ஒரு தோழியும் ஓர் அழுகையும்!
அகிலா
வீடு தேடி வந்து அழைத்த போது குரலில் அத்தனை ஈரம். அவசர மருத்துவச் செலவு, என்றாள்.
பணம் இல்லாவிட்டால் எல்லாம் பணால் ஆகி விடும் என்றாள். கண்ணீரில் நனைந்த அந்தச் சொற்களைக்
கேட்டதும் இனியாவின் இதயம் மெழுகாக உருகியது.
ஆனால்
இனியாவின் வங்கிச் சேமிப்போ பாறையாகக் கல்லாய்க் கிடந்தது. கையில் பணமில்லை, ஆனால்
கையில் அதாவது மணிக்கட்டில் தங்கம் இருந்தது. அது வளையல்.
அடுத்த
மாசமே மீட்டுத் தந்துடுவேன்டி, என்று அகிலா சொன்னபோது, அகிலாவின் கண்களை விட இனியாவின்
வளையல்கள் பிரகாசமாக மின்னின.
கணவரிடம்
சொன்னால் லாஜிக் பேசுவார் என்று பயந்து, ரகசியமாக அந்தத் தங்கத்தை அகிலாவின் கையில்
தாரை வார்த்தாள் இனியா.
நம்பிக்கை
என்பது ஒரு அழகான கண்ணாடி. அதை ஒருமுறை அடகு வைத்தால், திரும்பக் கிடைக்கும்போது விரிசலோடுதான்
கிடைக்கும் என்பது அப்போது இனியாவுக்குத் தெரியவில்லை.
மாதங்கள்
ஓடின. அகிலாவும் எங்கே ஓடினாள் என்று தெரியவில்லை.
இனியா
போன் செய்யும்போதெல்லாம் அந்த நண்பி அகிலா ஒரு சிறந்த திரைக்கதை ஆசிரியராக மாறினாள்.
இந்தா
நாளைகேக் ஒரு செக் கிளியர் ஆகப்போகுது, என்றாள்.
செக்
கதை சொல்லி அலுத்துப் போன பிறகு, நாளைக்குச் சாயங்காலம் நாலு மணிக்கு உன் கைக்குத்
தங்கம் வந்துடும், என்றாள்.
இப்படி
அகிலா சொன்ன நாளை என்பது, விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளம் போல மீண்டும் மீண்டும்
முருங்கை மரம் ஏறிக்கொண்டே இருந்தது.
ஒரு
கட்டத்தில், அகிலாவின் போன் சுவிட்ச் ஆஃப் மோடுக்குச் சென்றது. அதுவரை தழுதழுத்த அவள்
குரல், இப்போது தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டது.
இனியா
விசாரித்தபோதுதான் தெரிந்தது, அந்தப் புண்ணியவதி வளையல்களை வைத்து மருத்துவச் செலவு
ஏதும் செய்யவில்லை. ஏதோ ஒரு ஆன்லைன் பிசினஸில் போட்டு, அதை அம்பானி ரேஞ்சுக்கு வளர்க்கப்
பார்த்து, கடைசியில் ஆப்பனியாகி நஷ்டமடைந்திருக்கிறாள்.
வேறு
வழியின்றி, கணவரிடம் சொல்லவும் முடியாமல், சொல்லி மெள்ளவும் முடியாமல் ரத்தக் கண்ணீர்
வடிக்காத குறையாக, எப்படியோ வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டிப் பணத்தைச் சேர்த்து நகையை
மீட்டெடுத்தாள் இனியா.
எப்படியோ
நகையை மீட்டெடுக்க முடிந்த இனியாவுக்கு, அதன் பிறகு அகிலாவின் நட்பை மீட்டெடுக்க முடியாமலேயே
போய் விட்டது.
நீதி
என்னவென்றால், கொடுப்பது கடன். அதை வாங்கும் அவர்கள் நினைப்பது அது தானம். கடைசியில்
கொடுத்தவருக்கு மிஞ்சுவது தியானம்!
*****

No comments:
Post a Comment