13 Jun 2024

வயிற்றைக் குப்பைத் தொட்டியாக்காதீர்கள்!

வயிற்றைக் குப்பைத் தொட்டியாக்காதீர்கள்!

லங்கணம் பரம ஓளஷதம் என்பார்கள்.

பட்டினியைப் போன்ற பக்குவமான மருந்தில்லை.

இதன் பொருள்தான் என்ன? பட்டினி கிடப்பதைப் போன்ற மருந்து இந்த உலகில் வேறு இல்லை என்பதுதான் இதன் பொருள்.

பட்டினி எப்படி மருந்தாகும்?

ஒன்றும் இல்லாமல் இருப்பது மருந்தாகுமா?

இங்கு எதுவும் செய்யாமல் இருப்பது மருந்தாகிறது, பூஜ்யம் எண்களுடன் சேர்ந்து மதிப்பைப் பெறுவதைப் போல. எப்போது உண்பதுடன் சேர்ந்து உண்ணாமல் இருப்பது மருந்தாகும் மதிப்பைப் பெறுகிறது.

எல்லா நோய்களுக்கும் பட்டினி கிடப்பது தீர்வாகுமா என்றால் பெரும்பான்மையான நோய்களுக்கு அது நல்ல ஒரு தீர்வாக இருப்பதை நீங்களே அனுபவத்தில் உணர முடியும்.

வாரத்தில் ஒரு நாள் பட்டினி கிடந்து பார்க்கும் போது அதனால் உடலுக்குக் கிடைக்கும் கலகலப்பை நீங்கள் உணர முடியும்.

நாளுக்கு ஒரு வேளை பட்டினி கிடந்தால் நீங்கள் எந்த நோய் நொடியும் இல்லாமல் இருக்க முடியும். அதாவது மூன்று வேளைக்கு ஒரு வேளை பட்டினி என்றால் ஒரு நாளைக்கு இரு வேளை உணவை உட்கொண்டால் உடலுக்கும் மனதுக்குமான சுறுசுறுப்பு தனித்த அளவில் இருக்கும்.

இது உண்மையா என்றால், இந்த உண்மையைச் சோதித்துப் பார்ப்பதில் உங்களுக்கு எந்த விதமான சிரமும் இல்லை. பட்டினி கிடந்தே அனுபவத்தில் சோதித்துப் பார்த்து விடலாம்.

பாரதியார் இப்படிப் பாடுகிறார்.

“நோயிலே படுப்பது என்ன கண்ணபிரானே?

நோன்பிலே உயிர்ப்பது என்ன கண்ணபிரானே?”

மத நம்பிக்கை உடையவர்கள் விரதம் இருப்பது, நோன்பு இருப்பது என்று பட்டினியை ஓர் ஆன்மீகச் செயல்பாடாகச் செய்கிறார்கள்.

பட்டினி உடலுக்கு ஓய்வைத் தருகிறது. அந்த ஓய்வில் உடல் உள்ளுறுப்புகள் தங்களைப் புதுப்பித்துக் கொள்கின்றன.

இருக்கும் போது இல்லாமலிருக்கும் ஒரு தத்துவத்தையும் இந்தப் பட்டினியானது சொல்கிறது. அதாவது உண்பதற்கான உணவு இருந்தும் ஒரு வேளை பட்டினி கிடப்பது உடலுக்கு நன்மையைத் தருகிறது. அதாவது, இருந்தும் இல்லாமலிருப்பது அவ்வளவு நன்மைகளைத் தருகிறது.

உண்பதற்கு இடையே உண்ணாமல் பட்டினி கிடப்பது மனிதனின் வாழ்நாளை உயர்த்துகிறது. உண்பதற்கு இடையே தின்று கொண்டே இருப்பது மனிதனின் வாழ்நாளை அழித்து விடுகிறது.

பசித்தாலும் அளவோடு உண்ண வேண்டும்.

பசிக்காவிட்டால் சாப்பிட வேண்டுமே என்று சாப்பிட வேண்டாம். பட்டினி யோடு இருங்கள். அது இயற்கையாகவே உடல் வேண்டும் பட்டினி. வாரம் முழுவதும் நன்றாகப் பசித்து நீங்கள் உண்டு கொண்டிருந்தாலும் ஒரு வேளையாவது பட்டினி இருக்கப் பழகுங்கள். ஆரம்பத்தில் பட்டினி இருப்பது கஷ்டமாக இருந்தாலும் பழகி விட்டால் இது மிக இயல்பாகி விடும், எளிதாகி விடும்.

நமது விருந்தோம்பலிலும் விருந்துகளிலும் நாம் வழக்கமாகச் செய்யும் தவிர்க்க முடியாத ஒரு தவறு இருக்கிறது.

அன்புக்காகப் பாசத்திற்காகப் பரிமாறுவதையோ, கொடுப்பதையோ வேண்டாம் என்று சொன்னால் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்று நினைத்து அதை அப்படியோ ஏற்றுக் கொள்வதுதான் அந்தக் குறைபாடு. இன்னும் கொஞ்சம் என்று பண்டங்களையோ பலகாரங்களையோ யார் பரிமாறினாலும் அதை மறுக்க முடியாமல் வயிற்றுக்குள் தள்ளுவதுதான் நம் பிரச்சனை. இந்தத் தவறாலும், பிரச்சனையாலும் நம் வயிறு குப்பைத் தொட்டியாகி விடுகிறது. குப்பைத் தொட்டியாகும் வயிறு நாற்றம் எடுப்பதுதான் நோய்களின் வடிவங்கள்.

இன்னும் கொஞ்சம் என்று யார் எவ்வளவு அன்பாகச் சொல்லி எதைச் சாப்பிட சொன்னாலும் அதை அதே அன்போடு மறுத்து விடுங்கள்.

அன்பின் மிகுதியால் கூடுதலாக ஒன்றை வழங்கும் நிலையில் அதை வேண்டாம் என்று ஒருவர் மறுத்தால் அந்த மறுப்பையும் ஏற்றுக் கொள்வதே சரியான அன்பாகும் என்பதை உறவுகளும் நட்புகளும் புரிந்து கொள்ள வேண்டும். நம் அன்பின் மிகுதியால் யார் வயிற்றையும் குப்பைத் தொட்டியாக்கும் உரிமை யாருக்கும் இல்லைதானே!

நிறைவாக வாழ்வதற்குக் குறைவாக உண்பது நல்ல வழிமுறை. வளமாக வாழ்வதற்கு அளவாக தின்பது நல்ல நெறிமுறை. குறைவும் அளவும் நல்ல வாழ்க்கைக்கான விதிமுறை.

*****

No comments:

Post a Comment

What if the scale itself is wrong?

What if the scale itself is wrong? The period between 2000 and 2024 can be referred to as the period in which many changes took place in s...