22 Aug 2023

நோய் தீர்க்கும் என்று விலையேற்றப்படும் காய்களும் பழங்களும்

நோய் தீர்க்கும் என்று விலையேற்றப்படும் காய்களும் பழங்களும்

நம்மிடம் ஏகப்பட்ட கட்டுக்கதைகள் இருக்கின்றன. ஏதோ ஒரு நம்பிக்கைதான் அந்தக் கட்டுக்கதைகளின் ஆதாரம். சில கட்டுக்கதைகள் வாழ்க்கையின் பிடிமானங்களாக ஆகிப் போவதும் உண்டு. உணவைப் பற்றிய கட்டுக்கதைகள் ஏராளம். அந்தக் கதைகளின் ஏதோ சில விசயங்கள் உண்மையோடு ஒத்துப் போவதால் ஒட்டுமொத்த கதையும் உண்மை என்றாகி விடாது. அந்தக் கட்டுகதைகளின் ஒரு சில உண்மைகள் ஒட்டுமொத்தக் கதையையும் உண்மை என்று நிறுவும்.

முருங்கைக்காய் சாப்பிட்டால் ஆண்மை பெருகும் என்பார்கள். நம் நாட்டில் முருங்கைக்காய்க்கா பஞ்சம்? முருங்கைக்காயைத் தின்றும் குழந்தை இல்லாமல் இருப்பவர்கள் இருந்திருக்கிறார்கள். முருங்கைக்காயில் ஆண்மைக்கான சமாச்சாரங்கள் இல்லை என்கிறாயா என்றால் இருக்கலாம். அது நல்ல காய்கறி என்பதில் எல்லாம் மாற்றுக்கருத்தில்லை. முருங்கைக்காயை மட்டும் தின்று ஆண்மையைப் பெருக்க முயற்சிப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். அதே போல கடுக்காய் பற்றிய கதையும் ஆண்மையை ஊதிப் பெருக்குவதைப் போலச் சொல்வார்கள்.

இயற்கையாக சில மூலிகைகளுக்கு இருக்கும் வல்லமைகளையும் வலிமைகளையும் மறுக்க முடியாது. உணவாகப் பயன்படுத்தும் எதுவும் அப்படி அபரிமிதமான மாற்றத்தை உண்டு பண்ணும் என்பதை எந்த அளவுக்கு ஏற்க முடியும் என்பதுதான் கேள்வி. உடலானது மிதமான உணவை ஏற்கும் வகையில் உள்ளது. மருந்து போன்ற உணவைத் தொடர்ந்து உண்டு கொண்டிருந்தால் அது வேறு விதமான பக்க விளைவுகளை உண்டு பண்ணி விடும். விருந்தும் மருந்தும் மூன்று நாள் கிராமங்களில் ஒரு சொலவத்தைச்  சொல்வார்கள்.  மூன்று நாட்கள் என்பதை நாம் முப்பது நாட்கள் வரை கூட வைத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் உடம்பு தாங்காது. அதன் பக்க விளைவுகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும். தங்க பஸ்பமே என்றாலும் அதைத் தொடர்ச்சியாகச் சாப்பிட்டால் அது வேறு மாதிரியான பிரச்சனைகளை உண்டு பண்ணி அதை உண்ண முடியாத நிலைக்குப் போகத்தான் வேண்டியிருக்கும்.

உணவுப் பொருட்களால் உண்டாக்கப்படும் அதிசயத்தைப் பற்றி சமீப காலமாக ஊதிப் பெருக்கப்பட்ட கட்டுக்கதைகளும் சங்கதிகளும் அதிகமாக உலவுகின்றன.

விஷத்தைத் தின்றால் உயிர் போவதைப் போல உணவுப் பொருட்களால் அப்படி திடீரென்ற அதிசயத்தை உண்டு பண்ணி விட முடியாது. சிறிதுசிறிதாக உண்டு பண்ணக் கூடும். இப்படிப்பட்ட உணவை அதிகமாக எடுத்துக் கொண்டால்தான் இந்த மாதிரியான மாற்றம் உண்டாகும், இல்லையென்றால் இப்படியேதான் இருக்க வேண்டும் என்பது மாதிரியான மிகைக் கதைகளில் இருக்கும் கட்டுப்பெட்டித்தன்மையைத்தான் யோசிக்க வேண்டியிருக்கிறது.

இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் கேன்சர் வராது, இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் சர்க்கரை நெருங்கிப் பார்க்காது என்றெல்லாம் திடீர் திடீர் என்று சில பழங்கள் அதீத மவுசோடும் அதிக விலையோடும் விற்கப்படுவதைப் பார்க்கும் போது அவற்றிற்கான விற்பனை தந்திர வியாபார உத்தியாகத்தான் அவற்றைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களால் எந்த மாற்றமும் உண்டாகப் போவதில்லை.

கலவையாக தானியங்கள், காய்கறிகள், பழங்கள், கீரைகள், பருப்பு வகைகள், இறைச்சி என்று எடுத்துக் கொள்வதைத்தான் நான் ஆதரிக்கிறேன். இது மாவுச்சத்து, புரதச் சத்து, உயிர்ச் சத்து, கொழுப்புச் சத்து, தாது உப்புகள் என்று பள்ளிக்கூடத்தில் படித்த சரிவிகித உணவு எனும் சத்து கணக்கோடு அப்படியே பொருந்திப் போகும்.

குறிப்பிட்ட உணவை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினால் அந்தந்தப் பருவத்தில் அதிகம் கிடைக்கும் கறிகாய்கள், கிழங்குகள், கடலைகள், பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.

உதாரணமாக மாம்பழ சீசனில் மாம்பழங்களை அதிகம் உண்ணலாம். பலாப்பல சீசனில் பலாப்பழச் சுளைகளை அதிகம் உண்ணலாம். மரவள்ளிக் கிழங்குக்கென்று ஒரு சீசன் இருக்கிறது. அப்போது அதை அதிகம் உண்ணலாம். சர்க்கரைவள்ளிக் கிழங்கிற்கும் சீசன் இருக்கிறது. நிலக்கடலைக்கும் சீசன் இருக்கிறது. மாதுளம் பழ சீசன், கத்திரிக்காய் சீசன், ஆரஞ்சு சீசன் என்று சீசன்கள் இருக்கின்றன. இலந்தைப் பழ சீசனில் நாவல் பழ சீசனில் விளாம்பழ சீசனில் அந்தந்தப் பழங்களை உண்ணலாம். அந்தந்த சீசன்களில் கிடைப்பதை அதிகம் உண்ணலாம். விலையும் மலிவு. குறிப்பிட்ட சில உணவை அதிகம் உண்ணவில்லை என்ற ஏக்கத்தையும் தீர்த்துக் கொள்ளலாம்.

பிரமாதமான அட்டகாசமான வியாதியை அதிசயமான முறையில் தீர்க்கும் உணவு என்றெல்லாம் எதுவும் இல்லை. உங்கள் பகுதியில் விளையக்கூடிய உங்களுக்கு மலிவாகக் கிடைக்கக் கூடிய உணவுப் பொருள்கள்தான் பிரமாதமான அட்டகாசமான உணவு. மற்றபடி சீசனில் மிதமிஞ்சிப் போவதால் விலை மலிவாக வரும் உணவுப் பொருள்களையும் உண்ணலாம். மற்றபடி குறிப்பிட்ட சில உணவுப்பொருள்கள் குறிப்பிட்ட சில வியாதிகளைத் தீர்க்கும் என்ற கதைகளை நம்பி அவற்றை அதிக விலை கொடுத்து வாங்கி உண்ண வேண்டியதில்லை.

*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...