ஆப்படிக்கும் ஆப்புகள்!
செயலிகள்
எனும் ஆப்கள் (App) சூழ் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆப்கள் சூழ் உலகில்
சிலபல நேரங்களில் ஆப்புகளை அசைத்து விட்ட குரங்குகளைப் போல அகப்பட்டுக் கிடந்துழவும்
வேண்டியிருக்கிறது.
எளிமையாகப்
பணம் செலுத்த உதவும் ஆப்களில் கடன் வாங்கி சிக்கிக் கொண்டால் அதோ கதியாகி விடுகிறது.
பொழுதுபோக்கிற்காக
விளையாடும் ஆப்களில் சூதாட்டம் ஆடினால் கதை கந்தலாகி விடுகிறது.
ஒவ்வொரு
நாளும் ஆப்கள் அடுத்த கட்ட விஸ்வரூபத்தை எடுத்துக் கொண்டு இருக்கின்றன. அதில் ஒன்றுதான்
எண்ம தங்கம் எனப்படும் டிஜிட்டல் தங்கம் வாங்குவதற்கான ஆப்கள்.
தங்கத்தை
ஒரு கிராம் வாங்குவதென்றால் பத்தாயிரத்திற்கு மேல் ஆகும் நிலையில் பத்து ரூபாய்க்குக்
கூட வாங்க வசதி செய்திருப்பது இந்த டிஜிட்டல் தங்க ஆப்களின் சிறப்பம்சம். அந்தச் சிறப்பம்சமே
பேரச்சமாக மாறியிருப்பதுதான் இந்த ஆப்களின் பின்னணியில் இருக்கும் கோர அம்சம்.
ஒரு
கிராம் தங்கம் பத்தாயிரத்திற்கு மேல் என்றாலும் அதை வாங்கி விட்டால் உங்களுக்கே உங்களுத்தான்.
அதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் விற்கலாம், செய்கூலி, சேதாரம் போனாலும் தங்கத்தின்
தூய்மைக்கேற்ப எட்டாயிரமோ ஒன்பதாயிரமோ கைக்கு வந்து விடும். ஏன் விற்க வேண்டும் என்று
நினைத்தால் அதை அடகு வைக்கலாம். அதை ஏன் அடகு வைக்க வேண்டும் என்று நினைத்தால், அப்படியே
பூட்டி வைத்து தேவைப்படும் போது என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். வாங்கிய பணத்துக்கான
சொத்து உங்கள் கைக்கு வந்து விடுகிறது.
இதையே
ஏன் எண்ம தங்க செயலிகளில வாங்கக் கூடாது?
டிஜிட்டல்
தங்க ஆப்களில் தங்கத்தை வாங்குவது சுலபமாக இருக்கிறது. விற்பது பல நேரங்களில் கடினமாக
இருக்கிறது.
டிஜிட்டல்
தங்க ஆப்கள் என்ன சொல்கின்றன தெரியுமா?
நீங்கள்
வாங்கும் தொகைக்கேற்ப தங்கத்தை வாங்கி வைப்போம் என்கிறார்கள். அதை எங்கே வாங்கி வைப்பார்கள்?
எப்படி வாங்கி வைப்பார்கள்? அவர்கள் வாங்கி வைக்கும் தங்கத்தின் தூய்மை எந்த அளவுக்கு
இருக்கும்? அவற்றையெல்லாம் நாம் பார்வையிட முடியுமா? அல்லது சோதிக்கத்தான் முடியுமா?
நம்
கண் பார்வையில் கடை விரித்துக் காணாமல் போகும் எத்தனையோ நிதி நிறுவன மோசடிகளைப் பார்க்க
வேண்டியிருக்கிறது. இந்த டிஜிட்டல் தங்க ஆப்களை நாம் அலைபேசிகளில்தான் பார்க்கிறோம்.
நேரில் பார்ப்பதில்லை. கண்ணால் கண்டதே காணாமல் போகும் போது, கண்ணால் காணாமல் இருக்கும்
இவற்றின் நிலை என்னவாகும்?
நாட்டில்
நன்றாக இயங்கிக் கொண்டிருக்கும் நல்ல நிறுவனங்களே பல நேரங்களில் நட்டமடைகின்றன, திவாலாகின்றன.
அப்படி இந்த டிஜிட்டல் தங்கத்தை வாங்கி வைக்கும் நிறுவனங்கள் நட்டமோ, திவாலோ அடைந்தால்
ஆப்களின் மூலம் வாங்கி வைத்த உங்களுடைய தங்கம் என்னவாகும்?
வங்கியில்
நீங்கள் பாதுகாப்பென நம்பி வைத்திருக்கும் நிரந்தர வைப்புத் திட்டத்திற்கே (பிக்சட்
டெபாசிட்) வங்கிகள் காப்பீடு செய்து வைத்திருக்கின்றன என்கிற போது இந்த டிஜிட்டல் தங்க
ஆப் நிறுவனங்கள் அப்படி வாங்கி வைத்திருக்கும் தங்கத்திற்காக எதாவது காப்பீடு செய்து
வைத்திருக்கின்றனவா? அதை நீங்கள் எப்படி அறிந்து கொள்வீர்கள்?
தங்கத்தின்
எதார்த்த நிலை என்ன தெரியுமா?
தங்கம்
எந்தக் காலத்திலும் விலை மதிக்க முடியாத பொருள். அதனால் பலரும் ஆசை ஆசையாய் வாங்கி
வைத்த தங்கத்தை வங்கிப் பெட்டகத்தில் (லாக்கர்) வைத்திருக்கிறார்கள். இந்த டிஜிட்டல்
தங்க ஆப் நிறுவனங்கள் அப்படி வாங்கிய தங்கத்தை எங்கே பாதுகாப்பாக வைத்திருப்பார்கள்?
ஒருவேளை அந்தத் தங்கத்திற்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் என்ன செய்வார்கள்?
இவை
எல்லாவற்றையும் விட முக்கியமான இன்னொரு கேள்வி இருக்கிறது.
இந்த
டிஜிட்டல் தங்க ஆப் நிறுவனங்கள் ஏமாற்றி விட்டால் யாரிடம் முறை செய்வது?
இவற்றைக் கண்காணித்து ஒழுங்குபடுத்துவதற்கு அமைப்புகள்
இருக்கின்றனவா நம் நாட்டில்? துரதிர்ஷ்டவசமாக அப்படி எந்த அமைப்புகளும் இல்லை என்று
அண்மையில் பங்குச் சந்தை ஒழுங்காற்று நிறுவனமே (செபி) கைவிரித்து விட்ட நிலையில் எந்த
நம்பிக்கையில் டிஜிட்டல் தங்க ஆப்கள் மூலம் தங்கத்தை வாங்குவீர்கள்?
அது
இருக்கட்டும். இப்போது, நாம் எப்படித்தான் தங்கம் வாங்குவது?
தங்கத்தைத்
தங்கமாகவே வாங்குவது சிறந்த முறை.
அதில்
செய்கூலி, சேதாரப் பிரச்சனைகள் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் நகையாக வாங்காமல்
தங்க நாணயங்களாகவோ, கட்டிகளாகவோ வாங்கிக் கொள்ளலாம்.
பாதுகாப்பு
காரணங்களுக்காக எண்ம முறையில் (டிஜிட்டல்) வாங்க வேண்டும் என்றால், இந்திய மத்திய வங்கியின்
(ரிசர்வ் வங்கி) தங்கப் பத்திரங்கள் இருக்கின்றன. பங்குச் சந்தையில் (இடிஎப்பில்) வர்த்தகமாகும்
கோல்ட்பீஸ்கள் உள்ளன. இவற்றைப் பரிசீலிப்பது தங்கத்தை வாங்குவதில் பாதுகாப்பான முறைகளாக
இருக்கும்.
தங்கத்தை
வாங்கும் போது நாம் அதிகமாக யோசிக்க வேண்டியிருக்கிறது. காரணம், எது விலைமதிப்புமிக்கமாக
இருக்கிறதோ அவற்றிலும் மோசடிகளும் அதிகமாக இருக்கின்றன.
*****

No comments:
Post a Comment