21 Jul 2025

பைசா பிரயோஜனம் இல்லாத பிரச்சனைகள்!

பைசா பிரயோஜனம் இல்லாத பிரச்சனைகள்!

பையில் பத்து பைசா இருந்ததில்லை

நிம்மதியாக இருந்தோம் என்கிறார்

இப்போதும் நிம்மதியாக இருக்க வேண்டியதுதானே

இன்று பத்து பைசாவே இல்லை.

*

எப்போது இரு நாணயங்களுக்கு இடையே வித்தியாசம் தெரியவில்லையோ அப்போதே அவ்விரு நாணயங்களில் மதிப்பு குறைந்தது வழக்கொழிந்து போகப் போகின்றது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இப்படித்தான் ஐம்பது பைசாவுக்கும் ஒரு ரூபாய்க்கும் வித்தியாசம் தெரியாமல் போன போது ஐம்பது பைசா வழக்கொழிந்து போய் விட்டது. இப்போது ஒரு ரூபாய்க்கும் இரண்டு ரூபாய்க்கும் அப்படித்தான் இருக்கிறது. விரைவில் ஒரு ரூபாய் வழக்கொழிந்துவிடும். பிறகு இரண்டு ரூபாய்க்கும் ஐந்து ரூபாய்க்கும் வித்தியாசம் தெரியாமல் போகும் போது இரண்டு ரூபாய் வழக்கொழிந்து விடும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இப்போது ஐந்து ரூபாய்க்கும் இருபது ரூபாய்க்கும் வித்தியாசம் தெரியாமல் இருப்பதை நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.இதில் எது வழக்கொழியப் போகிறதோ என யோசிக்க யோசிக்க குழப்பமாக இருக்கிறது.

*

99 ரூபாய் கட்டணம்

100 ரூபாயை நீட்டினேன்

பாக்கியை உடனே கொடுத்து

ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்

அந்த ஒரு ரூபாய் கடவுள்

*

ஒரு கவிதைக்காக

எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும்

என்பதெல்லாம் தெரியாது

பார்ப்பவர்கள் வெட்டியாக

உட்கார்ந்திருப்பதாகச் சொல்லலாம்

வீணாய்ப் பொழுதைக் கழிப்பதாகக் கூறலாம்

எழுதிய எண்பது கவிதைகளில்

ஒன்று பத்திரிகையில் பிரசுரமாகி

இருபது ரூபாய் சன்மானம் வரும் போது

அது உண்மைதானோ என்று

எங்கிருந்தோ எப்படியோ தோன்றலாம்

*****

No comments:

Post a Comment