23 Aug 2023

நலம் நாடி… நலம் முதல் நாடி…

நலம் நாடி… நலம் முதல் நாடி…

“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்”        (குறள், 948)

என்பார் வள்ளுவர்.

இக்குறள் எதிர்மறையாக இருப்பதாக நீங்கள் நினைத்தால் இக்குறளை நீங்கள் இப்படியும் மாற்றிக் கொள்ளலாம்.

நலம் நாடி நலம் முதல் நாடி அது தொணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்

மனித உடல் நலமாக இருக்க வேண்டுமென்றால் அது மலம், சிறுநீர் போன்ற கழிவுகளை மட்டும் வெளியேற்றினால் போதாது. வியர்வையையும் வெளியேற்ற வேண்டும்.

தினமும் மலம் கழித்தல் ஆரோக்கியத்தின் அடிப்படை. ஏனென்றால் மலச்சிக்கல் உருவாக்கும் நோய்கள் அநேகம். சிறுநீர் கழித்தலிலும் பிரச்சனை இல்லாமல் இருத்தல் முக்கியம். இல்லையென்றால் உயிர் வாழ டயாலிசிஸ் கட்டாயம்.

மலம் மற்றும் சிறுநீர் வெளியேற்றத்தைப் போன்று வியர்வை வெளியேற்றமும் அவசியமும் முக்கியமும் நிறைந்ததாகும். வியர்வையை வெளியேற்றுவதில் இன்றைய வாழ்க்கை முறையில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. இன்று உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் குறைந்து விட்டன. இல்லாமலும் போய் விட்டன.

சாதாரணமாக நடத்தலுக்கும் வாய்ப்பில்லாமல் வாகனங்கள் நம்மைச் சுமந்து செல்கின்றன. உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடியாமல் வாழ்க்கை நம்மை வேகமாக இழுத்துச் செல்கிறது.

இயல்பாக வெளியேறும் வியர்வையையும் குளிர்சாதன வசதிகள் (ஏ.சி.) வெளியேற விடாமல் செய்து விடுகின்றது. வியர்வை வெளியேறாத போது சிறுநீரகத்தின் பணி அதிகமாகிறது மற்றும் கடினமாகிறது. பலருக்கும் விரைவில் சிறுநீரகப் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு இது முதன்மையான காரணம்.

இதற்குத் தீர்வே கிடையாதா? இப்படியேதான போய்க் கொண்டிருக்குமா வாழ்க்கை? வாழ்க்கை முறை இப்படி சிக்கலான கேள்விகளை எழுப்பும் போது நாம் இவற்றுக்கு எப்படி விடை காண்பது? விடை கண்டாலும் அதை எப்படிச் செயல்படுத்துவது?

வீட்டிலிருக்கும் சட்டினி அரைப்பான் (மிக்ஸி), மாவு அரைப்பான் (கிரைண்டர்), குளிர்சாதனப் பெட்டி (பிரிட்ஜ்), குளிர்சாதன வசதி (ஏர் கண்டிஷன்) போன்ற சாதனங்களில் எவற்றிற்கெல்லாம் விடை கொடுக்கலாம் என யோசிக்கலாம். இவை அத்தனைக்கும் விடை கொடுத்தால் வியர்வைக்கான விடை கிடைத்து விடும். அல்லது இவற்றில் கணிசமானவற்றிக்கு விடை கொடுத்தாலும் வியர்வைக்கான வாய்ப்புகள் கிடைத்து விடும். இவற்றுடன் துணி துவைப்பான் (வாஷிங் மெஷின்), இரு சக்கர வாகனம் (டூ வீலர்), மகிழ்வுந்து (கார்) போன்றவை உங்களிடம் இருந்தால் அவற்றுக்கும் விடை கொடுத்தால் இழந்து கொண்டிருக்கும் ஆரோக்கியத்தை மீட்டு விடலாம்.

நீங்கள் சட்டினி அரைப்பானுக்கு விடை கொடுத்தால் அம்மிக்கல்லுக்கு வேலை வந்து விடும். மாவு அரைப்பானுக்கு விடை கொடுத்தால் ஆட்டுக்கல்லுக்கு வேலை கிடைத்து விடும். குளிர்சாதனப் பெட்டிக்கு விடை கொடுத்தால் உணவை அப்போரைதக்கப்போது சமைத்து உண்பதற்கு வாய்ப்புகள் உண்டாகும். குளிர்சாதன வசதிக்கு விடை கொடுத்தால் உடலிலிருந்து வியர்வை வெளியேறுவதற்கு எந்தத் தடுக்கின்ற சோதனைச் சாவடியும் இருக்காது.

இரு சக்கர வாகனத்துக்கும் மகிழ்வுந்துக்கும் விடை கொடுத்தால் அந்த இடத்தை நடையோ, மிதிவண்டியோ பிடித்துக் கொண்டு விடும்.

எல்லாவற்றிக்கும் மேலாகத் தொலைக்காட்சி (டிவி) பெட்டிக்கு விடை கொடுத்து விட்டால் உங்களது சகல நோய்களும் தீர்ந்த மாதிரிதான். இப்போது நீங்கள் சர்வரோக நிவாரணியைத் தரும் வாழ்க்கை முறைக்குள் வந்து விடலாம்.

முடியுமானால் மண்பாண்டங்களையும் விறகு அடுப்பு சமையலையும் நீங்கள் வழக்கத்திற்குக் கொண்டு வரலாம்.

இந்த மாற்றங்களால் உங்களது உடல் நலம் மட்டும் மேம்படுகிறது என்ற நினைக்க வேண்டாம். உங்கள் பொருளாதார நலமும் பலமும் கூடுகிறது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டில் சட்டினி அரைப்பான், மாவு அரைப்பான், குளிர்சாதனப் பெட்டி, குளிர்சாதன வசதி, தொலைக்காட்சி இல்லையென்றால் நீங்கள் பயன்படுத்தும் மின்சாரம் கணிசமாகக் குறைந்து விடும். நீங்கள் நூறு அலகு (யூனிட்) இலவச மின்சாரப் பயன்பாட்டிற்குள் வந்து மின் கட்டணமும் கட்ட வேண்டியிராத சூழ்நிலையையும் அடைந்து விடலாம்.

இந்த இலவச மின்சாரப் பயன்பாட்டை நீங்கள் குறைத்து மதிப்பிட வேண்டாம். இதனால் நிறைய சுற்றுச்சூழல் நன்மைகள் உண்டு. அந்த நன்மைகளுக்காக அரசாங்கம் உங்களுக்குக் கொடுக்கும் பரிசுதான் இலவச மின்சாரம் என்று எடுத்துக் கொள்ளுங்கள். ஏன் அப்படியென்றால், நாம் மின்சாரம் தயாரிக்கும் பெரும்பாலான முறைகள் சூழலியல் கேடுகளை உண்டு பண்ணுகின்றன. அந்தச் சூழலியல் கேடுகளைக் குறைக்க நீங்கள் மேற்கொண்ட முயற்சிக்காக உங்களுக்கு வழங்கப்படும் பசுமை கட்டணம்தான் இலவச மின்சாரம் எனலாம்.

கால்நடையாக நடந்து செல்லுதலும் மிதிவண்டியில் செல்லுதலும் ஆரோக்கியத்தை நோக்கிய மிகப்பெரும் முன்வைப்புகள். எல்லா இடங்களுக்கும் நடந்தும் மிதிவண்டியிலும் செல்ல முடியுமா என்று நீங்கள் கேட்கலாம். அது போன்ற நிலைமைகளில் திட்டமிட்டுக் கொண்டு பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள். இதனால் நீங்கள் எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து நாட்டின் எரிபொருள் இறக்குமதியைக் குறைக்க உதவுகிறீர்கள். வீட்டின் செலவுத்தொகையிலும் எரிபொருள் செலவைக் குறைக்கிறீர்கள். இதனால் நாட்டுக்கும் லாபம். வீட்டுக்கும் லாபம். சுற்றுச்சூழலுக்கும் லாபம். ஒரு கல்லில் மூன்று மாங்காய் அடிப்பதைப் போன்றது இது.

மாதம் நாம் பயன்படுத்தும் ஒரு சில லிட்டர் பெட்ரோல் அல்லது டீசலிலா நாட்டின் பொருளாதாரம் மேம்படப் போகிறது என நீங்கள் நினைக்க வேண்டாம். இப்படி ஒவ்வொருவரும் ஒரு சில லிட்டர் பெட்ரோல் அல்லது டீசலைக் குறைக்கும் போது பல கோடி லிட்டர் பெட்ரோல் டீசல் பயன்பாட்டைக் குறைக்க முடியும். இதனால் பெட்ரோலியப் பொருள் இறக்குமதி குறைவதுடன் பெட்ரோலியப் பொருள்களின் பயன்பாடு குறைந்து காற்று மண்டலத்தின் மாசுபாடு குறைந்து மேம்பாடு அடையும். இந்தியா அதிகம் இறக்குமதி செய்யும் பொருட்களில் பெட்ரோலியப் பொருட்களும் ஒன்று என்பதைக் கருத்தில் கொண்டால் இதனுடைய பொருளாதார லாபத்தை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

உங்களின் ஆரோக்கியம் மேம்படும் போது மருத்துவச் செலவினங்களும் குறையும். அந்த விதத்தில் இது மற்றொரு பொருளாதார நலனையும் உங்களுக்குத் தரும். ஆரோக்கியக் குறைவால் ஏற்படும் நோய்களால் உங்கள் பொன்னான நேரம் வியாதியால் பாதிக்கப்படாமலும் உங்களுக்கு ஒரு காப்பீடு இதனால் கிடைத்து விடும். பொன் போன்ற காலத்தை வாங்குவதற்கும் பொன்னான காலத்தில் நோய் வாய்ப்படாமல் உழைத்து பொன்னை வாங்குவதற்கும் இந்த வாழ்க்கை மாற்ற முறைகள் உங்களுக்கு உதவும்.

இதெல்லாம் உடனடியாக நிகழ்த்தி விட முடியுமா? அது அவ்வளவு சுலபமில்லை. நாங்கள் இந்த மாற்றத்தை நோக்கி அடியெடுத்து வைக்க ஏழெட்டு ஆண்டுகள் ஆயிருக்கின்றன. அந்தக் கதையை உங்களிடம் சொல்ல வேண்டும். ஒவ்வொன்றாகச் சொல்கிறேன்.

*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...