31 Dec 2025

நன்றியும் வணக்கமும்

ஒரு சிறு துளியின் ஆவேசம்

காடு பற்றி எரிகிறது

சிறு வாளித் தண்ணீர் அழுகிறது

கடைசி தீப்பொறியை

அணைக்கும் ஆவேசத்துடன் காத்திருக்கிறது

ஒரு சொட்டு நீர்த்துளி

*****

நன்றியும் வணக்கமும்

கோழிக்குஞ்சுகளோடு

சாலையில் குறுக்கே புகுந்த

கோழிக்காக

இரு சக்கர வாகனத்தை நிறுத்திய

மனதுக்கு நன்றி சொன்னேன்

அதே காரணத்திற்காக

எதிரில் வந்த லாரியை நிறுத்திய

ஓட்டுநரைக் கைகுவித்து வணங்கினேன்

*****

கிப்ட் வவுச்சர்

கொடுத்த காசு மல்லிகைப்பூவுக்குத்தான்

தளும்பும் காதல்

மல்லிகைப் பூவுக்கான கிப்ட் வவுச்சர்

*****

ஆறுவது சினம்!

எப்போதாவதுதான் வருகிறது

ஏன் எப்போதும் வருவதில்லை

எனக் கோபித்துக் கொள்ள முடியாது

கவிதையிடமும் உன்னிடமும்

*****

30 Dec 2025

பாதுகாப்பால் ஆன உலகு

பாதுகாப்பால் ஆன உலகு

இதோ டாஸ்மாக் கடை

சற்றுத் தொலைவில்

சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்

போக்குவரத்துக் காவலர்

ஒவ்வொரு முக்காய்க் கடக்கையில்

சிசிடிவி கேமிராக்கள் கண்காணிக்க

குற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன

விபத்துகளின்றி வீடு வந்து சேர்கையில்

பாதுகாப்பாய்தான் இருக்கிறார்கள்

வீட்டில் இருக்கும் மனிதர்கள்

***** 

மரணிப்பவர் எப்படியும் மரணிப்பார்!

தற்கொலை செய்து கொள்வேன்

என மிரட்டிக் கொண்டிருந்தவரைப்

போலிசிடம் பிடித்துக் கொடுத்தோம்

அவர் லாக் அப்பில் மரணித்திருந்தார்

*****

யாங்கும் வியாபித்திருக்க

உயர் அலுவலர் ஒருவர் வந்து

அச்சுறுத்திப் போனார்

சுத்தம் சுகாதாரம் இல்லையென்றால்

தண்டனை மற்றும் அபராதம்

அவர் அலுவலம் போன போதும்

அப்படித்தான் இருந்தது

கழிவறை

*****

29 Dec 2025

மீண்டும் மீண்டும் வாழ்க்கை

மீண்டும் மீண்டும் வாழ்க்கை

இன்று கண் விழிக்கிறேன்

அதே விடியல்

அதே சூரியன்

அதே பறவைகளின் ஒலி

அதே வீடு

அதே தேநீர்

அதே மனைவி

அதே குழந்தைகள்

அதே வேலை

அதே அலைச்சல்

அதே வீடு திரும்பல்

அதே அசதி

அதே தூக்கம்

அதே கனவுகள்

அதே விழிப்பு

மீண்டும்

அதே அதே அதே

மீண்டும்

*****

திருப்தியில் வீழ்தல்

பறவை பறந்து செல்கிறது

கிளை அசைகிறது

மரத்துக்கு வலிக்கவும் இல்லை

பறவைக்கும் நன்றி சொல்ல தோன்றவில்லை

பறவை வந்தால் தாங்குகிறது

இல்லையென்றால் காற்றில் அசைகிறது

முறியும் கிளைகள் குறித்த பிரக்ஞையின்றி

அடுத்தடுத்து தளிர் விடுகிறது

ஒரு நாள் வெட்டி வீழ்த்தப்படும் போது

பணிவுடன் பூமியின் காலடியில் வீழ்கிறது

ஆயிரம் விதைகளை அனுப்பி விட்ட திருப்தியில்

*****

26 Dec 2025

மனை முழுவதும் விளையாட்டு

மனை முழுவதும் விளையாட்டு

திடலில்

வயலில்

என

எங்கும் மட்டைப்பந்து

விளையாட முடியவில்லை

மறுநாளே

சதுர அடி நாற்பதே ரூபாய் என்று

பதாகைகளைத் தொங்குகின்றன

இப்போதெல்லாம்

பதாகைகள் தொங்கும்

வீட்டுமனைகளாய்ப் பார்த்து

விளையாடிக் கொண்டிருக்கிறோம்

*****

சரிபார்த்தல்

தொலைக்காட்சிகளை எண்ணினோம்

ஆறு இருந்தது

குடும்ப உறுப்பினர்களும்

சரியாக ஆறு இருந்தனர்

*****

ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கை

வீட்டுக்குள் நுழைந்தால்

வேலையைக் கழட்டி வீசி விடுவேன்

இது மேலாளருக்குத் தெரியாது

வேலைக்குள் ஆழ்ந்தால்

வீட்டைக் கழட்டி வீசி விடுவேன்

இது மனைவிக்குத் தெரியாது

மதுபானக் கடைக்குள் நுழைந்தால்

என்னைக் கழட்டி வீசி விடுவேன்

இது எனக்கே தெரியாது

இந்தச் சந்தோசத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது

வாழ்க்கை

*****

25 Dec 2025

பசியோடு வந்திருக்கும் தேவதை

அம்முக்குட்டியின் கோபம்

ரோஸ் நிறத்தில் வாங்கி வந்த கோழிக்குஞ்சு

வெள்ளையாய் வளர வளர

அழுது கொண்டிருந்தாள் அம்முக்குட்டி

வெயிலில் அலைந்ததால் வெளுத்து விட்டதாய்

சமாதானப்படுத்தி வைத்தாள் அம்மா

அன்று முதல்

இனி வெயிலில் அதிகம் அலையக் கூடாது என்று

வெள்ளையிடம்

கோபப்பட ஆரம்பித்தாள் அம்முக்குட்டி

*****

பசியோடு வந்திருக்கும் தேவதை

கழுத்தில் தொங்கிய

மெல்லிழை ஆபரணம்

பஞ்சக் கோலத்தைப் படம் பிடித்துக் காட்ட

அவள் பசியறிந்து

இருந்த பழங்களைத் தேடியெடுத்து

நறுக்கி வைத்தேன்

அவ்வளவு பசியிலும்

ஒரு துண்டை எடுத்து

ரசித்து ருசித்து மென்று

தொண்டைக்குழியில்

இறக்கிய போது

மெல்லிழை ஆபரணத்தில்

தென்பட்ட அசைவு சொன்னது

பசியோடு வந்திருப்பது

ஒரு தேவதை என்று

*****

24 Dec 2025

சமனின்மை சூழ் வாழ்க்கை!

சமனின்மை சூழ் வாழ்க்கை!

தீபாவளி, பொங்கலை அறிவிக்கும் மணியோசை வாசகங்கள்!

யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பது போலத் தீபாவளி மற்றும் பொங்கலை அறிவிக்கும் மணியோசை வாசகங்கள், ‘அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னிப் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்பதுதான். தீபாவளி, பொங்கலின் போது மட்டும்தான் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னிப் பேருந்துகள் நடவடிக்கை வேண்டுமா? மற்ற நாட்களில் எல்லாம் கண்டு கொள்ள மாட்டார்களா? அது சரி! தீபாவளி, பொங்கலிலாவது நடவடிக்கை எடுப்பார்களா என்றால், அதுவும் இருக்காது. நாம்தான் அது இந்தத் தீபாவளி, பொங்கலா? அடுத்த தீபாவளி, பொங்கலா? அல்லது அதற்கும் அடுத்த தீபாவளி, பொங்கலா? என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டுப் புரிந்து கொண்டோம் போலிருக்கிறது என்று ஆறுதல் பட்டுக் கொண்டே அதிக கட்டணத்தோடு ஆம்னிப் பேருந்துகளில் பயணித்துக் கொள்ள வேண்டியதுதான்.

****

எவ்வளவு கட்டணம் வசூலித்தாலும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மேல் அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்!

எப்படி எடுப்பார்கள்?

அவற்றை மறைமுகமாக நடத்துவது அவர்கள்தானே!

*****

புதிய மொந்தையில் பழைய கள்!

பழமொழிகள் சாசுவதமானவை.

காலத்துக்கும் பொருந்தும் புதுமொழிகள் என்றும் அவற்றைச் சொல்லலாம். அவை எல்லா காலத்துக்கும் பொருந்துவன.

எப்படி என்கிறீர்களா?

அது என்ன தலைவிதியோ, அறிவியல் விதியோ புது பாடல் பிச்சிக்கிட்டுப் போகுதோ இல்லையோ, புதிய படத்தில் பழைய பாடல் பிய்த்துக் கொண்டு போகிறது.

இதை என்ன சொன்வது?

புதிய மொந்தையில் பழைய கள்!

*****

இன்றைய கல்வி முறை எப்படி இருக்கிறது தெரியுமா?

எந்தப் பள்ளிக்கூடத்தில் படித்தாலும் நல்ல தனிப்பயிற்சி நிலையத்தில் (டியூசனில்) படிக்க வேண்டும் என்பதாக இருக்கிறது.

அது அப்படியே முன்னேற்றமடைந்து (அப்கிரேட்) ஆகி எந்தக் கல்லூரியில் (காலேஜில்) படித்தாலும் பரவாயில்லை, நல்ல பயிற்சி மையத்தில் (கோச்சிங் சென்டரில்) சேர்ந்து விட வேண்டும் என்பதாக இருக்கிறது.

*****

நாம் எவற்றைச் சரி செய்தால் சமத்துவதைக் கொண்டு வர முடியும்?

அனைவருக்கும் தரமான கல்வி, தரமான மருத்துவம், தரமான சுகாதாரம் – இவைதான் சமத்துவத்தை ஏற்படுத்தும்.

நம் நாட்டில் பணக்காரர்கள் பெறும் கல்வி ஒரு மாதிரியாகவும், ஏழைகள் பெறும் கல்வி வேறு மாதிரியாகவும் இருக்கிறது.

அரசுப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், மத்திய கல்வி வாரியப் பள்ளிகள், சர்வதேசப் பள்ளிகள் என்று ஒவ்வொன்றிலும் வழங்கப்படும் கல்வியிலும் பல்வேறு மாறுபட்ட தர மாதிரிகள் உள்ளன.

மருத்துவத்தை எடுத்துக் கொண்டால் ஏழைகளுக்கான மருத்துவமும் பணக்காரர்களுக்கான மருத்துவமும் மடுவுக்கும் மலைக்கும் உள்ள வேறுபாட்டைக் கொண்டுதான் ஒப்பிட வேண்டும்.

சுகாதாரத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. பணக்காரர்கள் வசிக்கும் பகுதிகளை ஒரு மாதிரியாகவும், ஏழைகள் வசிக்கும் பகுதிகளை வேறு மாதிரியாகவும் கவனிப்பார்கள். சென்னையின் போயஸ் தோட்டத்தையும் கூவம் நதிக்கரையையும் பார்த்தாலே இது விளங்கி விடும்.

இவற்றையெல்லாம் சரி செய்யாமல் சமத்துவத்தைக் கொண்டு வரவே முடியாது.

*****

23 Dec 2025

சில வாழ்வியல் விநோதங்கள்!

சில வாழ்வியல் விநோதங்கள்!

பத்திரிகை பயங்கரங்கள்!

தற்போது பத்திரிகைகளில் செய்திகள் ஒவ்வொன்றும் பயங்கரங்களாகத்தான் இருக்கின்றன. அது ஒரு வகை என்றால், வீட்டிற்கு அழைப்பிதழ்களாக வரும் பத்திரிகைகளும் பயங்கரமாக வருகின்றன.

ஒவ்வொன்றின் அளவும் கட் அவுட், ப்ளக்ஸ் வைக்காத குறைக்கு அவ்வளவு பெரிதாக, பிரமாண்டமாக இருக்கின்றன.

போகிறப் போக்கைப் பார்த்தால் இனி பத்திரிகைகளை ப்ளக்ஸ் போர்டுகளாகவே அடித்துக் கொண்டு வந்து வீட்டுக்கு வீடு கொடுப்பார்கள் போலிருக்கிறது.

கல்யாணப் பத்திரிகை, காது குத்தல் பத்திரிகை, மஞ்சள் நீராட்டுப் பத்திரிகை – இவற்றைப் பையடக்கமாகவோ, கையடக்கமாகவோ அடிக்கக் கூடாதா? இவற்றைப் பையிலும் வைத்துக் கொள்ள முடியவில்லை, கையிலும் வைத்துக் கொள்ள முடியவில்லை.

வேறு வழியில்லாமல் பல நேரங்களில் இவற்றை வீட்டிலே வைத்து விட்டு, மண்டபம் தெரியாமல் அல்லாட வேண்டியிருக்கிறது.

*****

குழந்தைகளைப் பயமுறுத்துவது காலந்தோறும் எப்படி மாறியிருக்கிறது தெரியுமா?

முன்பெல்லாம் குழந்தைகள் அழுதால் பூச்சாண்டியிடம் பிடித்துக் கொடுத்து விடுவேன் என்று பயம் காட்டுவார்கள்.

இப்போதெல்லாம் டீச்சரிடம் பிடித்துக் கொடுத்து விடுவேன் என்று பயம் காட்டுகிறார்கள்.

*****

பூவுடன் சேர்ந்தால் நாறும் மணக்கும் என்கிறார்களே!

இது எந்த அளவுக்கு உண்மை என்றால்…

எந்த விதியாக இருந்தாலும் அதற்கு விதிவிலக்கு உண்டு.

இதுதான் விதிகளைப் பற்றிய மாற்ற முடியாத விதி.

மேற்படி பழமொழிக்கும் இந்த விதி பொருந்தும்.

உதாரணத்துக்கு அறிவாளிகளுடன் பழகுவதால் அறிவாளி ஆகலாம். பணக்காரர்களுடன் பழகுவதால் பணக்காரர் ஆக முடியாது.

*****

வாழ்க்கையில் நாம் வழமையாகக் கற்றுக் கொள்வதை மாற்றிக் கொள்ளவும் வேண்டியிருக்கும்.

எப்படித் தெரியுமா?

வாழ்க்கையில் கற்றுக் கொண்டதை மாற்றிக் கற்றுக் கொள்ளவும் வேண்டியிருக்கும்.

வாழ்க்கையில் எல்லாம் ‘இப்படித்தான் – அப்படித்தான்’ என்பதாக இருக்கிறது. காலையில் சாப்பிடுவது, மாலையில் சாப்பிடுவது, இரவில் சாப்பிடுவது, இடையிடையே பஜ்ஜி சொஜ்ஜி, தேநீர் குளம்பி, இன்னபிற வடை, போண்டா, சமோசா என்று. ஒரு கட்டம் வரையில் இவற்றைத் தவிர்க்க முடியாது. பசிக்கிறதோ, பசிக்கவில்லையோ? எதையாவது உள்ளே தள்ளாவிட்டால், சர்க்கரையா, கொழுப்பா, இரத்தக்கொதிப்பா என்று மனஉளைச்சலுக்கு ஆளாக்கி விடுவார்கள் சுற்றும் சூழ இருக்கும் நலம் விரும்பிகள்.

மூன்று வேளையும் குழந்தைக்கு உணவூட்ட வேண்டும் என்ற தாயின் அன்பில் தொடங்கும் ‘இப்படித்தான் – அப்படித்தான்’ என்கிற இம்முறைப்பாடுகள், தவிர்க்க முடியாத சம்பிரதாயங்களாக மாறி விடுகின்றன. பின்பு ஒரு வேளை சாப்பிடாமல் இருந்தாலும்,  உடம்புக்கு ஏதும் சரியில்லையோ என்று அளவுக்கதிகமாக விசாரிக்கும் சுற்றத்தாரின் அக்கறையில் இந்தச் சடங்கு வளர்ந்து கொண்டு இருக்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல் இதைத் தளர்த்திக் கொள்ள முடியும். அதுவும் அவரவர் மனது வைத்தால் மட்டுமே முடியும்.

உடல் உழைப்பு அதிகம் தேவைப்படாத இன்றைய காலகட்டத்தில் இரு வேளை உணவே போதுமானது. அதுவும் இதற்கு மேல் பசி தாங்க முடியாது எனும் போது சாப்பிடுங்கள். இதற்கு மேல் தாகம் தாங்க முடியாது எனும் போது தண்ணீர் பருகுங்கள். வாழ்க்கையில் நமக்குத் தேவை எவ்வளவு கொஞ்சம் என்பதை அப்போதுதான் உணர முடியும். எதையாவது கற்றுக் கொண்டு ஏகத்துக்கும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் ஒழிந்து, கற்றுக் கொண்டதை வைத்துக் கொண்டு சம்பாதிப்பதே போதும் என்கிற மனநிலையும் அப்போதுதான் வரும்.

*****

22 Dec 2025

இந்திய வங்கிகள் ஏன் திவாலாகாது?

இந்திய வங்கிகள் ஏன் திவாலாகாது தெரியுமா?

எத்தனை தொழிலதிபர்கள் இந்திய வங்கிகளை ஏமாற்றி, வெளிநாடுகளுக்குத் தப்பித்து ஓடினாலும், இந்திய வங்கிகளைத் திவாலாகாமல் காப்பாற்ற ஆயிரம் கோடி ஏழைகள் காத்திருக்கிறார்கள். அவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லை என்பதற்காக வங்கிக்குத் தண்டம் கட்டி, வாங்கிய கடனுக்கு அதிகமாக வட்டியைக் கட்டி, இல்லாத அலைபேசிக்குக் குறுஞ்செய்தி அனுப்பியதற்கான கட்டணத்தைக் கட்டி எப்படியும் இந்திய வங்கிகளைக் காப்பாற்றிக் கொண்டு இருப்பார்கள். இந்தியாவில் ஏழைகள் இருக்கும் வரையில் இந்திய வங்கிகள் ஒரு போதும் திவாலாகாது.

*****

மாதத்தில் ஐந்து முறைதான் ஏடிஎம்மில் கட்டணமின்றிப் பணம் எடுக்க முடியும் என்பது பற்றி என்ன சொல்வது?

மக்கள் எவ்வளவு சிரமம் இருந்தாலும், எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்றாலும் வங்கிக்கு வந்து எவ்வித செலவினமும் இல்லாமல் பணத்தை எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு ஏடிஎம் அட்டைகளைக் கொடுத்துச் சுலபமாகக் காத்திருப்பு இல்லாமல் எத்தனை முறை வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். தேநீரைக் காசுக்கு விற்பதற்கு முன்பாக இலவசமாகக் கொடுத்தார்களாம். ஏடிஎம் அட்டைகளின் கதையும் அப்படித்தான் ஆரம்பமாகியது.

இப்போது ஐந்து முறை மட்டும் கட்டணமின்றி எடுத்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள். மக்களுக்கு ஐந்து முறைகளுக்கு மேல் பணத் தேவை இருக்காதா? அல்லது இருக்கத்தான் கூடாதா?

போகப் போக மூன்று முறைக்கு மேல் கட்டணமின்றி எடுக்க முடியாது என்பார்கள். பிறகு அது ஒரு முறையாகும். கடைசியில் அது பூஜ்ஜியத்தில் போய் நிற்கும்.

அவ்வளவுதான். இனி ஓசியில் டீ குடித்த காலம் முடிந்து விட்டது. காசு இருந்தால் டீயைக் குடி. இல்லையென்றால் இடத்தைக் காலி பண்ணு என்று பதாகையே வைத்து விடுவார்கள்.

*****

ஒரு நாட்டின் வறுமை நிலையை எப்படி மதிப்பிடலாம் தெரியுமா?

எத்தியோப்பியா, சோமாலியா போன்ற நாடுகளை அங்கிருக்கும் மக்களுக்கு அடுத்த வேளைக்குச் சோறு கிடைக்கிறதா என்பதை வைத்தும், இந்தியா போன்ற நாடுகளை இங்கிருக்கும் மக்களுக்கு அடுத்த இஎம்ஐக்குப் கட்ட பணம் கிடைக்கிறதா என்பதை வைத்தும், அமெரிக்கா போன்ற நாடுகளை அங்கிருக்கும் மக்களுக்கு அடுத்த மாதம் பார்க்க வேலை இருக்குமா என்பதை வைத்தும் மதிப்பிட வேண்டும்.

*****

21 Dec 2025

இரண்டு கண்கள் இரண்டு பார்வை பார்க்க முடியுமா?

பல்டிக்கும் பச்சோந்திக்கும் உதாரண புருஷர்கள்!

உள்ளூர் அரசியல் பல்டிகள் ஒரு பக்கம் என்றால், உலக அரசியல் பல்டிகள் அதற்குக் கொஞ்சம் கூட குறைந்ததல்ல.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் என்ன சொல்கிறார் என்றால், இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால்தான் உக்ரைன் – ரஷ்ய போரை நிறுத்த முடியவில்லை என்கிறார்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் என்ன சொல்கிறார் என்றால், அமெரிக்கா தங்களிடமிருந்துதான் யுரேனியம் வாங்குகிறது என்கிறார்.

ரஷ்யாவிடமிருந்து இந்தியாவுக்கு வாங்கப்படும் கச்சா எண்ணெய் குறித்த புள்ளி விவரங்கள் என்ன சொல்கின்றன என்றால், சுத்தகரிக்கப்படும் பெரும்பகுதி கச்சா எண்ணெய் அமெரிக்காவுக்குத்தான் ஏற்றுமதி ஆகின்றன என்கின்றன.

டிரம்பின் பார்வைப்படி ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தவறு என்றால், ரஷ்யாவிடமிருந்து அமெரிக்கா யுரேனியம் வாங்குவது மட்டும் எப்படிச் சரியாகும்?

அத்துடன் இந்தியாவிலிருந்து சுத்தகரிக்கப்படும் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவதும் எப்படிப் பொருத்தமாகும்?

டிரம்ப் இப்படியெல்லாம் பேசுவதற்கான காரணங்களையும் அவரே சொல்கிறார். இது போன்ற காரணங்களையெல்லாம் கண்டறிந்து அந்நாடுகளுக்கு எதிராக வரி விதிப்பைக் கடுமையாக்கி உலக அமைதியை உருவாக்கப் போவதாகக் கூறுகிறார்.

இது போன்ற அவரது கற்பிதங்களால் இரண்டு நாடுகளுக்கு இடையே ஒரு போர் நிற்பதை விட, உலகப் போர் ஏதும் உருவாகி விடாமல் இருக்க வேண்டும். டிரம்பின் அடாவடி மற்றும் அதிரடிச் செயல்பாடுகள் உலக அளவிலான வர்த்தகப் போருக்கான முகாந்திரமாக இருக்கின்றன.

முன்பு தேர்தல் தோல்வியால் அமெரிக்க பாராளுமன்றத்தையே போர்க்களமாக்கியவர் உலகை எப்படி அமைதிப் பூங்காவாக ஆக்கப் போக்கிறார்? டிரம்புக்கு ஓர் எதிர்பார்ப்பும் இருக்கிறது. அது உலக அமைதிக்கான நோபல் பரிசு. அவர் போகிற போக்கைப் பார்த்தால் அமைதிக்கு எதிரான அதிரடி நோபல் பரிசைத்தான் கொடுக்க முடியும்.

டிரம்ப் உலக அமைதிக்கான நோபல் பரிசின் மீதும் ஒரு கண் வைத்துக் கொள்கிறார். இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது போர் தொடுத்ததிலும் இன்னொரு கண்ணை வைத்துக் கொண்டார். தற்போது வெனிசுலாவுக்கு எதிராக போர் தொடுப்பேன் என்று மறுகண்ணை மாற்றிக் கொண்டிருக்கிறார். டிரம்பின் ஒரு கண் அமைதியையும் மறுகண் போரையும் பார்க்கிறது. ஒரே நேரத்தில் இரு பார்வையைப் பறவைகள்தான் பார்க்க முடியும் என்கிறது அறிவியல். மனிதர்களும் அப்படி இரு பார்வையைப் பார்க்க முடியும் என்கிறது அரசியல்.

அது சரி, ஏன் டிரம்ப் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்?

பொதுவாக அரசியல்வாதிகளுக்கு ஒரு காரணம் தேவைப்படுகிறது. அது நியாயமான, தர்க்க ரீதியான காரணங்களாக இருக்க வேண்டும் என்றில்லை. அந்தக் காரணத்தால் காரியம் நடந்து, ஏதாவது நிகழ்ந்தால் அதை உஷ்ணமாக்குகிறார்கள். இல்லையென்றால் பல்டி அடிக்கவும் யோசிப்பதில்லை.

நிறம் மாறிக் கொள்வதில் பச்சோந்திக்கே பாடம் எடுக்கக் கூடியவர்களாக அரசியல்வாதிகள் மாறிக் கொண்டு வருவது அரசியலில் சாதாரணம் எனப்படுகிறது. அரசியலில் இந்தச் சாதாரணங்கள் மாறவே மாறாதா?

*****

20 Dec 2025

குறைவதற்கு வாய்ப்பில்லாத பட்டியல் எப்படிக் குறையும்?

குறைவதற்கு வாய்ப்பில்லாத பட்டியல் எப்படிக் குறையும்?

எப்போதும் வாக்காளர் திருத்தப் பட்டியல் வெளியாகும் போது வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்து இருக்கும்.

இந்த முறை அது நேர்மாறாக மாறியிருக்கிறது. வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இதற்குக் காரணம் தீவிர வாக்காளர் திருத்தம்தான்.

வாக்காளர் எண்ணிக்கை குறையுமா?

அதற்கு வாய்ப்பே இல்லை. அப்படி ஒரு வாய்ப்பு சாத்தியமாக வேண்டுமானால் மக்கள்தொகைப் பெருக்கம் குறைய வேண்டும். இந்தியாவில் மக்கள்தொகைப் பெருக்கம் அதிகரித்துக் கொண்டே போவதால், ஒவ்வொரு வாக்காளர் திருத்தத்தின் போதும் வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் போக வேண்டும்.

அதிலும் ரொம்ப முக்கியமாக கடந்த சட்டமன்ற தேர்தலை விடவோ, நாடாளுமன்ற தேர்தலை விடவோ வாக்காளர் எண்ணிக்கை குறையக் கூடாது. போகின்ற போக்கைப் பார்த்தால் எண்ணிக்கைக் குறைவுதான் ஏற்படும் போலிருக்கிறது.

நீதித்துறையில் ஒரு பிரபலமான வாசகம் சொல்லப்படுவதுண்டு. ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக் கூடாது. இது தேர்தல் வாக்குரிமைக்கும் பொருந்தும். ஒரு நியாயமான வாக்காளர் தனது வாக்குரிமையை எக்காரணம் கொண்டும் இழந்து விடக் கூடாது. அதற்கு தீவிர திருத்தங்கள் காரணமாகி விடவும் கூடாது.

ஏனிந்த நிலை?

தீவிர வாக்காளர் திருத்தத்திற்கு முன்பு வரை வாக்காளர்களைச் சேர்ப்பது தேர்தல் ஆணையத்தின் கடமையாகவும், அதி முக்கியமான பணியாகவும் இருந்தது. தற்போது அந்தக் கடமையையும் பணியையும் தேர்தல் ஆணையம் ஒவ்வொரு குடிமகன் தலையில் சுமத்துகிறது. ஒருவர் தன்னை வாக்காளர் என நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நிரூபிக்க முடியாது போனால் நியாயமாக நீங்கள் வாக்களிக்க தகுதியான வாக்காளராக இருந்தாலும் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது. வாக்காளர் பட்டியலில் பெயரில்லை என்றால் அவர் எப்படி வாக்களிப்பார்?

தேர்தல் ஆணையம் போன்ற ஜனநாயகத்தை வலுபடுத்தும் அமைப்புகளின் முக்கியமான நோக்கம் வாக்காளர்களைச் சேர்ப்பதாக இருக்க வேண்டும், நீக்குவதாக இருக்கக் கூடாது.

நிலைமை என்னவோ சேர்க்கை என்பதை விட, நீக்கத்தையே முதன்மையாகக் கொண்டுள்ளது போலத் தெரிகிறது.

*****

19 Dec 2025

நம்மை நாகரிகம் அடைந்த சமுதாயம் என்று சொல்லிக் கொள்ள முடியுமா?

நம்மை நாகரிகம் அடைந்த சமுதாயம் என்று

சொல்லிக் கொள்ள முடியுமா?

மனிதர்கள் நாகரிகப் பிராணிகள். ஆனால் அவர்களைத் தற்காலத்தில் அவ்வாறு சொல்ல முடியுமா என்றால் முடியாது என்றுதான் தோன்றுகிறது.

இயற்கை தந்த ஆறுகளைக் கழிவு நீர்க் கால்வாய்களாக மாற்றி விட்டார்கள். முன்னோர்கள் தந்த குளங்கள், குட்டைகள், ஏரிகள் என அனைத்தையும் சாக்கடைத் தேக்கங்களாக மாற்றி விட்டார்கள்.

ஆடுகள், மாடுகள் மேய்வதற்கும், பறவைகள் மற்றும் விலங்குகள் தஞ்சமடைவதற்கும் இருந்த புறம்போக்கு நிலங்களை எல்லாம் குப்பை மேடுகளாக மாற்றி விட்டார்கள்.

வற்றாத கிணறுகளை எல்லாம் குப்பைகளை அள்ளிப் போட்டு, கழிவுகளைக் கொட்டி வைத்து அவற்றின் சுவடே இல்லாத அளவுக்குத் தூர்ந்து போகச் செய்து விட்டார்கள்.

இயற்கை தூய்மையாகக் கொடுத்த தண்ணீரை சாக்கடைகளுக்கு மத்தியில் பிளாஸ்டிக் குழாய்கள் வழி கொண்டு வருகிறார்கள்.

குடிக்கின்ற தண்ணீரை பல விதங்களில் பல மடங்கு தூய்மைப்படுத்திப் பிளாஸ்டிக் கலன்களில் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பிளாஸ்டிக் கலன்கள் ஆங்காங்கே குப்பைகளாக மாறி பாசன மற்றும் வடிகால் அமைப்புகளுக்கு மாரடைப்புகளை உண்டு பண்ணுகின்றன.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது மனிதர்கள் நாகரிகச் சமுதாயம் என்ற பெயரில் அநாகரிகப் போக்கில் போவதாகத்தான் தெரிகிறது.

உண்மையில் ஒரு நாகரிகச் சமுதாயத்தில் நல்ல நீர் கண்ணுக்குத் தெரியும்படி வெளிப்படையாக ஓட வேண்டும். சாக்கடை நீர் கண்ணுக்குத் தெரியாமல் மறைவாக ஓட வேண்டும்.

நம் சமூகத்தில் இது அப்படியே எதிர்மறையாகத்தானே ஓடுகிறது.

பிறகெப்படி நம்மை நாகரிகம் அடைந்த சமூகம் என்ற சொல்லிக் கொள்ள முடியும்?

*****

18 Dec 2025

வாழ்க்கையை எது சலிப்பூட்டுகிறது?

வாழ்க்கையை எது சலிப்பூட்டுகிறது?

அம்மா இட்டிலிக்கும் தோசைக்கும் மாவரைத்தக் காலத்தில் எப்படியும் மாவரைத்து முடிக்க ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாகும். அவர்கள் யாரும் சலிப்புற்றோ, எரிச்சலுற்றோ பார்த்ததில்லை. மாறாக அவர்களுக்கு இருந்த கவலையெல்லாம் இப்படி அமாவசைக்கு அமாவசைக்குத்தான் மாவரைக்க உளுந்து இருக்கிறதே என்பதுதான். இன்று உளுந்து பற்றாக்குறையும் இல்லை, மாவரைக்கும் கஷ்டமும் இல்லை. மாவரைக்கும் இயந்திரத்தில் போட்டால் அதிகபட்சம் அரை மணி நேரத்திற்குள் வேலை முடிந்து விடுகிறது. அதையும் மாவைப் போட்டு விட்டு அப்படியே பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற அவசியம் எல்லாம் இல்லை. இருந்தாலும் இந்த வேலை சலிப்பூட்டுகிறது, பெண்கள் எரிச்சல் அடைகிறார்கள்.

நடந்தே சென்ற கால கட்டங்களிலும், மிதிவண்டியில் சென்ற கால கட்டங்களிலும் அவைச் சோர்வையோ, சலிப்பையோ தந்ததில்லை. வேற்றூருக்குச் செல்கிறோம், விழாவுக்குச் செல்கிறோம் என்கிற சந்தோசத்தைத் தந்தது. கால் வலி பின்னி எடுக்க நடந்தோ அல்லது மிதிவண்டி மிதித்தோ செல்வதாக இருந்தாலும் எப்படா வீட்டை விட்டு வெளியே கிளம்புவோம் என்று இருக்கும். இன்று சோகுசாகப் பேருந்துகளில், இரு சக்கர வாகனங்களில், மகிழ்வுந்துகளில், விமானங்களில் செல்கிறோம். உடல் அலுப்பு ஏற்படாத வகையில் சொகுசான பயண வசதிகள் எத்தனையோ இருக்கின்றன. இருந்தாலும் பயணங்களில் எரிச்சலும், இன்னும் சீக்கிரம் போக முடியாதா என்ற விரக்தியும்தான் உண்டாகின்றன.

கடிதங்களில் தகவல் பரிமாற்றம் நடந்த காலங்களில் ஒரு தபால் போய் மறுதபால் வர ஒரு வாரத்திற்கு மேலாகும். அப்படி பதில் தபால் வரும் அந்த நாளானது அந்த நாளையே சொர்க்கபுரியாக மாற்றி விடும். கடிதத்தைத் திரும்ப திரும்ப படித்து, அதிலுள்ள வரிகளைத் திரும்ப திரும்ப சிலாகித்து, அக்கடிதத்தைப் பத்திரமாக எடுத்து வைத்துப் பாதுகாத்த கடிதம் தந்த குதூகலம் மறக்க முடியாது. இன்று வாட்ஸ்அப்பில், மின்னஞ்சலில் செய்தி அனுப்பி அடுத்த சில நிமிடங்களுக்குள் பதில் வந்து விடுகிறது. என்றாலும் அந்தப் பதிலோ சிலாகிப்போ, சந்தோசத்தேயோ தருவதற்குப் பதிலாக, மீண்டும் அடுத்த செய்தி, அடுத்த பதில் என்று சங்கிலித் தொடர் போலத் தொடர்ந்து கொண்டு இருக்கிறதே தவிர, சின்ன சிலிர்ப்பைக் கூட தருவதில்லை. சிலபல நேரங்களில் பதில் வரவில்லை என்றால் அலைபேசியையே தூக்கி உடைத்து விடும் அளவுக்குப் பொறுமையற்றவர்களாகவும் மாற்றிக் கொண்டிருக்கிறது.

என்னதான் நேர்ந்து கொண்டிருக்கிறது இந்த வாழ்க்கையில்? என்னதான் ஆகி விட்டது இந்த வாழ்க்கைக்கு? வாழ்க்கை வேகமாகப் போய்க் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டு, நாம் நிதானமாக வாழ்வதற்கு வெட்கப்படுகிறோம், பொறுமையோடு காத்திருப்பதைக் கேவலமாக நினைக்கிறோம்.

நிஜமாக வாழ்க்கைக்கு எதாவது ஆகி விட்டதா என்றால் அப்படியும் இல்லை. அது அதுவாகத்தான் இருக்கிறது. அதைப் பார்க்கும் மனதுதான் வேகமான தொனிக்குப் போய் விட்டது. அதை நிதானப்படுத்திக் கொள்வதும், பொறுமையாகப் போகப் பயிற்றுவித்துக் கொள்வதும் நம் கைகளில்தான் இருக்கிறது. வண்டியைச் செலுத்தும் போது லக்கான் அல்லது கட்டுபாடு நம் கைகளில்தான் இருக்கும். ஆம், அதை மனதின் போக்கிற்குச் செலுத்தாமல், பயணத்தின் நோக்கையும் சாலையின் போக்கையும் கொண்டு செலுத்துவது நம் கைகளில் நமது பொறுப்பில்தான் இருக்கிறது.

*****

16 Dec 2025

நீங்கள் டிஜிட்டல் அடிமையா?

நீங்கள் டிஜிட்டல் அடிமையா?

கொரோனா தந்த டிஜிட்டல் சாபம்!

கொரோனா உலகையே முடக்கியது. அந்த முடக்கத்தால் மக்கள் அங்கும் இங்கும் நகர முடியாத அமைதி நிலைக்குத் திரும்பினர், அவசர வாழ்க்கையை ஓரம் கட்டி விட்டு நிதானத்தை நோக்கி நகர்ந்தனர். சுற்றுச்சூழலும் மேம்பட்டது.

கொரோனாவைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுபடுத்தி அதை ஓரம் கட்டிய போது, மக்கள் மீண்டும் பழைய பாதைக்கே திரும்பினர். மக்கள் வேகமாக இயங்கத் தொடங்கினர். போக்குவரத்து முன்னை விட அசுரத்தனமாக இயங்கத் தொடங்கியது. கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தும் நிலையிலிருந்து நீங்கியிருந்தாலும், அது சில சாபங்களைக் கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறது. அதில் முதன்மையானதுதான் டிஜிட்டல் சாபம். மேலும் இந்தச் சாபத்தைக் கொரோனா தந்த தனிமையிலிருந்து தப்பிக்க, மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே சூன்யம் வைத்துக் கொண்டு, தாங்களே தேடிக் கொண்ட சாபம் என்றும் சொல்லலாம்.

கொரோனா காலம் மக்களைத் தனிமையில் தள்ளி அமைதியை வாரி வழங்கியதைப் போல, அதுவரை கண்டிராத ஓய்வையும் மக்களுக்கு வழங்கியது. அந்த ஓய்வின் வழியாகத்தான் கொரோனா தன்னுடைய சாபத்தையும் வாரி வழங்கியது.

கொரோனா கால ஓய்வை வாசிக்கவும், இயற்கையை நேசிக்கவும் பயன்படுத்திக் கொண்டவர்கள் சிலரே. பலரும் அந்தத் தனிமையை டிஜிட்டல் கருவிகளுக்குத் தங்களை அடிமையாக்கிக் கொள்ளவே பயன்படுத்திக் கொண்டனர்.

மக்கள் வீடுகளில் இயங்காமல் இருந்தார்களே தவிர, அவர்களின் வீடுகளில் கணினிகளும், தொலைக்காட்சிகளும், அலைபேசிகளும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருநதன. அவற்றின் வழியாக டிஜிட்டல் திரைகள் ஓய்வு ஒழிச்சல் இல்லாத மாபெரும் இயக்கங்களை மேற்கொண்டிருந்தன.

உடலோ, மனதோ எல்லாவற்றையும் ஓரளவுக்குத் தாங்கும். ஓரளவுக்கு மேல் என்றால் சோர்ந்து போய் தளர்ந்து விடும். சாதாரணமாகச் சோர்வோ, தளர்வோ வந்தால் மக்கள் ஓய்வெடுப்பர். ஆனால் இந்த டிஜிட்டல் விசயத்தில் அது அப்படியே நேர்மாறாக நடக்கும். எவ்வளவுதான் சோர்வு ஏற்பட்டாலும், கண்களும் உடலும் தளர்ந்தாலும், மனமே விட்டு விடு என கெஞ்சினாலும் டிஜிட்டல் திரைகளை விட்டு பார்வையை விட்டு அகற்ற மாட்டார்கள் மனிதர்கள்.

விளைவு இந்த தளர்ச்சியையும் அயற்சியையும் தாங்க உடலானது கார்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோனைச் சுரக்க ஆரம்பிக்கும்.

டிஜிட்டல் திரைகளிலிருந்து வரும் நீல நிற ஒளியானது தூக்கத்திற்குத் துணை நிற்கும் மெலடோனின் ஹார்மோன் சுரப்பதைத் தடை செய்யும்.

டிஜிட்டலில் மீளாது விழுந்து விடும் பார்வையின் காரணமாகக் கழுத்தும், முதுகும் நீண்ட நேரம் அப்படியே இருக்க முடியாமல் வலிகளைப் பிரசவிக்கத் தொடங்கும். அதையும் கண்டுகொள்ளாமல் தொடரும் போது, அது தேய்மானத்தைப் பரிசாகத் தரும்.

உடலோ அமைதியாக இருக்கும். ஆனால் மனமோ ஒரு போர்க்களத்தில் போராடுவது போல இருக்கும்.

டிஜிட்டல் திரைகளின் மாயம் அதுதான். டிஜிட்டல் திரைகளிலிருந்து உங்கள் பார்வையை விலக்கலாம் என்று நீங்கள் நினைக்க நினைக்க அதில் அதிகமாக ஆழ்ந்து கொண்டே போவீர்கள். இது எப்படி நடக்கிறது?

இங்குதான் டிஜிட்டல் திரைகளின் இயந்திர மொழிகள் (அல்காரிதம்கள்) வேலைசெய்கின்றன. உங்களைத் தொடர்ச்சியாகப் பார்க்க வைக்கும்படியான உங்களுக்கே உங்களுக்குப் பிடித்தமான திரைகளை அடுத்தடுத்து டிஜிட்டல் அல்காரிதம்கள் உருவாக்கிக் கொண்டே இருக்கும்.

நீங்கள் சில நாட்கள் டிஜிட்டல் திரைகளைப் பார்த்ததை வைத்தே உங்களுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது, உங்களுக்கு எதை காட்ட வேண்டும், எதைக் காட்டக் கூடாது என்று இயந்திர மொழியான அந்த அல்காரிதம் உங்களைப் பற்றி ஒரு கச்சிதமான கட்டமைப்பு மொழியை உருவாக்கி விடும். அதன் பிறகு நீங்கள் அதன் அடிமை, அது உங்களது எஜமானன்.

இந்தியாவில் ஒருவர் சராசரியாக 6 மணி நேரத்துக்கும் மேலாக டிஜிட்டல் திரைகளில் மூழ்கியிருக்கிறார் என்பது அதிர்ச்சியளிக்கக் கூடிய செய்தி. இது உலக அளவில் டிஜிட்டல் திரையில் மூழ்கியிருக்கும் ஒருவரின் சராசரியை விட அதிகம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

உலகில் அடிமைத்தனம் ஒழிந்துவிட்டது என்று சொன்னாலும், அது வேறு வடிவில் டிஜிட்டல் அடிமைத்தனமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கேற்ப டிஜிட்டல் திரைகள் மூலமாகப் பணம் சம்பாதிக்கும் பெருநிறுவனங்கள டிஜிட்டல் அடிமைகளை உருவாக்கும் வகையில் தங்கள் முதலாளித்துவ சாட்டையைச் சுழற்றிக் கொண்டிருக்கின்றன. விளைவு, சாட்டையடிகளை வாங்கிக் கொண்டு அது சுகமாக இருப்பதாகச் சொல்லும் டிஜிட்டல் அடிமைகளும் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.

ஓர் அடிமையின் துயரமான நிலைமை என்பது, தான் அடிமையாக இருக்கிறோம் என்பதை அந்த அடிமை உணராமல் இருப்பதுதான். டிஜிட்டல் அடிமைத்தனமும் இதற்கு விதி விலக்கல்ல.

இனி நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும், உங்கள் டிஜிட்டல் திரை உங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டுமா? அல்லது டிஜிட்டல் திரைக்கு நீங்கள் அடிமையாக இருக்கப் போகிறீர்களா?

*****