30 Apr 2026

பேராசை பெருநஷ்டம் – ஒரு சுருக்கமான ஆப்பு வரலாறு!

பேராசை பெருநஷ்டம் – ஒரு சுருக்கமான ஆப்பு வரலாறு!

பரந்தாமன் நிலத்தை விற்றார். கையில் வந்தது இருபது லட்சம்.

பணம் கையில் இருந்தால் சில அரிப்புகளைத் தரும். கையை நனைக்காமல் ஏதாவது வங்கியில் போடுங்கள், என்றார் அர்ச்சுனன்.

பரந்தாமனுக்கு அறுபது வயது.

அஞ்சலகத்தில் சீனியர் சிட்டிசன் ஸ்கீம் இருக்கிறது. அரசாங்கப் பாதுகாப்பு. நிம்மதியாகத் தூங்கலாம், என்று சரியாக வழிகாட்டினார் அர்ச்சுனன். அத்தோடு நில்லாமல், அதற்குத் தேவையான படிவங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு அடுத்த நாள் அவரைப் பார்க்கப் போனார்.

பரந்தாமன் முகத்தில் ஒரு மர்மப் புன்னகை. ஒரு தத்துவ ஞானியைப் போல அர்ச்சுனனைப் பார்த்தார்.

தம்பி, போஸ்ட் ஆபீஸில் என்ன வட்டி தருவார்கள்? எட்டணா, பத்தணா. நான் ஒருத்தரைப் பார்த்தேன். அஞ்சலக வட்டி மாதிரி ரெண்டு மடங்கு தர்றேன்னு சொல்லிட்டார். பணத்தைக் கொடுத்துட்டேன், என்றார்.

யார் அவர்? என்றார் அர்ச்சுனன்.

பெரிய மனிதர். நெற்றியில் பட்டை, கையில் ஜபமாலை. அவர் முகத்தைப் பார்த்தாலே திருட்டுத்தனம் தெரியாது, என்றார் பரந்தாமன்.

அர்ச்சுனன் கொண்டு போன படிவங்களைச் சுருட்டிப் பையில் வைத்தார். கவனமாக இருங்கள், என்று மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்தார்.

பேராசைக்காரர்களுக்கு வழங்கப்படும் அறிவுரைகள் எப்போதும் கேட்கப்படாத வானொலி நிலையங்களைப் போன்றவை.

சில நாட்களில் அந்தச் சுவாரசியச் செய்தி வந்தது.

அந்த ஜபமாலை மனிதர் வீட்டைத் தூர்வாரத் தேவையில்லை என்று முடிவெடுத்து, ஒட்டுமொத்தமாக வீட்டைக் காலி செய்துவிட்டு ஓடிவிட்டார். ஊரில் பாதிப் பேருக்கு இப்போதுதான் ரத்த அழுத்தம் எகிறியிருக்கிறது.

பரந்தாமன் இப்போது வீட்டுத் திண்ணையில் அமர்ந்து சூன்யத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஏமாத்திட்டுப் போயிட்டானே தம்பி, என்று அர்ச்சுனுனைப் பார்த்துப் புலம்பினார்.

அவர் ஏமாற்றவில்லை சார். நீங்கள் ஏமாறத் தயாராக இருந்தீர்கள், அவர் உங்களுக்கு உதவினார், என்று சொல்ல நினைத்தார் அர்ச்சுனன், ஆனால், சொல்லவில்லை.

இதிலிருந்து சகலமானவர்களும் அறிந்து கொள்ள சில நீதிகள் இருக்கின்றன. அவையாவன,

அரசாங்கத்தை விட ஒரு தனி நபர் அதிக வட்டி தருகிறார் என்றால், அவர் ஒன்று பணம் அச்சிடும் இயந்திரம் வைத்திருக்க வேண்டும் அல்லது அவருக்கு உங்கள் பணத்தை அமுக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பணத்தை இழப்பது எளிது. ஆனால் இழந்த பிறகு வரும் அறிவு இருக்கிறதே, அது மிகவும் விலை உயர்ந்தது.இந்தக் கதையில் சரியாக இருபது லட்சம் ரூபாய். இந்தத் தொகையானது கதைக்கு கதை மாறுபடும்.

வங்கி அல்லது அஞ்சலகம் தரும் வட்டி என்பது ஒரு கணக்கு. யாராவது அதற்கு மேல் டபுள் தருகிறேன் என்று சொன்னால், அது கணக்கல்ல, அது ஒரு தூண்டில். தூண்டிலில் சிக்கினால் செத்தான் சேகரு மொமன்ட்தான்.

பரந்தாமன் போன்றோர் அறுபது வயதில் முதலீடு செய்ய வேண்டியது பணத்தை மட்டுமல்ல, கொஞ்சம் நிதானத்தையும்தான். கொஞ்சம் ஆசைப்பட்டாலும் லபக்தான். அதிகம் ஆசைப்பட்டால் சொல்லவே வேண்டியதில்லை.

ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்படாத நபரிடம் பணத்தைக் கொடுப்பது, பசித்திருக்கும் ஓநாயிடம் ஆட்டுக்குட்டியை வாக்கிங் கூட்டிச் செல்லச் சொல்வதற்குச் சமம். அது மாதிரியான ரிஸ்க் எடுத்து ரஸ்க் சாப்பிடும் பழக்கங்கள் வேண்டவே வேண்டாம்.

ஸோ, இதிலிருந்து அறியப்பட வேண்டிய நீதி என்னவென்றால், அதிக வட்டிக்கு ஆசைப்படுபவன், ஒருநாள் தன் அசலையே வட்டியாகக் கொடுத்துவிட்டுத் தெருவில் நிற்பான்.

அதிக வட்டி தரும் ஆசாமி எங்கே இருக்கிறார் என்று தேடுவதை விட, உங்கள் பணம் எங்கே பாதுகாப்பாக இருக்கும் என்று தேடுவதே புத்திசாலித்தனம். இல்லையெனில், வட்டியும் வராது, வாங்கியவனும் திரும்புவதில்லை.

முதலீடு என்பது முட்டையிடும் கோழியை வாங்குவது போல. யாராவது, உன் கோழி தங்க முட்டை போடும், என்று சொன்னால், கோழியையும் தூக்கிக்கொண்டு அவர் ஓடப்போகிறார் என்று அர்த்தம். புரிந்து கொள்ளுங்கள். உடனே விழித்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் விசயம்.

*****

No comments:

Post a Comment