29 Mar 2024

கிராமத்துச் சொலவமும் வள்ளுவரும் புத்தரும் பெரியாரும்!

கிராமத்துச் சொலவமும் வள்ளுவரும் புத்தரும் பெரியாரும்!

“கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்கிறவன் கேனையனா?” என்பது கிராமத்துச் சொலவம்.

எதையும் மெய்யா, பொய்யா என்பதை யோசித்து முடிவெடுக்க வேண்டும்என்பதே அச்சொலவம் உணர்த்த வரும் செய்தி.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.”         (குறள், 423)

என்று திருவள்ளுவர் சொல்வதை அவ்வளவு எளிமையாகச் சொல்லும் கிராமத்து மொழி அது என்றும் கூறலாம்.

“கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்.” என்று அனுபவஸ்தர்கள் சொல்வதும் அதை ஓட்டியே வருகிறது.

புத்தரும் அதைத்தான் சொல்கிறார்.

“காதால் கேட்பதால் மட்டுமே எதையும் நம்பி விடாதே.

பல தலைமுறைகளாகப் போற்றப்பட்டு வருபவை என்ற காரணத்தினாலேயே மரபுகளை நம்பாதே.

பல பேராலும் பேசிப் பரப்பப்படுகிறது என்ற காரணத்தினாலேயே எதையும் நம்பாதே.

உன் மத நூல்களில் எழுதப்பட்டிருக்கிறது என்ற காரணத்தினாலேயே எதையும் நம்பாதே.

உன் ஆசிரியர்களும் மூத்தோரும் சொல்கிறார்கள் என்பதனாலேயே எதையும் நம்பாதே.

வெளித்தோற்றத்திற்கு உண்மையாகத் தெரிகின்ற தர்க்கத்தையும், பழக்கத்தினால் உன்னிடம் சேர்ந்து விட்ட மனச்சாய்வையும் நம்பாதே.

யாவருக்குமான நன்மைக்கும் ஆதாயத்திற்கும் ஏற்ற ஒன்றை ஏற்றுக் கொள்வதற்கு முறையான காரணத்தை நீ கண்டறியும் போது, ஆழ்ந்து சிந்தனை செய், ஆய்வு செய், பிறகு ஏற்றுக் கொண்டு அதன்படி வாழ்.”

புத்தர் சொல்வதை ஒட்டியே பெரியாரும் சொல்கிறார். பெரியார் அதை பகுத்தறிவு என்கிறார். பெரியாரின் மொழியைப் பார்த்தால் அதுவும் அப்படியே இருக்கிறது. “நான் சொல்வதற்காக நம்ப வேண்டாம், தீர யோசித்து நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்.” என்கிறார்.

கிராமத்துச் சொலவத்திலிருந்து, அனுபவஸ்தர்கள் – திருவள்ளுவர் – புத்தர் – பெரியார் வாக்கு வரை ஒரு பொருளை வலியுறுத்துகிறது என்றால் அதுதான் மெய்ப்பொருள். அறிவால் மெய்ப்பொருள் காண்பதே எதிலும் சரியானது.

*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...