மூன்றில் ஒரு பங்கு விலையில் மடிக்கணினி!
திரிபுரசுந்தரம்
ஓர் எழுத்தாளன். காப்பி நோட்டு எழுதித் தரச் சொன்னாலும், ரோக்கா போடச் சொன்னாலும்,
கவிதை எழுதித் தரச் சொன்னாலும், அதையே சிறுகதையாக மாற்றச் சொன்னாலும் எதையும் செய்வான்.
மகா கெட்டிக்காரன், பேனா என்றில்லை, எழுத்தாணி கொடுத்து பனையோலை தந்தாலும் கவலைப்பட
மாட்டான். எழுதித் தள்ளி விடுவான்.
வீட்டுப்பாடம்
எழுதிக் கொடுப்பது, மனுக்கள் எழுதிக் கொடுப்பது, பரிதாபமாய் வந்து நிற்கும் பிள்ளைகளுக்கு
தண்டம் (இம்போசிசன்) எழுதிக் கொடுப்பது என்று போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கையில்,
அவன் கையில் என்ன வருமானம் இருந்து விடும்? கிடைத்த வருமானத்தில் அல்லக்கை வாழ்க்கை
வாழ்வது கடினமாக இல்லை என்றாலும், ஒரு லேப்டாப் கிடைத்தால் பில்கேட்ஸ் ஆகி விடலாம்
என்ற நினைப்பு அவனை வருத்தி எடுத்தது.
இந்தச்
செய்தி பில்கேட்ஸ்க்கு எட்டினால் அவரே ஓர் இலவச ஆப்பிள் பேடை இறந்து போன ஸ்டீவ் ஜாப்ஸிடம்
சொல்லி ஏற்பாடு செய்து விடுவார். எட்ட வேண்டுமே. அவருக்கு மிலிண்டாவுடன் காதல் பேசவும்,
பப்பெட்டுடன் வியாபாரம் பேசவுமே நேரம் சரியாகி விடுகிறது.
இதை
பேஸ்புக்கில் போட்டால் சக்கர்பெர்க்கு நம்மிடம் கேட்காமல் கேட்ஸிடம் கேட்டு விட்டானே
என்று தகவல் போகாமல் பார்த்துக் கொண்டு விடுகிறார். எலான் மஸ்க் இன்னும் மோசம், எங்கே
இந்த திரிபுரசுந்தரம் வருங்காலத்தில் தனக்கே போட்டியாக வந்து விடுவானோ என்று நினைக்கிறார்.
இதற்கு
யார்தான் என்ன செய்ய முடியும்? சுந்தரத்தின் கிரகம் அப்படி இருக்கிறது. என்னதான் கிரகம்
கெட்ட கிரமாக இருந்தாலும் நல்ல நேரம் வராமலா போய் விடும்?
திரிபுரசுந்தரத்தின்
கண்களில் பட்டது அந்த அறிவிப்பு. இதை அவன் ஓசி டீ குடிக்கப் போகும் நாயர் கடையில் தினப்புயல்
பத்திரிகையில் பார்த்தான். எழுத்தாளர்களுக்கு மூன்றில் ஒரு பங்கு விலையில் லேப்டாப்
என்ற அறிவிப்பு சுந்தரத்தைக் கவர்ந்து விட்டது. நாயர் பார்க்காத நேரமாகப் பார்த்து,
சுந்தரம் அதை கால்சிராய் பையில் (அன்ட்ராயர் பாக்கெட்டில்) சகல சாங்கியங்களும் செய்து
குடியமர்த்தி விட்டான். வீட்டிற்குச் சென்றதும் இதர ஹோமங்கள் செய்து கொள்வது என முடிவெடுத்துக்
கொண்டான்.
வீட்டிற்கு
வந்ததும் குஷி தாங்க முடியவில்லை. மின்விசிறியை ஓட விட்டு அதைப் பிடித்தபடி தொங்கிக்
கொண்டு முந்நூறு சுற்றுகளாவது சுற்றியிருப்பான்.
முப்பதாயிரம்
மதிப்புள்ள மடிக்கணினி (லேப்டாப்) எழுத்தாளர்களுக்காகப் பத்தாயிரம் ரூபாயில் வழங்கப்படுகிறது
என்பதைத் தலைகீழாகச் சிரசானம் செய்து மீண்டும் ஒரு முறை படித்துக் கொண்டான். இந்த விளம்பரத்தைப்
பார்க்க, இன்று என்ன தவம் செய்துவிட்டேன் என்று தன் தலையில் குட்டி, நெஞ்சில் ஒரு குத்து
குத்தி புளங்காகிதம் அடைந்து கொண்டான்.
அந்த
மடிக்கணியைப் பற்றி நினைக்க, முன்னொரு காலத்தில் தன் மனைவியாக வரவிருந்த காதலியாக அப்போது
இருந்து, தற்போது இன்னொருவர் மனைவியாக இருக்கும் லோகாம்பாள் நினைவு வந்தது. சேச்சே
இன்னொருவர் மனைவியை அப்படி நினைப்பது தவறு, விரைவில் மடியில் அமர மடிக்கணினி வரப் போகிறதே
என்ற தர்ம சிந்தையில் ஆழ்ந்தான் சுந்தரம்.
என்றாலும்
மடிக்கணினி வந்ததும் பணப்பையில் (பர்ஸில்) யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்திருக்கும்
லோகாம்பாளின் பாஸ்போர்ட் படத்தை மடிக்கணினியில் பிரதான முகப்பு (ப்ரொபைல் பிக்சராக)
படமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தர்மத்திற்குச் சற்று ஓய்வுக் கொடுத்து, தீர்மானித்துக்
கொண்டான். முன்னாள் காதலிக்கு இந்த மரியாதையைக்
கூட செய்யாவிட்டால் எப்படி?
எழுத்தாளர்
என்பதற்கான அடையாளத்திற்கான சான்றொப்பத்தை அலுவலக எழுத்தர் அனுமந்தராவிடம் வாங்கிக்
கொண்டு, சிவப்புகேசரி பத்திரிகையில் வெளிவந்த கவிதைகள் இரண்டையும் மின்னஞ்சில் அனுப்பி
வைத்து, சிறுக சிறுக சேமித்த தன் வாழ்நாள் சேமிப்பு பத்தாயிரத்தை அறிவிப்பில் கண்டிருந்த
விரைவுத் துலங்கல் குறியீட்டை வருடல் (ஸ்கேன்) செய்து அனுப்பி வைத்தான்.
அனுப்பி
வைத்து நான்கு மாதங்கள் ஓடி விட்டன. இன்னும் மடிக்கணினி (லேப்டாப்) வந்து மடியில் சேர்ந்தபாடில்லை.
இனிமேலும்
அது வரவே வராது.
நாயர்
ஏன் அந்த அறிவிப்பை எடுத்து மறைத்து வைக்கவில்லை என்று ரகசியம் இப்போது திரிபுரசுந்தரத்துக்குப்
புரிய வந்தது.
‘சம்போ
சிவ சம்போ! அம்போ அது அம்போ!’ சாட்சாத் லோகாம்பாளே மனதில் பாடுவது திரிபுரசுந்தரத்துக்கு
அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறது.
*****
No comments:
Post a Comment