28 Feb 2025

சமநிலைச் சாத்தியங்கள் அசாத்தியங்களா?

சமநிலைச் சாத்தியங்கள்!

ஒரு சமநிலையை உருவாக்குவதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஏழைகளைப் பணக்காரர்களாக்க வேண்டுமா?

பணக்காரர்களை ஏழைகளாக்க வேண்டுமா?

ஏன் இந்த வேண்டாத வேலை என்று, அவரவர்களை அப்படியப்படியே இருக்க விட்டு விட வேண்டுமா?

அதற்கு முன், இந்த உலகம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த உலகம் ஏழைகளைப் பணக்காரர்களாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது. சந்தையில் விற்பனையாகும் பல சுயமுன்னேற்ற மற்றும் பணக்காரர்களாக்க உத்தி சொல்லும் நூல்களைப் பார்த்தாலே போதும். இது உங்களுக்குப் புரியும்.

‘பணம் பண்ண’ என்று சமூக ஊடகங்களில் உலா வரும் செய்திகள் மற்றும் காணொளிகளைப் பார்த்தாலும் இந்த உண்மையை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

ஏழைகள் மீது கொண்ட பாசத்தினால் இப்படி ஒரு முயற்சி செய்யப்படுகிறதா? அல்லவே அல்ல.

நுகர்வை அதிகப்படுத்தியோ அல்லது பேராசையைத் தூண்டியோ லாபம் சம்பாதிக்க நினைக்கும் வியாபார மனப்பான்மையின் விளைவு இது.

எல்லாரும் பணக்காரர்களாகி விட்டால் எல்லாரும் எல்லாவற்றையும் பெற்று விட முடியுமா?

அது சாத்தியமே இல்லை. விலை வேறுபாடு என்ற ஒன்று இருக்கிறதே.

விலை வேறுபாடு என்பது எப்போதும் ஏழை – பணக்காரர் என்ற வேறுபாட்டை உருவாக்கிக் கொண்டே இருக்கும்.

ஒவ்வொருவரும் சம்பாதிக்கும் வருமானங்களில் நிலவும் வேறுபாட்டை உங்களால் எப்படி நீக்க முடியும்?

எப்படி பார்த்தாலும் இந்த ஏழை – பணக்கார வேறுபாட்டு அளவை நீக்க முயற்சிப்பது நமக்கு எப்போதும் உதாவது.

அப்படியானால் சரியான அளவீடு என்பது என்ன?

அனைவருக்குமான அடிப்படை வசதிகள் போதுமான அளவில் கிடைக்கின்றனவா என்பதே சரியான அளவீடாக இருக்கும்.

அடிப்படை அளவைத் தாண்டித் துய்ப்பவர்கள் அனைவருமே பணக்காரர்கள்தான். அடிப்படை வசதிகளை உரிய அளவு கூட துய்க்காதவர்கள் ஏழைகளே.

நுகர்வின் அடிப்படையிலேயே ஏழை – பணக்காரர் என்பது தீர்மானமாகிறது. ஏழைகள் அடிப்படை அளவுக்கே நுகர முடியாதவர்களாக இருக்கிறார்கள். பணக்காரர்கள் அளவுக்கு மிஞ்சி நுகர்கிறார்கள்.

நுகர்வுக்குப் பணம் என்பது ஆதாரமாக இருக்கிறது. பணத்தின் அளவு பாரபட்சமாக மனிதர்களிடம் பரவுவதைத் தடுப்பது சாதாரண காரியமில்லை.

ஆனால், பணமானது அனைவரிடமும் அடிப்படை வசதிகளைப் போதுமான அளவுக்கு நுகரக் கூடிய அளவுக்குக் குறைவில்லாமல் பரவச் செய்வது அரசாங்கத்தின் கடமையாகும். அக்கடமையை ஓர் அரசாங்கம் எப்போதும் குறைவின்றிச் செய்ய வேண்டும். அதற்காகத்தான் அரசாங்கத்திற்குச் சட்டங்களும் அதிகாரங்களும் வழங்கப்படுகின்றன. ஒரு மக்கள் நல அரசாங்கம் இந்த விசயத்தில் எப்போதும் மிகச் சரியாகவே செயல்படும். அப்படிச் செயல்பட்டால் மட்டுமே அதை மக்கள் நல அரசாங்கம் என்றும் சொல்ல முடியும்.

இது சாத்தியந்தானா?

நடைமுறைக்கு ஒத்து வரக் கூடியதுதானா?

ஓர் அரசாங்கம் நினைத்தால் கட்சிக்காரர்களைப் பணக்காரர்களாக்கி முடியுமென்றால், ஏன் மக்களை அப்படி ஆக்க முடியாது?

*****

27 Feb 2025

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை!

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை!

தற்காலத்தில் இலவசப் பரிந்துரைகள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிகம் உலவுகின்றன.

இலவசங்களுக்கும், இலவசப் பரிந்துரைகளுக்கும் பஞ்சமில்லாத காலத்தில் நாம் வாழ்கிறோம்.

இலவசமாக வழங்கப்படும் அனைத்தும் தரமற்றவை என்றோ, இலவசங்கள் அனைத்தும் ஏமாற்று வேலைகள் என்றோ நான் கூற வரவில்லை.

இவற்றின் உண்மைத் தன்மை குறித்து ஆராய வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது” அவசியம் அல்லவா!

பணக்காரர் ஆவதற்கான பரிந்துரைகளை வழங்குபவர், அதை வைத்து அவர் பணக்காரர் ஆகலாம். அதை ஏன் மற்றவர்களுக்கு விற்று மற்றவர்களைப் பணக்காரர் ஆக்க வேண்டும்?

இந்த அடிப்படையான கேள்வியை ஒவ்வொரு இலவசப் பரிந்துரைகளின் மீதும் நீங்கள் எழுப்ப வேண்டும்.

நாட்டில் அவ்வளவு நலம் விரும்பிகள் பெருகி விட்டார்களா என்ன?

உண்மை என்னவென்றால், அவர் அந்த இலவசப் பரிந்துரை மூலம் உங்களை ஏழையாக்கி, அவர் பணக்காரர் ஆக நினைக்கிறார்.

அதெப்படி இலவசப் பரிந்துரைகள் மூலம் அவர் பணக்காரராக ஆக முடியும்?

முதலில் இலவசமாக வழங்கப்படும் இப்பரிந்துரைகளுக்கு உங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அடிமையாக வைத்து, பிறகு அவற்றைக் கட்டணப் பரிந்துரைகளாக மாற்றுவார். அடிமையாகி விட்ட ஒருவர் கட்டணம் கொடுத்து பரிந்துரைகள் பெற்று ஏழையாகிக் கொள்கிறார்.

இலவசப் பரிந்துரைகளுக்கு அடிமையாவதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அது பேராசையுடன் தொடர்புடையது. பேராசையுடன் மட்டுமல்லாது உழைக்காது அதிர்ஷ்டத்தை ஈர்க்க நினைப்பதோடும் தொடர்புடையது.

பேராசையையும் அதிர்ஷ்டத்தையும் குறி வைத்தே, இணைய வழியிலும் சமூக ஊடகங்களின் வழியிலும் நிறைய பரிந்துரைகள் வருகின்றன.

இப்போது இல்லையென்றால் வேறு எப்போதும் என்று மக்களும் அப்போதே அதில் விழுந்து விடுகின்றனர்.

இப்போது இல்லையென்றால் வேறு எப்போதும் என்று சொன்னவரே, மிக கவனமாக அரசியலில் அடி எடுத்து வைக்கவில்லை என்பதை மக்கள் சாவகாசமாக மறந்து விடுகின்றனர்.

சில நேரங்களில் நேரடியாகவே பத்தாயிரம் ரூபாய்க்கு பத்து பரிந்துரைகள் என்று கட்டண விவரங்களுடன் அறிவிப்புகள் அலைபேசி வாயிலாக வருகின்றன. பலர் பத்தாயிரத்தைக் கட்டி ஏமாந்து போன கதைகள் நிறைய இருக்கின்றன.

இந்தத் தேசத்தில் ராமாயண, மகாபாரத கதைகளை விட ஏமாந்தவர்களின் கதைகள் அவ்வளவு அதிகம்.

சீதை மாய மானைக் கண்டு ஏமாறுகிறாள்.

ராமன் மாரீசனின் மாயக்குரலில் ஏமாறுகிறான்.

பாண்டவர்கள் சகுனி விரிக்கும் வலையில் ஏமாறுகிறார்கள்.

நவீன மனிதர்கள் இணையங்களிலும் அலைபேசிகளிலும் ஏமாறுகிறார்கள்.

ஏமாறாமல் இருப்பதற்கு வழி இருக்கிறதா?

எப்போதும் உழைக்காமல் இலவசமாகப் பணம் சேர்க்கும் அறிவிப்புகளுக்கு நீங்கள் உங்களைப் பலி கொடுக்காமல் இருங்கள். அதுதான் நல்லது. இலவசப் பரிந்துரைகளில் அபாயம் உள்ளது.

*****

26 Feb 2025

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா?

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா?

பழங்களையல்ல வேர்களைக் கவனியுங்கள்

பழங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன

வேர்கள் மறைந்திருக்கின்றன

பழங்களுக்கான சாற்றினை வேர்களே உறிஞ்சுகின்றன

நாம் பழங்களைக் கவனிக்கிறோம்

வேர்களை மறந்து விடுகிறோம்

வேர்களுக்கு ஊற்றும் நீரே

கனிகளில் சுவையாய் நிறைகிறது

வேர்களுக்கு இடும் உரமே

கனியின் பெருக்கைத் தீர்மானிக்கிறது

வேர்களுக்கு நாம் தருவதையே

மரங்கள் பழங்களாகத் தருகின்றன

வேர்களுக்கு எதுவும் தராமல்

பழங்களாய் நாம் எதையும் எதிர்பார்க்க முடியாது

வேர்கள் செல்லரித்துப் போனால்

பழங்கள் புழுபுழுத்துப் போகும்

மறைவாக இருக்கின்றன என்பதற்காக

நாம் மறந்திருக்க முடியுமா

*****

25 Feb 2025

குழு அமைக்கும் நேரம்!

குழு அமைக்கும் நேரம்!

முடியும் என்றும் சொல்ல முடியாது

முடியாது என்றும் சொல்ல முடியாது

அப்போது அம்மா பிள்ளைகளிடம் சொல்வாள்

“அப்பாவிடம் கேட்டுச் சொல்கிறேன்”

 

திருமணம் செய்து கொள்வோம் என்றும் சொல்ல முடியாது

திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்றும் சொல்ல முடியாது

அப்போது காதலர்கள் சொல்வார்கள்

“பெற்றோர்கள் சம்மதித்தால் செய்து கொள்வோம்”

 

கொடுக்கிறேன் என்றும் சொல்ல முடியாது

கொடுக்க முடியாது என்றும் சொல்ல முடியாது

அப்போது ஆள்வோர்கள் சொல்வார்கள்

“குழு அமைப்போம் அல்லது கமிஷன் அமைப்போம்”

*****

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்?

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்?

மீன்களுக்கு நாம் நீர் நிலைகளை அமைத்துத் தர வேண்டுமா?

அல்லது,

தட்டான்களும் வண்ணத்துப் பூச்சிகளும் பறப்பதற்கான வெளியை நாம் உருவாக்கித் தர வேண்டுமா?

அல்லது,

மரங்கள் வளர்வதற்கான மண்ணை நாம் தயார் செய்து தர வேண்டுமா?

அல்லது,

பறவைகளுக்கு நாம் கூடு கட்டித் தர வேண்டுமா?

அல்லது,

மீன்களுக்கு, பூச்சிகளுக்கு, பறவைகளுக்கு நாம் உணவு வைக்க வேண்டுமா?

இவற்றில் எதையுமே நாம் செய்ய வேண்டியதில்லை.

நாம் அவற்றின் வாழ்க்கையில் குறுக்கிடாமல் இருந்தால் போதுமானது.

அவை வாழ்வதற்கான சூழலை நாம் உருவாக்க வேண்டியதில்லை. இயற்கையாகவே அவை வாழ்வதற்காக இருக்கும் சூழலை நாம் குழைக்காமல் இருந்தாலே போதுமானது.

நாம் இயற்கையைத் தேவைக்கதிகமாகத் தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும், இந்த உலகில் எல்லா உயிரினங்களும் சந்தோசமாக வாழும்.

இயற்கையை நாம் அபரிமிதமாகத் தொந்தரவு செய்தால், இந்த உலகில் பல உயிரினங்கள் அழியும். முடிவில் அது நம்மையும் அழிக்கும்.

நமது வசிப்பிடங்களுக்காகவும், வசதிகளுக்காகவும் இவ்வளவு காங்கிரீட்டை இந்தப் பூமியில் கொட்ட வேண்டியதில்லை.

நம்முடைய ஆசைகளுக்காகவும் ரசனைகளுக்காகவும் நாம் இவ்வளவு பொருட்களை நுகர வேண்டியதில்லை.

வணிக லாபங்களுக்காக நாம் இவ்வளவு பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டியதே இல்லை.

எதற்காக நாம் இவ்வளவு வாகனங்களையோ, தொழிற்சாலைகளையோ இயக்க வேண்டும்? இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாளும் அபரிமிதமாகி அனைத்து உயிர்களுக்குமான சாதகமான புவியியல் சூழலைப் பாதிக்கின்றன. நிறைய கழிவுகளையும் நச்சுகளையும் உருவாக்கி ஒவ்வொரு உயிராக அழித்துக் கொண்டே வந்து முடிவில் மனித குலத்தையும் அழிக்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

இந்தப் பூமியில் மண் இருக்க வேண்டும். அவற்றை முற்றிலும் காங்கிரீட்டால் மூடி விடக் கூடாது. இந்தப் பூமியில் மரங்களின் பசுமை இருக்க வேண்டும். அதை வெட்டிச் சாய்த்து, குளிர்சாதன வசதிகளில் குளுமையைத் தேடி விட முடியாது.

நாம் இந்தப் பூமியில் எதையும் பாதுகாக்கவும் வேண்டியதில்லை. பராமரிக்கவும் வேண்டியதில்லை. ஏனென்றால் நாம் இயற்கையை விட மிகப்பெரிய சக்தியோ, தாயோ இல்லை. நமக்கே மிகப்பெரிய சக்தியும் தாயும் இயற்கையே.

இயற்கையே அனைத்தையும் பாதுகாக்கும், பராமரிக்கும் அழிவில்லாத சக்தியையும் ஆற்றலையும் பெற்றிருக்கிறது. அதன் ஆற்றலில் நாம் குறுக்கிடாமல் இருந்தால் போதும். நம் ஆசைகள் அதன் பல்லுயிர் பேணும் ஆற்றலில் குறுக்கிட வைக்கின்றன. சமநிலைக்கான சக்தியை நாசம் செய்ய பார்க்கின்றன.

இயற்கையோடு இயைந்து செல்லும் போது, இயல்பாகவே நாம் பல்லுயிர் காக்கும் பாதுகாவலராக நம்மை அறியாமலே நாம் மாறி விடுகிறோம். இதற்காக எவ்வித மெனக்கெடலோ, போராட்டமோ தேவையில்லை. நாம் போராட வேண்டியது நமக்குள்தான். நம் ஆசைகளிடமும், பெருவிருப்பங்களுடனும்தான் நாம் போராட வேண்டியிருக்கிறது.

இந்தப் பூமியில் பிறந்து மடிகின்ற உயிர்கள் அனைத்தும் வாழ்ந்ததற்கான அடையாளம் இல்லாமல் மடிகின்றன. பறவைகள் பறப்பதால் வானத்தில் சுவடுகள் தெரிவதில்லை. மீன்கள் நீந்திய பாதைகள் கடல்களில் இருப்பதில்லை.

மனிதன் வாழ்ந்ததற்கான நெகிழிகளும், பிளாஸ்டிக்குகளும் அடையாளங்களாய் இந்தப் பூமியில் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் அப்படியே நீடித்திருக்கப் போகின்றதோ, தெரியவில்லை.

சுவடுகள் இன்றி, தடங்கள் இன்றி இந்தப் பூமியை அடுத்தத் தலைமுறைக்கு நம்மால்கொடுக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். அப்படி கொடுக்க முடிந்தால், நம்முடைய அடுத்த தலைமுறை மனிதர்கள் பாக்கியவான்கள். இல்லையென்றால் அவர்கள் நாம் செய்த வினைக்குப் பாவத்தை அறுவடை செய்கின்ற பாவிகளன்றி வேறல்லர்.

*****

24 Feb 2025

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கல்விக்கடன் சரியா?

“கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே”

என்றார் அதிவீரராம பாண்டியர். இவ்வரிகள் அவரின் வெற்றிவேற்கை எனும் நறுந்தொகையில் இடம் பெற்றுள்ளவை.

கல்வியின் அவசியத்தை அவ்வண்ணம் வலியுறுத்தினார் அவர்.

தற்போதைய கால சூழ்நிலை

“கற்கை நன்றே கற்கை நன்றே

கடன் வாங்கினும் கற்கை நன்றே

கற்கை நன்றே கற்கை நன்றே

அடகு வைப்பினும் கற்கை நன்றே”

என மாறி விட்டது.

உண்மையில் பிச்சை எடுப்பதும், கடன் வாங்குவதும் ஒன்றா?

பிச்சை எடுப்பதைத் திருப்பிக் கொடுக்க வேண்டியதில்லை.

கடன் வாங்கியதை அப்படித் திருப்பிக் கொடுக்காமல் இருக்க முடியாது.

ஏனென்றால், கடன் வாங்கியதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

அப்படிக் கல்விக் கடன் வாங்கிக் கற்று என்ன நடக்கப் போகிறது?

ஒரு வேலையில் சேர்ந்து பணம் சம்பாதித்து,  அக்கடனை அடைக்க வேண்டியதாக இருக்கிறது. அதற்கு ஏன் நேரடியாகத் தொழில் கடன் வாங்கி ஒரு தொழிலைத் தொடங்கக் கூடாது?

போகிற போக்கைப் பார்த்தால், கல்விக் கடனின் அவலம் இனி மழலையர் பள்ளிகளில் (எல்கேஜி, யுகேஜி) பயிலத் தொடங்கும் போதே ஆரம்பித்து விடும் போலிருக்கிறது.

அப்படி ஆரம்பமாகாவிட்டாலும், மழலையர் கல்வியைப் படிக்க வைப்பதற்குள் வீட்டில் இருக்கும் அண்டா, குண்டான் தொடங்கி தங்க நகை வரை அடகு வைத்து விடுகின்றனர் அவர்களைப் படிக்க வைக்கும் பெற்றோர்கள்.

அடகு வைத்ததை அப்படியே விட்டு விடவா முடியும்? அதை மீட்க வேண்டுமே? அதுவும் அடகு வைத்தத் தொகையை வைத்து அப்படியே மீட்டு விட முடியுமா? வட்டித்தொகையைச் செலுத்திதான் மீட்க வேண்டும்.  ஆகவே இதுவும் கல்விக்கடன் என்ற வகையில்தான் வரும்.

கல்வி உரிமைச் சட்டம் மூலமாக அரசாங்கம் 14 வயது வரை இலவசக் கல்வியை வழங்கும் நிலையில், அதுவும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பனிரெண்டாம் வகுப்பு வரையிலும் இலவசக் கல்வியை அரசுப் பள்ளிகளில் பெற முடிகின்ற நிலையில், பெற்றோர்கள் ஏன் அடகு வைத்தும் கடன் வாங்கியும் தங்கள் பிள்ளைகளைக் கல்வி கற்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்?

என்னைக் கேட்டால், பணத்தை அப்படி விரயமாக்க வேண்டியதில்லை. அரசுப் பள்ளியில் சேர்த்து விட்டு, தனியார் பள்ளியில் சேர்த்திருப்பது போலக் கருதிக் கொண்டு, மாதா மாதம் குறிப்பிட்ட தொகையை பிள்ளைகளின் பெயரில் தொடர் வைப்பு (ஆர்.டி) கணக்கு ஒன்றைத் தொடங்கி, அதில் போட்டு வந்தாலே, அவர்களின் உயர்கல்வி படிப்பைக் கடனில்லாமல் படிக்க வைத்துவிடலாம்.

ஆனால், ஏன் பெற்றோர்கள் தயங்குகிறார்கள்?

தனியார் பள்ளிகளில், வாகனங்களில் சென்று பிள்ளைகள் படிப்பது ஒரு சமூக கௌரவமாகக் கருதப்படுகிறது.

இதனால் அருகிலிருக்கும் அண்மைப் பள்ளியில் கிடைக்கும் இலவசக் கல்வியைக் கைவிட்டு, காசு கொடுத்துத் தனியார் கல்வியைப் பெறுகின்றனர்.

இதனால் பெற்றோர்களுக்கு நான்கு விதமான தேவையற்றச் செலவுகள் ஏற்படுகின்றன.

1.      கல்விக் கட்டணம்

2.      தனிப்பயிற்சிக் கட்டணம்

3.      போக்குவரத்துக் கட்டணம்

4.      பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள் போன்ற கல்விப் பொருட்களுக்கான கட்டணம்

பெற்றோர்கள் இதைப் புரிந்து கொண்டால் பிச்சைப் புகாமலும், கடன் வாங்காமாலும் தங்கள் பிள்ளைகளைக் கல்வி கற்கச் செய்யலாம். கல்விக் கற்பதில் அதுவே கௌரவமாகவும் இருக்கும்.

*****

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்!

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்!

அண்மைக் காலத்தில் எக்ஸ் தளத்தில் பரபரப்பான இரண்டு சொல்லாடல்கள் ‘திரும்பிப் போ’ என்பதும் ‘வெளியே போ’ என்பதும்.

இரண்டு சொல்லாடல்களும் இந்தியாவின் மாபெரும் ஆளுமை மற்றும் தமிழ்நாட்டின் மாபெரும் ஆளுமைகளோடு தொடர்புடையன.

இரண்டு சொல்லாடல்களும் அரசியல் மற்றும் கருத்தியல் ரீதியாக ஏற்பட்ட மோதல் போக்கினால் எழுந்த எதிரெதிர் உணர்வலைகளால் ஏற்பட்டவை.

மாபெரும் ஆளுமைகளை எதிர்ப்பதன் மூலம் அவர்களது சித்தாந்தத்தை எதிர்ப்பதற்கான வலுவான குரல்களை அச்சொல்லாடல்கள் ஏற்படுத்துகின்றன. கருத்தியல்களை ஏற்றுக் கொள்ள முடியாத உச்சத்தில் இத்தகைய எதிர்ப்புச் சொல்லாடல்கள் நிகழ்கின்றன.

வந்தவரைத் ‘திரும்பிப் போ’ என்று சொல்வதற்கு அவ்வளவு லேசில் யாருடைய மனமும் இடம் தராது. கசந்து போன உறவுகளாயினும் துக்கம் விசாரிக்க வருமிடத்து, விசாரித்து விட்டுப் போ என்று நிலவும் வழக்கம்தான் தமிழகத்தில் இன்றும் இருக்கிறது.

எதிரியாயினும் வீடு தேடி வந்தவரை ‘வெளியே போ’ என்று சொல்ல யாருக்கும் மனம் வராது. வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் யாரையும் வெளியோ போ என்று சொல்லாத பண்பாடே இன்று வரை நீடிக்கிறது.

எதிர்ப்பின் அடையாளத்தை உக்கிரமாகக் காட்டும் சொற்பிரயோகங்கள் அரசியல் கட்சியில் இருக்கும் அடிமட்ட தொண்டர்களை உணர்ச்சிவயப்படுத்தவும், கொம்பு சீவி விடவும் பயன்படுத்தப்படுகின்றன. இது பல நேரங்களில் கலவரங்களில் சென்று முடியவும் வாய்ப்புகளை உருவாக்குகின்றன.

அனைத்து நாடுகளிலும், அமெரிக்கா உட்பட தலைவர்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுபவர்களும், கருத்தியல் ரீதியான எதிர்ப்புகளுக்காக எதை வேண்டுமானாலும் செய்யக் கூடிய அதிதீவிர உணர்ச்சிவசப்படும் தொண்டர்கள் இருக்கிறார்கள்.

அதிதீவிர உணர்ச்சி ஒருவரை என்ன வேண்டுமானாலும் செய்யத் தூண்டலாம். துப்பாக்கியைத் தூக்கக் கூட வைக்கலாம். வெடிகுண்டு கலாச்சாரத்தைப் பின்தொடரவும் செய்யலாம்.

தலைவர்களின் வார்த்தைகளுக்கு இருக்கும் வலிமை தொண்டர்களிடம் எப்படி பிரதிபலிக்கும் என்பதற்கான கட்டுப்படுத்தப்பட்ட சாத்தியக்கூறுகள் நம்மிடம் இல்லை. அதன் சாத்தியக்கூறுகள் கட்டுபாடில்லாமல் விரியக்கூடியன.

கட்டுப்பாடில்லாத சாத்தியக்கூறுகளை விரிய விடும் வார்த்தைகளைப் பரப்பும் தலைவர்கள் அறிந்தோ அறியாமலோ சமூக அமைதிக்குக் குந்தகத்தையே விளைவிக்கிறார்கள்.

சமூக அமைதியைக் கைவிட்டு விடாத வகைமையில் தங்களது எதிர்ப்புகளையும், போர்க்குணங்களையும் கட்டமைக்கும் தலைவர்களே அரசியலுக்கும் கருத்தியலுக்கும் தேவையான ஆரோக்கியமான தலைவர்கள்.

உணர்வுகளைத் தூண்டுவதென்பதும், அதை அதிதீவிரமாக்குவது என்பதும் ஒரு துப்பாக்கியை இரு பக்கமும் வெடிக்க வைக்கும், வெடிகுண்டைக் கையாளும் போதே பற்ற வைக்கும் ஆபத்துகளை உடையவை.

பண்பான தலைவர்களின் அடையாளம் என்பது பண்பாட்டோடு அவர்களிடமிருந்து வரும் வார்த்தைகளும், எதிர்ப்புகளை நாகரிகமாக அணுகும் அவர்களின் அணுகுமுறைகளும்தான்.

எதை விதைக்கிறோமோ அதுதான் விளைகிறது என்பது எக்காலத்திலும் பொய்யாவதில்லை. ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை இருக்கிறது என்கிற இயற்கை அறிவியல் விதியும் மாறப் போவதில்லை.

“யாகாவாராயினும் நாகாக்க” (குறள், 127) என்கிற பேராசானின் வார்த்தைகளின் பின்னுள்ள உண்மையைச் சொல் இழுக்குப்பட்டு உணர்வதால் என்ன பயன் இருக்கப் போகிறது?

நாட்டைக் காப்பதற்கு முன், மக்களைக் காப்பதற்கு முன், தலைவர்கள் தங்களிடமிருந்து வரும் சொற்களைக் காத்து நிற்க வேண்டும்.

*****

23 Feb 2025

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது?

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது?

பல நேரங்களில் மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போய் விடுகிறது.

அப்படியானால், மாட்டுச் சமூகம் பிடிக்கிறதா?

ஆம்! பிடிக்கிறது.

ஆட்டுச் சமூகம் பிடிக்கிறதா?

ஆம்! பிடிக்கிறது.

பூனைச் சமூகம் பிடிக்கிறதா?

ஆம்! பிடிக்கிறது.

நாய்ச் சமூகம் பிடிக்கிறதா?

ஆம்! பிடிக்கிறது.

கோழிச் சமூகம் பிடிக்கிறதா?

ஆம்! பிடிக்கிறது.

தாவரச் சமூகம் பிடிக்கிறதா?

ஆம்! பிடிக்கிறது.

மனிதச் சமூகம் மட்டும், ஏன் பிடிக்காமல் போகிறது?

எந்த மாடாவது இன்னொரு மாட்டை வன்புணர்வு செய்கிறதா?

எந்த ஆடாவது இன்னொரு ஆட்டிடம் இன வேறுபாடு காட்டுகிறதா?

எந்தப் பூனையாவது இன்னொரு பூனையைச் சாதி வேறுபாட்டுடன் நடத்துகிறதா?

எந்த நாயாவது இன்னொரு நாயை அடிமையாக வைத்திருக்கிறதா?

எந்தக் கோழியாவது இன்னொரு கோழியைத் தீட்டு என்று ஒதுக்குகிறதா?

எந்தத் தாவரமாவது இன்னொரு தாவரத்தை ஏற்றத் தாழ்வுடன் பார்க்கிறதா?

இங்கே சாமி கூட மனிதர்களை ஏற்றத் தாழ்வுடன்தானே பார்க்கிறது.

என்ன பெரிய சாமி?

ஒரு சமூகம் தொட்டால், அது தீட்டாகி விடும் என்றால்,

அந்தத் தீட்டைப் போக்கிக் கொள்ள முடியாத சாமி என்ன சாமி?

அந்தத் தீட்டிலிருந்து அந்தச் சமூகத்தை விலக்கி விட முடியாத

சக்தி இல்லாத சாமி என்ன சாமி?

*****

சாமியாடுவதன் பின்னணி என்ன? அருள்வாக்கு பலிக்குமா?

சாமியாடுவதன் பின்னணி என்ன? அருள்வாக்கு பலிக்குமா?

சாமியாடுவதன் பின்னணி என்ன?

அப்போது சொல்லப்படும் அருள்வாக்கு பலிக்குமா?

இனிய நண்பர் காளிதாஸின் கேள்விகள் இவை.

சாமியாடுவதும், அருள்வாக்கு சொல்வதும் எளிய மக்களின் அடக்கி வைக்கப்பட்ட மன உட்கிடக்கையின் வெளிப்பாடுதான்.

ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பார்கள். அம்பலம் ஏற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு யாருக்கு இருக்காது? ஏழை சொல் அம்பலம் ஏறும் இடம்தான் ‘சாமியாடும்’ அந்த இடம்.

எல்லாருக்குமே ஆழ்மனதில் ஆயிரமாயிரம் ஏக்கங்களும் ஆற்றாமைகளும் உறைந்திருக்கும். அவற்றைப் புரிந்து கொள்பவர்கள் அவற்றை அமைதியாகக் கடந்து சென்று விடுவர். ஏக்கங்களையும் ஆற்றாமைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடியாமல், அதற்கு உருவம் கொடுக்க ஏங்குபவர்கள் சமூகக் கட்டுபாடுகள் காரணமாகவோ அல்லது மற்றவர்கள் தம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் காரணமாகவோ அவற்றை ஆழ்மனதில் அடக்கி வைத்திருக்கலாம். அப்படி அடக்கி வைக்கப்பட்ட எண்ணங்களுக்கான வடிகாலாக அமைவதுதான் சாமியாடுவதும், அருள்வாக்கு சொல்வதும்.

சாமியாடுவதை அறிவியலும் மருத்துவமும் நரம்பியல் மற்றும் உளவியல் சார்ந்த பிரச்சனையாகவே அணுகுகிறது. உணர்வியல் ரீதியாக அணுகும் போது ஒடுக்கப்பட்ட மற்றும் அடக்கப்பட்ட மனங்களுக்கு அது ஓர் உளவியல் தேவையாக அமைகிறது.

சாமியாடுவதற்கான சூழல்களும் கவனிக்கப்பட வேண்டியவை. பம்பை, உடுக்கை, மேள, தாளம், எக்காளம் என்று சூழலை உக்கிரமாக்கும் இசைக்கருவிகள் நிரம்பியவையாக இருக்கும். சுற்றியுள்ளவர்கள் சாமியின் மேல் உன்மத்தம் கொண்டிருக்கும் மனநிலையில் இருப்பர். தங்களுடைய ஏக்கங்களுக்கும் ஆற்றாமைகளுக்கும் ஒரு தீர்வு வந்து விடாதா என்ற எதிர்பார்ப்பில் இருப்பர். அப்படிப்பட்ட சூழலில் சாமி வந்து ஆடுவதை மரியாதைக்குரியதாகக் கருதுவர்.

இப்படி உளவியல் பொருத்தப்பாடான சூழ்நிலை ஒருவரைச் சாமியாட வைக்கும். அருள்வாக்கு சொல்ல வைக்கும்.

உண்மையில் அருள்வாக்கு என்பதென்ன? நிறைவேறாத ஒன்று நிறைவேறும் என்றோ, அல்லது நிறைவேறக் கூடாத ஒன்று நிறைவேறாது சொல்லும் நம்பிக்கை வாக்குதான் அது. அப்படி யாரேனும் சொல்ல மாட்டார்களா என்று ஏங்கும் மனதுக்கு அது ஓர் ஆறுதலாகவும் உளவியல் தேவையாகவும் இருக்கிறது.

சாமி வருவதை அருள் வருதல் என்று சொல்வதாலும், சாமியாடுவதை அருள் வந்து ஆடுதல் என்று சொல்வதாலும், அவர்கள் அப்போது சொல்வதெல்லாம் அருள்வாக்கு ஆகி விடுகிறது.

அருள்வாக்கு பலிக்குமா? பலிக்காதா?

“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்.” (குறள், 664)

என்ற குறள்தான் இதற்கான சரியான பதில். இது அருள்வாக்குக்கும் பொருந்தும்.

எந்த வாக்காக இருந்தாலும் அதற்கான செயல்நடவடிக்கை இருந்தால் மட்டுமே அந்த வாக்கு நிறைவேறும் வாக்காக அமையும். செயல்நடவடிக்கை இல்லையென்றால் அது யாருடைய வாக்காக இருந்தாலும் அது நிறைவேறுவதற்கு வாய்ப்பே இல்லை.

நம் சமூகங்களில் அருள்வாக்கு என்பது ஒருவரைச் செயல் நடவடிக்கையை நோக்கி உந்தித் தள்ளும் உளவியல் காரணியாக அமைவதையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. எல்லாருக்கும் அப்படித்தான் அமையும் என்று இதைப் பொதுமைப்படுத்த முடியாவிட்டாலும், அருள்வாக்கின் மீது நம்பிக்கை கொள்ளும் சமூகமாக நம் சமூகம் இருப்பதையும் நாம் மறுத்து விட முடியாது.

“சொல்லிச் சொல்லிப் பார்க்கிறேன். கேட்பதாகத் தெரியவில்லை. ஒரு நாள் சாமியாடினால்தான் சரிபட்டு வரும்!” என்று வையத்துள் வாழ்வாங்கு வாழும் இல்வாழ்வில் சொல்லப்படும் சாமியாடுதல் வேறு வகையானது. பெண்கள் சாமிகளாக விஸ்வரூபம் எடுக்கும் இடம் அது. பெண்களைத் தெய்வமாக வணங்கி, அந்நேரத்தில் அவர்கள் சொல்லும் அருள்வாக்கை நூறு விழுக்காடு அப்படியே நிறைவேற்ற வேண்டிய தருணங்கள் அவை.

*****

22 Feb 2025

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு

– ஓர் எளிய அறிமுகம்!

அருகன்’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்பு என்று கருத இயலாத அளவுக்கு நேர்த்தியான தொகுப்பாக வெளிவந்திருப்பது இத்தொகுப்பின் சிறப்பு எனலாம். ஒரு தேர்ந்த சிறுகதையாளர் என்பதற்கான அம்சங்கள் இத்தொகுப்பில் உள்ள அவரது சிறுகதைகளில் காணக் கிடைக்கின்றன.

பெண்ணியப் பார்வையோடு விரியும் கிராமியச் சூழல் கவிந்த இத்தொகுப்பு பல வகை மாந்தர்களை வாசிப்போருக்கு அடையாளம் காட்டுகிறது. அன்றாடம் நாம் கண்டும் காணாமல் விட்ட பல மாந்தர்கள் இத்தொகுப்பின் மூலமாகப் புதிய வெளிச்சத்திற்கு வருகிறார்கள். நம் வெளிச்சத்திற்கு வராத மாந்தர்கள் பின்னும் ஒரு கதை இருக்கிறது என்பதுதான் இத்தொகுப்பு காட்டும் சிறுகதைகள் தரும் அனுபவம்.

தன்னுணர்வின்றித் திரியும் மாந்தர்கள் சில கிராமங்களுக்குள் ஒருவரேனும் இருப்பர். நகரங்களில் ஒரு சிலரேனும் இருப்பர். ‘அருகன்’ என்ற தலைப்பிலான சிறுகதையை வாசிக்கும் போது அப்படிப்பட்டவர்களின் பின்னுள்ள கதையை யோசிக்கத் தூண்டுகிறது.

காலப் பிரக்ஞையின்றி முன் பின்னாகச் சம்பவங்கள் ஊடாடும் அக்கதையில் வரும் நேமிநாதனும், நேமிநாதனின் மர்மத்தை அறியத் துடிக்கும் மாதவனும் கண் முன்னே நிழலாடிக் காட்சிகளைக் கலைத்து போட்டபடி மாய எதார்த்த்த்திற்குள் சென்று மனக் கண்ணுக்குள் மறைகிறார்கள்.

‘ஓங்குபனை’ சில தசாப்தங்களுக்கு முன்பு வரை நிலவிய ஆண் குழந்தை மோகத்தின் பின்னணியில் இருக்கும் ஆணாதிக்க மனோபாவத்தை அப்பாவி பெண்ணிய மொழியில் பேசுகிறது. தாய் கருவுற்றிருக்க, மகளும் தலைபிரசவத்துக்காகப் பிறந்தகம் வர, தாயின் குழந்தைகளும், மகளின் குழந்தைகளும்  ஒன்றாக விளையாடிய காலமது. அந்தக் காலகட்டத்தில் ஆண் குழந்தைக்காக ஏங்கும் ஒரு பெண்ணின் ஏக்கத்தையும், அப்பெண்ணின் ஏக்கத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஆணின் சபலத்தையும் வெளிப்படுத்தும் நுட்பமான சொல்லாடல் நிறைந்த கதையாக உள்ளது ‘ஓங்குபனை’.

வாழ்க்கை முழுவதும் துணையாக வர வேண்டிய கணவனை இழந்து விட்ட பெண்ணுக்குப் பற்றுக்கோடாக இருக்கும் மகனும் நோயில் விழுந்து விட்டால் எப்படி இருக்கும்? ‘உடற்றும் பிணி’இல் போராடும் பெண்ணின் கதை பெண்ணின் உளவியலையும் இன்றைய எதார்த்த மருத்துவ நிலையையும் பேசுகிறது.

‘ஊமச்சி’யின் கதையின் பின்னால் இருக்கும் மறைக்கப்பட்டிருக்கும் பாலியல் ரகசியங்களும் ஆன்மிக ரகசியங்களும் கிராமியங்களில் ஆழமாகப் புதையுண்டு கிடப்பவை. பருவமடைதலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் பார்வையில் நகரும் இக்கதையை ஒத்த வகையில் நகரும் மற்றொரு கதை ‘மடக்கொடி’. உட்கிடைக்கைக்கும் பொருளாதாரத்திற்கும் பாலியலுக்கும் இடையேயுள்ள முப்பிணைப்பைப் பேசும் இச்சிறுகதை ஒரு சிறுமியின் பால்யத்தில் தொடங்கி அவள் பருவமடைந்த பெண்ணாகச் சமூகச் சிடுக்குகளைப் புரிந்து கொள்வதில் முடிகிறது.

சிலப்பதிகாரம் மணிமேகலையும் மாதவியின் வாழ்க்கைக்கு ஒரு புனிதம் தந்தாலும் எதார்த்த்தம் வேறாகத்தான் இருக்கிறது என்பதைச் சொல்லும் கதையே ‘மைம்மா’. பாலியல் தொழிலாளியாக நோக்கப்படும் ஒரு பெண்ணுக்கு இருக்கும் பரிவும், நாசுக்கும் அவளைத் தீட்டாகக் கருதுவோருக்கு எப்படி இல்லாமல் போகிறது என்பதைக் இக்கதையாடலில் வாசிப்போரின் மனதில் ஊடாட விடுகிறார் அருணா சிற்றரசு.

‘பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்’ என்று பாரதி கூறுவதற்குச் சான்று பகர்வது போல தன்பால் ஈர்ப்பை ‘தேமாக்காதல் என்ற சிறுகதையில் பேசத் துணிந்திருக்கிறார் அருணா சிற்றரசு. பொதுவாகத் தன்பால் ஈர்ப்பு என்பது நகரங்களில், மாநகரங்களில் காணப்படும் எனும் கற்பிதத்தை உடைக்கும் வகையில் கிராமியப் பின்னணியில் அமையும் இக்கதை பேசும் பெண்ணின் மன உணர்வுகள் கவனிக்க வைக்கின்றன.

ஒரு பெண்ணின் மேல் நேசம் கொள்ள ஆணுக்குப் பல காரணங்கள் இருக்கும் என்றால், ஓர் ஆணின் மேல் நேசம் கொள்ள ஒரு பெண்ணுக்கும் பல காரணங்கள் இருக்கும். பரமசிவனின் நேசம் முழுவதும் நாவின் சுவையை மையமாகக் கொண்டே பெண்ணின் மேல் கொள்ளும் நேசமாக அமைகிறது. அந்நேசம் இன்னொருவரின் மனைவியாக இருந்தாலும் நாவின் சுவைக்காகவே அமைந்து, அப்பெண் கட்டியவனையும் மறந்து, கொண்டாடியவனையும் துறந்து இன்னோர் ஆணை நாடிச் செல்வதாக மனதின் விசித்திரங்களை அத்தனை மர்மங்களோடு எதார்த்தமாகப் பதிவு செய்கிறது ‘தீஞ்சுவை’ எனும் சிறுகதை.

பெண்ணின் உணர்வுகளைப் பெண்ணே புரிந்து கொள்ளும் கதையாகவும், குடும்பத்தைக் கட்டிக் காக்கும் பெண்ணின் சாதுர்யம் மிகுந்த கதையாகவும் விரிகிறது ‘மரிக்கொழுந்தன்’. கதையின் போக்கைக் கொண்டு அடுத்து நிகழக் கூடியது இதுதான் என அனுமானிக்கக் கூடிய கதையாக இருந்தாலும், பெண்ணின் ஆளுமையையும் தீர்க்கமான முடிவெடுக்கும் தன்மையையும் பேசும் கதையாக அச்சிறுகதை அமைகிறது.

நாய்களைப் போல நன்றியுள்ள ஜீவன் இந்த உலகில் இல்லையென்றாலும், நாயைப் பிடிக்காத ஒரு பெண்ணுக்கு நன்றியுள்ள நாய் கிடைத்தால், எப்படி இருக்கும் என்பதைப் பேசுகிறது ‘விளியறிஞமலி’. கதை முடிவில் நாயின் மேல் கருணை கொள்வதற்கான அத்தனை சாத்தியங்கள் இருந்தும், எவ்வித சமரசத்தையும் செய்து கொள்ளாமல் மனித மனதை உள்ளது உள்ளபடி பதிவு செய்வதில் தனித்து நிற்கிறது இக்கதை.

இப்படி இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகள் அனைத்தும் தனித்த கவனத்தைக் கோரக்கூடியதாகவும், நுட்பமான அவதானிப்பைத் தரக் கூடியதாகவும் அமைகின்றன.

இக்கதைகளைத் தொகுத்துக் கூறுமிடத்து, அருகன், ஓங்குபனை, ஊமச்சி, மைம்மா, மரிக்கொழுந்தன், மடக்கொடி, தேமாக்காதல் ஆகிய ஏழு கதைகளும் மறைக்கப்பட்ட பாலியலையும், மேற்பூச்சாகத் தெரியும் சமூக எதார்த்தத்தை மீறிய பாலியல் பூடகங்களையும் பேசுவதாக உள்ளன.

‘தீஞ்சுவை’ பாலியல் தேவையைத் தாண்டிய ஐம்புலனின் தேவையை முன்னிறுத்தி, முடிவில் பூடகமாய் உழன்று கொண்டிருந்த பெண்ணின் பாலியலைப் போட்டு உடைக்கிறது.

‘உடற்றும் பிணி’ வெளிப்படுத்தும் பெண்ணின் உளவியல் இத்தொகுப்பில் தனித்த அனுபவத்தைத் தரும் சிறுகதையாக அமைகிறது.

‘விளியறி ஞமலி அத்தனை கிராமிய எதார்த்தங்களுடன் கூடிய மன எதார்த்தத்தைப் பேசும் கதையாக அமைகிறது.

எழுத்தில் ஆண் எழுத்து, பெண் எழுத்து என்றெல்லாம் வேறுபாடில்லை என்றாலும், அருணா சிற்றரசுவின் இத்தொகுப்பில் வெளிப்படும் பெண் எழுத்து தனித்துவமானது. அதுவே இத்தொகுப்பைப் பிற பெண் எழுத்தாளர்களின் தொகுப்புகளிலிருந்து வேறுபடுத்தவும் செய்கிறது.

நூல் குறித்த விவரங்கள் :

நூல் தலைப்பு : அருகன்

நூல் வகை    : சிறுகதைகள்

நூலாசிரியர் : அருணா சிற்றரசு

வெளியீடு : எதிர் வெளியீடு, 96 நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி, 642 002.

பதிப்பக தொடர்பு எண் : 99425 11302

நூல் விலை : ரூ. 200/-

*****

21 Feb 2025

வெள்ளி, செவ்வாயில் அரிசி உளுந்து கொடுக்கக் கூடாதா?

வெள்ளி, செவ்வாயில் அரிசி உளுந்து கொடுக்கக் கூடாதா?

கிராமங்களில் செவ்வாய், வெள்ளி போன்ற கிழமைகளில் அரிசி, உளுந்து போன்ற தானியங்களைக் கொடுக்க மாட்டார்கள்.

இது ஏன்?

இது இனிய நண்பர் காளிதாஸின் கேள்வி.

வெள்ளியும் செவ்வாயும் பொருட்கள் கொடுப்பதற்கான விடுமுறை நாட்களா என்ன?

பொதுவாகக் கிராமத்தினருக்குச் செவ்வாய், வெள்ளி போன்ற கிழமைகள் மங்கலமான நாட்கள். அவர்கள் பிரதானமாக ஆன்மீக தளங்களுக்குச் செல்வது அந்த நாட்களாக இருக்கும். மங்கலகரமான நாட்களில் ஒன்றைக் கொடுப்பதை, மங்கலத்தையே கொடுப்பதைப் போல அவர்கள் கருதுவார்கள்.

சிலப்பதிகாரத்தில் கண்ணகி சிலம்பைக் கொடுத்துக் கணவனை இழந்தது வெள்ளிக் கிழமை. இதன் உளவியல் தாக்கம் இன்றும் தொடர்வதால் செவ்வாய்க் கிழமையில் பொருளைக் கொடுத்தாலும் கொடுப்பார்கள், வெள்ளிக் கிழமை என்றால் நிரம்பவே யோசிப்பார்கள்.

இதன் பின்னால் உள்ள பொருளாதாரக் காரணங்களையும் யோசிக்க வேண்டும். கிராமங்கள் பெரும்பாலும் பொருளாதாரச் சுழற்சி இல்லாதவை. அக்கம் பக்கத்தில் பொருட்களை கைமாற்றாக வாங்கி, கடன் வாங்கி வாழ்க்கையை ஓட்டுபவர்கள் கிராமங்களில் நிறைய பேர். தினம்தோறும் அப்படிக் கேட்பவர்களுக்கு ஒரு தடை போட்டது போல இருக்கட்டும் என்று, செவ்வாய், வெள்ளி ஆகிய இரு நாட்களாவது எதுவும் கொடுக்காமல் இருப்பதற்காகவும் இந்த வழக்கம் ஏற்பட்டிருக்கலாம்.

கேட்பவர்களைத் தட்டிக் கழிப்பதற்காகவும் செவ்வாய், வெள்ளிக் கிழமையைக் காரணம் காட்டுபவர்கள் இருக்கிறார்கள்.

ஒரு நிமிடம் கடந்தாலும் கொடுக்கின்ற எண்ணம் மாறி விடும் என்பார்கள். இடது கை கொடுப்பது வலது கைக்குத் தெரியக் கூடாது என்ற சொலவமே அப்படி ஏற்பட்டதுதான். செவ்வாய், வெள்ளி என்று ஒரு நாள் அளவு என்றால் எப்படி கொடுக்காமல் இருக்கலாம் என்பதற்கு ஓராயிரம் காரணங்களைத் தயார் செய்து விடலாம் பாருங்கள்.

செவ்வாய், வெள்ளியில் தானியங்களைக் கொடுக்கக் கூடாது என்றால் அரிசிக் கடைகள், தானியக் கடைகள் நிலைமை என்னாவது? அவரசத்திற்குப் பணம் தேவைப்படுபவர்கள் வீட்டில் இருக்கும் உளுந்தையோ, பயிறையோ விற்றுப் பணம் புரட்ட வேண்டிய நிலையில் இருந்தால், அவர்கள் நிலைமை என்னாவது?

இதற்கும் ஒரு காரணம் சொல்வார்கள். பொருளைக் கொடுத்து, பணத்தை வாங்கிக் கொண்டால் சரி என்பார்கள். அதாவது, கொன்றால் பாவம், தின்றால் போச்சு என்பது போல.

‘அறம் செய விரும்பு’ என்று சொன்ன ஔவை அதற்கு நாள், கிழமை பார்க்கச் சொல்லவில்லை. ‘தர்மம் தலை காக்கும்’ என்று சொன்ன முன்னோர்கள் எந்தெந்தக் கிழமைகளில் அது காக்கும் என்று குறிப்பிட்டு எல்லாம் சொல்லவில்லை. தர்மம் எல்லா நாட்களிலுமே காக்கும். அதற்கான அறத்தை நாம் அனைத்து நாட்களிலும் செய்யலாம்.

நல்ல மனதோடு கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எந்த நாளிலும் கொடுக்கலாம். அதற்கு செவ்வாயும், வெள்ளியும் கூட உகந்த நாட்களே!

*****

20 Feb 2025

நம் தேர்தல் பிரச்சாரங்கள் சரியாக இருக்கிறதா?

நம் தேர்தல் பிரச்சாரங்கள் சரியாக இருக்கிறதா?

தேர்தல் பிரச்சாரங்களில் உள்ளூர் பிரச்சனைகள் பேசப்படுவதில்லை. அதிலும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் பற்றி வாய் திறப்பதே இல்லை.

உதாரணமாக டில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தை எடுத்துக் கொண்டால் காற்றுமாசு பற்றி அங்கு தேர்தல் பிரச்சாரமே நடைபெறவில்லை.

டில்லியின் முக்கியமான பிரச்சனையே அதுதான்.

தமிழகத்தை எடுத்துக் கொண்டால், டாஸ்மாக் பிரச்சனைகளைப் பற்றி எந்தத் தேர்தல் அறிக்கையும் நுட்பமாகப் பேசுவதில்லை. வெறுமனே மதுவிலக்கு என்ற அளவில்தான் பேசுகின்றன. அது நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று என்பது அத்தேர்தல் அறிக்கைகளைத் தயாரிப்பவர்களுக்கே தெரியும்.

டாஸ்மாக்கினால் எத்தனைக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன? குடிநோயால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்? மது அருந்தியதால் ஏற்பட்ட விபத்துகள் எத்தனை? டாஸ்மாக் குடியர்களுக்குப் போதுமான சுகாதார வசதிகள் அங்குள்ளனவா? அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் உண்டா? இதைப் பற்றியெல்லாம் எந்த தேர்தல் பிரச்சாரங்களிலும் எதுவும் ஒலிப்பதில்லை.

குவார்ட்டர் என்பது ஓட்டைத் தீர்மானிக்கும் நிலையில் இருப்பதால் அது பற்றிய அனைத்தும் பூசி மெழுகப்படுகின்றன.

டெல்டா மாவட்டங்களை எடுத்துக் கொண்டால் இங்கு நெல் கொள்முதலில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றன. காவிரியில் முறை வைத்துப் பாசனம் வழங்கப்படுவதிலும் சிக்கல்கள் இருக்கின்றன. இவை எதுவும் தேர்தல் பிரச்சாரங்களில் பிரதிபலிக்கப்படுவதே இல்லை.

விவசாயத்தை எடுத்துக் கொண்டால் ரசாயன விவசாயம் அதன் உச்சபட்ச நச்சை விதைத்துக் கொண்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாகக் களைக்கொல்லிகளால் வயல், வரப்பு மற்றும் வாய்க்கால்களில் இருந்த பல மூலிகைச் செடிகள் இனம் தெரியாமல் அழிந்துவிட்டன.

கிராமங்களில் மாடுகளே கிடையாது. இருப்பினும் பாக்கெட் பால் வராத வீடுகளே கிடையாது. எப்படி இந்தப் பால் உற்பத்தியாகிறது என்பதற்குக் கேள்வியும் கிடையாது.

ஊரெங்கும் பயன்படுத்தப்படும் நெகிழிப் பைகள் மற்றும் நெகிழிப் பொருட்களுக்கு அளவே இல்லை. இவையெல்லாம் எந்த அளவுக்கு மண்ணையும் அதன் வளத்தையும் பாதிக்கும் என்பதை நுட்பமாகப் பேசும் தேர்தல் அறிக்கைகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நீர் நிலைகள் பற்றியும் எந்தத் தேர்தல் அறிக்கையும் பேசுவது இல்லை. எத்தனையோ ஏரிகள், குளங்கள், மழைநீர் வடிகால்களை இழந்தாயிற்று அல்லது தூர்த்தாயிற்று.

இவையெல்லாம் பேசப்பட வேண்டும். ஆனால் பிரச்சாரங்களில் பேசப்படுவதில்லை. அரசியல் கட்சியின் பிரதிநிதிகளை, வேட்பாளர்களை ஆரோக்கியமான முறையில் கேள்வி கேட்கும் மரபே இங்கில்லை. ஆரோக்கியமான விவாதங்கள் நேரடியாக பொதுமக்களுக்கும் அரசியல் பொறுப்பாளர்களுக்கும் நடைபெறுவதே இல்லை. நடைபெறுவதெல்லாம் வம்படிச் சண்டைகளாகவே இருக்கின்றன.

பொது மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் பற்றி ஆரோக்கியமாக விவாதிக்கும், வாக்குறுதிகள் வழங்கும் தேர்தல் அறிக்கைகள் உருவாக வேண்டும். முதலில் பொதுமக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வும், வருங்கால அக்கறையும் வேண்டும். அதை ஏற்படுத்தும் பொறுப்பும் கடமையும் கூட தேர்தல் கட்சிகளுக்கு இருக்கிறது.

அதற்கு முதற்படி ஒன்று இருக்கிறது. அதுதான் கேள்வி. அங்கிருந்துதான் துவங்க வேண்டும்.

பொதுமக்களே! கொஞ்சம் ஆரோக்கியமாகக் கேள்வி கேளுங்கள்.

அரசியல்வாதிகளே! கொஞ்சம் ஆரோக்கியமாகப் பதில் சொல்லுங்கள்.

கேட்கத்தான் கேள்விகள்!

கேள்விகள் கேட்பதுதான் புரட்சிக்கான வேள்விகள்!

*****

19 Feb 2025

பிரச்சனை இல்லாத ஒருவர்

பிரச்சனை இல்லாத ஒருவர்

கடன் என்றால் பயந்தார் அப்பா

கடன் வாங்க போட்டி போடுகிறான் மகன்

வங்கிகள் கடன் தருகின்றன

வட்டிக் கடைகள் கடன் தருகின்றன

ஏதேதோ பெயரில் உருவாகி வரும்

நிதி நிறுவனங்கள் கடன் தருகின்றன

மொபைல்களும் கடன் தருகின்றன

கடன் வாங்காமல் இருக்க முடியாது

கடனுக்குப் பயந்து ஒளிய முடியாது

எந்நேரமும் ஒலிக்கின்ற

அலைபேசியில் கடன் தந்தவர்களின் அழைப்புகள்

அலைபேசியை அணைத்துப் போட்டால்

அன்பிற்குரியவர்களின் எண்களுக்கு

ஆபாசச் செய்திகள் அனுப்பப்படுகின்றன

வேலை தேடுபவராக இருக்கலாம்

பண முடையில் இருப்பவராக இருக்கலாம்

சம்பாதிக்க ஆசைப்படுபவராக இருக்கலாம்

பணம் இல்லாமல் இருப்பது பிரச்சனையா

கடன் இல்லாமல் இருப்பது பிரச்சனையா

அலைபேசியில் சூனியக்காரர்கள் உலவும் உலகில்

கையில் அலைபேசி இல்லாத

பைத்தியக்காரர்கள் மட்டுமே பிரச்சனை இல்லாதவர்கள்

*****

நான் ஏன் வலைப்பதிவில் மட்டும் எழுதுகிறேன்?

நான் ஏன் வலைப்பதிவில் மட்டும் எழுதுகிறேன்? நான் ஏன் வலைப்பதிவில் மட்டும் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று என்னைக் கேட்காத ஆட்களில்லை. அப்ப...