சிரிக்கும் கபட மனிதர்!
அந்த ஏரியாவுக்குப் புதிதாகக்
குடி வந்த அந்த நபர் மீது ஒருவிதமான கார்ப்பரேட் நம்பிக்கை நிலவியது.
அவர் நடத்திய மாதாந்தரச்
சீட்டு, வங்கிகளை விடவும் அதிக லாபம் தரும் என்கிற வதந்தி, தெருமுனைத் டீக்கடையில்
ஒரு உபநிஷதம் போலப் பரவிக் கிடந்தது.
அவசரத் தேவைக்குக் கை கொடுக்கும்,
என்று அக்கம்பக்கத்தினர் கொடுத்த தைரியத்தில், ஞானசுந்தரம் மாதா மாதம் ஐயாயிரம் ரூபாயை
அவரிடம் ஒப்படைத்து வந்தார்.
உண்மையில், அது அந்த ஆசாமிக்கு
கொடுத்த நன்கொடை என்பது அப்போது ஞானசுந்தரத்துக்குத் தெரியவில்லை.
சீட்டு முடிய இன்னும் மூன்றே
மாதங்கள். ஞானசுந்தரத்தின் கனவுகளில் அந்தப் பணத்தில் வாங்கப் போகும் பொருட்கள் அணிவகுப்பு
நடத்தின.
ஆனால், ஒரு காலை வேளையில்,
அந்த நபர் வீட்டைப் பூட்டிவிட்டு, ஊரையும் சேர்த்துப் பூட்டிவிட்டுத் தலைமறைவாகி விட்டார்.
ரசீது கூட வாங்காமல், ஒரு
நபரின் புன்னகையை மட்டுமே பிணையாக வைத்துப் பணம் கொடுத்த ஞானசுந்தரம் போன்ற பலர், இப்போது
தெருவில் நின்று கியூபிசம் ஓவியம் போல ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
முறையான வங்கி இருக்கும்போது
ஏன் அங்கே போனாய்? என்று இப்போது உறவுகளும் நட்புகளும் ஞானசுந்தரத்தைத் திட்டுகின்றன.
வழிப்பறி செய்தவனை விட, வழிப்பறி
கொடுக்க நின்றவன் மேல் தான் இந்தச் சமூகம் அதிகக் கோபப்படுகிறது.
நெருக்கமானவர் என்கிற தகுதியை
விட, அரசாங்க அங்கீகாரம் பெற்ற நிறுவனமே சிறந்தது என்கிற கசப்பான உண்மையை, அந்தப் பூட்டிய
கதவு ஞானசுந்தரத்துக்கு மிகத் தெளிவாகப் புரிய வைத்துவிட்டது.
புன்னகைக்கும் நபரை விட,
முறைக்கும் ஊழியர்கள் அடங்கிய வங்கியே பாதுகாப்பானது. அங்கு லாபம் குறைவாக இருக்கலாம்,
ஆனால் நம் தூக்கம் அதிகமாக இருக்கும். இதை பார்ப்போரிடமெல்லாம் ஞானசுந்தரம் ஞான வாக்கைப்
போலச் இப்போது சொல்லிக் கொண்டிருக்கிறார்.
நீங்களும் இதை நான்கு பேருக்குச்
சொல்லலாம். ஏதோ நான்கு பேருக்கு நன்மை என்றால், நான்கு வார்த்தை சொல்வதில் என்ன தவறு
இருக்கப் போகிறது?
*****

No comments:
Post a Comment