20 Mar 2024

வாழ்க்கையின் அதி உன்னத வழி!

வாழ்க்கையின் அதி உன்னத வழி!

வாழ்க்கையில் நாம் செய்யும் மிகப் பெரிய தவறு என்றால் எல்லாவற்றிலும் அவசரப்படுவது. மனம் அப்படிப்பட்ட ஒன்று. எல்லாவற்றையும் சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று அவசரப்படும் தன்மையது. ஏன் இந்த அவசரம் என்றால் அவசர அவசரமாக முடித்து விட்டால் பிறகு சாவகாசமாக உட்கார்ந்து இருக்கலாமே என்கிற அலுப்பு காத்த எண்ணம்தான்.

ஏனிந்த அவசரம்? முடியாமல் போய் விடுமோ என்ற எண்ணம் ஒரு காரணம். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணம் மற்றொரு காரணம்.

எதுவும் முடியவில்லை என்றெல்லாம் இல்லை. அதற்காக நேரம் செலவழிக்க வேண்டும். மெனக்கெட வேண்டும். விசயம் அவ்வளவுதான். இந்த இரண்டையும் செய்யாமல் எதையும் செய்ய முடியாது.

மனதின் ஒரு சுபாவமும் இருக்கிறது. எப்போதும் ஒரு வித எதிர்மறை உணர்வை உருவாக்குவது. உங்களுக்கு வேலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையை, அது இரவில் தூங்கும் போது வேலை கிடைக்காது என்ற கனவை உருவாக்கிச் சமன்படுத்தும்.

எதிர்மறை உணர்வைப் பொருத்த மட்டில் அதிலும் சில தாத்பரியங்கள் இருக்கின்றன. எதிர்மறை உணர்வை உண்டாக்கும் அம்சத்தை பரப்புவதும் முயன்றால்தான் முடியும். அதிலும் ஊக்கமான ஒரு விசயம் அப்படி இருக்கத்தான் செய்கிறது. ஒரு கெட்ட விசயம் என்றாலும் அதையும் முயன்று பரப்பினால்தான் உண்டு.

இயல்பாக மனதில் உண்டாகும் எதிர்மறை உணர்வானது இன்னொரு நினைவில் நீங்கள் கலந்து விடும் போது மறைந்து விடும். நீங்களாக உருவாக்கிக் கொண்டு மனதை வருத்திக் கொள்ளும் எதிர்மறை உணர்வானது அப்படி மறையாது. அது திரும்ப திரும்ப மனதில் தோன்றி உங்களை வருத்திக் கொண்டிருக்கும்.

எதிரும் புதிரும் கலந்ததுதான் வாழ்க்கை. கூட்டலும் கழித்தலும் இணைந்ததுதான் கணக்கு. நேர் மின்னூட்டமும் எதிர் மின்னூட்டமும் கலந்ததுதான் மின்சாரம். எதிர்மறை இணைவு இல்லாமல் உலகில் எதுவும் இல்லை. இரவென்றால் பகலும், பகலென்றால் இரவும் இருக்கத்தான் செய்கிறது.

கோடைக்காலம் வந்த பின் மழைக்காலமும், மழைக்காலம் வந்த பின் கோடைக்காலமும் மாறி மாறித்தான் வருகின்றன. அவை இயல்பாக வந்து இயல்பாகக் கடந்து போய்க் கொண்டிருக்கின்றன. அதற்காகக் கோடைக்காலத்தில் இப்படித்தான் எல்லா காலமும் இருக்கப் போகிறது என்று கவலையுற வேண்டியதில்லை. மழைக்காலத்தைப் பார்த்து இப்படித்தான் மழையானது காலம் முழுவதும் கொட்டித் தீர்க்கப் போகிறது என்று நினைக்க வேண்டியதில்லை.

வாழ்க்கைக்கும் இது அப்படியே பொருந்திப் போகிறது.

எல்லாம் முடிகிறது. எதுவும் முடியாமல் இல்லை. முடியும் வரை, முடிக்கும் காலம் வரும் வரைப் பொறுமையாக இருக்க வேண்டியதாக இருக்கிறது. வாழ்க்கையில் பெரிதாக யோசிக்க எதுவுமில்லை. உங்களைச் சுற்றியே ஏகப்பட்ட நிகழ்வுகள் நடக்கின்றன. ஒவ்வொன்றிலிருந்து உங்களுக்கான பாடங்கள் ஒளிந்திருக்கின்றன. அவற்றை உற்றுக் கவனித்தாலே போதும், நீங்கள் நிறைய விசயங்களை அதீத யோசனை இல்லாமலே புரிந்து கொள்ள முடியும்.

வாழ்க்கையை நீங்களாக அதாவது இன்னொருவராக மாற முயற்சிக்காமல் வாழும் போது பயம், பதற்றம், அவசரம், தவறான வழிநடத்தல்கள் இல்லாமல் அருமையாக வாழலாம்.

உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அப்படி இருக்கலாம். அப்படியே வாழலம். எதற்கு வாழ்கிறோம் என்று தெரியாமல் எப்படியோ வாழ்வதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது. வாழ்க்கை என்பது உங்களிலிருந்து வெளிப்படுவதாகவே இருக்க வேண்டும். யாரோ ஒருவர் வாழ்வதைப் போல வாழ நீங்கள் எதற்கு?

 உங்களிலிருந்து இந்த உலகிற்கு வெளிப்பட வேண்டிய சங்கதிகள் இருக்கத்தானே செய்கின்றன. அதை நீங்கள் வாழ்ந்தால் போதும். கண்டவர்கள் காட்டியபடி வாழ வேண்டியதில்லை. மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக எதையாவது எப்படியாவது வாழ்ந்து தொலைக்க வேண்டியதில்லை. பொறுமையாகவும் அமைதியாகவும் இருந்தால் அதுவாக வரும். 

ஒவ்வொன்றிலும் அதன் சாராம்சத்தைச் செய்தியாக்கி அறிந்து கொள்ள முடியும். அதிலிருந்து நிறைய விசயங்களைச் செய்யவும் உணரவும் முடியும். மனதுக்குள் இருக்கும் அவசரம் உங்களை தவறாகவே வழிநடத்திக் கொண்டு இருக்கலாம். முடியுமோ முடியாதோ என்ற சந்தேகம் உங்களை ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கிறது. அந்த சந்தேகத்துக்கு ஆட்பட்டு முடிக்க வேண்டுமே என்ற பயத்தில் நீங்கள் என்னென்னவோ செய்து கொண்டிருக்கலாம்.

அடிப்படை இதுதான். உங்களுக்குள் இருக்கும் உங்களைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்காக நீங்கள் வாழுங்கள். அடுத்தவர்களுக்குத் துன்பம் தராமல் வாழ வேண்டியது தவிர, அடுத்தவர்களுக்காக வாழ வேண்டியது இல்லை. அடுத்தவர்கள் காட்டும் வழியில் வாழ வேண்டிய அவசியமும் இல்லை. நீங்கள் இன்னொருவராக வாழ முயற்சித்தால் நிச்சயம் நீங்கள் அவசரம், பயம், தவறான வழிநடத்தல்களால் பீடிக்கப்படுவீர்கள்.

இந்த உலகில் புழுக்கள், பூச்சிகள், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் அனைத்தும் சொந்த சுயத்தில்தான் வாழ்கின்றன. எதுவும் இன்னொன்றைப் பார்த்து நகலெடுப்பது இல்லை எனும் போது மனிதர்களாகிய நீங்கள் சுயத்தோடும் துணிவோடும் வாழ்வதற்கு எந்த விதத்தில் தகுதி குறைந்து போனீர்கள்?

நீங்கள் நீங்களாக இருந்தால் உங்களுக்கு எந்தப் பிரச்சனையுமில்லை. உங்களும் குறையேதும் இல்லை. இந்தப் பூமியில் இந்த உண்மையைப் புரிந்து கொண்ட ஒவ்வொருவரும் அருமையாகவும் பெருமையாகவும் வாழலாம்.

*****

No comments:

Post a Comment

ரசனையின் சேதாரம்

ரசனையின் சேதாரம் ஒரு லாரி வந்து மோதுகிறது. அது ஒரு காருக்கு எப்படி இருக்கும்? கார் குட்டிக்கரணம் அடிக்கிறது. காரின் சேதாரமே பார்க்க பயங்கர...