மூளை – ஒரு விசித்திர விருமாண்டி!
திடீரென
ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்னால் தனக்கு நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூரலாம். எனக்கு
அந்தத் தேதி ஞாபகம் இல்லை, ஆனால் அந்தச் சம்பவம் மட்டும் துல்லியமாக ஞாபகம் இருக்கிறது,
என்று சொல்லலாம்.
ஒரு
சாதாரண மனிதனுக்கு இது முரணாகத் தெரியலாம். ஆனால், ஒரு நரம்பியல் நிபுணருக்கு இதில்
ஆச்சரியமே இல்லை. அங்கேதான் ஹிப்போகாம்பஸ் என்கிற அந்தச் சின்னஞ்சிறிய மூளைப் பகுதி
வேலை செய்கிறது.
நமக்கு
ஒரு பயமோ, அதிர்ச்சியோ ஏற்படும்போது மூளையில் நோர்பின்பிரைன் மற்றும் எபின்பிரைன் போன்ற
ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை அந்தச் சம்பவத்தை மூளையில் ஆழமாக பச்சை குத்தி விடுகின்றன.
மற்ற விபரங்களான தேதி, கிழமை எல்லாம் காற்றில் பறந்துவிடும், ஆனால் அந்த டிராமா மட்டும்
ஹைடெபனிஷன் தரத்தில் பதிவாகிவிடும்.
நினைவாற்றலை
விஞ்ஞானிகள் இரண்டாகப் பிரிக்கிறார்கள்.
ஒன்று,
வெளிப்படையான நினைவு. இதில் பெயர்கள், தேதிகள், உங்கள் முதல் பாராட்டு, போன வாரம் சாப்பிட்ட
ஹோட்டல் போன்றன ஸ்டோரேஜ் ஆகும். இது ஹிப்போகாம்பஸில் நடக்கும் விஷயம்.
மற்றொன்று,
உள்ளார்ந்த நினைவு. இதில் சைக்கிள் ஓட்டுவது, ஷூ லேஸ் கட்டுவது போன்றன ஸ்டோரேஜ் ஆகும்.
இதற்கெல்லாம் நீங்கள் யோசிக்கத் தேவையில்லை. கை கால்களே பார்த்துக் கொள்ளும். இதற்கு
செரிபெல்லம் மற்றும் ஸ்ட்ரியேட்டம் ஆகிய பகுதிகள் பொறுப்பு.
மருத்துவ
உலகில் ஒரு சம்பவம். வலிப்பு நோயாளி ஒருவருக்கு ஒரு சர்ஜரி நடந்தது. வலிப்பு குறைய
வேண்டும் என்பதற்காக அவர் மூளையின் ஒரு பகுதியை ஹிப்போகாம்பஸ் உட்பட வெட்டி எடுத்தார்கள்.
வலிப்பு நின்றது, ஆனால் ஒரு விபரீதம் நடந்தது. அவரால் புதிய விஷயங்களை ஞாபகம் வைத்துக்கொள்ளவே
முடியவில்லை.
டாக்டரைச்
சந்திப்பார், ஐந்து நிமிடம் கழித்து வெளியே போய்விட்டு உள்ளே வந்தால், யார் நீங்கள்?
என்று கேட்பார். ஆனால் சுவாரஸ்யமாக, அவருக்கு ஒரு ஸ்டார் வரையக் கற்றுக்கொடுத்தால்,
அதைச் சரியாகச் செய்வார். யார் கற்றுக்கொடுத்தது? என்றால் தெரியாது என்பார். இதன் மூலம்தான்,
செயல்முறை நினைவு தனி, தகவல் நினைவு தனி என்று உலகிற்குத் தெரிந்தது.
விஞ்ஞானிகள்
இந்த விசய்ததை இத்தோடு விட்டு விடவில்லை. நிறைய உயிரிகளை வைத்து ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.
அதில் ஒன்று, ஒரு அடி நீளம் இருக்கும் அப்லீசியா என்ற கடல் நத்தையை வைத்து செய்த ஆராய்ச்சி.
அதன் நரம்பு மண்டலம் மிக எளிமையானது. அந்த நத்தைக்கு ஒரு விஷயத்தைக் கற்பிக்கும்போது,
அதன் நரம்பு செல்களுக்கு இடையே இருக்கும் இணைப்புப் புள்ளி பலமடைவதைக் கண்டறிந்திருக்கிறார்கள்
விஞ்ஞானிகள்.
நாம்
ஒரு விஷயத்தைத் திரும்பத் திரும்பச் செய்யும்போது, மூளை தன்னைத்தானே ரீவயர் செய்துகொள்கிறது.
இதற்குப் பெயர் நியூரோப்ளாஸ்ட்டிட்டி. டாக்ஸி டிரைவர்களை ஸ்கேன் செய்து பார்த்தபோது,
ஊர் வழிகளை ஞாபகம் வைத்துக்கொண்டே இருந்ததால் அவர்களின் ஹிப்போகாம்பஸ் பகுதி மற்றவர்களை
விடப் பெரிதாக இருந்ததாம்!
வாழ்க்கை
என்பதே நினைவுதான். கடந்து போகிற இந்த ஒரு நொடியைத் தவிர மற்ற எல்லாமே நினைவுகள்தானே?
இப்படி
மூளையின் நினைவுகளில், செயல்களில் பல விசித்திரங்கள் இருக்கின்றன. இங்கே ஒன்றைப் பார்த்தோம்.
இது போன்று நிறைய இருக்கின்றன சங்கதிகள். ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
நம்
மூளை ஒரு விசித்திரமான லைப்ரரி. அங்கே சில புத்தகங்கள் பளிச்சென்று இருக்கும், சில
கறையோடு இருக்கும், சில காணாமல் போயிருக்கும். ஆனால், அந்த லைப்ரரிதானே நாம் யார் என்பதைத்
தீர்மானிக்கிறது.
*****

No comments:
Post a Comment