9 Apr 2026

ஒரு ஜோடித் தூக்குக்கயிறு!

ஒரு ஜோடித் தூக்குக்கயிறு!

பக்கத்து வீட்டு முதிய தம்பதிக்குத் திடீரெனக் கடவுள் மீது அதீதக் காதல் வந்துவிட்டது. ஊரில் கும்பாபிஷேகம் என்று, ஒரு வாரம் ஊருக்குப் போகிறார்கள்.

போகிறவர்கள் நிம்மதியாகப் போகாமல், ஒரு மஞ்சள் பையை நீட்டினார்கள் மார்த்தாண்ட தம்பதியிடம்.

தம்பி, நகையெல்லாம் வீட்ல வைக்க பயமா இருக்கு. உங்க பீரோவுல இருக்கட்டுமே? என்றார்கள்.

மார்த்தாண்ட தம்பதி அந்தப் பையை ஒரு புனிதப்பண்டம் போல வாங்கிக்கொண்டார்கள். உள்ளே என்ன இருக்கிறது என்று பார்ப்பது அநாகரிகம் என்று நினைத்தார்கள்.

உண்மையில், அது அநாகரிகம் மட்டுமல்ல, ஒரு மாபெரும் வரலாற்றுத் தவறு என்று புரிய சில நாட்கள் தேவைப்பட்டது.

ஒரு வாரம் மார்த்தாண்டத்தின் மனைவி தூங்கவில்லை. பீரோவுக்குப் பக்கத்தில் பல்லி ஊர்ந்தால் கூட, நகையைத் திருட வருகிறதோ? என்று சந்தேகப் பார்வையில் பார்த்தாள்.

ஒருவழியாகக் கும்பாபிஷேகத்திற்குப் போன அவர்கள் வந்தார்கள். மார்த்தாண்டத்தின் மனைவி அந்தப் பையை அப்படியே திருப்பிக் கொடுத்தாள்.

ஒரு நிம்மதிப் பெருமூச்சு இருவருக்கும். அந்தப் பெருமூச்சில் ஒரு சிறிய சூறாவளியே அடங்கியிருந்தது.

அடுத்த இரண்டு நாட்கள் அந்த வீட்டுப் பாட்டியின் முகம் ஒரு ப்ளாக் அண்ட் ஒயிட் சினிமா போல சோகமாக இருந்தது.

மார்த்தாண்டத்தின் மனைவிக்குத் தாங்கவில்லை. என்ன பாட்டி, கும்பாபிஷேகம் நல்லா நடந்ததா?, என்று எதார்த்தமாக விசாரிக்கப் போக, பாட்டி மெல்ல இழுத்தார்.

எல்லாம் நல்லாத்தான் நடந்ததும்மா. ஆனா, அந்த நகைப்பையில இருந்த ஒரு ஜோடி வளையலைக் காணோம். உங்க வீட்டுக்கு யாராவது புதுசா வந்துட்டுப் போனாங்களா? என்று ஒரு கேள்வியை, அமெரிக்கா ஈரானில் ஒரு குண்டைத் தூக்கிப் போடுவதைப் போலப் போட்டார்.

அந்தக் கேள்வி ஓர் அமெரிக்க அணுகுண்டு ஹிரோஷிமா, நாகசாகியில் வெடித்ததை விட மோசமாக வெடித்தது.

மார்த்தாண்டத்தின் மனைவிக்குத் தலை சுற்றியது. மார்த்தாண்டத்துக்கோ, சிறைச்சாலைக் கம்பிகள் கண்ணுக்குத் தெரிந்தன.

அவர்கள் அந்தப் பையிலிருந்து எதையும் எடுக்கவே இல்லை என்பதை எப்படி நிரூபிப்பது?

சாட்சியில்லாத நேர்மை என்பது ஒரு தற்கொலை முயற்சி.

அன்று மாலை முழுக்க மார்த்தாண்டத்தின் வீட்டில் ஒரு மயான அமைதி. ஒரு ஜோடி வளையலுக்காக முப்பது காலக் கௌரவம் குப்பையில் விழுந்தது போலத் தெரிந்தது.

மாலை ஆறு மணி இருக்கும். காலிங் பெல் அடித்தது. எமன் தான் வந்திருக்கிறார் என்று நினைத்துத் திறந்தால், மார்த்தாண்டத்தின் முன் பாட்டி நிற்கிறார். முகத்தில் ஒரு அசட்டுச் சிரிப்பு.

மன்னிச்சிருங்க தம்பி. போன மாசமே என் பொண்ணு அந்த வளையலை வாங்கிட்டுப் போனது எனக்கு ஞாபகமே இல்லை. பையைத் திறந்து பார்த்தப்பதான் தெரிஞ்சது. வயசான காலத்துல மறதி, என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

மார்த்தாண்ட தம்பதிக்கு அப்போதுதான் இதயம் மீண்டும் துடிக்க ஆரம்பித்தது. பாட்டிக்கு மறதி இருக்கலாம், ஆனால் மார்த்தாண்ட தம்பதிக்கு அது ஒரு பெரிய பாடம்.

பாட்டி போன பிறகு, மார்த்தாண்டத்தின் மனைவி பீரோவைத் திறந்து ஏதோ தேடினாள். அவளது முகம் வெளுத்துப் போனது.

என்ன ஆச்சு? என்றான் மார்த்தாண்டம்.

நிம்மதியில நான் கவனிக்கவே இல்லை. அந்தப் பாட்டிக்கு வளையல் கிடைச்சிருச்சு. ஆனா, அந்தப் பையில நான் அவசரத்துல கழட்டி வச்ச என் வைர மோதிரத்தைக் காணோம். அவங்க பையைத் தர்றப்போ தெரியாம என் மோதிரத்தையும் சேர்த்துப் போட்டுட்டேன்னு நினைக்கிறேன். இப்போ போய் எப்படிக் கேக்குறது?

மார்த்தாண்ட தம்பதி இப்போது மீண்டும் அதே சோகமான மௌனத்திற்குத் திரும்பியது.

*****

No comments:

Post a Comment