21 Jul 2025

பைசா பிரயோஜனம் இல்லாத பிரச்சனைகள்!

பைசா பிரயோஜனம் இல்லாத பிரச்சனைகள்!

பையில் பத்து பைசா இருந்ததில்லை

நிம்மதியாக இருந்தோம் என்கிறார்

இப்போதும் நிம்மதியாக இருக்க வேண்டியதுதானே

இன்று பத்து பைசாவே இல்லை.

*

எப்போது இரு நாணயங்களுக்கு இடையே வித்தியாசம் தெரியவில்லையோ அப்போதே அவ்விரு நாணயங்களில் மதிப்பு குறைந்தது வழக்கொழிந்து போகப் போகின்றது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இப்படித்தான் ஐம்பது பைசாவுக்கும் ஒரு ரூபாய்க்கும் வித்தியாசம் தெரியாமல் போன போது ஐம்பது பைசா வழக்கொழிந்து போய் விட்டது. இப்போது ஒரு ரூபாய்க்கும் இரண்டு ரூபாய்க்கும் அப்படித்தான் இருக்கிறது. விரைவில் ஒரு ரூபாய் வழக்கொழிந்துவிடும். பிறகு இரண்டு ரூபாய்க்கும் ஐந்து ரூபாய்க்கும் வித்தியாசம் தெரியாமல் போகும் போது இரண்டு ரூபாய் வழக்கொழிந்து விடும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இப்போது ஐந்து ரூபாய்க்கும் இருபது ரூபாய்க்கும் வித்தியாசம் தெரியாமல் இருப்பதை நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.இதில் எது வழக்கொழியப் போகிறதோ என யோசிக்க யோசிக்க குழப்பமாக இருக்கிறது.

*

99 ரூபாய் கட்டணம்

100 ரூபாயை நீட்டினேன்

பாக்கியை உடனே கொடுத்து

ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்

அந்த ஒரு ரூபாய் கடவுள்

*

ஒரு கவிதைக்காக

எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும்

என்பதெல்லாம் தெரியாது

பார்ப்பவர்கள் வெட்டியாக

உட்கார்ந்திருப்பதாகச் சொல்லலாம்

வீணாய்ப் பொழுதைக் கழிப்பதாகக் கூறலாம்

எழுதிய எண்பது கவிதைகளில்

ஒன்று பத்திரிகையில் பிரசுரமாகி

இருபது ரூபாய் சன்மானம் வரும் போது

அது உண்மைதானோ என்று

எங்கிருந்தோ எப்படியோ தோன்றலாம்

*****

20 Jul 2025

பேர் சொல்லும் பிள்ளைகள்!

பேர் சொல்லும் பிள்ளைகள்!

முகநூல், எக்ஸில் எல்லாருக்கும் இரண்டு பெயர்கள்.

சிலருக்கு மூன்று, நான்கு, ஐந்து பெயர்கள்.

உதாரணத்துக்குச் சில,

ராசகோபாலன் குமரிமுத்து

சுந்தரசோழன் சமுத்திரபாண்டியன்

ரங்கசாமி குப்பண்ணன்

ராம்குமார் கோபால்சாமி

தமிழ்ச்செல்வன் அலெக்ஸாண்டர்

பரந்தாமன் பக்கிரிசாமி

இப்படி ஒருவருக்கு இரண்டு, மூன்று என்று நான்கு பெயர்கள். நாங்கள் படித்த போது ஒரே வகுப்பறையில் நான்கைந்து பேருக்கு ஒரே பெயர் இருக்கும். முருகன் என்றால் நான்கைந்து முருகன்கள் எழுந்து நிற்பார்கள். கவிதா என்றாலும் நான்கைந்து கவிதாக்கள் எழுந்து நிற்பார்கள்.

அப்போதும் இப்படித்தான் கோவிந்தசாமி மகன் முருகன் இங்கே வாடா, கலியராசு மகன் முருகன் அங்கே போடா, மாரிமுத்து மகன் முருகன் என்னடா பண்ணிக் கொண்டிருக்கிறாய், தெட்சணாமூர்த்தி மகன் முருகன் வீட்டுப்பாடம் முடித்து விட்டாயாடா, சோனாச்சலம் பொண்ணு கவிதா வாயில் என்ன வைத்திருக்கிறாய், கிருபாகரன் மகள் கவிதா நேற்று ஏன் வரவில்லை, பாலகணபதி மகள் கவிதா ஏன் இப்படி முழிக்கிறாய், வெங்கடேசன் மகள் கவிதா என்ன ஆச்சு உனக்கு என்று அப்பா பெயரை வைத்துதான் பிரித்து அடையாளம் கண்டு கேள்வி கேட்பார்கள் ஆசிரியர்கள்.

அதைத்தான் இந்த முகநூல் தலைமுறையும் பின்பற்றுகிறது.

என்ன ஒரு வித்தியாசம் என்றால் முன்பு அப்பா பெயரைச் சொல்லி பிள்ளைகள் பெயரைச் சொல்வார்கள். இந்த முகநூலில் தங்கள் பெயருக்குப் பின்பு அப்பா பெயரைப் போட்டுக் கொள்கிறார்கள்.

அதிலும் இரண்டு பெயர்கள் ஒன்றாக அமைந்து விடும் போது, உதாரணத்துக்கு அப்புசாமி குழந்தைவேலு என்ற பெயர் இரண்டு பேருக்கு அமைந்து விடும் போது வேறு வழியில்லை, மூன்றாவது பெயரையும் இணைக்கத்தான் வேண்டியிருக்கிறது. அப்படித்தான் அப்புசாமி குழந்தைவேலு பாண்டிமுத்து என்ற பெயரைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

இந்தக் குழப்பமெல்லாம் எதற்கு என்று பிள்ளைகள் பட்டப்பெயர் வைத்துக் கூப்பிடுவார்கள் பாருங்கள். வைத்தப் பெயரைச் சொல்லிக் கூப்பிடும் போது கூட காது கேட்காமல் உட்கார்ந்திருக்கும் பிள்ளைகள் பட்டப்பெயரைச் சொன்னதும் சட்டென்று எழுந்து விடுவார்கள். கருவண்டு முருகன் என்ற சொன்னால் போதும் சட்டென்று என்னடா என்று கேட்பான் பாருங்கள், தயிர்சோறு கவிதா என்றால் பல்லை உடைத்து விடுவேன் என்று சட்டென்று வரும் பதில் வரும் பாருங்கள், அது செம ரகளையாக இருக்கும்.

*****

19 Jul 2025

உயிரின் கடைசிச் சொட்டு

கவித்துவம்

மரபுக் கவிதை

ஓரடிக்கு நான்கு வார்த்தை

நவீனக் கவிதை

ஓரடிக்கு ஒரு வார்த்தை

*****

பஞ்ச தந்திரம்

ரேஷன் அரிசி

இலவசமாகக் கிடைக்கும் போதே

தோசைமாவின் விலையை

ஏற்றி விட்டார்கள்

*****

கடி

கொசுவைக் கொன்று போட்டது

என்னைக் கடித்துக் கொண்டிருந்தது

என்பதற்காகவும்

கூடுதலாக

என்னையே கடித்துக் கொண்டிருந்தது

என்பதற்காகவும்

*****

உயிரின் கடைசிச் சொட்டு

அதற்கு மேல் பணமில்லை என்பதை

அறிந்தோ என்னவோ

குளுக்கோஸ் புட்டியின்

கடைசிச் சொட்டில் பிரிந்தது

ஆயாவின் உயிர்

*****

18 Jul 2025

சாமர்த்தியப் பொழுதுகள்

சாமர்த்தியப் பொழுதுகள்

மரம் நடு மரம் நடு என்கிறாயே

ஏ காட்டை அழித்த கபோதி

நீ நட்டு வைத்தா

இவ்வளவு மரம் வளர்ந்திருக்கிறது

நீ போட்டு வைத்த காங்கிரீட்டால்

ஒரு மரம் கூட

முளை விடாமல் போயிருக்கிறது

*

புதிய வாடிக்கையாளர் வந்து விட்டார் என்றா

கறியும் கூட்டும் பொறியலும்

கூடுதலாக வைக்கிறாய் கடைக்காரா

நாளை அவர் பழைய வாடிக்கையாளர் ஆகும் போது

இன்று கூடுதலாக வைத்ததை

கணக்குப் பண்ணிக் குறைத்துக் கொள்வாய்

*

மிக சாமர்த்தியமாக

நடந்து கொள்ளும் மனிதர்கள்

ஒவ்வொருவரும்

அய்யோவென ஏமாந்து போகிறார்கள்

மிக மோசமாக ஏமாந்து போகத்தான்

மிக சாமர்த்தியமாக நடந்து கொண்டார்களோ

*

பத்து கவிதைகள் எழுத வேண்டும் என்கிற பேராசை

பலமில்லை

உறங்கி விட்டேன்

கனவில்

வண்ண வண்ண கவிதைகள்

எழுதுவதற்கு யாருமில்லை

*****

17 Jul 2025

மரியாதை மறந்த சாலைகள்

மொழிபெயர்ப்பு

“மாரியம்மா சொல்லு!”

“மாரி மம்மி!”

“காளியம்மா சொல்லு!”

“காளி மம்மி!”

மழலையின் மொழிபெயர்ப்பு

******

மரியாதை மறந்த சாலைகள்

ஓணான்கள்

பாம்புகள்

அணில்கள் இறந்து கிடக்கும்

பாதையில்

இறுதி மரியாதைக்கு

நேரமில்லாமல்

நகர்ந்து கொண்டிருக்கும்

சாலைகள்

*****

தலைமுறை இடைவெளி

பழைய பாட்டி வெற்றிலைப் போடுவாள்

புதிய பாட்டி மாத்திரை போடுகிறாள்

தலைமுறை இடைவெளி

*****

இரு வீடுகள்

வீடு

எனக்கு வீடு

ஒட்டடை

சிலந்திக்கு வீடு

ஒரு வீடு

சுத்தமாகும் போது

ஒரு வீடு

சிதிலமாகிப் போகிறது.

*****

விலைவாசி

நூறு தலைமுறைக்குச் சொத்து சேர்த்தால்

ஒரு தலைமுறை வாழலாம்

விலைவாசி அப்படி

*****

16 Jul 2025

நெஞ்சாற்றுப்படை

நெஞ்சாற்றுப்படை

பலருக்கும் ரத்தத்தைப் பார்த்தால் பயம்

இது தெரியாமலா

கண்ணுக்குத் தெரியாமல்

தோலுக்குள் ஓட விட்டிருப்பார் கடவுள்

*

எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்வேன்

கவிதைக்கு விளக்கம் சொல்வதைத் தவிர

*

நல்ல நேரத்தில் கவிதை

காட்டாறாய் கிளம்புகிறது

மனைவி வந்துவிடுகிறார்

திட்டித் தீர்ப்பதற்கு

பாவம் கவிதை

வாசல் வரை வந்து

அவமானப்பட்டுத் திரும்புகிறது

மதியாதார் தலைவாசல்

இனி மிதியுமோ கவிதை

*

மழையில் நனைவது பிடிக்கும் என்றாய்

சரி நனைந்து தொலை என்றேன்

மறுநாளே ஜலதோசம் என வந்து நிற்கிறாய்

*

கவுண்டமணி

வடிவேலு

சந்தானம் இல்லாத குறையை

அரசியல்வாதிகள் தீர்த்து வைப்பார்கள்

*****

15 Jul 2025

மனிதர்கள் தோற்பது தத்துவங்களின் தலைவிதியாகாது!

மனிதர்கள் தோற்பது தத்துவங்களின் தலைவிதியாகாது!

நான் எப்படிப்பட்ட தலைமுறை தெரியுமா

என்பவரிடம்

உன் தாத்தாவின் அப்பா பெயரை மட்டும் சொல் என்கிறேன்

ஒருவருக்கு நல்லது இன்னொருவருக்குக் கெட்டது

ஒருவருக்குக் கெட்டது இன்னொருவருக்கு நல்லது

உலகம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியானது

உன்னுடைய உலகையே எல்லாருக்குள்ளும் ஊற்றாதே

இலவசமாக ஒன்றைத் தந்து

உன்னை வாங்குகிறார்கள்

பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியாது

பணமில்லாவிட்டால் எதையும் வாங்க முடியாது

வாங்குவதற்கும் விற்பதற்கும் வழியில்லை என்றால்

பணத்திற்குத் தேவையே இருக்காது

வாங்குவதற்கும் கொடுப்பதற்கும் எவ்வளவோ இருக்கின்றன

மனிதர்கள் தோற்பது தத்துவங்களின் தலைவிதியாகாது

தலைவிதிகளை மாற்றி எழுதும் தத்துவங்கள்

கொழுப்பில் என்ன நல்ல கொழுப்பும் கெட்ட கொழுப்பும்

ஒத்துக் கொண்டால் நல்லது

ஒத்துக் கொள்ளா விட்டால் கெட்டது

எளிதாக அவமதித்து விடலாம்

அதைத் திரும்பத் துடைப்பதுதான் கடினம்

எளிதில் ஒருவர் முகத்தில் காறி உமிழ்ந்து விடலாம்

மீண்டும் அந்த எச்சில் உருவாக்கிய அவமானத்தைப்

பிடுங்கி எறிவதுதான் கடினம்

எத்தனையோ

செத்துப் போன

இனி

சாகப் போகும்

மனிதர்களின் வரிசையில்

நீயும் ஒருவன்

*****

10 Jul 2025

திறன்மிகு திறன்பேசியைத் (ஸ்மார்ட் போன்) திறமையாகத் தேர்வு செய்தல்!

திறன்மிகு திறன்பேசியைத் (ஸ்மார்ட் போன்)

திறமையாகத் தேர்வு செய்தல்!

மனைவி அமைவதெல்லாம் இறைவன் தந்த வரம் என்பதைப் போல திறன்பேசி அமைவதெல்லாம் தொழில்நுட்பம் தந்த வரம்.

ஒரு திறன்மிகு திறன்பேசியைத் தேர்வு செய்து விட்டால், வாழ்க்கையில் பல வேலைகள் சுலபமாக முடிந்து விடும்.

தகவல் தொடர்பிற்காக வடிவமைக்கப்பட்ட அலைபேசிகள் இன்று சகலமுமாய் வியாபித்துக் கொண்டிருக்கின்றன.

செய்திகளை அனுப்புவதற்கும், பரிமாறிக் கொள்வதற்கும் தூதுவர்கள், புறாக்கள், கடிதங்கள் என்றிருந்த நிலையை வேகமாக மாற்றியவை தந்தி. இன்று தந்தி இல்லையென்றாலும் அதன் தாக்கத்தால் உருவான தினத்தந்தி நாளிதழ் இருக்கிறது.

தந்தியைத் தொடர்ந்து உருவான தொலைபேசிகள் புரட்சிகரமான மாற்றத்தை உண்டாக்கின. ஒரு வீட்டின் மேட்டிமைத் தன்மையை அந்த வீட்டில் இருக்கும் தொலைபேசி இருப்பதைக் கொண்டு அளவிட்ட காலமும் ஒன்றுண்டு.

தொலைபேசியை வேகப்படுத்தியவை பேஜர்கள். இன்று பேஜர்கள் இல்லையென்றாலும் அலைபேசிகளின் குறுஞ்செய்தி வடிவத்திற்கு அடிகோலியவை அவையே. இன்று குறுஞ்செய்திகளின் இடத்தைப் புலனம், முகநூல், எக்ஸ் போன்றவை பிடித்துக்  கொண்டாலும் முக்கிய விவரங்கள், அறிவிப்புகள் அனைத்தும் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படுவது நின்று விடவில்லை. மக்கள் குறுஞ்செய்திகளைப் பயன்படுத்துவது குறைத்து விட்டாலும், பணப்பரிமாற்ற விவரங்கள் அனைத்துக்கும் வங்கிகள் குறுஞ்செய்திகளையே பயன்படுத்துகின்றன.

கையிலே எடுத்துச் செல்லும் வகையிலான பித்தான் கைபேசிகள் தொலைபேசிகளின் பயன்பாட்டையே மறுபரிசீலனை செய்து விட்டன. பித்தான் கைபேசிகளின் காலத்தில் எந்த நிறுவன கைபேசியை வாங்குவது என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் நோக்கியாவை வாங்க அலைமோதிய மாபெரும் மக்கள் கூட்டம் இருந்தது.

கையில் இருந்த கைபேசிகள் திறன்பேசிகளாய் வடிவெடுத்த போது அந்த இடத்தை சாம்சங் பிடித்துக் கொண்டது.

விலை மலிவிலும் தரத்திலும் சாம்சங் ஒரு புரட்சியையே செய்தது. சீன திறன்பேசிகள் இந்திய சந்தையில் ஊடுருவிய போது சாம்சங்கின் இடத்தை விவோவும், ஆப்போவும் பிடிக்க முயன்றாலும் இன்றும் சாம்சங்கிற்கு தனித்த இடம் இருக்கிறது.

இணையத்தைத் திறந்தால், திறன்பேசி தயாரிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையை எண்ணிச் சொல்லி விட முடியாது. நாளுக்கொரு நிறுவனம் உருவாகிக் கொண்டிருக்கிறது என்றால் ஒன்றல்ல, அது இரண்டோ, மூன்றோ கூட இருக்கலாம் என்று நீங்கள் புள்ளி விவரங்களை நீட்டக் கூடும். நிலைமை அப்படி இருக்கிறது.

தேர்வு செய்யும் போது ஒரு சில மாதிரிகள் மட்டுமே இருக்கும் போது ஏற்படும் சிரமம் ஏகப்பட்ட மாதிரிகள் இருக்கும் போது ஏற்படும். ஒரு சில மாதிரிகளில் பிடித்தது இல்லாமல் போகலாம். ஏகப்பட்ட மாதிரிகளில் எது பிடித்தது என்பதைத் தேர்வு செய்வது கடினமாகப் போகலாம்.

இன்றைய காலகட்டம் அப்படித்தான் இருக்கிறது, ஏகப்பட்ட நிறுவனங்கள், ஏகப்பட்ட திறன்பேசி மாதிரிகள் என்று. இவற்றுள் ஒன்றைப் பிடித்த மாதிரி தேர்வு செய்வதும், தேர்வு செய்த அத்திறன்பேசி நம் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்வதும் முக்கியம்.

எப்படிப்பட்ட திறன்பேசியைத் தேர்வு செய்ய வேண்டும்?

அதற்குத் தேவையான தொழில்நுட்ப அறிவு என்னென்ன?

இவ்விரு கேள்விகளுக்கும் அவ்வளவு சுலபத்தில் விடை கண்டு விட முடியாது.

திறன்பேசியைப் பொருத்த வரையில் முதலில் நாம் எந்த விலையில் வாங்கப் போகிறோம் என்பதைத் தீர்மானித்துக் கொண்டுதான் வாங்குவதில் இறங்குவோம்.

அந்த விலையை அப்படியே இணையத்தில் தட்டச்சு செய்து தேடலாம். இணைய ஏகப்பட்ட திறன்பேசிகளை அள்ளிக் கொண்டு வந்து கொட்டி விடும். இனி நம் வேலை தேர்ந்தெடுக்க வேண்டியதுதான்.

நம்முடைய தேவைகள், எதிர்பார்ப்புகள் என்ன என்பதைத் தீர்மானித்துக் கொண்டு அதற்கேற்ப திறன்பேசிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

சாதாரணமாகப் பேசுவதற்கும், புலனம், முகநூல் போன்றவற்றைப் பயன்படுத்துவதற்கும் சுமாரான திறன்பேசிகளே போதுமானவை.

அதிக அளவில் செயலிகளைப் (ஆப்கள்) பயன்படுத்துவோருக்கு நடுத்தர நிலையிலான திறன்பேசிகள் போதுமானவை.

விளையாட்டுகள், காணொளி தயாரிப்புகள் போன்றவற்றிற்கு உயர்நிலை திறன்பேசிகள் தேவை.

திறன்பேசிகளின் விலை அவற்றின் தற்காலிக நினைவுத் திறன் (ரேம்) மற்றும் அவற்றின் நினைவக சேமிப்புப் பகுதி (ஸ்டோரேஜ்) அளவைப் பொருத்து மாறுபடுகிறது. தவிரவும் அதிக விலை கொடுத்து வாங்குவோருக்கு ஏற்பவும் விலை நிர்ணயம் செய்யப்பட்ட விலை உயர்ந்த திறன்பேசிகளும் உள்ளன. ஆப்பிள் மற்றும் சாம்சங்கின் எஸ் தொடர் மாதிரிகள் (S Series) போன்றவை. அலைபேசிகளில் பயன்படுத்தப்படும் செயல்திறன் நுட்ப சாதனம் (பிராசசர்) பொருத்தும் விலை மாறுபாடு இருக்கும்.

இப்போது நமக்குச் சில கேள்விகள் எழக்கூடும். தற்காலத்தில் நாம் பயன்படுத்தும் திறன்பேசிகளுக்கு எவ்வளவு தற்காலிக நினைவுத் திறன் (ரேம்) மற்றும் நினைவக சேமிப்புப் பகுதி (ஸ்டோரேஜ்) தேவைப்படும்?

இது காலத்திற்கேற்ப மாறுபடும். ஒரு காலத்தில் ஒரு ஜிபி தற்காலிக நினைவுத் திறன் (ரேம்), 16 ஜிபி நினைவக சேமிப்புப் பகுதி தேவைப்பட்ட நிலை மாறி தற்போது குறைந்தது தற்காலிக நினைவுப் பகுதி (ரேம்) 6 ஜிபியிலிருந்து 12 ஜிபி வரை தேவைப்படுகிறது.

நினைவக சேமிப்புப் பகுதியைப் பொருத்த வரையில் 128 ஜிபி முதல் 512 ஜிபி வரைதேவைப்படுகிறது.

சுமாரான ஒரு திறன்பேசி போதும் என்றாலும் நீங்கள் 6 ஜிபி தற்காலிக நினைவகத் திறன் (ரேம்), 128 ஜிபி நினைவக சேமிப்புத் திறன் கொண்ட திறன்பேசியைத் தேர்வு செய்ய வேண்டியிருக்கும் இந்த 2025இல்.

நடுத்தரமான திறன்பேசி உங்களுக்குப் போதும் என்றால்  8 ஜிபி தற்காலிக நினைவகத் திறன் (ரேம்), 256 ஜிபி நினைவக சேமிப்புத் திறன் கொண்ட திறன்பேசியைத் தேர்வு செய்ய வேண்டியிருக்கும்.

உயர்தரமான திறன்பேசி தேவை என்றால்  12 ஜிபி தற்காலிக நினைவகத் திறன் (ரேம்), 512 ஜிபி நினைவக சேமிப்புத் திறன் கொண்ட திறன்பேசியைத் தேர்வு செய்ய வேண்டியிருக்கும்.

அடுத்ததாகத் திறன்பேசிகளில் அமைக்கப்பட்டிருக்கும் செயல்திறன் சாதனம் (பிராசசர்) குறித்துப் பார்க்க வேண்டும். இதுவே நீங்கள் பயன்படுத்தும் திறன்பேசிகளின் திறனுக்குக் காரணமானவை. பதினைந்தாயிரத்துக்கு மேல் உள்ள திறன்பேசிகளில் ஒவ்வொரு நிறுவனமும் சிறந்த செயல்திறன் சாதனங்களைப் (பிராசசர்) பயன்படுத்துகின்றன. திறன்பேசி செயல்திறன் சாதனத்தில் ஸ்மார்ட் டிராகன் தற்போது பலராலும் கவனிக்கப்படுகிறது.

கூடுதலாக நீங்கள் வாங்கும் திறன்பேசியை வழங்கும் நிறுவனம் எத்தனை ஆண்டுகளுக்கு மென்பொருள் புதுப்பிப்பு (சாப்ட்வேர் அப்டேட்) மற்றும் பாதுகாப்பு வசதிகள் புதுப்பிப்பு (செக்யூரிட்டி அப்டேட்) போன்றவற்றை வழங்குகிறது என்பதையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

இணைய வழியிலோ, கடைக்கு நேரிலோ சென்று வாங்கும் போது சலுகை விலை அதிகம் வழங்கப்படுகிறது என்பதற்காக பழைமையான மென்பொருள் மற்றும் விரைவில் காலாவாதியாக இருக்கும் மாதிரிகளைத் தேர்வு செய்து விடாதீர்கள்.

எந்த நிறுவனத்தின் திறன்பேசியை வாங்குவது என்ற கேள்வி எழும் போது, நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிறுவனத்தின் திறன்பேசிகளை வாங்குவது உங்களுக்குப் பயன்படுத்துவதற்கும் மட்டுமல்லாமல் உங்களுக்கு உணர்வு ரீதியாகவும் ஒத்துப் போகும். அதற்காக நீங்கள் ஒரு நிறுவனத்தின் திறன்பேசியையே தொடர்ந்து வாங்கிப் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் இல்லை. உங்கள் விருப்பம் போல நீங்கள் விரும்பும் நிறுவனத்தின் திறன்பேசிகளைத் தேர்வு செய்யலாம். அது உங்களுக்கு வசதியாகவும் உங்கள் உணர்வுகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் ஒத்துப் போக வேண்டும் என்பது முக்கியம்.

ஏற்கனவே சந்தையில் கோலோச்சிக் கொண்டிருக்கும் நிறுவனங்களை விட புதிய நிறுவனங்கள் அதிக வசதிகள் கொண்ட திறன்பேசிகளைக் குறைந்த விலையில் தரத் தயாராக இருக்கின்றன. அது போன்ற நிலையில் அத்திறன்பேசிகளை ஏற்கனவே பயன்படுத்தியவர்களின் அனுபவங்களைப் பெற்ற பிறகு அதை வாங்குவது குறித்து பரிசீலிப்பது பயன் தரும். அல்லது நீங்கள் இதற்கென யூடியூப் காணொளிகளில் இருக்கும் அனுபவஸ்தர்களின் கருத்துகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நீங்கள் எந்தத் திறன்பேசி வாங்குவதாக இருந்தாலும் அது குறித்த ஒரு பார்வையையும் தெளிவையும் தரும் யூடியூப் காணொளிகள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. அதை ஒரு முறை பார்த்துவிட்டு, அதன் பிறகு அத்திறன்பேசியை வாங்குவது குறித்து முடிவெடுக்கலாம்.

அத்துடன் நீங்கள் வாங்க இருக்கும் அலைபேசியின் விலையை இணையத்திலும் ஒரு முறை சோதித்து வாங்குங்கள். சில நேரங்களில் கடைகளில் வாங்குவதை விட இணையத்தில் வாங்குவது குறைவாக இருக்கும். அதே போல இணையத்தில் வாங்குவதை விட கடைகளில் வாங்கும் போது ஐநூறு வரை விலை குறைவாக இருக்கும் சந்தர்ப்பங்களும் நேர்வதுண்டு. இணைய வழி, நேரில் சென்று கடை வழி வாங்குவது ஆகிய இரண்டிலும் விலையைத் தெரிந்து கொண்ட பிறகு எம்முறையில் வாங்குவது என்பது குறித்து முடிவெடுங்கள்.

சிறந்த திறன்பேசியைத் தேர்ந்தெடுத்துச் சிறப்பாகப் பயன்படுத்தி முன்னேற வாழ்த்துகள்!

*****

9 Jul 2025

இதுதான் நம் இந்தியாவா?

இதுதான் நம் இந்தியாவா?

மின்னியல் மற்றும் மென்பொருட்கள் மட்டும்தான் இந்தியாவா?

மகிழ்வுந்து தயாரிப்புகள், கட்டிடங்களின் கட்டுமானங்களும் மட்டும்தான் இந்தியாவா?

தகவல் தொழில் நுட்பமும் அதன் அதீத வளர்ச்சி மட்டும்தான் இந்தியாவா?

இந்தியாவில் விவாசயமும், சிறு தொழில்களும், கைத்தொழில்களும் முக்கியமே இல்லையா?

இந்தியாவில் ஒருவர் விவசாயியாகப் பிழைப்பதை விட ஒரு கட்டிடத் தொழிலாளியாகப் பிழைப்பது எப்படி எளிதாக மாறிப் போனது? கைத்தொழிலையோ, சிறுதொழிலையோ செய்து சம்பாதிப்பதை விட வாகன பழுது பார்ப்பவராகவும், அலைபேசி மற்றும் தொலைபேசி பழுது பார்ப்பவராகவும் சம்பாதிப்பது எப்படி எளிதாக மாறிப் போனது?

ஒரு சுகாதாரப் பணியாளராகப் பிழைப்பதை விட, மின்னியல் சாதனப் பழுது பார்ப்பவராகவோ, விற்பனையாளராகவோ பிழைப்பது எப்படி சுலபமாகிப் போனது?

சுயதொழில் தொடங்குவதை விட வெளிநாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்து அவற்றைத் தேவைக்கேற்ப ஒருங்கிணைத்து விற்பனை செய்து பிழைப்பது இந்தியாவில் ஒரு தொழிலாகவே மாறிக் கொண்டிருக்கிறது. இதைத்தான் இந்தியா இன்னும் உற்பத்தி என்று நம்பிக் கொண்டிருக்கிறது.வெளிநாட்டுப் பொருட்களை வாங்கி உள்நாட்டில் அவற்றை மாற்றி அமைத்துக் கொள்வது எப்படி உற்பத்தி ஆகும்?

வெளிநாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்து அவற்றில் இந்திய தயாரிப்பு வில்லைகளை ஒட்டி அவற்றை இந்தியப் பொருட்களாக விற்பனை செய்வதற்கு ஒரு பெரும் கூட்டமே தயாராகி விட்டது. இதை சாமர்த்தியம் என்று சொல்லலாமே தவிர, தற்சார்பிற்கான சாத்தியமாகச் சொல்ல முடியாது.

இப்படியே தொடர்ந்து கொண்டு, எத்தனை நாள்தான் உள்நாட்டில் தயாரிக்கிறோம் என்று விளம்பரம் மட்டுமே செய்ய முடியும். விளம்பரத்தில் உண்மை இல்லையென்றால் தயாரிக்கப்படுகின்ற பொருள் பல்லை இளித்து விடும். இந்தியாவிலும் அதுதான் நடக்கிறது. இங்கு உள்நாட்டு உற்பத்தி உயரவே இல்லை. மாறாக வெளிநாட்டு இறக்குமதிகள் அதிமாகி அந்தப் பொருட்களைக் கொண்டு உள்நாட்டுத் தேவைக்கான பொருட்கள் தயாரித்துக் கொள்ளப்படுகின்றன.

இந்தியாவுக்கான உலகத் தேவை என்பது மின்னியல் ஒருங்கிணைப்பிலோ (அசெம்பிள்), தரமற்ற கட்டடங்களை கட்டித் தள்ளுவதிலோ, தகவல் தொழில்நுட்ப பணியாளர்களைத் தயாரித்துத் தள்ளுவதிலோ இல்லை.

இந்திய விவசாய உற்பத்தியில், இந்திய மக்களுக்கென்ற உள்ள கைத்தொழில் மற்றும் சுயதொழில் உற்பத்தியில் உலகம் எதிர்பார்க்கும் இந்திய தேவை இருக்கிறது. உலக விவசாயமே ரசாயன மற்றும் நச்சு விவசாயமாக மாறிக் கொண்டிருக்கும் சூழலில், இந்தியா தனது பாரம்பரிய விவசாய முறையைக் கையில் எடுத்து இயற்கையான முறையில் விளைபொருட்களை விளைவித்தக் கொடுத்தால், அதற்கு மிகப்பெரிய சந்தை காத்திருக்கிறது. தனித்துவமாகப் பொருட்களைக் கலைநயத்தோடு உருவாக்குவதிலும் இந்தியாவின் கலை பாரம்பரியம் நிகரற்றது. அதற்கான சந்தை வெற்றிடமும் இந்தியாவுக்காகக் காத்திருக்கிறது.

தனித்துவமான இந்தியாவின் சாராம்சங்களை ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலேயர்கள் அழித்தார்கள், சுரண்டினார்கள், ஏமாற்றினார்கள் என்றால் அவர்கள் அந்நியர்கள் என்று சமாதானப்பட்டுக் கொள்ள காரணம் இருக்கிறது. ஆனால் சுதந்திர இந்தியாவிலும் விவசாயமும் கைத்தொழில் மற்றும் சுயதொழிலும் நசுக்கப்படுகிறது என்றால் இதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? இந்தியா வெளிநாட்டு முதலீட்டையும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நலனையும் விரும்புகிறது என்றுதானே அர்த்தம். இதற்கு ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டதற்கும், இந்தியர்கள் இந்தியாவை ஆள்வதற்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்க முடியும்?

இந்தியா முன்பு பிரிட்டனுக்கு ஒரு மிகப் பெரிய சந்தையாக இருந்தது. தற்போது உலகுக்கே மிகப் பெரிய சந்தையாக இருக்கிறது. ஆனால் இந்தியப் பொருட்களுக்காக உலக சந்தையே ஏங்கிக் கொண்டிருக்கிறது. உலகச் சந்தையின் ஏக்கத்தை இந்தியப் பொருட்கள் எப்போது நிறைவேற்றப் போகின்றன? நாம் எப்போதுதான் சுயாதீனமான இந்தியப் பொருட்களைத் தயாரிக்கப் போகிறோம்?

*****

8 Jul 2025

நீங்கள் மட்டும்தான் மகிழ்ச்சியாக இல்லையா?

நீங்கள் மட்டும்தான் மகிழ்ச்சியாக இல்லையா?

ஒவ்வொருவருக்கு இப்படி ஓர் எண்ணம் இருக்கிறது. தாம் மட்டும்தான் இந்த உலகில்மகிழ்ச்சியாக இல்லையோ என்று நினைக்கிறார்கள். தாம் மட்டும்தான் இந்த உலகில் பிரச்சனையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ என்று நினைக்கிறார்கள்.

ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பவர் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிப்பவரைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுகிறார். பத்தாயிரம் ரூபாய் சம்பாதிப்பவர் ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பவரிடம் இருக்கும் நிம்மதி தன்னிடம் இல்லையே என்று அங்கலாய்க்கிறார்.

பணம், சொத்து, நகை எல்லாம் வந்துவிட்டால் சந்தோசம் வந்து விடும் என்று நினைக்கும் மனிதர்கள், எல்லாம் வந்ததும் சந்தோசம் போய் விட்டது என்கிறார்கள்.

கிராமத்தில் சந்தோசமாக இருக்கும் மனிதர்களுக்கு நகரத்தில் பணத்தோடு வாழும் மனிதர்களைப் பார்த்து ஏக்கம். பணத்தோடு நகரத்தில் இருக்கும் மனிதர்களுக்குக் கிராமத்தில் சந்தோசமாக இருக்கும் மனிதர்களைப் பார்த்து ஏக்கம்.

கிராமத்தில் பத்தாயிரம் சம்பாதிக்கும் ஒருவர், தன்னுடன் படித்து அமெரிக்காவில் லட்ச ரூபாய் சம்பாதிக்கும் ஒருவரைப் பார்த்து ஏங்குகிறார். அமெரிக்காவில் இருக்கும் அவரோ கிராமத்தில் நெருக்கடியோ, மன உளைச்சலோ இல்லாமல் இருக்கும் கிராமத்தில் இருப்பவரைப் பார்த்து ஏங்குகிறார்.

ஒவ்வொருவருக்கும் இயல்பாகவே எல்லாரும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தாம் மட்டும் கவலையாக இருப்பதாக ஓர் எண்ணம் இருக்கிறது. ஆனால் ஒவ்வொருவரையும் ஆராய்ந்து பார்த்தால்தான் அவர்களுக்குள் இருக்கும் கவலைகளும் பிரச்சனைகளும் புரிய வரும்.

யாரையும் முன்னேற வேண்டாம் என்றோ, பணம் சம்பாதிக்க வேண்டாம் என்றோ, ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டாம் என்றோ சொல்ல முடியாது. ஆனால் அப்படி முன்னேறினால்தான், சம்பாதித்தால்தான், ஆசை நிறைவேறினால்தான் அது வாழ்க்கை என்றோ, அதுதான் சந்தோசம் என்றோ, அதுதான் நிம்மதி என்றோ நினைப்பதுதான் தவறாகப் போய் முடிகிறது.

விரும்பியபடி முன்னேறியவர் அங்கு சந்தோசமாக இருக்கிறாரா என்றால், இதற்குத்தானா இவ்வளவு கஷ்டப்பட்டோம் என்று அங்கலாய்க்கிறார். பணம் சம்பாதிப்பவர் சம்பாதித்த பின் சந்தோசமாக இருக்கிறாரா என்றால், பணம் இல்லாத போது கூட சந்தோசம் இருந்தது, இப்போது அது இல்லை என்கிறார். ஆசை நிறைவேறிய பின்பு சந்தோசம் வந்ததா என்றால், அது அதற்கடுத்த ஆசை ஒன்றை உருவாக்கிக் கொண்டு, அது நிறைவேறினால்தான் சந்தோசம் என்று போய் விடுகிறது.

ஆக புற உலகில் ஒன்றை அடைவதற்கும், ஒன்றைச் சாதிப்பதற்கும், ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் சந்தோசத்துக்கு சம்பந்தமே இல்லை. அதற்கும் நிம்மதிக்கும் தொடர்பே இல்லை. நீங்கள் நினைத்தால் நீங்கள் இருக்கின்ற நிலையிலேயே சந்தோசமாகவும், நிம்மதியாகவும் இருக்கலாம்.

அதற்காக ஏழ்மையிலேயே உழன்று, ஓர் அடிமையைப் போல இருந்து அப்படியே சந்தோசமாகவும், நிம்மதியாகவும் இருக்க வேண்டும் என்று சொல்வதாகவும் இதைப் பொருள் கொண்டு விடக் கூடாது. நீங்கள் உண்மையில் ஏழ்மையில் இருந்தால் அதைப் போக்கிக் கொள்வதற்கான அறிவும் திறமையும் உங்களுக்குத் தேவையான அளவில் இருக்கும். ஓர் அடிமை நிலையில் இருந்தால் அதைப் போக்கிக் கொள்வதற்கான முயற்சியும் போராட்ட உணர்வும் உங்களுக்கு இருக்கவே செய்யும். அதைப் பயன்படுத்தி அவற்றிலிருந்து நீங்கள் உங்கள் நிலையை மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும்.

இங்கே சொல்ல வருவது மகிழ்ச்சியோ, நிம்மதியோ அளவு கடந்த செல்வத்திலோ, அதீத ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதிலோ, இந்த அளவுக்கு முன்னேறினால்தான் என்பதிலோ இல்லை என்பதுதான்.

உங்களுக்கு உணவு, உடை, உறைவிடம் போன்ற அடிப்படைத் தேவைகள் நிறைவேறியிருக்கிறதா, அன்றாடம் சம்பாதிக்கும் வேலை இருக்கிறதா? நிச்சயம் நீங்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் இருக்கலாம்.

அடுத்தவர்களைப் பார்த்து, அவர்களுடன் ஒப்பிட்டு, நீங்களாக உங்களுக்கு விருப்பம் இல்லாத ஒன்றை மற்றவர்கள் இப்படியெல்லாம் நினைக்கிறார்கள் என்பதற்காக அதைத்தான் முன்னேற்றம் எனக் கருதிக் கொண்டு உங்கள் சந்தோசத்தையும், நிம்மதியையும் ஒருபோதும் இழக்க வேண்டியதில்லை.

*****

7 Jul 2025

100 ஆவது அடியை அடைய 99 அடிகள் தேவை!

100 ஆவது அடியை அடைய 99 அடிகள் தேவை!

இன்னும் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டுமோ

ஏதாவது ஒன்று சிக்கினால்

எழுந்து போய் விடலாம்

எதுவும் சிக்கும் போல் தோன்றவில்லை

எழுந்து போகவும் தோன்றவில்லை

வெற்றி கிடைக்காத போது

எடுத்த எல்லா நடவடிக்கைகளும் தவறென்று படுகிறது

சின்னதாய் ஒன்று கிடைத்தால் கூட போதும்

அப்படிக் கிடைக்காத போது

முயற்சி செய்து ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது

ஆனால்

முயற்சியின் கணத்தில் உட்கார்ந்திருக்கும் போதுதான்

ஏதோ ஒன்று கிட்டுகிறது

கிட்டாமல் போகும் பொழுதிற்காக

முயற்சியைக் குறை கூறக் கூடாது

ஒன்றைப் பற்றி பல விதமாகப் பல முறைகளில்

முயல்கையில்தான் ஏதாவதொன்று கிட்டுகிறது

கிட்டவில்லை என்பதற்காக விட முடியாது

ஏன் கிட்டவில்லை என்பது தெரியும் வரை

ஏதாவது செய்து கொண்டுதான் இருக்க வேண்டும்

எதிர்பார்ப்பதெல்லாம் கிடைக்க வேண்டும் என்ற

அவசியம் எல்லாம் இல்லை

அதற்காக எதிர்பார்ப்பதை நிறுத்த முடியாது

புதிய புதிய முறைகளில்

புதிய புதிய வழிகளில்

ஏதாவது முயன்று கொண்டே இருக்க வேண்டும்

தோண்ட தோண்ட நீர் ஊறுவதைப் போலத்தான்

நீர் ஊறாது போனாலும் ஊறும் வரை

ஆழம் தேடிச் சென்றுதான் ஆக வேண்டும்

எல்லாவற்றிலும்

அதற்கான முயற்சிகள் எதையும் எடுக்காமல்

குறை சொல்ல முடியாது

எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்தான்

போகும் பாதையைத் தெளிவுபடுத்திக் கொண்டு போகிறது

முதலடி இல்லாமல் இரண்டாம் அடி இல்லை

இரண்டாம் அடி இல்லாமல் மூன்றாம் அடி இல்லை

முதலடி நூறாவது அடியைக் காட்டாது

முதலடி இரண்டாவது அடியைக் காட்டும்

இரண்டாம் அடி மூன்றாவது அடியையும்

தொண்ணூற்று ஒன்பதாவது அடி நூறாவது அடியையும் காட்டும்

தொடர்ந்து அடியெடுத்து வைக்காமல் இருந்து கொண்டு

கடக்காத தொலைவைக் கடக்க முடியாத தொலைவு என்று

குறை கூறிக் கொண்டு இருக்க முடியாது

*****