23 Feb 2026

நாக்கே பேசாதே ப்ளீஸ்!

நாக்கே பேசாதே ப்ளீஸ்!

வாழ்க்கை என்பது ஒரு விசித்திரமான டிஜிட்டல் உலகம். நாம் ஓர் உள்ளீடு கொடுத்தால் எர்ரர் மெசேஜ் இன்ஸ்டன்டாக அனுப்பப்படும், அல்லது ஒட்டுமொத்த கட்டமைப்பே ஹேங் ஆகும். நாம் சொல்வதை யாரும் கேட்கப்போவதில்லை என்று தெரிந்த பிறகு, அங்கே எதற்கு ஒரு மைக்ரோஃபோன்?

நம் வழிமுறைகள் தரமானதாக இருக்கலாம். ஆனால் ஏன் இந்த எர்ரர் மெசேஜ், சிஸ்டம் ஹேங்? ஏனென்றால் நாம் சொல்வதைச் செயல்படுத்த வேண்டியவர்கள் மொபைல் போன் அப்டேட் செய்யாத பழைய மாடல் மனிதர்களாக இருக்கிறார்கள். அதில் புதிய ஆப் வேலை செய்யாது. ஆப்பு அடிக்கவே செய்யும்.

மனிதர்கள் பொதுவாக வித்தியாசமானவர்கள். சரியாக நடப்பதை விரும்பவும் மாட்டார்கள், நல்லதாக நான்கு விசயங்கள் சொல்வதைக் கேட்கவும் மாட்டார்கள். இது அவர்களின் பிழையன்று, அவர்களின் மனதின் டிசைனின் பிழை.

அது போன்ற நிலைமைகளில் நம்முடைய எனர்ஜியை வேஸ்ட் செய்வது லாஜிக் இல்லாத விஷயம். ஓரளவுக்கு மேல் முயற்சி செய்தால், நம்முடைய மனம் சூடாகி, மன உளைச்சல் என்கிற ப்ளூ ஸ்கிரீன் வந்துவிடும். மற்றவர்களும் நம்முடைய அட்வைஸ் எனும் ஓவர்லோடைத் தாங்க மாட்டார்கள்.

எல்லாவற்றிற்கும் ஒரே தீர்வு சைலன்ட் மோட். பேசாமல் இருப்பது. பேச்சைக் குறைப்பது அல்ல, பேச்சையே நிறுத்துவது. உலகத்தின் பாதிப் பிரச்சனைகளுக்குக் காரணம் இந்த நாக்கு என்கிற ஹார்டுவேர்தான். தேவையில்லாமல் பேசப் போய், அது வில்லங்கம் என்கிற வைரஸை உள்ளே இழுத்து வந்துவிடுகிறது.

பேசும்போது என்ன பேசுகிறோம் என்று புரியாமல் பேசிவிடுவதால் வரும் ஆபத்துகள் அதிகம். பேசாமல் இருக்கும்போது அந்த ரிஸ்க் பேக்டர் ஜீரோ ஆகிவிடுகிறது.

நாம் மனநிறைவோடு இருந்தால் அதற்கு மேல் அடைவதற்கு என்ன இருக்கிறது? வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் எல்லாம் சுழியம் ஆகிவிடுகிறது. ஒருவிதமான நிதானம், போதும் என்ற மனம்.

அப்போதும் இப்போதெல்லாம் ஏன் எதுவும் சொல்வதில்லை என்று கேட்க ஒரு கூட்டமே வரும். சொல்லி என்ன பயன் என்பதுதான் பதில். எல்லாவற்றையும் சாமர்த்தியமாகப் பேசி டெலீட் செய்பவர்களிடம் நம்முடைய நல்லன எதுவும் எடுபடாது.

எல்லாரும் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள ஒரு வழியும் இருக்கத்தான் செய்கிறது. அது அனுபவம். அவர்கள் அனுபவப்பட்டுத் தெரிந்து கொள்ளட்டும்.

வாழ்க்கையில் எல்லோருடைய பேச்சையும் கேட்டுக்கொண்டிருக்க முடியாது என்பது உண்மைதான். அதே நேரத்தில் யாருடைய பேச்சையும் கேட்காமலும் இருக்க முடியாது. அப்படியானால் யார் பேச்சைக் கேட்பது? யார் பேச்சுக்கு எஸ்கேப் கீயை அழுத்துவது என்கிறீர்களா?

யார் களத்தில் நின்று வேலை பார்க்கிறார்களோ, அவர்கள் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். ஏனென்றால் அவர்கள்தான் அப்டேட் அனுபவத்தோடு இருப்பார்கள். வாழ்க்கையில் அவுட்டேட்டட் அனுபவம் உபயோகப்படாது.

என்றாலும் என்னதான் தெரிந்தாலும், இந்த உலகிற்கு எதையாவது சொல்ல நினைத்தாலும், இன்றைய தேதியில் எனக்குத் தெரிந்த சிறந்த தத்துவம், மவுனம் என்பது வெறும் சத்தம் இல்லாத நிலை அல்ல, அது ஒரு பாதுகாப்பான கவசம்.

அதனால்தான் நான் பேசுவதில்லை. எழுதுவதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

*****

No comments:

Post a Comment