15 Jan 2024

பணியிடத்தில் உங்களைச் சிறப்பாக்கிக் கொள்ளும் முறைகள்

பணியிடத்தில் உங்களைச் சிறப்பாக்கிக் கொள்ளும் முறைகள்

அலுவலகம், தொழிற்சாலை, கடை, உணவகம் என்று உங்கள் பணியிடம் எதுவாக இருந்தாலும் அவ்விடத்தில் உங்களைச் சிறப்பாக நிர்வகித்துக் கொள்வதன் மூலமாக உங்கள் நிலையையும் வருமானத்தை உயர்த்திக் கொள்ள முடியும். பதவி உயர்வையும் அதிகப்படுத்திக் கொள்ள முடியும். அதற்கான வழிமுறைகளை இப்பத்தியில் காண்போம்.

உங்கள் நிர்வாகத்தைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எப்படி நிர்வகிக்கப்படுகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு மேல் உள்ளவர் உங்களை எப்படி நிர்வகிக்க விரும்புகிறார் என்பதைப் தெரிந்து கொள்ளுங்கள். இவற்றில் எப்போதும் சில குறைபாடுகளும் அதிருப்திகளும் இருக்கும் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். ஒருவெள்ளைத் துணியில் சிறு கரும்புள்ளியாவது இருப்பது போல, அழகான முகத்தில் ஒரு சிறு மரு இருப்பது போல, எவ்வளவு பத்திரமாகப் பாதுகாத்தாலும் உடம்பில் ஒரு சிறு தழும்பாவது ஏற்பட்டு விடுவது போல இது தவிர்க்க முடியாததாகும்.

அதிருப்திகளும் குறைபாடுகளும் உங்களை நிஜமாகவே பாதித்தாலும் அவைச் சிறிதளவும் உங்களைப் பாதிக்கவில்லை என்பதைப் போல நடந்து கொள்ளுங்கள். அப்படி நடந்து கொள்வதைத்தான் உங்கள் நிர்வாகமும் மேலதிகாரிகளும் முதலாளிகளும் எதிர்பார்ப்பார்கள். இது வேடமிடுவது போல அல்லவா. ஆம் நிச்சயமாக அப்படித்தான். உங்களுக்கு இதுபோல வேடமிட தெரியாவிட்டால் பணியிடத்தில் உங்களால் நிலைக்க முடியாது. நீங்கள் பந்தாடப்படுவீர்கள். அல்லது பணியிழப்புக்கு ஆளாவீர்கள்.

உங்கள் நிர்வாகம் எப்போதும் உங்களிடம் எப்போதும் அதிகமாக எடுத்துக் கொள்ளப் பார்க்கும். குறைவாகவே கொடுக்க நினைக்கும். தவிர்க்க முடியாத இந்த எதார்த்தத்தை நீங்கள் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்.

அதிகமாக எடுத்துக் கொள்ளும் என்றால் உங்களது திறமையையும் உழைப்பையும் வேலை நேரத்தையும் அதிகமாக எடுத்துக் கொள்ளும்.

குறைவாகக் கொடுக்கும் என்றால் உங்களுக்கான ஊதியத்தைக் குறைவாகக் கொடுக்க விரும்பும். நீங்கள் ஒரு நிர்வாகத் தலைவர் ஆனாலும் அல்லது நீங்கள் ஒரு முதலாளி ஆனாலும் இதே விதத்தில்தான் அப்போது நீங்களும் செயல்படுவீர்கள் என்பதுதான் இதன் பின்னுள்ள எதார்த்தம்.

நிலைமை இப்படி இருக்கும் போது உங்களுக்கான ஊதியத்தை அதிகப்படுத்திக் கொள்ள அந்த நிர்வாகத்தில் நீங்கள் முக்கியத்துவம் வாய்ந்த நபராக இருக்க வேண்டும்.

நீங்களின்றி அந்த நிர்வாகம் நடக்காது என்ற நிலையில் இருந்தால்தான் உங்களால் உங்களது ஊதியத்தை நிர்ணயம் செய்ய முடியும். இல்லையென்றால் அவர்கள் கொடுக்கின்ற ஊதியத்தை வாங்கிக் கொண்டு இருந்து கொள்வதைத் தவிர வேறு என்ன வழியிருக்கிறது?

சில நேரங்களில் பணி அல்லது வியாபார நுட்பங்களைக் கற்றுக் கொள்வதற்காகக் குறைவான ஊதியத்தில் பணியாற்ற வேண்டியிருக்கும். அதை பெரிதுபடுத்திக் கொள்ள வேண்டியதில்லை. அது நீங்கள் கற்றுக் கொள்வதற்காகச் செய்கின்ற முதலீடு போன்றது. அதைக் கற்று முடித்தவுடன் நீங்கள் அதில் நிபுணராகி விடுவீர்கள். அந்த நிபுணத்துவத்தின் மூலமாகக் குறைவான ஊதியத்தில் நீங்கள் பணியாற்றிய காலத்து இழப்பையெல்லாம் புதிய நிர்வாக முறையை அல்லது புதிய வியாபாரத்தை ஆரம்பித்து நீங்கள் சம்பாதித்து விடலாம்.

பணியிடத்தில் உங்கள் குரல் எடுபட மாட்டேன்கிறது என்ற ஆதங்கமும் மனச்சோர்வும் உங்களுக்கு இருக்கலாம். நிர்வாகத்திற்குப் பயன்தரும் குரல்களே எப்போதும் எடுபடும். அது பெரும்பாலும் நிர்வாகச் செலவுகளைக் குறைப்பதாகவும் லாப அளவை அதிகரிப்பதாகவும் இருக்க வேண்டும்.

இதனால் நிர்வாகத்திடம் எதைப் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் அதன் பட்ஜெட் எல்லையை நன்கு அறிந்து அதைக் குறைக்கும் விதத்திலும் லாபத்தை அதிகமாக்கிக் காட்டும் வகையில் பேச வேண்டும். அப்படிப்பட்ட குரல்தான் நிர்வாகத்தில் எதிரொலிக்கும். அப்படிப்பட்டவர்களிடமே நிர்வாகம் ஆலோசனைகளைக் கேட்பதை விரும்பும். அவர்களின் குரல்களுக்கே நிர்வாகம் செவி சாய்க்கவும் செய்யும்.

பணியிடங்கள் ஒன்றைச் செய்தால் என்ன விளைவுகள் உண்டாகும் என்பதைத்தான் பார்க்கும். அந்த விளைவுகள் நல்ல முடிவைத் தருவதாகவும் இருக்க வேண்டும். அதனால் நல்ல முடிவுகளைத் தரும் உங்கள் செயல்திறனையும் அதை ஊக்குவிக்கும் பேச்சையும்தான் நிர்வாகம் விரும்பும். உங்களது தனிப்பட்ட மன உணர்வுகளுக்கோ ஆதங்கங்களுக்கோ மனக் குறைகளுக்கோ அதற்கு அக்கறையில்லை என்பதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பணியிடங்கள் எப்போதும் நீங்கள் இல்லாவிட்டால் இன்னொருவர் இருக்கிறார் என்ற அலட்சியத்துடனே செயல்படும். நீங்கள் இல்லாவிட்டால் இன்னொருவர் அதைச் சமாளிக்க முடியாது என்ற நிலையை நீங்கள்தான் உருவாக்க வேண்டும். அதில் சுணக்கம் காட்டினால் பணியிடம் உங்களைத் தூக்கி எறிய கொஞ்சம் கூட யோசிக்காது. பிறகு நீங்கள் எவ்வளவு உழைத்து என்ன பயன், நன்றி கெட்ட தனமாக நடந்து கொண்டு விட்டார்களே என்று புலம்பிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

உங்களது பணியிட மதிப்பு நிலை என்பது உங்களைப் பற்றி உங்களது மேலதிகாரியின் மனநிலையே ஆகும். உங்களைப் பற்றி உங்களது மேலதிகாரி நல்ல மனநிலையோடு இருக்கும் வகையில் நடந்து கொள்வது நல்லது. அப்படி இல்லாத பட்சத்தில் நீங்கள் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொண்டு உங்களைப் பற்றி நல்லவிதமாக நினைக்கும்படி நடந்து கொள்ள வேண்டும். அது முடியாத போது வேறு பணியிடத்தைத் தேடிச் செல்வது உசிதமானது. உங்களைப் பற்றிய உங்களது மேலதிகாரியின் மோசமான மனநிலை உங்கள் மனநிலையையும் பாதித்து உங்களது பணி நிலையையும் பாதித்து விடும். உங்களது எதிர்காலத்தையும் பாழாக்கி விடும்.

மற்றபடி உங்கள் திறமை, உழைப்பு போன்றவற்றால் உங்களது அடுத்த கட்ட பணி உயர்வு தீர்மானிக்கப்படும் என நினைத்தால் நீங்கள் தப்புக் கணக்குப் போடுவதாகவே அர்த்தம். உங்கள் பணி உயர்வை உங்களுக்கு மேலே உள்ள ஒரு மனிதர்தான் தீர்மானிக்கிறார். அதற்கு அவர் தன்னுடைய மனநிலையைப் பயன்படுத்துகிறார். உங்கள் திறமை, உழைப்பை அவர் அளவுகோலாகக் கொள்ளும் அளவுக்கு அவரை முதிர்ச்சி நிறைந்தவராக நினைத்தால் அது நீங்கள் செய்யும் தவறே ஆகும். அது உங்களது பணியிடத்தின் தவறாக ஆகாது.

கஷ்டப்பட்டு பாடுபடுவதாலே நீங்கள் பணியிடத்திற்குப் பிடித்தமானவர்களாக ஆகி விட மாட்டீர்கள். உங்களால் உங்கள் பணியிடத்திற்கு எவ்வளவு லாபம் என்ற எண்ணைக் காட்டுவதன் மூலமாகவே நீங்கள் உங்கள் பணியிடத்திற்குப் பிடித்தமானவர்களாக ஆகிறீர்கள்.

அடுத்து பணியிடப் பழக்கம் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். உங்களோடு பணி புரிபவர்கள் உங்களைப் போன்ற மனநிலையில் இருப்பதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். அதுதான் பலரும் போடும் தப்புக் கணக்கு. யாருடைய மனநிலையையும் உங்களால் அனுமானித்து விட முடியாது. அதனால் யாருடனும் பணியிடம் குறித்த உங்களது பகுப்பாய்வுகளையோ விமர்சனங்களையோ பகிர்ந்து கொள்ளாதீர்கள். அவர்கள் ஏதாவது கூறினால் கேட்டுக் கொள்ளுங்கள்.

நீங்களாக உங்கள் பணியிட நண்பர்கள் நல்லவர்கள் என்று நினைத்து எதையாவது உளறி வைத்து மாட்டிக் கொள்ளாதீர்கள். நீங்கள் நண்பர் என நினைப்பவர்கள் உங்களுக்கு எதிராக வத்தி வைப்பவராகவும் இருக்கலாம் என்பதை மறக்காதீர்கள். அனைவரிடமும் இணக்கமாகப் பழகுங்கள். அவர்கள் உங்கள் நலனில் அக்கறையாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள்.

யாருக்கும் யார் மேலும் எப்படி வேண்டுமானாலும் போறாமையோ போட்டியுணர்வோ பழி தீர்க்கும் உணர்வோ உண்டாகலாம். ஆகவே எச்சரிக்கையாக அதே நேரத்தில் எளிமையாகவும் எல்லாரிடமும் பழகிக் கொண்டிருங்கள். உண்மை விளம்பியாகி எல்லாரின் நன்மதிப்புகளையும் பெறப் போகிறேன் என்று உங்களுக்கான குழியை நீங்களே வெட்டிக் கொள்ளாதீர்கள்.

உங்களது பணி பற்றிய புதிய புதிய முன்னேற்றங்களையும் மாறுதல்களையும் அறிந்த வண்ணம் இருங்கள். அப்போதுதான் அவ்வபோது உங்களை மாற்றிக் கொண்டு உங்கள் பணித்தகுதிக்கு உங்களால் ஈடு கொடுக்க முடியும். பணியிடத்தாலும் உங்களை நீக்க முடியாத முக்கியமான நிலையிலும் இருக்க முடியும்.

கடைசியாக நீண்ட காலத்திற்கு ஒரே பணியிடத்திலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்காமல் மற்றவர்களுக்கான பணியிடங்களை உருவாக்கக் கூடிய நிலைமைக்கும் உங்களை உயர்த்திக் கொள்ளுங்கள். தொழிலாளியாக இருப்பது முதலாளியாக உயர்வதற்கான நுட்பங்களையும் நுணுக்கங்களையும் கற்றுக் கொள்வதற்காகத்தான் என்பதை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

இப்பத்தியில் சொல்லப்படுவது எல்லாம் குறுக்கு வழிகள் போல இருப்பதாக நினைக்காதீர்கள். அவ்வபோது வளைந்து நெளிந்துதான் செல்ல வேண்டியிருக்கிறது. ஏனென்றால் பாதைகள் எப்போதும் நேராக இருப்பதில்லை.

*****

No comments:

Post a Comment

மனக்கண்ணாடியில் பார்த்தல்

மனக்கண்ணாடியில் பார்த்தல் நீ மிகுந்த மனக்கவலையை உருவாக்குகிறாய் எப்படி அதை எதிர்கொள்வது என்று தெரியவில்லை இருந்தாலும் எப்படி எதிர்கொண்...