வைக்கோலை ஏன் ஏரிக்க வேண்டும்?
கால்
நூற்றாண்டுக்கு முன்பு அதாவது இரண்டாயிரமாவது ஆண்டுகளிலிருந்து நெல்லறுத்த பின் வைக்கோலை
வீட்டுக்குக் கொண்டு வரும் வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது.
அறுவடை
களங்கள் அப்போது பெரும்பாலும் போக்குவரத்துக்குப் பயன்படுத்தும் சாலைகளாகவே இருந்தன.
விவசாய களங்கள் அனைத்தும் வயல்களாக வெட்டிக் கரைக்கப்பட்டிருந்தன. சாலையோரங்கள் வைக்கோல்போர்களுக்கான
களங்களாக மாறத் துவங்கின. சில இடங்களில் மதில்கள் போலவும், சில இடங்களில் கிழக்குத்
தொடர்ச்சி மலையின் தொடர்ச்சியற்ற குன்றுகள் போலவும் சாலையோரங்கள் வைக்கோல் போர்களால்
நிரம்பிக் கிடந்தன.
பல நேரங்களில்
காடு தீ பிடித்து எரிவது போல வைக்கோல் போர்கள் எரிந்து கொண்டிருந்தன. எரிவதால் உண்டான
புகைச்சல் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்குக் கண் எரிச்சலை ஏற்படுத்தின.
இப்போது
அறுவடை இயந்திரங்கள் வந்து விட்ட பிறகு காட்சிகள் மாறி விட்டன. புல்லைத் தின்று விட்டு
சாணியைப் போடும் மாடுகள் இல்லாத குறையைப் போக்கும் வகையில் அறுவடை இயந்திரங்கள் நெல்லைச்
சேகரித்துக் கொண்டு வைக்கோலை வயலிலே போட்டு விட்டுச் செல்கின்றன.
வைக்கோலைத்
திரட்டிக் கட்டுகளாகக் கட்டும் இயந்திரங்களும் வந்து விட்டன. கட்டுகளாகக் கட்டிய பின்பும்
வயல்வெளிகளில், வாய்க்கால் ஓரங்களில் அனாதைகளாய்க் கைவிடப்பட்ட வைக்கோல்போர்களைப் பார்க்க
முடிகின்றது.
ஏன்
இந்த நிலை? வைக்கோலைத் தின்பதற்கான மாடுகள் இன்று விவசாயிகளின் வீடுகளில் இல்லை. வைக்கோலை
விலை கொடுத்து வாங்குவதற்கான ஆட்களும் இங்கு இல்லை. இங்கிருக்கும் வீடுகளில் இருக்கும்
டிராக்டர்களும் குபேட்டாக்களும் வைக்கோலைத் தின்ன மறுத்து, டீசலையே உணவாகக் கேட்கின்றன.
டீசலுக்கு இருக்கும் விற்பனை மவுசு வைக்கோலுக்கு இல்லை.
வைக்கோலைக்
கட்டுக் கட்டி கட்டுபடியாகும் விலைக்கு விற்பதற்கான விற்பனை விலை கைகூடும் அதிர்ஷ்டம்
இன்னும் வைக்கோலுக்குக் கிடைக்கவில்லை. கட்டாகக் கட்டப்பட்டு எரிந்து வீணாகும் வைக்கோல்
ஒரு பக்கம் என்றால், வயலில் கிடக்கும் வைக்கோலை அப்புறப்படுத்த ஆகும் செலவுக்கு யோசித்துக்
கொண்டு வயலிலேயே எரிக்கப்பட்டு வீணாகும் வைக்கோல் மறுபக்கம். எரியும் வைக்கோலை விவசாயிகளின்
வயிற்றெரிச்சலின் வடிவங்களாகப் பார்ப்பதா என்ன?
தொழில்நுட்ப
வளர்ச்சியின் பின்னணியில் நகர்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை முறை விவசாய விளைபொருட்களின்
விலைகளை அடிமாட்டு விலைக்கு வீழ்த்தி விட்டன. மாடுகளும் அடிமாடுகளாகி விட்டன, விவசாயிகளின்
வாழ்க்கையும் அடிமட்ட நிலைக்குப் போய் விட்டது.
இன்றைய
வயல்களில் டீசலோ, பெட்ரோலோ கிடைக்கும் நிலை இருந்தால் விவசாயிகளின் வாழ்க்கை செழிப்பாக
இருக்கும். வயல்களில் மின்சார உற்பத்தி செய்ய முடிந்தாலும் வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.
கிராமத்து நிலங்கள் இதற்கு மேல் வீட்டுமனைகளாக்க முடியாது என்ற சாபக்கேட்டின் எச்சத்தில்
மீந்து கிடக்கின்றன.
மனிதர்களின்
வயிற்றுப் பசிக்கு அரிசி தேவையில்லை என்றால் அது கூட வைக்கோலைப் போலத்தான் வீணாகும்.
வைக்கோலை
எரித்து வீணாக்க வேண்டியதில்லை. வைக்கோலானது மாடுகளின் உணவாகி பின் சாண வடிவில் எருவாகா
விட்டாலும், வயலை வைக்கோலோடு உழுவதாலும் அது எருவாகவே கூடும்.
மண்ணில்
மட்கும் அனைத்துப் பொருட்களும் மண்ணுக்கு உரமே என்பதால் வைக்கோலை எரித்து வீணாக்காமல்
மட்கச் செய்து பயனுள்ளதாக்கலாம். மட்க வாய்ப்புள்ள வைக்கோலை ஏன் எரிக்க வேண்டும்? வாழ்க்கையில்
நாம் எரிப்பது போதாதா என்ன?
*****
No comments:
Post a Comment