27 Jul 2021

சத்யனின் ‘தேநீர் என்று பெயரிட்டுக் கொண்டவன்’ –நூலறிமுகம்

சத்யனின் ‘தேநீர் என்று பெயரிட்டுக் கொண்டவன்’ –நூலறிமுகம்

            சத்யனின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு ‘தேநீர் என்று பெயரிட்டுக் கொண்டவன்’. நூலமைப்பிலும் கவித்துவத்திலும் இத்தொகுப்பின் மூலமாக சத்யன் ஒரு புதிய உச்சத்தை அடைந்திருக்கிறார்.

            தன் மென்மையான மனதை எழுத்தில் படர விட்டு கவிதையில் தான் அடைந்திருக்கும் விழிப்புணர்வை இத்தொகுப்பின் கவிதைகள் ஒவ்வொன்றிலும் சோதித்துப் பார்க்க முயல்கிறார் சத்யன். இச்சோதனையின் முடிவாக இயற்கையும் கவிதையும் வேறல்ல என்ற முடிவை அடைவதை

                        “தாய்க்குருவி கொத்தி தவறவிட்ட லார்வாப்புழு

                        இதுவாகத்தான் இருக்கக் கூடுமோ

                        என்றெண்ணுகையில்

                        தரை இறங்கிய பழுத்த இலையொன்றில்

                        படபடத்தது சிறகுகளின் ஆமோதிப்பு”[1]

என்ற தொகுப்பின் முதல் கவிதையில் காட்டி விடுகிறார். தலைப்புகளை வெகு கவனமாக ஒவ்வொரு கவிதைக்கும் தவிர்த்திருக்கிறார். இரண்டாவது தொகுப்பிலும் இவ்வித தலைப்பு தவிர்ப்பை அவர் கையாண்டிருந்தாலும் இத்தொகுப்பில் அது வாசிப்பவருக்கு வெவ்வேறு தலைப்புகளில் பிரயாணிப்பதற்கான சுதந்திரத்தை வழங்குகிறது. முதல் இரண்டு தொகுப்புகளில் தராத ஆழ்மன சுதந்திரத்தை இத்தொகுப்பில் சத்யன் வாசிப்போருக்கு வழங்குகிறார்.

            சங்க இலக்கிய பாடல்களுக்குள் உள்ள சொற்களின் இறுக்கத்தையும் நெருக்கத்தையும் அனுபவ அடர்த்தியோடு அநேக கவிதைகளில் பதிகிறார் சத்யன். முதலிரு தொகுப்பின் அனுபவங்களுக்குள் சுழன்றபடி செழுமையான சொற்கள் மற்றும் அழுத்தமான படிமங்கள் வழியாக இம்மூன்றாவது தொகுப்பை முன் வைக்கிறார். அவரது முதலிரு தொகுப்புகளைப் படித்தவர்களுக்கு இத்தொகுப்பை உள்வாங்குவதும் அதனுள் ஆழ்வதும் சுவாரசியமான அனுபவமாக இருக்கும்.

            தனது மூன்றாவது கவிதைத் தொகுப்பில் பல நுட்பமான அக தரிசனங்களைக் கண்டடைந்தபடி தன் கவிதைகளை முன்னகர்த்தும் சத்யன் வாழ்க்கையின் சிடுக்கான அனுபவங்களைச் சொற்களைக் கொண்டு உறைய வைப்பதில் மிகு கவனம் செலுத்தியிருக்கிறார். அதற்கேற்ப பட்டாம்பூச்சிகளை வண்ணக்கலவையைக் குழைத்தும் வண்ணமற்றதுமாய்ப் பல இடங்களில் பறக்க விடுகிறார்.

            அக வாழ்வின் நுண்ணியமான பல முடிச்சுகளை வெளிப்புற உருவகத்தால் உள்ளுறையாகக் கடக்கும் நுட்பத்தை

                        “நான்

                        காமம் போர்த்திக் கொள்கிறேன்

                        இந்தக் கொடும் பாலையை

                        ஒட்டகமென

                        கடந்து செல்கிறாய் நீ”[2]

என்ற கவிதையில் அநாயமாகச் சாத்தியப்படுத்துகிறார். மேலும் இக்கவிமொழியில் பெண்ணுடல் மேல் ஆணுடல் கொள்ளும் ஆதிக்கத்தைப் பெண்ணியம் பேசும் ஆணின் பார்வையில் சமன் குன்றாது பதிந்திருக்கிறார்.

            தேநீர் என்பது விழிப்புணர்வின் குறியீடாகப் பார்க்கும் ஜென் தத்துவத்தை உள்நோக்கும் அனுபவத்தின் அதன் அகச்சாத்தியத்தோடு இத்தொகுப்பைப் படைக்க முயல்கிறார் சத்யன். வாழ்க்கை என்பது வெற்றியோ தோல்வியோ அற்ற அக்கணத்தில் வாழும் விழிப்போடு தொடர்புற்றிருக்கும் தன்மையே

                        “விடியலுக்கு முன்

                        ஜெயித்து விட வேண்டும்

                        நமக்கான தோல்வியை”[3]

என்ற ஒரு கணத்தின் முடிவைப் பின்னொரு கணத்தில்

                        “எதுவானாலென்ன

                        முயல்களுடனான

                        தோல்வியானாலும் கூட”[4]

வேறொரு விழிப்புணர்வு தளத்தில் மாற்றுவதை இத்தொகுப்பில் காண முடிகிறது. இவ்விழிப்புணர்வு தேடலின் உக்கிரத்தை

                        “ஏதும் நிகழ்வதற்குள்

                        அறிந்து விட வேண்டும்

                        என் இருப்பிற்கான சூட்சமத்தை”[5]

என்ற வரிகளில் சத்யன் காட்டவும் செய்கிறார். இத்தேடல் தரும் மாய பிம்பங்களின் தோற்றத்தை

                        “மிதக்கும் என் கால்கள் பட்டு

                        உடைந்த கண்ணாடியாய்

                        சிதறுகின்றன மாய பிம்பங்கள்”[6]

எனப் பதியும் சத்யன் ஜென் வாசம் தரும் தேடலற்ற தேடலை

                        “பெயரறியா பானத்திற்கு

                        நான்தான்

                        தேநீரெனப் பெயரிட்டுக் கொண்டேனோ”[7]

என்ற வரிகளில் அடைவதைக் காண முடிகிறது.

                        “ஏனைய மானஸ்தர்கள்

                        என் நிழலின் மீது கல்லெறிகிறார்கள்”[8]

                        “தியான புத்தரின்

                        மூடிய இமைகளாய்

                        விரிந்திருக்கின்றன

                        போன்சாய் இலைகள்”[9]

என்ற வரிகளில் தான் அடைந்த கவித்துவமான விழிப்புணர்வைக் காட்டும் சத்யன் தன் தொகுப்பின் இறுதியில்

                        “படிநிலைகளில் விலங்கினும் கீழாய்

                        சரியத் தொடங்கியிருந்தது

                        மனித அறிவு”[10]

எனும் வரிகளில் தளர விடுவதான தோற்றத்தைத் தருகிறார். தளர விடுவது அடுத்த தொகுப்பில் அதை மீட்க வேண்டும் என்ற வேட்கையின் தொடர்ச்சியாகவும் இருக்கலாம்.

            பட்டாம்பூச்சி, சிலந்தி, ஈக்கள், ஈசல் எனப் பூச்சிகளோடு இறகுகளும் சிறகுகளும் கொண்ட பறவைகள் பல விதமாகப் பறந்து புணர்ச்சியும் மரணமும் வெவ்வேறு தோற்றம் தரும் மன ஓவியங்களை கவிதைத் தூரிகைகளால் வெவ்வேறு விதமாக வரைந்து காட்டும் தொகுப்பாக இத்தொகுப்பு அமைகிறது.

            மேலும் அத்துடன் அமையாது, வண்ணங்களையும் தூரிகைகளையும் பரிசில்களாய் வழங்கி விருப்பம் போல் ஓவியங்களை உருவாக்கிக் கொள்ள உவந்தளிக்கும் புரவலனைப் போல் சத்யன் வழங்கியிருக்கும் இத்தொகுப்பு வாசித்த பின் மனதுக்குள் வரையும் கவிதை ஓவியங்கள் அலாதியான அனுபவத்தைத் தர வல்லவை. அதற்கேற்ப அவர் அறிமுகப்படுத்தியருக்கும் ஓவியர்களின் ஓவியங்களும் தனித்துவமான கவிதை மொழியைப் பேசுகின்றன. சத்யனின் கவிதைத் தொகுப்புகள் என்றால் கவிதையும் ஓவியங்களும் பின்னிப் பிணைந்தவை என்பதை மெய்ப்பிக்கும் இத்தொகுப்பு மனதுக்குள் வரைந்து போகும் கவியோவியங்கள் வாசிப்போரையும் கவிஞர்களாக்கி விடும் ரசவாதம் கொண்டவை. இந்த ரசவாதம் அவரது அடுத்த கவிதைத் தொகுப்பை ஆவலோடு எதிர்பார்க்க வைக்கிறது எனலாம்.

நூல் குறிப்பு

நூலாசிரியர்

ஆர். சத்யன்

தொடர்பு எண் : 94433 82614

நூல் பெயர்

தேநீர் என்று பெயரிட்டுக் கொண்டவன்

பதிப்பும் ஆண்டும்

முதல் பதிப்பு, 2021

பக்கங்கள்

64

விலை

ரூ. 100/-

நூல் வெளியீடு

சித்ரகலா பதிப்பகம்,

அகரக்கடம்பனூர்,

கீழ்வேளூர் – 611 104,

நாகப்பட்டினம் மாவட்டம்.

தொடர்பு எண் : 94433 82614

 



[1] ஆழி. சத்யன், தேநீர் என்று பெயரிட்டுக் கொண்டவன், ப. 11

[2] ஆழி. சத்யன், தேநீர் என்று பெயரிட்டுக் கொண்டவன், ப. 28

[3] ஆழி. சத்யன், தேநீர் என்று பெயரிட்டுக் கொண்டவன், ப. 17

[4] ஆழி. சத்யன், தேநீர் என்று பெயரிட்டுக் கொண்டவன், ப. 31

[5] ஆழி. சத்யன், தேநீர் என்று பெயரிட்டுக் கொண்டவன், ப. 35

[6] ஆழி. சத்யன், தேநீர் என்று பெயரிட்டுக் கொண்டவன், ப. 40

[7] ஆழி. சத்யன், தேநீர் என்று பெயரிட்டுக் கொண்டவன், ப. 57

[8] ஆழி. சத்யன், தேநீர் என்று பெயரிட்டுக் கொண்டவன், ப. 47

[9] ஆழி. சத்யன், தேநீர் என்று பெயரிட்டுக் கொண்டவன், ப. 49

[10] ஆழி. சத்யன், தேநீர் என்று பெயரிட்டுக் கொண்டவன், ப. 64

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...