26 Jun 2025

மாபெரும் பாராட்டு பெற்ற கவிதை!

மாபெரும் பாராட்டு பெற்ற கவிதை!

எத்தனையோ கவிதைகளை எழுதியிருக்கிறேன். ஆனால் இந்தக் கவிதைக்குக் கிடைத்த பாராட்டும், கைத்தட்டல்களும் என்னை ஆச்சரியப்படுத்தின. அது கல்யாணம் தொடர்பான ஒரு கவிதை. அந்தக் கவிதையைக் கடைசியில் சொல்கிறேன்.

இப்போது அதை படித்துப் பார்க்கும் போது அது ஒரு கவிதையா என்று எனக்குத் தோன்றுகிறது. நண்பர்களோ அதைப் படித்துப் பார்த்து விட்டு, இப்போதும் அது ஆகச் சிறந்த கவிதை என்கிறார்கள். இதனால்தான் வாழ்க்கை என்பது அபத்தமான முரண்பாடு என்ற முடிவுக்குப் பல நேரங்களில் நான் வந்துவிடுகிறேன்.

கொஞ்சம் கால்த்தில் பின்னோக்கிப் போகும் போது, அதாவது, கல்யாணம் நடந்த போது மனைவி எனக்குப் பயந்து இருப்பாள் என்கிற மிதப்பு இருந்தது. ஆண் என்கிற ஆதிக்க உணர்வும் இருந்தது. நான் இவளை வைத்து எப்படிக் குடும்பத்தைக் கொண்டு போகிறேன் பார் என்கிற தெனாவெட்டு இருந்ததும் உண்மை.

காலம் கடக்க கடக்கத்தான் மனம் கொள்ளும் நம்பிக்கைகள், மனம் ஏற்படுத்திக் கொண்ட திமிர்த்தனங்கள், மனதில் உருவாகியிருந்த கருத்தாக்கங்கள் எவ்வளவு தவறு என்பது புரியத் தொடங்கியது.

மனம் நினைப்பது போலெல்லாம் வாழ்க்கையில் நடக்காது என்பதும், வாழ்க்கையில் எதார்த்தமாக எது நடக்குமோ அதையெல்லாம் மனம் நினைக்காது என்பதும் புரிந்தது.

‘என் ராசாவின் மனசில’ என்ற படத்தில் கவுண்டமணி “எல்லாம் பொண்டாட்டிக்குப் பயந்த பசங்க” என்ற ஒரு வசனம் பேசுவார். இந்த வசனத்தைக் கேட்ட போது, உங்களைப் போலப் பொங்கி எழுந்தவர்களில் நானும் ஒருவன். வரலாற்றில் ஏற்பட்ட இந்தப் பிழையை மாற்றிக் காட்ட வேண்டுமென்று, இந்த வசனத்தைக் கேட்ட அன்று பிற்பகல் ஏழரை மணி அளவில் நான் எடுத்துக் கொண்ட சபதமும் எனக்கு நினைவுக்கு வருகிறது. என் சபதம் ஏழரையில் முடிந்து போனது. இப்போது சபதம் எடுப்பதென்றால் ஏழரை மணிக்கு எடுப்பதில்லை, அது முற்பகலாக இருந்தாலும் சரி, பிற்பகலாக இருந்தாலும் சரி.

பயம் என்பதும் கோழைத்தனமல்ல. வீரத்துடன் பயப்படுவது தவறானதும் அல்ல. அதெப்படி வீரத்துடன் பயப்படுவது என்று கேட்கக் கூடாது. பயம் மனதுக்குள் இருக்கும், ஆனால் உடலில் உதறல் தெரியக் கூடாது. பயப்படாத மாதிரி நடிக்க வேண்டும், ஆனால் வேறு வழியில்லை உள்ளுக்குள் பயந்துதான் ஆக வேண்டும். இது சாதாரணமாகத் தெரியலாம். இதை ஒரு நிலைப்படுத்திக் கொண்டு வருவது என்பது சிவாஜியின் நடிப்பை விடக் கடினமானது. பல வருடப் பழக்கத்தில் எனக்கு இந்த நடிப்பு கைகூடி வர பத்தாண்டுகளுக்கு மேல் ஆனது.

இப்போது நான் மனைவியிடம் நிற்கும் தோரணையைப் பார்த்தால் நீங்களே மிரண்டு விடுவீர்கள். என்னடா இவன் இவ்வளவு மோசமான ஆணாதிக்கவாதியாக இருக்கிறானே என்று. ‘பயிற்சியே மனிதரை மேம்படுத்தும்’ என்ற வாசகம் பொய்யாகி விடுமா என்ன?

வள வளவென்று பேசியது போதும், கவிதைக்கு வா என்கிறீர்களா?

கடைசியில் பொண்டாட்டியிடம்

பயந்து கிடப்பதற்காகக்

கல்யாணம்.

*****

No comments:

Post a Comment