப்
பார்க்க இப்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் தயவு தாட்சண்யம் பார்க்காமல் சரியான
பதிலைச் சொல்வேன் என்று நம்பும் அவர், மற்றவர்களின் மனம் நோகக் கூடாது என்பதிலும் கவனமாக
இருப்பேன் என்பதை எப்படி மறந்து போனார்?
நீங்கள்
என்னைத் தவறான பக்கம் இருந்து வாக்களித்து விட்டதாக நினைக்கக் கூடும். ஆனாலும் நீண்ட
கால நோக்கில் அவர் வாங்கிய வீடு அவருக்கு லாபகரமாகவும் அமையலாம் என்பதை நான் முன்பே
சொல்லி இருக்கிறேன். ஆனால் அது குறித்து எனக்கு நிச்சயமாக எதுவும் தெரியாது.
அப்படியானால்
வீட்டைப் பற்றி நான் என்ன சொல்ல வருகிறேன் என்று நீங்கள் கேட்கலாம். வீடு எப்போதும்
உங்களை வீட்டுக்குள் முடக்குகிறது.
அப்படியானால்
வீட்டைக் கட்டவோ, வாங்கவோ கூடாதா என்றால், அதை ஏன் கட்டாமலோ, வாங்காமலோ இருக்க வேண்டும்?
உங்களிடம் 80 லட்சம் இருக்குமானால் நீங்கள் ஏன் 40 லட்சத்துக்கு ஒரு வீட்டைக் கட்டிக்
கொள்ளவோ, ஒரு வீட்டை வாங்கிக் கொள்ளவோ கூடாது?
எதையும்
வாங்குவதற்கோ, செய்வதற்கோ எதிரியாக நீங்கள் என்னை நினைத்து விடக் கூடாது. கடனில் வாங்குவதோ,
கடன் வாங்கிச் செய்வதோ தேவையா என்பதுதான் நாம் இங்கே எழுப்பிக் கொண்டு விடை காண வேண்டிய
முக்கியமான கேள்வி.
*****
No comments:
Post a Comment