21 Dec 2025

இரண்டு கண்கள் இரண்டு பார்வை பார்க்க முடியுமா?

பல்டிக்கும் பச்சோந்திக்கும் உதாரண புருஷர்கள்!

உள்ளூர் அரசியல் பல்டிகள் ஒரு பக்கம் என்றால், உலக அரசியல் பல்டிகள் அதற்குக் கொஞ்சம் கூட குறைந்ததல்ல.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் என்ன சொல்கிறார் என்றால், இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால்தான் உக்ரைன் – ரஷ்ய போரை நிறுத்த முடியவில்லை என்கிறார்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் என்ன சொல்கிறார் என்றால், அமெரிக்கா தங்களிடமிருந்துதான் யுரேனியம் வாங்குகிறது என்கிறார்.

ரஷ்யாவிடமிருந்து இந்தியாவுக்கு வாங்கப்படும் கச்சா எண்ணெய் குறித்த புள்ளி விவரங்கள் என்ன சொல்கின்றன என்றால், சுத்தகரிக்கப்படும் பெரும்பகுதி கச்சா எண்ணெய் அமெரிக்காவுக்குத்தான் ஏற்றுமதி ஆகின்றன என்கின்றன.

டிரம்பின் பார்வைப்படி ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தவறு என்றால், ரஷ்யாவிடமிருந்து அமெரிக்கா யுரேனியம் வாங்குவது மட்டும் எப்படிச் சரியாகும்?

அத்துடன் இந்தியாவிலிருந்து சுத்தகரிக்கப்படும் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவதும் எப்படிப் பொருத்தமாகும்?

டிரம்ப் இப்படியெல்லாம் பேசுவதற்கான காரணங்களையும் அவரே சொல்கிறார். இது போன்ற காரணங்களையெல்லாம் கண்டறிந்து அந்நாடுகளுக்கு எதிராக வரி விதிப்பைக் கடுமையாக்கி உலக அமைதியை உருவாக்கப் போவதாகக் கூறுகிறார்.

இது போன்ற அவரது கற்பிதங்களால் இரண்டு நாடுகளுக்கு இடையே ஒரு போர் நிற்பதை விட, உலகப் போர் ஏதும் உருவாகி விடாமல் இருக்க வேண்டும். டிரம்பின் அடாவடி மற்றும் அதிரடிச் செயல்பாடுகள் உலக அளவிலான வர்த்தகப் போருக்கான முகாந்திரமாக இருக்கின்றன.

முன்பு தேர்தல் தோல்வியால் அமெரிக்க பாராளுமன்றத்தையே போர்க்களமாக்கியவர் உலகை எப்படி அமைதிப் பூங்காவாக ஆக்கப் போக்கிறார்? டிரம்புக்கு ஓர் எதிர்பார்ப்பும் இருக்கிறது. அது உலக அமைதிக்கான நோபல் பரிசு. அவர் போகிற போக்கைப் பார்த்தால் அமைதிக்கு எதிரான அதிரடி நோபல் பரிசைத்தான் கொடுக்க முடியும்.

டிரம்ப் உலக அமைதிக்கான நோபல் பரிசின் மீதும் ஒரு கண் வைத்துக் கொள்கிறார். இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது போர் தொடுத்ததிலும் இன்னொரு கண்ணை வைத்துக் கொண்டார். தற்போது வெனிசுலாவுக்கு எதிராக போர் தொடுப்பேன் என்று மறுகண்ணை மாற்றிக் கொண்டிருக்கிறார். டிரம்பின் ஒரு கண் அமைதியையும் மறுகண் போரையும் பார்க்கிறது. ஒரே நேரத்தில் இரு பார்வையைப் பறவைகள்தான் பார்க்க முடியும் என்கிறது அறிவியல். மனிதர்களும் அப்படி இரு பார்வையைப் பார்க்க முடியும் என்கிறது அரசியல்.

அது சரி, ஏன் டிரம்ப் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்?

பொதுவாக அரசியல்வாதிகளுக்கு ஒரு காரணம் தேவைப்படுகிறது. அது நியாயமான, தர்க்க ரீதியான காரணங்களாக இருக்க வேண்டும் என்றில்லை. அந்தக் காரணத்தால் காரியம் நடந்து, ஏதாவது நிகழ்ந்தால் அதை உஷ்ணமாக்குகிறார்கள். இல்லையென்றால் பல்டி அடிக்கவும் யோசிப்பதில்லை.

நிறம் மாறிக் கொள்வதில் பச்சோந்திக்கே பாடம் எடுக்கக் கூடியவர்களாக அரசியல்வாதிகள் மாறிக் கொண்டு வருவது அரசியலில் சாதாரணம் எனப்படுகிறது. அரசியலில் இந்தச் சாதாரணங்கள் மாறவே மாறாதா?

*****

No comments:

Post a Comment