28 Mar 2024

எதார்த்தம் இறந்து போய் எத்தனையோ நாட்கள் ஆகின்றன!

எதார்த்தம் இறந்து போய்  எத்தனையோ நாட்கள் ஆகின்றன!

இந்த மனிதர்கள் எதார்த்தமாக எதையும் காட்ட மாட்டார்களா? எதார்த்தமாக எதையும் சொல்ல மாட்டார்களா?

ஒன்றைக் கொடுக்க விருப்பம் இல்லாத போது தாங்க முடியாத அழுத்ததைக் கொடுக்கிறார்கள். செய்ய முடியாத இலக்கைக் கொடுக்கிறார்கள். கொடுப்பதற்கு அதுதான் இருக்கிறது அவர்களிடம். அது எதுவும் எதார்த்தம் என்ற வகையறாவில் வராது. வரக் கூடாது என்பதுதான் அவர்களின் நினைப்பு போலும். எல்லாம் எதார்த்தம் மீறியதாக இருக்க வேண்டும்.

எதார்த்தத்தைப் பிசகுவதற்கு இவர்கள் அறிவுரையை வைத்திருக்கிறார்கள். முடிந்திருந்தால் அது நிகழ்ந்திருக்கப் போகிறது. முடியாத ஒன்றை எதார்த்தத்தை மீறியும் முடித்து விட வேண்டும் இவர்களுக்கு. வேறு வழி? அறிவுரையைக் கையில் எடுத்து நாலா பக்கமும் சுழற்ற ஆரம்பித்து விடுவார்கள்.

இந்தக் காலத்தில் யார் அறிவுரையைக் கேட்டுத் திருந்துவார்கள். அது முடிகிற காரியமே கிடையாது. எல்லாருக்கும் மனம் போன போக்குதான் வசதியானது. ஒரு சிலருக்கு மனம் போன போக்கு அறிவுரையின் போக்காக இருக்கும். அது அவர்கள் அதிர்ஷ்டம். எல்லாருக்குமா அந்த அதிர்ஷ்டம் கிடைத்து விடும்?

பேரைப் பாருங்கள் அறிவுரை. மனவுரை, உளவுரை என்றிருக்கக் கூடாதா?

அறிவுரை சொல்வதற்கும் வயது பேதமில்லாமல் போய் விட்டது. யார் வேண்டுமானாலும் அறிவுரை சொல்லலாம் என் ற நிலை. கேட்பதற்கு யாருமில்லை என்றாலும் கவலையில்லை. பார்ப்பதற்கு குழந்தையைப் போல இருக்கிறார்கள். பாட்டனைப் போல அறிவுரை சொல்கிறார்கள்.

இப்படியெல்லாம் நிகழ்கிறதென்றால் எதார்த்தம் செத்துப் போய் எத்தனையோ நாட்களாகி விட்டன என்றுதானே பொருளாகிறது.

*****

திரை நியாயங்கள்

திரைப்படங்கள்தான் ஒரு மோசமான மன கற்பிதத்தை உருவாக்கி விட்டன. ஒரு பாட்டு இருந்தால் போதும் எல்லாவற்றையும் மாற்றி விட முடியும் என்று. ஒரு பாட்டு பில் கேட்ஸாக்குகிறது, வாரன் பப்பெட்டாக்குகிறது, எலான் மஸ்க்காக்குகிறது, ராக்பெல்லராக்குகிறது, தாமஸ் ஆல்வா எடிசனாக்குகிறது இன்னும் என்னென்னமோவாக ஆக்குகிறது.

தட்டையாக ஒரு கோணத்தை மட்டும் எத்தனை காலம் மாற்றி மாற்றி காட்டி விட்டார்கள். ஹீரோயிசம் என்ற ஒரு கோணத்தைத் தவிர வேறு கோணங்கள் இருக்கின்றனவா? குறுங்கோணம், விரிகோணம், செங்கோணம், நேர்க்கோணம், பூச்சியக்கோண்ம, பின்வளைவுக் கோணம் போன்றவை எல்லாம் அவ்வளவு மட்டமா?

எந்தெந்த கூறுகளில் எல்லாம் கதையடித்து, படம் எடுத்து, ஜல்லியடித்துக் கல்லா கட்டலாம் என்று பார்க்கிறர்கள்.

ஒவ்வொன்றும் எவ்வளவு அறிவு சார்ந்தது. எல்லாவற்றையும் உணர்வு சார்ந்ததாக மட்டும் மாற்றி விட்டார்கள். அவ்வளவு செயற்கைத்தனத்தோடு உணர்வு சார்ந்து ஒரு கையை நீட்டித் தொடர்வண்டியை நிறுத்துகிறார்கள். சுண்டுவிரலால் ஒரு வாகனத்தைத் தூக்கி கிறுகிறுவென்று சுற்றித் தூக்கி எறிகிறார்கள். கோபம் வந்தால் நூறு, இருநூறு பேரையாவது சண்டையில் பறக்க விடுகிறார்கள். பாதி உடல் பூமிக்குள் போகும் அளவுக்கு ஒருவரைத் தலைகீழாகப் போட்டு குத்துகிறார்கள். இவ்வளவு செயற்கைத்தனத்தோடா வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது.

அறிவார்ந்த நாய்கள் உருவாக வேண்டும் என்று யாருக்கு அக்கறை? எல்லாம் காலைச் சுற்றிக் கொண்டிருக்கும் உணர்ச்சி நாய்களாக இருக்க வேண்டும். பொடுகிற பருக்கைகளைத் தின்று காலைச் சுற்றி வரும் நாய்களாக இருந்தால் போதும். அதில் உருவாகும் ஒரு புரட்சிகர நாய்தான் ஹீரோவாகி விடுகிறது. நடுரோட்டில் அசிங்கம் செய்வது போலக் குடித்து விட்டுக் கூத்தாடுகிறது. நான்கு பேர் நாற்பது பேர் பார்க்கிறார்கள் என்ற லஜ்ஜையில்லாமல் புணரும் நாய்களைப் போலக் குத்தாட்டம் போடுகிறது.

இவ்வளவு செய்தது போதாது என்று ஒரு ஹீரோ ஏன் மற்ற பாத்திரங்களை அவ்வளவு டம்மியாக்குகிறது? அந்த ஏதேச்சதிரகாரம்தான் பிடிக்க மாட்டேன்கிறது. அதை எதிர்த்துதான் வில்லன் போராடுகிறான். அவனை யார் கவனிக்கிறார்கள்? அவனைத் திட்டித் தீர்த்து விடுகிறார்கள். நியாயத்துக்காகப் போராடுவதுதான் முக்கியம் என்று நினைக்கிறார்கள் எதார்த்தத்தில் அத்தனை அதர்மங்களுக்கும் துணை போகுபவர்களும் துணை நிற்பவர்களும்.

என்னவோ அநியாயத்துக்கு எதிராகவும் அதர்மத்துக்கும் எதிராகவும் போராட வேண்டும் என்று சொல்கிறார்களே. நிஜத்தில் மனிதர்களை எதிர்த்துதானே போராட வேண்டியிருக்கிறது.

இப்படி ஒரு ஹீரோ சண்டை போட முடியும் என்றால் நியாயத்தைக் காப்பாற்றலாம். மற்றவர்கள் எல்லாம் எப்படி நியாயத்தைக் காப்பாற்ற முடியும்? அந்த ஹீரோ சண்டை போட வரும் வரை நாம் பொறுத்திருப்பதைத் தவிர வேறு என்ன வழியிருக்கிறது? ஹீரோ வரும், சண்டை போடும், நியாயத்தை நிலைநிறுத்தும். நாமெல்லாம் முன்பதிவு செய்து பார்த்துவிட்டு வரலாம். அதற்கு மேல் பார்க்க வழியில்லை. அங்கு பார்த்தால்தான் உண்டு.

*****

No comments:

Post a Comment

தீ பரவட்டும்!

தீ பரவட்டும்! இன்றைக்கு எல்லாவற்றிற்குமான வாய்ப்புகள் வந்து விட்டன. வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்துவதா பெரிது? அதற்கான ...