28 Jan 2025

வியக்க வைக்கின்ற விந்தை மனிதர்!

வியக்க வைக்கின்ற விந்தை மனிதர்!

இந்த மனிதரை நினைத்தால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

யார் அந்த மனிதர் என்கிறீர்களா?

நீங்களும் உள்ளுக்குள் வைத்து வியந்து கொண்டிக்கும் மனிதர்!

நீங்கள், நான் என்றில்லாமல் இந்த உலகமே உள்ளத்தால் வியந்து கொண்டிருக்கும் மனிதர்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்தான் அந்த மனிதர்.

அவருடைய வீரம், கல்வி, ஆளுமை – இவற்றைத் தாண்டி நான் வியப்பது ஆணையும் பெண்ணையும் சமமாகப் பார்த்த அவரது பார்வையைத்தான்.

உலகெங்கும் இராணுவம் ஆண்களைக் கொண்டு இயங்கிக் கொண்டிருந்த போது பெண்களைக் கொண்டு இராணுவத்தை அமைத்தது அவர்தான்.

இது எப்படிப்பட்ட ஒரு பார்வை!

ஆண் – பெண் சமத்துவத்தை நோக்கிய சரியான பார்வை! சரித்திரப் பார்வை!

ஆண்களும் பெண்களும் இணையாமல் முழுமையான வெற்றி என்பது சாத்தியமில்லை என்கிற புரட்சிப் பார்வை இது.

இந்திய ராணுவத்திலேயே 1992இல்தான் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். ஆனால் நேதாஜி 1942 இல் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்குகிறார். 1943 இல் கேப்டன் லெட்சுமி சேகல் தலைமையில் ஜான்சிராணி படை என்ற பெயரில் பெண்களின் ராணுவத்தை உருவாக்குகிறார்.

தமிழகக் காவல் துறையை எடுத்துக் கொண்டால் 1973இல்தான் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து மகளிர் காவல் நிலையம் உருவாக 1992 வரை ஆகி விட்டது.

போர்களில் வேலுநாச்சியார், ஜான்சிராணி போன்ற இந்தியப் பெண்கள் போரிட்டிருந்தாலும், ரஷ்யா சுல்தானா என்கிற பெண்ணரசி இந்தத் தேசத்தை ஆண்டிருந்தாலும், புரட்சிப் பெண்மணி இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராக இருந்திருந்தாலும் அவர்கள் கூட பெண்களைக் கொண்ட ஒரு படையை உருவாக்கினார்களா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

நேதாஜி அதைச் செய்திருக்கிறார்.

அதனாலேயே எவ்வளவோ விசயங்களில் நம்மை ஆச்சரியப்படுத்தும் அந்த மனிதர், இந்த விசயத்தில் நம்மை அளவுக்கு அதிகமாகவே வியக்க வைக்கிறார்.

இறந்தும் இறவாத மனிதர் அவர்!

அவரது மரணம் கூட அசாதாரணம். அது இன்று வரை உலகம் அறிய முடியாத புதிராகத்தான் இருக்கிறது. என்றாலும், வீரர்கள் மரணித்தாலும் அவர்களின் வீரம் மரணிப்பதில்லை.

“நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்

வித்தகர்க்கு அல்லால் அரிது.” (குறள், 235)

என்கிற வள்ளுவர் வாக்கிற்கு நேதாஜிதான் சரியான உதாரணம்.

இப்படிப்பட்ட ஒரு மனிதரை நினைத்து நினைத்து வியக்காமல் எப்படி இருக்க முடியும் என்று சொல்லுங்கள்!

*****

No comments:

Post a Comment

ஞானத்தின் பாட்டு

ஞானத்தின் பாட்டு அவசரப்பட முடியாது நிதானமாகச் செல்ல வேண்டும் பல நேரங்களில் பிடிபடிவதற்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் அதிகம்...