நூலகத்திற்குள் இல்லாத தேநீர் கடை!
நூலகங்களுக்குப்
போனால் நிறைய ஆச்சரியங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
எப்படி
இருந்த நூலகம் இப்படி இருக்கிறதே என்று ஏக்கப் பெருமூச்சு விட வேண்டியிருக்கிறது.
நகரங்களிலும்
மாநகரங்களிலும் பெருங்கூட்டம் இல்லாத கட்டடங்களில் ஒன்றாக நூலகங்கள் மாறிக் கொண்டு
இருக்கின்றன.
வார
இதழ்கள், மாத இதழ்கள் எல்லாம் அவ்வளவு நேர்த்தியாக மேசையில் அப்படியே இருக்கின்றன.
கலைத்துப் போட கூட ஆளில்லை. காற்றாடிக் கொண்டிருக்கின்றன. என்ன செய்வதென்று தெரியாமல்
மின்விசிறிக் காற்றில் சதிராடிக் கொண்டிருக்கின்றன.
முன்னொரு
காலத்தில் இவையெல்லாம் இப்படியா இருந்தன? கலைந்து, சிதறி, அட்டைப் பக்கம் இல்லாமல்,
ஆங்காங்கே சில பக்கங்கள் கிழிக்கப்பட்டு பயங்கரமாக இதழ்கள் பயன்படுத்தப்பட்ட காலம்
ஒன்று உண்டு.
சில
இதழ்களைப் படிக்க அங்கே அமர்ந்திருப்பவர்களிடையே, போட்டா போட்டியே நடக்கும். அதிர்ஷ்டம்
இருப்பவர்களுக்குத்தான் ஆனந்த விகடனும் குமுதமும் கிடைக்கும்.
பிடித்த
புத்தகங்களை வேறு யாராவது எடுத்துச் சென்று விடுவார்களோ என்று அவற்றைக் கண்டறிந்த மாத்திரத்தில்,
மற்ற புத்தகங்களிடையே ஒளித்து வைக்கும் பழக்கம் அன்று பலருக்கு உண்டு. அந்தப் புத்தகங்கள்
எல்லாம் தன்னை யாரேனும் தொட்டுப் பார்க்க வருவார்களா என்று ஏக்கப் பெருமூச்சுக் கொண்டு,
முதிர்கன்னிகளைப் போல இருப்பதைக் கண்டு, மனம் வெதும்புகிறது இன்று.
நூலகத்திற்குப்
புதிய புத்தகங்கள் வரும் போது, அவற்றை முதல் ஆளாகப் படித்து விட வேண்டும் என்று வெறி
பிடித்த வாசகர்கள் நூலகத்திற்கு இருந்திருக்கிறார்கள்.இன்று நூலகம் எந்தப் பக்கம் இருக்கிறது என்று தெரியாத நபர்கள்தான்
நாட்டில் நிறைந்திருக்கிறார்கள். நூலகம் என்ற சொல்லைக் கேள்விப்படாத ஒரு தலைமுறை உருவாகி
விடுமோ என்று அஞ்சக் கூட வேண்டியிருக்கிறது.
சுந்தர
ராமசாமி, ஜானகிராமன், ஜெயகாந்தனை விடுங்கள். ராஜேஸ்குமார் நாவல்களைப் படிக்கக் கூட
ஆளில்லை.
யார்
கண் பட்டதோ? எவர் கண் பட்டதோ?
நூலகத்தை
நோக்கி வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருக்கிறது. போட்டித் தேர்வுக்குத்
தயாரிப்பவர்களைத் தவிர மற்றவர்களைக் காண்பது அரிதாக இருக்கிறது. அவர்கள் மட்டும் இல்லையென்றால்
நூலகத்தின் நிலை என்னாவது? அதற்காகவேனும் அரசாங்கம் போட்டித் தேர்வுகளை சில ஆண்டுகளுக்கு
ஒரு முறையேனும் நடத்த வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
நீ மட்டுமென்ன
ஒழுங்கா என்றால்… அடிக்கடி போய்க் கொண்டிருந்த நானும் ஆடிக்கொரு தரம் அமாவாசைக்கு ஒரு
தரம்தான் போய்க் கொண்டிருக்கிறேன்.
ஏன்
இந்த நிலை? எங்கே நடந்தது பிழை?
நமக்கு
நூலகத்தை விட போவதற்கு வேறு முக்கியமான இடங்கள் இருக்கின்றன.
குறிப்பாக
ஜனநாயகனோ, விடா முயற்சியோ, கூலியோ வரும் போது நாம்தான் என்ன செய்ய முடியும்? நாம் முக்கியமாகச்
செல்ல வேண்டிய இடமாக அது ஆகி விடுகிறது.
டீக்கடையில்
தினசரிகளை வாசிக்க கூடும் கூட்டம் கூட நூலகத்திற்கு வராமல் இருப்பதற்கு, நூலகத்திற்குள்
டீக்கடை இல்லாமல் இருப்பது ஒரு காரணமாக இருக்குமோ என்னவோ!
ஒரு
மழைக்காலத்தில் நூலகத்தில் ஒதுங்கினேன் என்று வருங்காலத்தில் யாரும் எழுதாமல் இருக்க
வேண்டும். எழுதி என்ன? அதை எழுதி வைத்த அந்தப் புத்தகத்தைப் படிக்க ஆள் வர வேண்டுமே
அந்த நூலகத்துக்கு?
*****