ஞாயிற்றுக்கிழமை மசாலாவும் இன்றைய பட்ஜெட்டும்…
ஞாயிற்றுக்
கிழமை என்றால் கசாப்புக் கடைகளில் ரத்தம் தெறிக்க, சமையறையில் மசாலா மணக்கும் நாள்
இந்தியர்களுக்கு.
அதுவும்
இந்த ஞாயிற்றுக் கிழமை கொஞ்சம் ஸ்பெஷல்.
அதே
ரத்தமும் மசாலாவும் மாறி மாறி நாட்டிலும் வீட்டிலும் தெறிக்கலாம், மணக்கலாம், அப்படி
ஆகாமல் புஸ்வாணமும் ஆகலாம்.
இந்த
ஸ்பெஷலுக்குக் காரணம் இன்றுதான் பிப்ரவரி மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை. மாதமே
விடுமுறையில் பிறக்கிறது. அத்துடன் இந்தியாவின் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல்
செய்யப்படுகிறது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றுதான் ஞாயிற்றுக் கிழமையில் பட்ஜெட்
தாக்கல் செய்யப்படுகிறதாம்.
இந்த
ஞாயிற்றுக் கிழமை ஒளி பிறக்கச் செய்யுமா? இருள் சூழச் செய்யுமா? என்று ஒவ்வொரு வீட்டின் தகப்பன்சாமியும் பிபி மீட்டரைப்
பொருத்திக் கொண்டு தொலைக்காட்சி முன்போ, அலைபேசி முன்போ இன்று தவம் கிடக்கக் கூடும்.
ஷேர்மார்கெட் இன்று இஸ்ரோ ராக்கெட் போல விண்ணில் பறந்தாலும் பறக்கலாம், அஸ்க்கு புஷ்க்காகி
அதள பாதாளத்தில் வீழ்ந்தாலும் வீழலாம்.
நமது
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது ஒன்பதாவது பட்ஜெட்டைத் தாக்கல்
செய்யப் போகிறார். அவருக்கு இது ஒரு சாதனைப் பயணம். வேறு எந்த இந்திய நிதி அமைச்சரும்
இத்தனை பட்ஜெட்களைத் தொடர்ச்சியாகத் தாக்கல் செய்யததில்லை. அவருடைய சாதனையில் நமக்கெல்லாம்
தேவைப்படுவது சலுகைதான். அந்தச் சலுகைகள் இந்த பட்ஜெட்டில் கிடைக்குமா?
விமானத்தில்
இருக்கும் கருப்புப் பெட்டியும், பட்ஜெட்டும் ஒன்றுதான். இரண்டையும் திறக்கும் வரை
அதில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியாது. நிர்மலா சீதாராமன் தன்னுடைய
கருப்புப் பெட்டியான அந்த டேப்லெட்டைத் திறக்கும் போது நம்முடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறியதா
என்பது தெரிந்து விடும்.
இனி
வரும் காலம் சிலிக்கான் சிப்புகளின் காலம். பட்ஜெட்டில் 'ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்'
மற்றும் செமிகண்டக்டர் உற்பத்திக்கு ஆயிரம் கோடிக்கும் மேல் ஒதுக்கி, இந்தியாவை ஒரு
டிஜிட்டல் ஹப்பாக மாற்றும் திட்டங்கள் நிச்சயம் இருக்கும். 'விக்சித் பாரத் 2047' என்பது
ஒரு கனவு என்றால், அதற்கான பேட்டரி இந்த பட்ஜெட்டாக இருக்கும். அதில் சந்தேகமே வேண்டியதில்லை.
இராணுவத்துக்கான
ஒதுக்கீடும் இந்தியர்களின் பிபி, சுகர் போல அசத்தலாக எகிறித்தான் இருக்கும். அதிலும்
எந்த ஐயப்பாடும் வேண்டியதில்லை.
ஆனால்,
சந்தேகத்தோடு அறிவிப்பு வருமா, வராதா என்பதற்கான சில எதிர்பார்ப்புகள் இருக்கத்தானே
செய்கின்றன. அவை இவை,
கடந்த
முறை 12 லட்சம் வரை வருமான வரி விலக்குக் கொடுத்தார் நிர்மலா சீதாராமன். இந்த முறை
அது 15 லட்சம் ஆகுமா என்பதுதான் மாதச் சம்பளக்காரர்களின் எதிர்பார்ப்பு. அத்துடன் அந்த
நிலைக்கழிவு எழுபத்து ஐந்தாயிரத்திலிருந்து ஒரு லட்சம் ஆகி விட்டால் மாதச் சம்பளக்காரர்களின்
முகத்தில் ஒரு சின்ன மந்தகாசம், ஸ்வீட் எடு கொண்டாடு சந்தோசம் அரும்பும்.
பணவீக்கம்
என்பது ஒரு கண்ணுக்குத் தெரியாத வைரஸ். அது தற்போது கொரோனா வைரஸைத் தாண்டிக் கோர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. இது சாமானியர்களின் பர்ஸை
அடிக்கடிக் காய்ச்சல் அடிக்க வைத்து ஜலதோசம் பிடிக்க வைத்துவிடுகிறது. பணவீக்கத்தைக்
குறைக்க ஏதேனும் நடவடிக்கைகள் பட்ஜெட்டில் இருக்குமா என்பதோடு, இன்னும் ஜிஎஸ்டி கொஞ்சம்
குறையுமா என்பதுதான் சாமானியர்களின் எதிர்பார்ப்பு. இன்ஷ்யூரன்ஸ் பிரீமியத்தில் இன்னும்
கொஞ்சம் வரிச்சலுகை கிடைத்தால் அது சாமானியர்களின் பர்ஸ்க்கு எக்ஸ்ட்ரா சார்ஜ் ஏத்தும்.
நடக்குமா எனப் பார்க்க வேண்டும்.
என்னதான்
நடக்கும் நடக்கட்டுமே, கடனில் காசு தொலையட்டுமே, நிவாரணத்தில் வாழ்க்கை விடியட்டுமே
என்று நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு 'பிஎம் கிசான்' நிதி அதிகரிக்குமா?
அடித்து
வெளுத்துக் காயப்போட்டு சாயம் வெளுத்துப் போய் கிடக்கும் ஜவுளித் துறைக்கு, முக்கியமாக
திருப்பூர் போன்ற ஊர்களுக்கு ஏற்றுமதி சலுகை கிடைக்குமா?
அமெரிக்க
அதிபர் டொனால்ட் டிரம்பால் கைப்புள்ள கணக்காய்க் கிடக்கும் ஏற்றுமதி மற்றும் சிறுகுறுந்தொழில்களுக்கு
பூஸ்ட் ஏற்றும் சமச்சாரங்கள் ஏதேனும் இருக்குமா?
அதிர்ச்சி
மேல் அதிர்ச்சி கொடுத்து அதனால் மயங்கி விழ வைத்து, பின் தெளிய தெளிய அடித்துக் கொண்டிருக்கும்
தங்கம் மற்றும் வெள்ளி விலைக்கு ஏதேனும் கடிவாளம் போடப்படுமா?
இப்படி
இன்னும் நீளும் லிஸ்ட் அதிகம்.
பட்ஜெட்
என்பது வெறும் எண்களின் விளையாட்டு அல்ல; அது நூற்று ஐம்பது கோடி மக்களின் நம்பிக்கையின்
கணக்கு.
எது
எப்படியோ? இந்த பட்ஜெட்டில் சாமானியனுக்கான ஒரு சின்ன நிவாரண மாத்திரையாவது நிச்சயம்
வைக்கப்பட்டிருக்கும் என்று நம்புவோம்.
பட்ஜெட்
தாக்கல் 11 மணிக்கு ஆரம்பமாகி விடும். அது முடிந்ததும் அந்த இனிப்பு அல்வா (பட்ஜெட்டுக்குக்கு
அடிக்கல் நாட்டும் போது கிண்டப்படுவது) அரசுக்கா அல்லது நமக்கா என்பது தெரிந்து விடும்.
*****
