9 Nov 2023

பேராசை என்றால் கௌரவம் குறைந்து விடுமோ?

பேராசை என்றால் கௌரவம் குறைந்து விடுமோ?

ஐ.எப்.எஸ்.

ஆருத்ரா

ஹிஜாவு

அம்ரோ கிங்ஸ்

ஏ.ஆர்.பி. ஜூவல்லர்ஸ்

சி.பி.ஆர்.எஸ்.

ராஹத் டிரான்ஸ்போர்ட்

எல்பின்

இவையெல்லாம் என்ன என்கிறீர்களா?

மக்களை நேரடியாக ஏமாற்றிய நிறுவனங்கள். அல்லது மக்கள் நேரடியாக ஏமாந்த நிறுவனங்கள். இவற்றை மோசடி நிறுவனங்கள் என்று சொன்னால் அவமதிப்பாகுமோ என்னவோ?

எப்படி ஏமாந்தார்கள்? எல்லாம் பணத்தைக் கட்டித்தான். அதுவும் கட்டுக்கட்டாகப் பணத்தைக் கட்டித்தான்.

இந்த நிறுவனங்களிடம்தான் என்றில்லை. குறியீட்டுப் பணத்தில் இரு மடங்கு ஆக்கி விடுவோம் (கிரிப்டோவில் டபுள் பண்ணி விடுவோம்) என்றாலும் பணத்தை மூட்டைக் கட்டிக் கொண்டு போகிறார்கள். பங்குச் சந்தை சார்ந்த ஊக வணிகத்தில் மும்மடங்கு ஆக்கி விடுவோம் (எப் அன்ட் ஓவில் டிரிபிள் பண்ணி விடுவோம்) என்றாலும் பணத்தைப் போட விழுந்தடித்துக் கொண்டு ஓடுகிறார்கள். மாதா மாதம் நூறு ரூபாய் சீட்டுக் கட்டினால் மாதா மாதம் ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்றாலும் தலைகால் தெரியாமல் குதித்துக் கொண்டு போடுகிறார்கள்.

ஒரு கல்லை வீசிப் பத்து மாங்காய்கள் என்றால் யாருக்குத்தான் கல்லை வீச மனம் வராது? வீசுகின்ற கல் மாங்காய்களை அடித்துக் கொண்டு விழுந்தால் பரவாயில்லை. வீசியவரின் தலையில் அல்லவா விழுகிறது. இப்படி எத்தனைத் தலைக்காயங்கள் ஏற்பட்டாலும் கல்லை வீசுவதை யாரும் நிறுத்துவதில்லை. வீசிக் கொண்டே இருக்கிறார்கள் காயம் எவ்வளவு பயங்கரமாக இருந்தாலும். காயம் பட்ட பின் தலையில் ஏற்பட்ட காயத்திற்குக் காரணமானவர்களைத் தண்டியுங்கள் என்றால்… வீசியவர்களே வீசியவர்களைத் தண்டித்துக் கொள்ள வேண்டியதுதான். அப்படித்தான் இருக்கிறது நிலைமையும்.

இது போன்ற ஆசைகளே துன்பங்களுக்குக் காரணம் என்று புத்தர் சொல்லியிருப்பாரோ?

இது போன்ற பேராசைகளே பெருநஷ்டம் என்று நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்களோ?

இவையெல்லாம் நேரடி வகையறாக்கள். மறைமுக வகையறாக்களின் பட்டியல் தாங்காது. நேரடி வகையறாக்கள் வீடு புகுந்து கொள்ளையடிப்பதைப் போன்றது. இரண்டாவது வகையறா சன்னல் கம்பிகள் வழியாகக் காற்று போல புகுந்து அடித்துக் கொண்டோடுவது. காற்றுக்கு அப்படி ஒரு சக்தி உண்டா என்று கேட்கக் கூடாது. காற்றில் வரும் சைகைகளைப் பயன்படுத்திச் செய்வதை வேறெப்படிச் சொல்வது? சைகை வடிவில் கணினி, அலைபேசிக்குள் புகுந்து கொள்ளை பண்ணுவதை அப்படித்தானே சொல்ல வேண்டும்.

ஓர் இணைப்பை (லிங்க்) அனுப்பி அதைச் சொடுக்கச் செய்து ஒட்டு மொத்த பணத்தையும் லவட்டிக் கொண்டு போவது.

ஒரு லைக் போட்டு ரூபாய் ஐம்பது சம்பாதியுங்கள் என்று லட்சத்தைப் பிடுங்கும் வகையறாவும், ரூபாய் நூறு தந்து ரூபாய் நூற்று ஐம்பது பெறுங்கள் என்று கோடிகளைச் சுரண்டும் வகையறாவும் இப்படி இன்னபிற வகையறாக்களும் இந்த மறைமுகக் கொள்ளையைச் சார்ந்தவை.

ஐம்பது ரூபாய்க்காக லைக் போட்டு லட்சத்தை இழந்தவர் யார் என்று கேட்டால் அவர் ஒரு பொறியாளர்.

நூறைப் போட்டு நூற்று ஐம்பதைப் பிடிக்கிறேன் என்று கோடியை இழந்தவர் யார் என்று கேட்டால் அவர் ஒரு தொழில் முனைவோர்.

அறியாமைதான் மோசடியில் ஏமாந்துப் போவதற்குக் காரணம் என்பவர்களிடம் பொறியாளர் மற்றும் தொழில் முனைவோரின் அறியாமையை எந்த அறியாமையில் சேர்ப்பது என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

அடுத்து பகுதி நேர வேலை என்ற ஒரு புரட்டு. பகுதி நேர வேலை செய்யுங்கள், ஆயிரம் ஆயிரமாகச் சம்பாதியுங்கள் என்ற வலை. முழு நேர வேலையிலேயே தம்புடி புரட்டுவது கடினமாக இருக்கும் போது பகுதி நேர வேலையில் பணம் எப்படிக் கொட்டிக் கிடக்கும்?

எல்லாம் அறியாமை என்று எத்தனைக் காலம் சொல்லிக் கொண்டிருக்க முடியும்? ஆசை அதுவும் பேராசை என்று சொன்னால் கௌரவம் குறைந்து போய் விடுமோ என்னவோ? அதுவும் படித்தவர்களுக்கு இருக்கும் பேராசை இருக்கிறதே, அதற்குப் படிக்காதவர்களே பரவாயில்லை.

*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...