1 May 2026

ஜாக்கிரதை! ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது!

ஜாக்கிரதை! ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது!

ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது!

இந்தப் பஞ்ச் டயலாக் இப்போது பேஷன். அதுவும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளிவரப் போகும் இந்த நேரத்தில்.

மாநில அளவில் மட்டுமல்ல, தேசிய அளவில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் இதே கதைதான்.

அமெரிக்காவில் டிரம்ப் சொன்னார், ரஷ்யாவின் புதின் சொன்னார் என்று உலகெங்கும் ஜனநாயகம் குறித்து இதே பஞ்சாயத்துதான்.

பொதுவாக, எதிர்க்கட்சி ஜெயித்தால் நாடு தாங்காது, ஜனநாயகம் செத்து விடும் என ஒரு பீதி கிளப்பப்படுகிறது.

ஆனால் மேட்டரே வேறு. பிளாட்டோவின் ரிபப்ளிக் புத்தகத்தை எடுத்துத் தூசு தட்டிப் பார்த்தால், கிமு 380களில் சாக்ரடீஸ் இதே கவலையைச் சொல்லியிருக்கிறார்.

ஜனநாயகத்தில் இளவட்டங்களுக்கு ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்து விடுவதாகவும், அதனால் குற்றவாளிகள் தப்பித்து வெளியே சுற்றுவதாகவும், இது தர்ம அடி வாங்கி ஒருநாள் சர்வாதிகாரத்தில்தான் முடியும் என்று அவர் அப்போதே சொல்லி விட்டார்.

ரோம் நகரிலும் இதே கதைதான். வாக்குச்சீட்டில் தில்லுமுல்லு பண்ணி விட்டதாக ஒருத்தரை ஒருத்தர் அடித்து கொலை செய்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் சாகாத ஜனநாயகம், இப்போது மட்டும் ஏன் சாகும்? எப்படிச் சாகும்?

ஜனநாயகம் என்பது ஏதோ வானத்திலிருந்து குதிக்கும் தத்துவம் கிடையாது. அது கல்லாப்பெட்டி சம்பந்தப்பட்டது. உங்களுக்கு இதைக் கேட்டதும் குபீர் என்று இருக்கலாம். வரலாறு அப்படித்தான் சொல்வதாக வரலாற்று ஆசிரியர்கள் க்ளூ கொடுக்கிறார்கள்.

எப்போதெல்லாம் ஒரு நாடு சண்டை போட்டு ஜெயிப்பதை விட, வியாபாரம் செய்து சம்பாதிக்கலாம் என்று முடிவெடுக்கிறதோ, அப்போது அங்கே ஜனநாயகம் துளிர் விடும். இதை நீங்கள் நம்ப மறுக்கலாம். ஜனநாயகத்துக்கும் வியாபாரத்துக்கும் அப்படி ஒரு தொடர்பு இருக்கிறது. இதற்கு நீங்கள் வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்க்கத்தான் வேண்டும்.

இதன் லாஜிக் எளிமையானது. ஒரு கடைக்காரருக்கு வருகின்ற கஸ்டமர் கருப்பா, சிவப்பா, எந்தச் சாதி, எந்தக் கடவுளைக் கும்பிடுறார் என்ற கவலை கிடையாது. அவர் கையில் காசு இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.

இதை ஒரு ஈக்வேஷன் ஆகப் போட்டால், வியாபாரம் = சகிப்புத்தன்மை என்றுதான் போட வேண்டும். அடுத்த ஈக்வேஷன் போட வேண்டுமானால், சகிப்புத்தன்மை = ஜனநாயகம் என்றுதான் போட வேண்டும். அதனால்தான் இந்திய ஜனநாயகம் வாக்குவங்கி வியாபாரமாக இருக்கிறதா என்று கேட்டால், அதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஏனென்றால் வரலாறே அப்படித்தான் இருக்கிறது.

ஏதென்ஸ், ரோம், அப்புறம் இடைக்கால இத்தாலிய நகரங்கள், இதெல்லாம் செழித்ததற்குக் காரணம் அங்கிருந்த வணிகம்தான். வரலாறு இதைத்தான் சொல்கிறது.

ஜனநாயகத்துல ஈக்வாலிட்டி எப்படி வருகிறது? இதற்கும் ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது.

காலையில் ஒரு ஏசி மெக்கானிக் ஹோட்டலுக்குப் போய் சாப்பிடுறார். அங்கே சர்வ் பண்ணும் பெண் அவருக்கு வேலைக்காரி மாதிரி. அதே பெண் சாயந்திரம் தன் வீட்டு ஏசியைச் சரி பண்ண அந்த மெக்கானிக்கை வேலைக்குக் கூப்பிட்டால், இப்போது மெக்கானிக் வேலைக்காரர். அந்தப் பெண் முதலாளி.

இந்த ரோல் ரிவர்சல்தான் மனிதருக்குள் சமத்துவத்தை உருவாக்குகிறது. காசு இருந்தால் யாரும் யாருக்கும் ராஜா இல்லை, யாரும் யாருக்கும் அடிமை இல்லை.

இப்போது இன்னொருகேள்வி.

படிக்காதவர்கள் கையில் ஓட்டுரிமை இருந்தால் நாடு உருப்படுமா?  ஜான் ஸ்டூவர்ட் மில் போன்ற அறிஞர்களுக்கு இந்தக் கவலை இருந்தது. புத்திசாலிக்கு இரண்டு ஓட்டு, மற்றவர்களுக்கு ஓர் ஓட்டு என்று இதற்கு ஐடியா கூட கொடுத்தார்கள். அது ஒர்க் அவுட் ஆகவில்லை என்பது வேறு விசயம்.

ஆனால், நிஜத்தில் ஜனநாயகம் ஏன் உடையாமல் இருக்கிறது என்றால், நமக்கு அரசியல்வாதியை விட அமேசானும், அண்ணாச்சி கடையும்தான் முக்கியம்.

நம் ஊர் ஜனங்களுக்கு ஆசியா கண்டம் மேப்பில் எங்கே இருக்கிறது என்பது தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஓர் எலக்ட்ரீஷியனுக்கு வயரிங் பண்ணத் தெரியும், ஒரு சாப்ட்வேர் இன்ஜினியருக்கு கோட் பண்ணத் தெரியும். இதை கம்பரேடிவ் அட்வான்டேஜ் என்கிறார்கள்.

நமக்கு எல்லாம் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. ஆளுக்கு ஒரு வேலையைச் சிறப்பாகச் செய்தால் போதும், டிரேடிங் மூலமாக வாழ்க்கை ஓடிடும். அதற்கு அரசியல் ரீதியாக ஜனநாயகம் எனும் தத்துவம்தான் வசதி. அதனால் வியாபாரம் செழிக்கும் போது அது ஜனநாயகத்தை விடாமல் பிடித்துக் கொள்ளும். இந்திய ஜனநாயகம் என்பது கூட வியாபாரம் பண்ண வந்த பிரிட்டிஷார் வழி கண்டடைந்து மேம்படுத்தப்பட்டதுதானே.

அப்படியானால் ஜனநாயகம் சாகாதா?

அது சாகாது, தற்கொலையும் பண்ணிக் கொள்ளாது, ஆனால், அது கொலை செய்யப்படும்.

எப்போது ஒரு நாடு உற்பத்தியையும், வியாபாரத்தையும் விட்டு விட்டு, யுத்தம்தான் பெரிது என்று கிளம்புதோ அப்போது ஜனநாயகம் அவுட்.

அப்புறம் அதன் அடுத்த வில்லன், சோஷியல் இன்ஜினியரிங்.

கம்பெனிகள் லாபத்தை நோக்கியும், தரத்தை நோக்கியும் ஓடாமல், இத்தனை பேரைச் சேர்த்துக் கொள்ளுங்கள், இந்த இனத்தவர்களுக்கு மட்டும் சப்போர்ட் பண்ணுங்கள், வேற்று இனத்தவரை அனுமதிக்காதீர்கள் என்று அரசியல்வாதிகள் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தால், அங்கே திறமை அடிபடும். வியாபாரம் நலிவடையும். ஜனநாயகம் கொஞ்சம் கொஞ்சமாக சர்வாதிகார மோடுக்கு மாறி விடும்.

ஜனநாயகம் என்பது ஒரு லைவ் அண்ட் லெட் லைவ் கலாச்சாரம். இது அரசாங்கம் நம்மை நல்லவர்களாக மாற்றும் என்று எதிர்பார்க்கும் சிஸ்டம் இல்லை, நம்மை நிம்மதியாகச் சம்பாதிக்க விடும் என்று எதிர்பார்க்கும் சிஸ்டம்.

அரசியல்வாதிகள் மேடையில் என்ன வேண்டுமானாலும் கூச்சலிடட்டும். ஜனநாயகம் போய் விட்டது என்று அலறட்டும். ஆனால், எப்போது வரைக்கும் ஒரு கடைக்காரர் தன் கஸ்டமரை வாடிக்கையாளர் என்பவரே தெய்வம் என்று நினைக்கிறாரோ, எப்போது வரைக்கும் புதுப்புது கண்டுபிடிப்புகள் சந்தைக்கு வருகிறதோ, அப்போது வரைக்கும் ஜனநாயகம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டுதான் இருக்கும்.

*****

No comments:

Post a Comment