30 Apr 2025

நடுக்கத்தின் இரு அத்தியாயங்கள்

நடுக்கத்தின் இரு அத்தியாயங்கள்

எதற்கும் கலங்காத

ஊர் நடுவே நின்ற பெருமரம்

இரண்டு முறை நடுங்கியது

புயல் காற்றைக் கண்டு

பயப்படாமல்

தொங்குமொரு

பறவைக் கூட்டை நினைத்து

ஒரு முறை நடுங்கியது

வேரோடு சாய்ந்தும்

சேதாரமின்றி

தொங்கும் கூட்டை நினைத்து

மற்றுமொரு முறை நடுங்கியது

அறுவை இயந்திரத்தின்

பற்சக்கரங்கள் பட்ட போது

*****

29 Apr 2025

இயற்கையின் இரண்டு செய்திகள்

இயற்கையின் இரண்டு செய்திகள்

1. திணிப்பது எடுபடாது

வாழ்க்கையில் அடக்குமுறைக்கு வேலை இல்லை. அடக்குமுறைக்கான அவசியம் ஏற்படுகிறது என்றால் அங்கு ஏதோ திணிக்கப்படுகிறது.

திணிக்கப்படுவதை யார்தான் விரும்புவார்கள்? எதிர்க்கவே செய்வார்கள். எதிர்ப்பை அடக்க வன்முறையைக் கையாள வேண்டியிருக்கும்.

ஒரு பெட்டியில் எவ்வளவு துணிகளை வைக்க முடியுமோ அவ்வளவே வைக்க முடியும். அதற்கு மேல் வைக்கப்பட்டால் பிதுங்கி வெளியே வந்து விழுந்து விடும்.

உயிருள்ளவை மட்டுமல்லாது உயிரற்றவையும் கூட அளவுக்கதிகமாகத் திணிக்கப்படுவதை விரும்புவதில்லை. அங்கே எவ்வளவு கொள்ளுமோ அவ்வளவே கொள்ளும். அதற்கு மேல் என்றால் வெளியே தள்ளவே செய்யும்.

குழந்தைகளுக்கும் இது பொருந்தும். அளவுக்கதிகமாகக் கற்க அவர்களை வற்புறுத்தக் கூடாது. அவர்களிடம் திணித்தலை மேற்கொள்ள முயற்சிக்கக் கூடாது.

குழந்தைகள் திணிப்பதை ஏற்றுக் கொள்ளாத போது அவர்களிடம் நாம் அடக்குமுறைகளைக் கையாள்வோம். அடக்குமுறை அதிகப்படியான எதிர்ப்புணர்வையே கொண்டு வருமே தவிர இணக்கத்தைக் கொண்டு வராது.

2. இயற்கையின் போஷாக்கை மனிதன் தர முடியாது

இவ்வளவு புற்களை, செடிகளை, கொடிகளை, மரங்களை, பறவைகளை, மீன்களை, விலங்குகளை ஏன் மனிதர்களை கூட இயற்கைதான் வளர்த்திருக்கிறது. அது இது எதற்காகவும் பெருமை கொண்டாடவில்லை. மனிதன் ஒரு கோழிப்பண்ணையை வைத்துக் கோழிகளை வளர்ப்பதற்கே பெருமை கொண்டாடுகிறான். ஒரு ‘மா’ நிலம் விவசாயம் செய்து விட்டு தன்னால் எவ்வளவு நெற்பயிர்கள் வளர்ந்திருக்கின்றன என்று மார் தட்டுகிறான். இவன்தான் என்னவோ மரங்களை நட்டு, காடுகளை வளர்ப்பது போலவும், சரணாலயங்களை அமைத்து விலங்குகளைப் பாதுகாப்பது போலவும் பேசுகிறான். மனிதர்களிடமிருந்து இவற்றைப் பாதுகாப்பதற்காகவே மனிதன் இவற்றைச் செய்கிறான். தன்னிடமிருந்து பாதுகாப்பதற்காகச் செய்யும் ஒன்றை என்னவோ அவற்றைப் பாதுகாப்பதற்காகச் செய்வதாகச் சொல்கிறான். அவனிடமிருந்து அவனைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே சண்டைகளைச் செய்வதாக, போர்களை முன்னின்று நடத்துவதாகச் சொல்கிறான். உண்மையைச் சொல்வதென்றால் மனிதர்களிடமிருந்து ஒவ்வொன்றையும் காப்பதற்காகவே மனிதன் போராடிக் கொண்டிருக்கிறான்.

******

28 Apr 2025

இயல்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா?

இயல்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா?

கிராமப்புறங்களில் ஒருவர் தனக்குத் தெரிந்த தொழிலை வைத்து வாழ முடியுமா?

முன்பு நிலைமை இப்படி இல்லை. ஆனால் முன்பிருந்த நிலைமை இப்போது இல்லை.

கிராமங்கள் தமது சுயசார்புகளை இழந்து விட்டு, நகரங்களைப் போல நுகர்வுத்தன்மைக்கு மாற்றியமைக்கப்பட்டு விட்டன.

ஒருவருக்கு அப்பளம் செய்யத் தெரிகிறது, வற்றல் போடத் தெரிகிறது என்றால் அதை வைத்து வாழ முடியுமா?

அவற்றைச் செய்து வாழ்வதில் என்ன பிரச்சனை என்று கேட்கலாம். பெருநிறுவனங்கள் என்று சொல்லப்படுகின்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிலும் போட்டி போடுகின்றன. அவற்றோடு போட்டிப் போட்டு ஒரு கிராமத்தவர் இதில் வெற்றி பெற முடியுமா என்ன?

கிராமப்புறங்களில் பிரமாதமாக முறுக்கு செய்வோரும் அதிரசம் செய்வோரும் இருக்கிறார்கள். அவர்களின் நிலையும் இதுதான். அவற்றைச் செய்து விற்றுப் பிழைக்க அவர்களால் முடியாது.

சாதாரண பெட்டிக் கடைகளில் நாட்டுப் பலகாரங்களை விட சுவையான நொறுக்குத் தீனிகள் பெருநிறுவனங்களால் தயார் செய்யப்பட்டு பொட்டலங்களில் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன.

பெட்டிக் கடைகளையே எடுத்துக் கொண்டாலும் அவற்றின் நிலையும் மோசமாக உள்ளன. பெரிய பெரிய மளிகைக் கடைகள், மால்கள் என்ற பெயரிலான வியாபார அமைப்புகள் சிறு சிறு வணிகக் கடைகளைக் கபளீகரம் செய்து வருகின்றன.

அனைத்து வகை உற்பத்திகளையும் வணிகங்களையும் பெருநிறுவனங்களின் போக்கிலும் கட்டுபாட்டிலும் விட்டு விட்டு அனைவரையும் நுகர்வோர் ஆக்கும் முயற்சியில் தெரிந்தும் தெரியாமலும் அரசாங்க மற்றும் நிர்வாக அமைப்புகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

இங்கு ஒருவர் ஒரு பைசா சம்பாதிக்கிறாரோ இல்லையோ, அவர் பத்து பைசாவுக்கு நுகர்வோர் ஆக இருக்கும் நிலைக்குக் கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கிறார்.

தற்போதைய நிலையில் உழைக்கிறோம், சம்பாதிக்கிறோம், வாழ்கிறோம் என்று இயல்பாக இருந்து விட முடியாது. உழைத்துச் சம்பாதிப்பதற்கும் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டாக வேண்டியிருக்கிறது. அந்தச் சம்பாத்தியமும் வாழ்க்கைக்குப் போதுமானதாக இருக்காது.

இது ஒரு பெருத்த முரண்பாட்டை இருத்தலுக்கும் பிழைத்தலுக்கும் இடையே ஏற்படுத்தி விடுகிறது. இயல்பாக வாழ்வதில் பல முட்டுக்கட்டுகளை உண்டாக்கி விடுகிறது. போராடி வாழ்வதே சாத்தியம் என்ற நிலையை உருவாக்கி விடுகிறது. இது மனிதர்களை இயல்பாக இருப்பதா, போராட்டத்தோடு வாழ்வை எதிர்கொள்வதா என்ற இருபக்க பேரிடியை எதிர்கொள்ள வைத்து விடுகிறது.

சம்பாத்தியமும் அச்சம்பாத்தியத்துக்கான பெரும் போராட்டமும் இல்லையென்றால் வாழ்க்கை இல்லை என்றாகி விடுகிறது. விளைவு மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே வாழ்க்கையிலிருந்து அந்நியப்பட்டுப் போகிறார்கள்.

பெரும் போராட்டம் இல்லாத இயல்பான இருத்தலுக்கான வாய்ப்புகளும் இந்தப் பூமியில் இருக்க வேண்டும். இதற்கான நெறிகளையும் கட்டுப்பாடுகளையும் வகுத்துக் காப்பது அரசாங்கத்திடம்தான் இருக்கிறது. மக்களுக்குப் பொறுப்பான அரசாங்கங்கள் இதில் கவனம் எடுத்துக் கொண்டு ஆவன செய்ய வேண்டியது அவசியமாகும்.

ஒருவர் உயிர் வாழ்வதற்கான சம்பாத்தியத்தை உழைத்துப் பெறுவதற்கான தேவையான வாய்ப்புகள் எப்போதும் எங்கும் இருக்க வேண்டும்.

*****

27 Apr 2025

குழந்தைகளின் உணவு ஆசைகளை நிறைவேற்றுவது நல்லதா?

குழந்தைகளின் உணவு ஆசைகளை நிறைவேற்றுவது நல்லதா?

ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்றார் புத்தர்.

குழந்தைகளின் உணவு ஆசைக்கு இது ரொம்பவே பொருந்திப் போகும் போலிருக்கிறது.

இந்தத் தலைமுறைக் குழந்தைகள் கடந்த தலைமுறைக் குழந்தைகளைப் போல இல்லை. தங்களுக்கு விருப்பமானதை அவர்களே தேர்ந்தெடுக்கிறார்கள். இந்தத் தலைமுறை பெற்றோர்களும் கடந்த தலைமுறை பெற்றோர்களைப் போல இல்லை. குழந்தைகளின் விருப்பங்களுக்கும் ஆசைகளுக்கும் எவ்வித தடையும் போடாமல் தங்கள் சக்திக்கு மீறியும் நிறைவேற்றுகிறார்கள்.

குழந்தைகளின் சுதந்திரமும் குழந்தைகளுக்கான உரிமைகளும் முக்கியமானவை என்றாலும் அவர்களுக்குத் தாங்கள் தேர்ந்தெடுப்பது குறித்த அறிவும் விழிப்புணர்வும் இருக்குமா? குறிப்பாக உணவை எடுத்துக் கொண்டால் அவர்களின் தேர்வும் சுதந்திரமும் நொறுக்குத் தீனிகளாகவே இருக்கின்றன. பொட்டலங்களில் அடைக்கப்பட்ட உணவுகளையும் பலவித வண்ணங்களில் கவர்ச்சிகரமான தோற்றத்தோடு மிகு சுவை தரும் உணவுகளையுமே அவர்கள் நாடுகிறார்கள்.

இன்றைய தலைமுறையில் புரோட்டா என்ற உணவே மறைந்து போய் அது சில்லி புரோட்டா, கொத்து பரோட்டா, ஆலு பரோட்டா, முட்டை பரோட்டா, மலபார் பரோட்டா, சிலோன் பரோட்டா, வீச்சு பரோட்டா, லாப்பா பரோட்டா பல புதுப்புது அவதாரங்களை எடுத்து விட்டது. உணவகம் ஒன்றில் அமர்ந்து இரண்டு பரோட்டா கேட்டால் நீங்கள் காலவதியாகி விட்ட மனிதர்களாகக் கருதப்படுவீர்கள். ஆனால் புரோட்டா என்பதே உடல்நலத்துக்கு உவப்பான உணவா என்ன?

புரோட்டாவுக்கே இவ்வளவு அவதாரங்கள் இருக்கும் போது, பிரியாணிக்குக் கேட்க வேண்டுமா? ஒவ்வொரு ஊர் பெயரிலும் இருக்கும் பிரியாணி போதாது என்று தலைப்பாக்கட்டில் தொடங்கி மட்பாண்டத்தில் தொடர்ந்து வாளி (பக்கெட்) வரை பல்வேறு பெயர்களில் நாளுக்கொரு பிரியாணி வகைக் கண்டுபிடிக்கப்பட்டு நெகிழி (பிளாஸ்டிக்) டப்பாக்களில் அடைபட்டு வருகிறது.

கோழிக்கறியானது சிக்கன் 65, சில்லி சிக்கன், ஷவர்மா என்று பல்வேறு பெயர்களில் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டு இருக்கிறது.

எண்ணெய்ப் பதார்த்தங்களின் வடிவங்களைக் கணக்கிடவே முடியாத அளவுக்கு நுண்ணுயிரிகளின் பெருக்கத்தையும் விஞ்சும் வகையில் புதுப்புது பதார்த்தங்கள் உருவாகிக் கொண்டு இருக்கின்றன.

உணவகங்களில் இட்டிலி, தோசை, பொங்கல், பூரி, அடை போன்ற உணவு வகைகள் காலத்தால் பின்தங்கிய உணவு வடிவங்களாகக் கருதப்பட்டு நூடுல்ஸ், மஞ்சூரியா, பர்கர், பீட்சா, பாவ்பாஜ் என்று இன்னும் என்னனென்னவோ பெயர்களில் பல்வேறு துரித உணவு வகைகள் உணவகங்களை ஆட்கொண்டிருக்கின்றன, குழந்தைகளை ஆட்டுவித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த உணவு வகைகள் குழந்தைகளை என்ன செய்யும் என்று அவர்களுக்குத் தெரியுமா? அவர்களின் விருப்பங்களையும் ஆசைகளையும், அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்ற வேட்கையை மட்டும் கருத்தில் கொண்டு இவ்வுணவு வகைகளைத் தொடர்ச்சியாக வாங்கிக் கொடுத்தால் குழந்தைகளின் உடல் அவற்றைத் தாங்குமா?

குழந்தைகள் இவ்வகை உணவு வகைகளின் ருசிகளில் மயங்குகிறார்கள். இவ்வித ருசியிலேயே காலை உணவு, மதிய உணவு, மாலை உணவு, இரவு உணவு என்ற அனைத்து உணவுகளையும் வேண்டி என்று அடம் பிடிக்கிறார்கள்.

அப்படிப்பட்ட ருசி வடிவில் கிடைக்காத போது காலை உணவை, மாலை உணவை, மதிய உணவை, இரவு உணவைத் தவிர்க்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். விளைவு துரித உணவை மட்டும் உண்டு வாழும் குழந்தைகள் இன்று உருவாகியிருக்கிறார்களா, உருவாக்கப்பட்டிருக்கிறார்களா என்பது சிந்தனைக்குரிய வினாவாக மாறியிருக்கிறது.

இதன் விளைவுகள் எப்படி இருக்கிறது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வந்த மாரடைப்பு இன்று குழந்தைகளைத் தாக்குகிறது. அறுபது வயதுக்கு மேல் ஏற்படும் சிறுநீரகக் கோளாறுகள் இன்று குழந்தைகளுக்கு உண்டாகின்றன.

உடல்பருமன், சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு போன்றவை நடுத்தர வயதுக்குப் பிறகே ஏற்படும் என்ற நிலை மாறி இன்று குழந்தைகள் பலர் இந்நோய்களால் அவதிப்படுகிறார்கள்.

அநேகமாகக் குழந்தைகளுக்கான உணவில் நாம் பாட்டிமார்களைப் போல மீண்டும் அக்கறை காட்ட வேண்டிய காலம் உருவாகி விட்டதோ?

உணவு வகைகளில் குழந்தைகளின் விருப்பங்களும் சுதந்திரங்களுக்கும் நாம் ஒரு கட்டுப்பாட்டையும் எல்லைக்கோட்டையும் நிர்ணயிக்க வேண்டிய நிலைக்கு வந்து விட்டோமோ?

குழந்தைகளுக்கு நாம் அவர்கள் உண்ணும் உணவு குறித்த உண்மைகளையும்,  அறிவையும், விழிப்புணர்வையும் சிறிது சிறிதாக உணவை ஊட்டுவதைப் போல ஊட்ட வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோமோ?

நாம் இது குறித்து யோசிக்கத்தான் வேண்டும்.

இது குறித்து நாம் இந்தத் தலைமுறையில் யோசிக்கவில்லை என்றால், இதுவே தலைமுறைகளின் தொடரும் பிரச்சனையாகவும் மாறி விடலாம்.

என்ன செய்யப் போகிறோம் நாம்?

*****

26 Apr 2025

கடனில் புகா மனை!

கடனில் புகா மனை!

பல நேரங்களில் சட்டென்று ஓர் அறிவுரையை வழங்கிட துடிப்பதில் மனதைப் போன்ற ஒரு போதை மிருகத்தை இந்த உலகத்தில் வேறெங்கும் பார்க்க முடியாது. பொதுவாக இந்த வியாதியால் மனிதர்கள் பலரும் அவதிப்படுகிறார்கள். அதுவும் பாடம் சொல்லிக் கொடுக்கும் பணியில் இருப்போருக்கு இந்த வியாதி கூடுதலாகவே இருக்கும். அதிகப்படியாக இருக்கும் என்று சொன்னாலும் மிகையில்லை.

ஓர் அறிவுரையை வழங்குவது மிகவும் சுலபமானது. ஆனால் அந்த அறிவுரை வழங்கப்பட வேண்டுமா, வேண்டாமா என்பதுதான் எப்போதும் ஆய்வுக்குரிய ஒன்று.

என்னுடைய நண்பர்களில் ஒருவர் வீடு வாங்கி விட்டார். அது சரியா, தவறா என்பது குறித்த என்னுடைய கருத்தை அறிய விரும்பினார். அது நிச்சயம் அறிவுரை சொல்வதற்கான நேரமில்லை என்பது எனக்குப் புரிந்தது. எனக்கும் அறிவுரை சொல்வதில் இருந்த ஆர்வமெல்லாம் வடிந்து ஆண்டுகள் பலவாகி விட்டன.

வீட்டை வாங்கியாயிற்று. ஒரு சம்பவம் நடந்தேறி விட்டது மீண்டும் திருத்திக் கொள்ள வாய்ப்பில்லாத வகையில். நான் அவரிடம் அவரது முடிவு சரியானது என்றுதான் கூறினேன். ஆனால் எனக்கு இது உடன்பாடான முடிவன்று. என்னைப் பொருத்த வரையில் அந்த நேரத்தில் அவர் வீடு வாங்கியது மிக மிக தவறான முடிவு. அதை நான் சொல்லியிருந்தால் என்னை அவருடைய எதிரிகளின் பட்டியலில் சேர்த்துக் கொள்ள அவருக்குச் சில நொடிகள் கூட ஆகியிருக்காது. இப்போது அவரது முடிவு தவறானதாக இருந்தாலும், நீண்ட கால நோக்கில் அது சரியான முடிவாக மாறவும் வாய்ப்பிருக்கிறது.

அப்படியானால் இங்கு என்னதான் தவறு நேர்ந்திருக்கிறது? அவரிடம் வீட்டை வாங்குவதற்கான பணம் ஒரு சதவீதம் கூட அவர் கையில் இல்லை என்பதுதான் எனக்குத் தவறாகப் பட்டது. எல்லாமே கடன். எல்லாரும் அப்படித்தானே வாங்குகிறார்கள் என்பதால் அதிலொன்றும் தவறில்லை என்று கூட நீங்கள் நினைக்கலாம். அப்படி நீங்கள் நினைப்பதையும் தவறென்று சொல்லி விட முடியாது.

ஆனால் அவருக்கு ஏற்கனவே பலவித கடன்கள் எட்டு திசைகளிலும் இருந்தன. அதற்கான அத்தனை தவணைகளையும் கட்டிக் கொண்டு அவர் தடுமாறிக் கொண்டிருந்தார். தற்போது வீட்டை வாங்குவதற்கான கடனையும் அவர் சேர்த்துக் கொண்டார். இந்த நிலைதான் நான் தவறென்று சொல்வதற்குக் காரணம்.

அநேகமாக அவர் வீட்டை வாங்குவதற்கு முன் இந்த யோசனையைக் கேட்டிருந்தால், நான் நிச்சயம் அந்த யோசனையைக் கைவிடுவதே தற்சமயம் உசிதமாக இருந்திருக்கும் என்று கூறியிருப்பேன். ஆனால் அவரோ வீட்டையெல்லாம் வாங்கி முடித்து விட்டு, புதுமனை புகுவிழாவையும் முடித்து விட்டு, ஆர அமர அது குறித்த அபிப்ராயத்தை கேட்டார். இனி நான் எந்த அபிப்ராயத்தைக் கூறியிருந்தாலும் அதனால் அவருக்கு எந்தப் பிரயோசனமும் ஏற்படப் போவதில்லை. அவர் அவருக்கு இருந்த கடன்தொகையோடு வீட்டுக்கடனையும் இனி சுமந்துதான் ஆக வேண்டும்.

அவர் 40 லட்ச மதிப்பீட்டில் அந்த வீட்டை வாங்கியிருந்தார். அவரது நிரந்தரப் பணி மற்றும் மாதாந்திர ஊதியத்தில் நம்பிக்கை வைத்து வங்கி அவ்வளவு பெரிய கடன் தொகையை அவருக்கு வழங்கியிருந்தது.

நண்பர் 40 லட்சம் கடன் தொகையைக் கட்டி முடிப்பதற்குள் 60 லட்ச ரூபாயைக் கட்ட வேண்டியிருக்கும். அதை விட கூடுதலாகவும் அவர் கட்ட வேண்டியிருக்கலாம். எப்படியும் 20 லட்சத்துக்கு மேல் 20 ஆண்டுகளில் அவர் கடனைக் கட்டி முடிப்பதற்குள் வட்டியாக அவர் செலுத்த வேண்டியிருக்கும். அதாவது வருடத்துக்கு ஒரு லட்சமோ அல்லது அதற்கு மேலோ அவர் வட்டியாகச் செலுத்த வேண்டியிருக்கும். இத்துடன் அசல் தொகையையும் அவர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்படித்தான் நண்பரின் வீடு வாங்கிய விசயத்தில் அறிவுரை என்றில்லை, அபிப்ராயம் கூறுவதில் கூட அர்த்தமில்லை என்று உணர்ந்த பின்பு, அவர் ஏன் வீடு வாங்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் என்பதை விசாரித்தேன்.

உறவினர்கள் மத்தியில் அவருடைய நிலை தாழ்ந்து போயிருந்ததாகவும், அதை மீட்கவே வீடு வாங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார். உண்மையில் அவருடைய பொருளாதார நிலை அதல பாதாளத்திற்கு வீழ்ந்திருப்பதை அவர் நினைத்துப் பார்க்கவே இல்லை. வீட்டை வாங்கியதால் உறவினர்கள் மத்தியில் அவருடைய நிலை உயர்ந்திருப்பதையே பெருமிதமாகக் கூறிக் கொண்டிருந்தார். ஒரு பெருமிதத்தின் விலை 20 லட்ச ரூபாய்க்கு மேலான வட்டித்தொகை என்பது எனக்கு அநியாயமாகவே தெரிந்தது.

அவரிடம் நான் இன்னொன்றையும் கேட்டேன். நீங்கள் வீடு வாங்குவதற்கு முன் என்னிடம் அது குறித்துக் கேட்டிருக்கலாமே என்றேன். அப்படியெல்லாம் சொல்லி விட்டுச் செய்தால் எந்தக் காரியமும் நடக்காது என்றார் அவர். அத்துடன் அவர் விட்டிருக்கலாம். அவர் கூடுதலாக இன்னொன்றும் சொன்னார். இந்த விசயம் குறித்து என்னிடம் அவர் முன்பே கூறியிருந்தால், நான் அவர் மீது பொறாமை பட்டிருப்பேன் என்றார். அப்படியானால் அவர் ஏன் என்னிடம் வீடு வாங்கியது குறித்து அபிப்ராயம் கேட்க வேண்டும்? இப்போது மட்டும் நான் பொறாமைபட மாட்டேனா என்ன?

நான் பொறாமைப்படுவேன் என்றால் இப்போது மட்டும் ஏன் என்னிடம் கருத்துக் கேட்கிறீர்கள் என்பதையும் நான் விட்டு விடாமல் கேட்டேன்.

இப்போது எப்படிச் சமாளிக்கப் போகிறேன்? மாதா மாதம் எப்படிக் குடும்பத்தை நடத்தப் போகிறேன்? என்கிற பயம் வந்துவிட்டதாகக் கூறினார் நண்பர். அந்தப் பயத்தைப் போக்கிக் கொள்ள என்னுடைய கருத்து உதவும் என்றார் அவர்.

அதுதான் எப்படி என்றேன் நான்.

நான் எதையும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் சரியாகத்தான் சொல்வேன் என்பதால் நானே சரியானதென்று சொல்லி விட்டதால் சரியான ஒன்றுக்காகக் கஷ்டப்படுவதில் தவறில்லை என்று தான் ஆறுதல் கொண்டு விட்டதாக அதற்கும் ஒரு பதில் சொன்னார் நண்பர்.

அவரைப் பார்க்க இப்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் தயவு தாட்சண்யம் பார்க்காமல் சரியான பதிலைச் சொல்வேன் என்று நம்பும் அவர், மற்றவர்களின் மனம் நோகக் கூடாது என்பதிலும் கவனமாக இருப்பேன் என்பதை எப்படி மறந்து போனார்?

நீங்கள் என்னைத் தவறான பக்கம் இருந்து வாக்களித்து விட்டதாக நினைக்கக் கூடும். ஆனாலும் நீண்ட கால நோக்கில் அவர் வாங்கிய வீடு அவருக்கு லாபகரமாகவும் அமையலாம் என்பதை நான் முன்பே சொல்லி இருக்கிறேன். ஆனால் அது குறித்து எனக்கு நிச்சயமாக எதுவும் தெரியாது.

அப்படியானால் வீட்டைப் பற்றி நான் என்ன சொல்ல வருகிறேன் என்று நீங்கள் கேட்கலாம். வீடு எப்போதும் உங்களை வீட்டுக்குள் முடக்குகிறது.

அப்படியானால் வீட்டைக் கட்டவோ, வாங்கவோ கூடாதா என்றால், அதை ஏன் கட்டாமலோ, வாங்காமலோ இருக்க வேண்டும்? உங்களிடம் 80 லட்சம் இருக்குமானால் நீங்கள் ஏன் 40 லட்சத்துக்கு ஒரு வீட்டைக் கட்டிக் கொள்ளவோ, ஒரு வீட்டை வாங்கிக் கொள்ளவோ கூடாது?

எதையும் வாங்குவதற்கோ, செய்வதற்கோ எதிரியாக நீங்கள் என்னை நினைத்து விடக் கூடாது. கடனில் வாங்குவதோ, கடன் வாங்கிச் செய்வதோ தேவையா என்பதுதான் நாம் இங்கே எழுப்பிக் கொண்டு விடை காண வேண்டிய முக்கியமான கேள்வி.

*****

24 Apr 2025

வைக்கோலை ஏன் ஏரிக்க வேண்டும்?

வைக்கோலை ஏன் ஏரிக்க வேண்டும்?

கால் நூற்றாண்டுக்கு முன்பு அதாவது இரண்டாயிரமாவது ஆண்டுகளிலிருந்து நெல்லறுத்த பின் வைக்கோலை வீட்டுக்குக் கொண்டு வரும் வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது.

அறுவடை களங்கள் அப்போது பெரும்பாலும் போக்குவரத்துக்குப் பயன்படுத்தும் சாலைகளாகவே இருந்தன. விவசாய களங்கள் அனைத்தும் வயல்களாக வெட்டிக் கரைக்கப்பட்டிருந்தன. சாலையோரங்கள் வைக்கோல்போர்களுக்கான களங்களாக மாறத் துவங்கின. சில இடங்களில் மதில்கள் போலவும், சில இடங்களில் கிழக்குத் தொடர்ச்சி மலையின் தொடர்ச்சியற்ற குன்றுகள் போலவும் சாலையோரங்கள் வைக்கோல் போர்களால் நிரம்பிக் கிடந்தன.

பல நேரங்களில் காடு தீ பிடித்து எரிவது போல வைக்கோல் போர்கள் எரிந்து கொண்டிருந்தன. எரிவதால் உண்டான புகைச்சல் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்குக் கண் எரிச்சலை ஏற்படுத்தின.

இப்போது அறுவடை இயந்திரங்கள் வந்து விட்ட பிறகு காட்சிகள் மாறி விட்டன. புல்லைத் தின்று விட்டு சாணியைப் போடும் மாடுகள் இல்லாத குறையைப் போக்கும் வகையில் அறுவடை இயந்திரங்கள் நெல்லைச் சேகரித்துக் கொண்டு வைக்கோலை வயலிலே போட்டு விட்டுச் செல்கின்றன.

வைக்கோலைத் திரட்டிக் கட்டுகளாகக் கட்டும் இயந்திரங்களும் வந்து விட்டன. கட்டுகளாகக் கட்டிய பின்பும் வயல்வெளிகளில், வாய்க்கால் ஓரங்களில் அனாதைகளாய்க் கைவிடப்பட்ட வைக்கோல்போர்களைப் பார்க்க முடிகின்றது.

ஏன் இந்த நிலை? வைக்கோலைத் தின்பதற்கான மாடுகள் இன்று விவசாயிகளின் வீடுகளில் இல்லை. வைக்கோலை விலை கொடுத்து வாங்குவதற்கான ஆட்களும் இங்கு இல்லை. இங்கிருக்கும் வீடுகளில் இருக்கும் டிராக்டர்களும் குபேட்டாக்களும் வைக்கோலைத் தின்ன மறுத்து, டீசலையே உணவாகக் கேட்கின்றன. டீசலுக்கு இருக்கும் விற்பனை மவுசு வைக்கோலுக்கு இல்லை.

வைக்கோலைக் கட்டுக் கட்டி கட்டுபடியாகும் விலைக்கு விற்பதற்கான விற்பனை விலை கைகூடும் அதிர்ஷ்டம் இன்னும் வைக்கோலுக்குக் கிடைக்கவில்லை. கட்டாகக் கட்டப்பட்டு எரிந்து வீணாகும் வைக்கோல் ஒரு பக்கம் என்றால், வயலில் கிடக்கும் வைக்கோலை அப்புறப்படுத்த ஆகும் செலவுக்கு யோசித்துக் கொண்டு வயலிலேயே எரிக்கப்பட்டு வீணாகும் வைக்கோல் மறுபக்கம். எரியும் வைக்கோலை விவசாயிகளின் வயிற்றெரிச்சலின் வடிவங்களாகப் பார்ப்பதா என்ன?

தொழில்நுட்ப வளர்ச்சியின் பின்னணியில் நகர்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை முறை விவசாய விளைபொருட்களின் விலைகளை அடிமாட்டு விலைக்கு வீழ்த்தி விட்டன. மாடுகளும் அடிமாடுகளாகி விட்டன, விவசாயிகளின் வாழ்க்கையும் அடிமட்ட நிலைக்குப் போய் விட்டது.

இன்றைய வயல்களில் டீசலோ, பெட்ரோலோ கிடைக்கும் நிலை இருந்தால் விவசாயிகளின் வாழ்க்கை செழிப்பாக இருக்கும். வயல்களில் மின்சார உற்பத்தி செய்ய முடிந்தாலும் வாழ்க்கை செழிப்பாக இருக்கும். கிராமத்து நிலங்கள் இதற்கு மேல் வீட்டுமனைகளாக்க முடியாது என்ற சாபக்கேட்டின் எச்சத்தில் மீந்து கிடக்கின்றன.

மனிதர்களின் வயிற்றுப் பசிக்கு அரிசி தேவையில்லை என்றால் அது கூட வைக்கோலைப் போலத்தான் வீணாகும்.

வைக்கோலை எரித்து வீணாக்க வேண்டியதில்லை. வைக்கோலானது மாடுகளின் உணவாகி பின் சாண வடிவில் எருவாகா விட்டாலும், வயலை வைக்கோலோடு உழுவதாலும் அது எருவாகவே கூடும்.

மண்ணில் மட்கும் அனைத்துப் பொருட்களும் மண்ணுக்கு உரமே என்பதால் வைக்கோலை எரித்து வீணாக்காமல் மட்கச் செய்து பயனுள்ளதாக்கலாம். மட்க வாய்ப்புள்ள வைக்கோலை ஏன் எரிக்க வேண்டும்? வாழ்க்கையில் நாம் எரிப்பது போதாதா என்ன?

*****

23 Apr 2025

ஒற்றைக்கை மாடன்

ஒற்றைக்கை மாடன்

சிதறிக் கிடக்கும் குஸ்கா துணுக்குகளைக்

கொத்தித் தின்று விட்டு

தலைக்கு மேல் பறந்து

பரட்பரட்டென்று

எச்சமிட்டுப் போனது

பருந்துக்குப் பயந்து பயந்து பறக்கும்

ஊர்க்குருவி!

கடந்து போன

எத்தனையோ பேரை

ரத்தவாந்தி எடுக்க வைத்து

மிரட்டிய சம்பவங்கள் எல்லாம் மறந்து

தன் கீழ் அமர்ந்து

தனக்குப் படையல் போட கூட

மனமில்லாமல்

பருகிக் கொண்டிருக்கும்

டாடா சுமோவில் வந்திறங்கிய

டாஸ்மாக் பிரியர்களைக்

கடைவாய் எச்சில் ஒழுக

ஏக்கமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறது

உடைந்து போன ஒற்றைக் கையுடன்

வெறும் சிலையாகவே மாறி விட்ட மாடன்

******

22 Apr 2025

கருவிகளும் தொழில்நுட்பங்களும் நம் நேரத்தை மிச்சப்படுத்தி இருக்கின்றனவா?

கருவிகளும் தொழில்நுட்பங்களும் நம் நேரத்தை மிச்சப்படுத்தி இருக்கின்றனவா?

நம்முடைய நேரத்தை மிச்சப்படுத்தும் என்று சொன்ன கருவிகளும் தொழில்நுட்பங்களும் நம்முடைய நேரத்தை மிக அதிகமாகவே விழுங்கிக் கொண்டிருக்கின்றன.

நாம் நினைப்பது போல கருவிகளும் தொழில்நுட்பங்களும் நம் தனிமனித வாழ்க்கையை எளிதாக்கவில்லை. மேலும் சிக்கலாக்கிக் கொண்டே போகின்றன. ஒவ்வொரு தொழில்நுட்பத்துக்கும் நாம் செலவழித்துக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. அதற்குச் செலவழிப்பதற்காக நேரம் காலம் பாராமல் உழைத்துக் கொண்டே, சம்பாதித்துக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. இப்படியாக உறவுகளுக்கு, நட்புகளுக்கு, சுற்றங்களுக்கு, பொழுதுபோக்குகளுக்கு என ஒதுக்கப்பட வேண்டிய நேரம் உறிஞ்சப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இன்னொரு வகையில் இந்தக் கருவிகளும் தொழில்நுட்பங்களும் மிகப் பெரிய சுற்றுச்சூழல் மாசுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஒரு வகையில் நம் நாட்டில் நன்கு தொழில்நுட்பம் கற்றவர்களும், கருவிகளை வெகு திறமையாகக் கையாளத் தெரிந்தவர்களும் வெளிநாடுகளுக்கு ஓடி போனது நல்லதாகப் போயிற்று. அவர்கள் அத்தனை பேரும் நம் நாட்டில் இருந்து அத்தனைக் கருவிகளையும் தொழில்நுட்பங்களையும் பரப்பி இருந்தால் நம் நாடு உலகின் முதன்மையான குப்பை மேடாக ஆகி இருக்கும். அப்படிப்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு ஓடிப் போன பிறகும் நம் நாடு உலகின் முதன்மையான குப்பைத்தொட்டியாக மாறிக் கொண்டிருப்பது நம்முடைய கருவிகளின் நுகர்வு அடிமைத்தனத்தைக் காட்டுகிறது.

ஆக வாழ்க்கையில் நாம் எந்த அளவுக்குக் கருவிகளையும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு ஓர் அளவு இருக்கிறது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமே விஷமாகும் போது இந்தக் கருவிகளும் தொழில்நுட்பங்களும் எம்மாத்திரம்.

அளவறிந்து கருவிகளையும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தும் போது மட்டுமே அவை நம்முடைய நேரத்தை மிச்சப்படுத்தும். அளவுக்கு மிஞ்சும் போது அவை நம்முடைய நேரத்தை நமக்குத் தெரியாமலேயே உறிஞ்சிக் கொண்டிருக்கும்.

*****

19 Apr 2025

நோயும் வாழ்க்கையும்

நோயும் வாழ்க்கையும்

நோயோடு மனிதன் வாழ முடியாது. அதற்காக நோயைப் போக்குகிற முயற்சியில் தலைவலி போய் திருகுவலி வந்து விடக் கூடாது.

இன்றைய சூழலில் மருத்துவமும் மருந்தும் நோயை விட அச்சுறுத்தலாக உள்ளன. மருந்துகளோடும் மருத்துவத்தோடும் போராடுவதை விட நோயோடு போராடுவது அல்லது அந்நோயை ஏற்றுக் கொள்வதே மேலானதாகத் தோன்றுகிறது.

பெரும்பாலான நோய்கள் மருந்துகளுக்கான நோய்களாக இல்லை. வாழ்க்கை முறையால் வாங்கி வந்த நோய்களாக உள்ளன.

வாழ்க்கை முறை பழகிய ஒன்றாக உள்ளது. சில பல சூழ்நிலைகளில் அப்படித்தான் வாழ வேண்டும் என்கிற நெருக்கடியை உருவாக்குவதாகவும் உள்ளது.

மனிதன் புத்திசாலித்தனமாகச் சிந்தித்து அதிலிருந்து தப்பி வர வேண்டியதாக இருக்கிறது. தப்பி வந்து சிறிது காலம் சிரமப்பட்டு பழக்க வழக்கங்களைச் சரியானபடி மாற்றிக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் மருந்து தேவைப்படும் நோய்கள் குறைவே. வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றமே பல நோய்களையும் அதற்கான மருந்துகளையும் குறைத்து விடும். இதில் தயக்கமோ, பயமோ ஏற்பட்டால் மருந்துகளையே உணவாக ஆக்கிக் கொண்டு விடும் ஒரு வாழ்க்கை முறையை வாழ நேரிடும்.

உணவை உண்டதும் தாம்பூலம் தரித்துக் கொள்வதைப் போல மருந்துகளைத் தரித்துக் கொள்வதோ, வெற்றிலைச் செல்லத்தைப் போல மாத்திரைச் செல்லத்தை எடுத்துக் கொண்டு போவதோ நாம் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை முறையிலேயே இருக்கிறது.

*****

18 Apr 2025

ஆயுள் பேறு

ஆயுள் பேறு

எட்டாம் இடத்தில்

இருப்பது என்னவோ

பட்டாம் பூச்சியினும்

ஈசல்களினும் ஆயுள் குறைவு

ஒரு நொடியோ

இரு நோடியோ

சில நோடிகளோ

காற்றும் நீரும்

கலந்து விளையாடும் போது

உருவாகி உருவாகி

உடைந்து உதிரும்

ஆயுட் காப்பீட்டுக்கு உள்ளாகாத

மருத்துவக் காப்பீட்டுக்கு மட்டுப்படாத

நீர்க்குமிழ்கள்

நின்று பார்க்க வைத்துச் சொல்கின்றன

காலம் என்பது கடத்துவதில் இல்லை

ஆயுள் என்பது நீள்வதில் இல்லை

*****

17 Apr 2025

மூன்றாம் உலகப்போர் மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்குமா?

மூன்றாம் உலகப்போர் மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்குமா?

மனிதர்களால் இயந்திரங்களோடு போட்டி போட முடியுமா?

மனிதர்களே இயந்திரங்களாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று நாம் வேடிக்கையாகச் சொன்னாலும் சரிதான், உண்மையே அதுதான் என்று அழுத்தமாகச் சொன்னாலும் சரிதான், மனிதர்களால் இயந்திரங்களால் போட்டி போட முடியாது என்பதுதான் எதார்த்தம்.

இயந்திரங்களுடனான மனிதர்களின் தோல்வியை ஒத்துக் கொள்வதுதான் மனித குலத்திற்கு உள்ள ஒரே வாய்ப்பு. உதாரணத்துக்கு கணினியிலோ அல்லது அலைபேசியிலோ இருக்கும் சதுரங்கச் செயலியின் அதிகபட்ச கடின நிலையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு விளையாடிப் பாருங்கள். நிச்சயம் அதுதான் வெற்றி பெறும். நீங்கள் விஸ்வநாதன் ஆனந்தையோ அல்லது பிரக்ஞானந்தாவையோ விளையாடச் சொன்னாலும அதுதான் நடக்கும். இயந்திரங்களோடு போட்டியிடும் போது மனிதர்கள் தங்கள் தோல்வியை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.

மனிதர்களால் சாதிக்க முடியாத பலவற்றை இயந்திரங்கள் சாதிக்கின்றன. ஆழ்கடலுக்குள் மனிதர்களை அனுப்புவது உசிதம் இல்லாமல் போனாலும் இயந்திரங்களை அனுப்பலாம். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதை விட இயந்திரங்களை அனுப்பி அற்புதமாக உலவ விடலாம். அணுக்கதிர் வீச்சு ஏற்பட்டு விட்டால் இயந்திரங்களை உலவ விட்டுதான் நம்மால் எதாவது செய்ய முடியும். இப்போது உஙக்ளுக்குப் புரிந்திருக்கும், இயந்திரங்கள் மனிதர்களை மிஞ்சி விட்டன என்பது.

ஒருவேளை இந்த இயந்திரங்கள் மனிதக் கட்டுபாட்டை மீறி, தாமே இயங்கத் தொடங்கினால், அங்கு மனிதர்களின் நிலை எப்படி இருக்கும்? அப்படி நடக்குமா என்றால் அப்படி நடப்பதற்கான வேலைகளை மனித குலம் தொடங்கி விட்டது.

மனித குலம் உருவாக்கியுள்ள செயற்கை நுண்ணறிவு அப்படிப்பட்ட ஆபத்தான பரிட்சயங்களைச் செய்து கொண்டிருக்கிறது. செயற்றை நுண்ணறிவுக்கு முதலில் அது இயங்குவதற்குத் தேவையான அனைத்தும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதாவது செயல் நிரல்கள் (கோடிங்) செய்யப்பட்டுத் தேவையான தகவல்கள் தரப் படுகின்றன. பிறகு அவற்றைக் கொண்டு அவையே முடிவெடுத்துச் செயல்படுவதற்கான கட்டுபாடுகளும் ஆணைகளும் வழங்கப்படுகின்றன. ஒரு கட்டத்தில் இந்தக் கட்டுப்படுத்தும் மற்றும் ஆணையிடும் நிலைகளை இயந்திரங்களே எடுத்துக் கொண்டால் நிலைமை என்னவாகும்? இது என்னவோ கற்பனையோ அல்லது அறிவியல் புனைகதைக்கான கருவோ என்று நினைத்து விட வேண்டாம். அதற்கான சாத்தியங்கள் இருப்பதைச் செயற்கை நுண்ணறிவைக் கையாளும் வல்லுநர்களே அச்சத்தோடு குறிப்பிடத் தொடங்கி இருக்கிறார்கள்.

நீங்கள் இந்தக் கேள்வியைச் செயற்கை நுண்ணறிவு தளங்களான சாட்ஜிபிடியிடமோ, ஜெமினியிடமோ, டீப் சீக்கிடமோ கேட்டுப் பாருங்களேன். அதற்கான வாய்ப்புகள் இருப்பதைப் பட்டும் படாமல் அவை ஒத்துக் கொள்கின்றன.

மேலும், இதெல்லாம் அபரிமிதமான கற்பனை அல்லது விளைவுகளைக் கூறி அச்சுறுத்தி வளர்ச்சியைத் தடை செய்யும் முயற்சி என்றால், ஓட்டுநர் இல்லாத மகிழ்வுந்தின் இயக்கத்தை நீங்கள் எப்படிப் புரிந்து கொள்வீர்கள்? தொடர்வண்டிகளே ஓட்டுநர் இல்லாமல் இயங்க தயாராகிக் கொண்டிருக்கின்றன. அப்படியானால் அப்படி இயங்குவதற்கான அத்தனை ஆணைகளும் அதிகாரங்களும் அவற்றுக்கு வழங்கப்பட்டு விட்டன என்பதுதானே பொருள்.

இப்படியே இந்நிலை தொடர்ந்து செயற்றை நுண்ணறிவு நம் அலைபேசிக்குள்ளும் கணிப்பொறிக்குள்ளும் நுழைந்து அதுவாக இயக்கத் தொடங்கினால் என்னவாகும்? இவையெல்லாம் விசித்திர கற்பனை என்று நீங்கள் நிராகரித்து விட முடியாது. எல்லாவற்றுக்குமான சாத்தியங்களும் செயற்றை நுண்ணறிவின் படுபயங்கரமான வளர்ச்சியில் நிறைந்திருக்கின்றன. ஆகவே, இவ்வித அச்சத்தையும் கற்பனையையும் அபரிமிதம் என்று விலக்கி விட முடியாது.

இதையே நீங்கள் இணைய உலகில் பார்த்தால் அதன் போக்கு படு பயங்கரமாக இருக்கிறது. இனி நீங்கள் ஒரு காணொளியை உருவாக்க உங்களுக்கு மனிதர்களின் குரலோ, அசைவுகளோ எதுவும் தேவையில்லை. அவை அனைத்தையும் செயற்கை நுண்ணறிவு மூலமாக நீங்கள் உருவாக்கிக் கொள்ள முடியும்.

இது எப்படிப்பட்ட ஆபத்தில் நம்மைக் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது என்றால் ஒரு நடிகையை எப்படி வேண்டுமானாலும் உங்களால் ஆபாசமாக சித்தரித்து விட முடியும். ஒரு தலைவர் சொல்லாத ஒன்றைச் சொன்னது போல ஒரு காணொளியை உருவாக்கி உங்களால் பரப்பி விட முடியும்.

மனிதர்களும் மனிதர்களும்தான் சண்டையிட வேண்டும் என்ற அவசியமில்லாமல் டிரோன்களை அனுப்பி சண்டையிட்டுக் கொள்ள முடியும். இராணுவ வீரர்களை அனுப்பித்தான் ஒரு நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் இயந்திர மனிதர்களை (ரோபோட்டுகளை) அனுப்பியும் அதைச் செய்ய முடியும். மனிதர்களை நிர்வகிக்க இனி மனித அதிகாரிகளைத்தான் நியமிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இயந்திர அதிகாரிகளை நியமித்துக் கொள்ள முடியும். இயந்திர ஆசிரியர்கள் (ஏஜ ரோபோக்கள்) வகுப்பறைகளில் பாடம் எடுக்கத் தொடங்கி விட்டார்கள்.

அணு ஆயுதங்கள் சர்வாதிகாரிகளின் கைகளில் சிக்கினால் என்னவாகும் என்ற அச்சமும் கவலையும் உலக நாடுகளுக்கு ஒரு பக்கம் இருக்கிறது. அதன் மோசமான படுபயங்கரமான இன்னொரு மறுபக்கம் என்னவென்றால், வருங்காலத்தில் அணு உலைகள் மற்றும் அணு ஆயுதங்களை செயற்கை நுண்ணறிவைக் கொண்டுதான் நிர்வகிக்கப் போகிறோம் என்பதுதான்.

உலகப் போர்களின் வரலாற்றிலிருந்து நாம் நிறைய அனுமானித்துக் கொண்டிருக்கிறோம். அதன் தொடர்ச்சியாகச் சில சர்வாதிகாரிகளின் கைகளில் சிக்கி உலகம் சின்னாபின்னப்பட்டது போதாது என்று, இப்போது செயற்றை நுண்ணறிவின் கைகளில் சிக்கி உலகம் சின்னாபின்னமாக தயார் ஆகிக் கொண்டிருக்கிறதோ என்ற அச்சத்தை நம்மால் மிகையென்று ஒதுக்கி விட முடியாது. இந்தச் சின்னாபின்னத்தில் இரு வகைகள் இருக்கின்றன. ஒன்று உலகைக் கட்டுப்படுத்தி, அந்தச் செயற்கை நுண்ணறிவின் ஒட்டுமொத்த கட்டுபாடும் ஒரு சர்வாதிகாரியின் கையில் கிடைத்தால் எப்படி இருக்கும் என்பது ஒன்று. மற்றொன்று, செயற்கை நுண்ணறிவே உலகைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அதுவே ஒரு சர்வாதிக்காரியாக மாறினால் என்ன நிகழும்? அப்போது மனிதாபிமானம் என்பது போல இயந்திராபிமானத்தை நாம் எதிர்பார்க்க வேண்டியிருக்குமோ என்னவோ?

இப்போது நாம் தொடங்கிய இடத்திற்கு வருவோம். உலகப்போர்கள், அணுஆயுதப் போர்கள், வர்த்தகப் போர்கள் தரும் அனுபவம் மனிதர்களால் மனிதர்களைச் சமாளிப்பதே கடினம் என்பதுதான். நிச்சயமாக மனிதர்களால் இயந்திரங்களோடு போட்டி போட்டு வெல்ல முடியாது என்பதை நாம் துவக்கத்திலே கண்டு விட்டோம். அப்படியானால் மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் இடையே ஒரு போர் மூண்டால் அதைச் சமாளித்து வெற்றிக்கரமாக மனித இனத்தால் வெற்றிக்கொடி நாட்ட முடியுமா? ஒருவேளை மூன்றாம் உலகப் போர் என்பது அப்படித்தான் இருக்குமோ?

நாம் தயாரிக்கும் இயந்திரங்கள் நம்மை மீற முடியுமா? நம்மை வீழ்த்த முடியுமா? என்று இன்னும் விசுவாச கதைகளை நீங்கள் சொல்வீர்களானால், வரம் கொடுத்த இறைவன் தலையிலேயே கை வைக்க முயன்ற கதைகளை நாம் வெறும் கதைகளாக எடுத்துக் கொள்வதா? அல்லது நமக்கான முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொள்வதா? என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

இதற்கு மேலும் சொல்ல வேண்டும் என்றால்,

“செயற்றை அறிந்தக் கடைத்தும் உலகத்து

இயற்கை அறிந்து செயல்.” (குறள், 637)

என்ற குறட்பாவைத்தான் சொல்ல வேண்டும். என்னதான் செயற்கை நுண்ணறிவு என்றாலும் அது உலகத்து இயற்கையை மீறாத வகையில் இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையை நாம் அலட்சியப்படுத்தி விட முடியாது என்ற அளவில் மூன்று நாட்களாக நாம் தொடர்ந்த இவ்விவாதத்தை இன்று தற்காலிகமாக நிறைவு செய்தாலும், இது குறித்து நாம் இன்னும் தொடர்ந்து விவாதிக்க வேண்டியி நிலையிலேயே இருக்கிறோம். மற்றுமொரு சமயத்தில் மேலும் விரிவாகவே விவாதிப்போம்.

*****

16 Apr 2025

உங்களுக்கும் இயந்திரங்களுக்குமான போராட்டம்!

உண்மைக்கும் போலிக்குமான போராட்டம் அல்லது

உங்களுக்கும் இயந்திரங்களுக்குமான போராட்டம்!

நமக்குத் தகவல்களை வாரி வழங்கியதே இந்தத் தகவல் தொழில்நுட்ப யுகத்தின் மாபெரும் புரட்சி எனலாம். இப்போது அந்தத் தகவல்களே நமக்கு பல பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் நம்புகிறீர்களா?

உலா வரும் தகவல்களில் எது உண்மையானது, எது பொய்யானது என்பதைக் கண்டறிவது இந்தத் தகவல் தொழில்நுட்ப யுகத்தில் சிரமமானதாக மாறிக் கொண்டிருக்கிறது. இன்றைய மேற்பார்வைச் சான்றுகளில் (ரெபரன்ஸ்) இணையமும் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் இணையம் வழங்கும் தகவல்களில் எத்தனை சதவீதம் நம்பகத்தன்மை உள்ளது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

செயற்றை நுண்ணறிவின் பெரும் பாய்ச்சல் உண்மைக்கும் போலிக்கும் இடையே இருந்த இடைவெளியை உடைத்தெறிந்து விட்டது. உங்களுடைய குரலையே, நீங்கள் பேசாமல், செயற்றை நுண்ணறிவைக் கொண்டு பேச வைக்க முடியும். உங்கள் உருவத்தைப் பிரதியெடுத்துக் கொடுத்து செயற்கை நுண்ணறிவைக் கொண்டு படப்பதிவையே நீங்கள் உருவாக்க முடியும்.

இன்றைய செயற்றை நுண்ணறிவு உலகில் நீங்கள் அப்படிப் பேசாமலே, அப்படிப் பேசியது போன்ற ஒரு காணொளியை உருவாக்கி விட முடியும். இதுதான் இங்கு பெரும் சிக்கலாகி விடுகிறது.

நீங்கள் அப்படிப் பேசாத ஒரு காணொளி இணையத்தில் உலா வருமானால், அது போலியானது என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும். அதைக் காணும் அத்தனை பேரும் நீங்கள்தான் அப்படிப் பேசினீர்கள் என்று போலியை உண்மையாக எதிர்கொள்ளும் அபாயம் இருக்கிறது.

இன்று அத்தகைய போலிகளை அடையாளம் காணும் மற்றும் கண்டறியும் வலைதளங்களும் செயலிகளும் வந்து விட்டன என்று நீங்கள் சொன்னாலும், அவையே ஏன் போலியாகவும் இருக்கக் கூடாது என்று வினாவிற்கு நாம் என்ன பதில் சொல்ல முடியும்?

செயற்றை நுண்ணறிவைக் கொண்டு உண்மையை விட வெகு நேர்த்தியாகப் போலிகளை உருவாக்கிப் பரவ விட்டு விட முடிகிறது.

இன்று சமைப்பதில் தொடங்கி, கல்வி கற்பது பொழுதுபோக்குவதில் தொடர்ந்து, மருத்துவ அறுவை சிசிக்சை வரை யூடியூப்பைப் பார்த்துக் கற்றுக் கொள்ளும் ஒரு தலைமுறை உருவாகியிருக்கிறது. இந்தக் காணொளிகளில் எத்தனை நம்பகத் தன்மை உடையவை என்று, இவற்றைப் பார்த்து நாம் கற்றுக் கொண்டும் நம்பிக் கொண்டும் புழங்கிக் கொண்டும் இருக்கிறோம்?

செயற்றை நுண்ணறிவு சூழ இருக்கும் இணைய மற்றும் செயலி உலகில் நாம் எதை நம்புவது? எதை நம்பாமல் இருப்பது? இங்கே போலிகளும் உண்மையைப் போலவே இருக்கின்றன.

நம்மைப் பற்றிய தகவல்கள் நமக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது என்று நாம் நம்பிக் கொண்டிருக்கும் வேளையில் அலைபேசிகளின் இயந்திரக்குரல்கள் நம்முடைய அத்தனை தனிப்பட்ட ரகசியங்களையும் புட்டுப்புட்டு வைக்கின்றன. இணையவழி பண மோசடியாளர்களுக்கு இயந்திரக்குரல்கள் அருமையான வரப்பிரசாதமாகி விட்டன. அத்துடன் செயற்றை நுண்ணறிவைக் கொண்டு உருவாக்கும் காட்சிகளும் காணொளிகளும் அவர்களுக்கு ரொம்பவே வசதியாகப் போய் விட்டன.

இன்றையச் சூழ்நிலையில் ஒருவரை உளவு பார்க்க, வேறு ஒருவரை அமர்த்த வேண்டும் என்ற அவசியம் எல்லாம் தேவைப்படாத அளவுக்கு, அவரே அவரைப் பற்றிய அத்தனை ரகசியங்களையும் முகநூல், எக்ஸ், புலனம் என்று கசிய விட்டுக் கொண்டிருக்கிறார். இவ்வத்தனை தகவல்களும் செயற்கை நுண்ணறிவின் வீச்சையும் வீரியத்தையும் பயன்படுத்திச் சேகரிக்கப்பட்டு பகுத்தாயப்பட்டுக் கொண்டிருக்கின்றன. விளைவு நாமே மறந்து போன நம்மைப் பற்றிய ரகசியங்கள் நமக்குத் தெரியாமல் இணைய வெளிகளில் வெகு பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருக்கின்றன. அவை தேவைப்படும் பொழுதுகளில் நமக்கு எதிராகப் பிரயோகிக்கப்படவும் தயார் நிலையில் வைத்திருக்கப்படுகின்றன.

பல நேரங்களில் உங்கள் அலைபேசிகளை, கணினிகளை நீங்கள் கையாளுவதாகத் தோன்றலாம். இன்றைய செயற்கை நுண்ணறிவு யுகத்தில் அதுவும் ஒரு தோற்றப்பிழையோ என நினைக்கத்தக்க வகையில் உங்களை அறியாமலே உங்கள் அலைபேசியும் கணினியும் யாரோ ஒருவரால் கூட இயக்கப்படலாம். அதை நீங்கள் அறியும் பொழுதில் உங்களைப் பற்றிய அத்தனை தகவல்களும் வங்கி விவரங்கள் உட்பட அனைத்தும் களவாடப்பட்டிருக்கலாம்.

நீங்கள் ஆபாசப்படங்களை விரும்பாதவராக இருக்கலாம். ஆனால் உங்களுக்கே தெரியாமல் உங்கள் கணினிக்குள் ஆபாசப் படங்களைத் திணித்து, உங்களை ஆபாசப் பிரியர் என நிறுவ வைக்க இன்றைய தகவல் தொழில்நுட்பங்களால் முடியும்.

நீங்கள் தேசத்தின் மீதுநேசம் கொண்டவராக இருக்கலாம். ஆனால் உங்களுக்கே தெரியாமல் உங்கள் அலைபேசிகளில் நீங்கள் தேச விரோதச செயல் புரிந்தவர் என்பதற்கான எண்ம ஆதாரங்களைச் (டிஜிட்டல் எவிடென்ஸ்) செலுத்தி உங்களை தேச விரோதியாக மாற்றலாம்.

நிலைமை விபரீதமாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. விபரீதத்தை நோக்கி முற்றிக் கொண்டும் இருக்கிறது. இதற்கெல்லாம் என்ன தீர்வு என்று நீங்கள் கேட்கலாம்.

இதை எண்ம அறிவு (டிஜிட்டல் லிட்டரேஸி) மற்றும் விழிப்புணர்வு (டிஜிட்டல் அவர்னெஸ்) மூலமாகப் போக்கலாம் என்கிறார்கள். எப்படி எழுத்தறிவும் எண்ணறிவும் அறியாமையைப் போக்குகிறதோ அது போல எண்ம அறிவும் அது குறித்த விழிப்புணர்வும் இந்த விசயத்தில் நமக்குப் பாதுகாப்பு தரலாம்.

அரசாங்கங்களும் இந்த விசயத்தில் எவ்வளவோ செய்கின்றன. ஆனால் இணைய வழியாக எப்படிப்பட்ட அச்சுறுத்தல்களும், மோசடிகளும் நிகழும் என்பதெல்லாம் நிகழ்ந்து முடித்த பின்பே அறிய முடிகின்றன என்பதால் இவற்றை அரசாங்கங்கள் கட்டுப்படுத்துவதும் நெறிபடுத்துவதும் அசாத்தியமான ஒன்றுதான்.

ஒரு மோசடியோ, குற்றமோ அது குறித்த அத்தனையும் முழுமையாகத் தெரிந்தால்தான் அது குறித்த சட்டங்களையும் நெறிமுறைகளையும் வகுக்க முடியும். ஆனால் இணையத் தொழில்நுட்பமும் செயற்றை நுண்ணறிவும் அசுரத்தனமாக வளர்ந்து கொண்டிருக்கின்றன. அவை வளர்ந்த பிற்பாடே அவை எப்படியெல்லாம் வளர்ந்திருக்கின்றன என்பதை அறிய முடிகிறது. கற்பனைக்கும் அப்பாற்பட்டு வளர்வதால் முன்கூட்டியே அதற்கான நெறிமுறைகளையும் கட்டுபாடுகளையும் வகுப்பது என்பது சிரமமாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு அதைப் பயன்படுத்துபவர்களே, அது குறித்து தற்போது எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வாகவும் இருப்பது அவசியமாக இருக்கிறது.

இது எப்படி இருக்கிறது என்றால், பயன்படுத்துபவர்களே அதற்குப் பொறுப்பானவர்கள் என்று வாதிடுவது போன்றதாக இருக்கிறது. பயன்படுத்தும் உங்களுக்கே அது குறித்த அத்தனையும் முழுமையாகத் தெரியாது எனும் போது, இந்த வாதம் எத்தனை சதவீதம் சரியானதாக இருக்க முடியும்?

ஏனென்றால், இந்தப் பிரச்சனை என்பது வெறுமனே எண்ம அறிவு (டிஜிட்டல் லிட்டரேஸி) மற்றும் விழிப்புணர்வால் (டிஜிட்டல் அவர்னெஸ்) மட்டும் சமாளிக்கக் கூடிய பிரச்சனையா என்ன? அதையும் தாண்டியது என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

இப்போது இது குறித்து நீங்கள்தான் யோசிக்க வேண்டும். யோசித்து வையுங்கள். நாளையும் இது குறித்த விவாதத்தைத் தொடர்வோம்.

*****

15 Apr 2025

எங்கே போகும் இந்தப் AI பாதை?

எங்கே போகும் இந்தப் AI பாதை?

செயற்கை நுண்ணறிவைப் பற்றிப் பேசும் போது அதன் வளர்ச்சியை நாம் ஆதரிப்பதா? அல்லது அதன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதா? என்ற கேள்விக்கு நாம் விடை காண வேண்டியிருக்கிறது.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வளர்ச்சியை நம்மால் தடுக்க முடியாது என்பதுதான் உண்மை. நாம் வரலாற்றில் பின்னோக்கிப் பார்க்கும் போது இந்த உண்மைத் தெளிவாகப் புலப்படுகிறது.

கணிப்பான்கள் எனும் கால்குலேட்டர்கள் வந்த போது, அதன் வளர்ச்சியை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டி இருந்தது. இனி பெருக்கல் வாய்ப்பாடுகள் பயனற்றுப் போகப் போகின்றன, கணிதத் திறன்கள் மங்கப் போகின்றன என்கின்ற விமர்சனங்கள் இருந்த போதிலும் அதை வரவேற்பதைத் தவிர அப்போது வேறு வழியில்லை.

கணிப்பொறிகள் வந்த போதும் அதை ஏற்பது குறித்து, வங்கிகளிலும் அரசு அலுவலங்களிலும் பலவித கருத்து மாறுபாடுகள் இருந்தன. கணினி எனும் இந்தச் சாதனம் பலரின் வேலை வாய்ப்பைப் பறிக்கப் போகிறது என்ற அச்சம் நிலவியது. இன்று, அவ்வண்ணம் எதிர்த்தவர்களை எல்லாம் அழைத்துக் கருத்துக் கேட்டால் கூட, கணினி இன்றி இனி வாழவே முடியாது என்பதைத்தான் தங்களது அபிப்ராயமாகக் கூறுவார்கள்.

உண்மையில் கணினி பலரது வேலைவாய்ப்பைப் பிடுங்கியது உண்மைதான் என்றாலும், தமிழகத்திற்கு அது தகவல் தொழில்நுட்பம் என்ற துறையால் பல பொறியியல் பட்டதாரிகளுக்கு மகத்தான வேலைவாய்ப்பை வழங்கியது. அதைத் தொடர்ந்து தமிழ் இளைஞர்கள் அமெரிக்காவையே ஆட்டிப் படைக்கும் அளவுக்குத் தகவல் தொழில்நுட்பத்தில் வெற்றிக்கொடி நாட்டினார்கள்.

எந்தக் கணினி நுட்பம் பல தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களின் வேலை வாய்ப்புகளுக்கு வாய்ப்பாக இருந்ததாக நாம் கருதினோமோ, அவர்களது வேலைவாய்ப்புகளுக்குக் குழி பறிக்கும் வகையில்தான் தற்போது செயற்கை நுண்ணறிவு வந்திருக்கிறது.

அதனால் மட்டுமல்லாது வேறு பல காரணங்களாலும் எங்கே போகும் இந்தப் பாதை என்று செயற்கை நுண்ணறிவின் பாதையை அனுமானிக்க வேண்டியிருக்கிறது.

செயற்கை நுண்ணறிவு எத்தனை நபர்களின் வேலை வாய்ப்பைப் பறித்திருக்கிறது என்பதற்கு அண்மையில் நடந்து வேலையிழப்புகளே சான்றுகள். இன்னும் பல தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்புகளை அது பறிக்கப் போகிறது என்பதுதான் எதார்த்தம் என்றாலும் அதன் வளர்ச்சியை நம்மால் தடுக்க முடியுமா என்பதுதான் நம் முன் நிற்கும் கேள்வி.

நம்மால் தடுக்க முடியுமா என்ற கேள்வியை விட, நாம் நினைத்தாலும் தடுக்க முடியாத ஒரு நிலையை நோக்கி செயற்கை நுண்ணறிவு போய் விடுமோ என்ற அச்சத்தைத் தேக்கி வைக்கும் ஐயப்பாடான கேள்விதான் சரியானது.

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியானது மனிதர்களால் நினைத்தாலும் தடுக்க முடியாத ஒரு நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.

செயற்றை நுண்ணறிவை எப்படி நெறிபடுத்துவது, அதை எப்படி கட்டுப்படுத்துவது என்பது அரசாங்கங்களுக்கும் உலகளாவிய அமைப்புகளுக்கும் சவாலான ஒன்று மட்டுமல்ல, அது இன்னும் பிடிபடாத ஒன்றும் கூட. அந்தச் சவால் என்னவென்றால் அதன் வளர்ச்சி எப்படி இருக்கப் போகிறது? அது எத்தகைய எல்லைகளை மீறப் போகிறது? என்பதெல்லாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத நிலையில் இருப்பதுதான்.

இயந்திரங்களுக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்து விட்ட பின்பு, அந்த இயந்திரங்கள் சுயமாகச் சிந்திக்க ஆரம்பித்து விட்டால் அடுத்து என்ன நடக்கும் என்பது ஓரளவு நம் கற்பனைக்குப் புலப்பட்ட சவால். இந்த ஒரு சவாலை மட்டும் கருத்தில் கொண்டு இது போன்றே மற்ற சவால்களும் இருக்கும் என்று நம்மால் கற்பனை செய்து விட முடியாது.

நமது கற்பனைக்கு ஓரளவு புலப்படும் வகையிலான ஐயப்பாடான, இயந்திரங்கள் சுயமாகச் சிந்திக்க ஆரம்பித்து விட்டால் என்பதையே நம்மால் எதிர்கொள்ள முடியாது என்பதுதான் எதார்த்தம். அதுவும் அல்லாமல் இயந்திரங்களின் போக்கை நிர்ணயிக்கும் கட்டுப்பாடானது பயங்கரவாதிகளின் கைகளில் போய் விட்டால் என்னவாகும் என்பதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது.

பயங்கரவாதிகளின் வைரஸ் தாக்குதல்கள், எண்ம கொள்ளையர்களின் (ஹாக்கர்கள்) அத்துமீறல்கள் என்பதையும் தாண்டி செயற்கை நுண்ணறிவின் கட்டுப்பாடானது தீய சக்திகளின் கைகளுக்குப் போகும் போது ஏற்படும் விளைவுகள் எப்படி அமையும் என்பதுதான் அச்சத்திற்குரியதாகவும் அதிர்ச்சிக்குரியதாகவும் இருக்கிறது.

இந்தியா போன்ற வளர்ந்த நாடுகளில் இருப்போருக்கு செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு வரம் போல பலர் கண்களுக்குத் தெரிவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திக் குறைந்த கூலியில் அல்லது கூலியே கொடுக்காமல் சாதித்துக் கொள்ள முடியும் என்பது. இரண்டாவது காரணம் இந்தியர்கள் பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அத்தனையும் ஆக்கப்பூர்வமான தளத்தை நோக்கி இல்லாமல் அவர்களது பொழுதுபோக்கு தளத்தில் மட்டும் விட்டேத்திதனமாக வியாபித்து இருப்பது.

இந்த இரண்டு காரணங்களிலும் நாம் மறந்து விடும் ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், அது நம்முடைய அத்தனை தனிப்பட்ட தரவுகளையும் உள்வாங்கிக் கொண்டுதான் இலவசமாக அது நமக்காகச் செயல்பட சம்மதிக்கிறது என்பதுதான். இத்தரவுகளைக் கொண்டு ஒருவர் அச்சுறுத்தப்படும் போதுதான் அவருக்கே அவரது தரவுகளின் முக்கியத்துவம் புரிய வரும் என்பதுதான் இதன் பின்னால் உள்ள பயங்கரம்.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி நாம் உருவாக்கும் பொழுதுபோக்கு அம்சங்களும், சமூக ஊடகப் பதிவுகளும்தான் அதிகமாக இருக்கிறதே தவிர, வேறெந்த ஆக்கப்பூர்வ பணிகளுக்கும் அதிகமாக நாம் அதைப் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை. அப்படிப் பயன்படுத்தினாலும் அதற்கான ஒரு தொகையை நாம் கொடுக்க வேண்டியிருக்கும். அதைத் தவிர்த்தே அதை நாம் கில்லாடித்தனமாகப் பயன்படுத்த நினைப்போம் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படிப் பயன்படுத்த முனையும் போது நம்முடைய அனைத்து தனிப்பட்ட தரவுகளையும் பணயம் வைத்தே அதைப் பயன்படுத்த முடியும் என்பது அதன் பின்னுள்ள ஒரு பாதகத்திற்கான ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு ஒரு சோறு பதம். நாம் நினைப்பதை விட எல்லாம் நம்முடைய கில்லாடித்தனத்தைத் தாண்டிய கில்லாடித்தனம் கொண்டது செயற்கை நுண்ணறிவு என்பதுதான் உண்மை. அது அப்படித்தான் வடிவமைக்கப்படுகிறது என்பதுதான் அதற்கான காரணம்.

ஒரு வகையில் நம்முடைய நுகர்வை அதிகப்படுத்திக் கொள்வதற்கு ஏற்ற வகையில் நம்மை அறியாமலே நாம் செயற்கை நுண்ணறிவை அதிகம் பயன்படுத்த பழக்கப்படுத்தப்பட்டு வருகிறோம் என்பதுதான் இதன் பின்னுள்ள வருந்ததக்க உண்மை.

நாம் இத்தோடு இந்த விவாதத்தை நிறுத்தி விட முடியாது. இதன் பயங்கர ஆக்டோபஸ் கூறுகள் பலவிதமாக வியாபித்துப் பரவிக் கிடக்கின்றன. நாளையும் தொடர வேண்டியதைத் தவிர நமக்கு வேறென்ன வழியிருக்கிறது.

நாளையும் தொடர்வோம்!

*****