27 Jun 2023

மனமெனும் பிரமாண்டப் புதிர்

மனமெனும் பிரமாண்டப் புதிர்

சின்ன சின்ன அபத்தங்கள், கோணல்கள், பிசகுகள் என்று தெரிந்தாலும் அதுதான் மனதுக்கு இஷ்டம்.

அசட்டுத்தனங்கள், பித்துக்குளித்தனங்கள் – இதுதான் மனம் விரும்புவது. மற்றவர்களுக்காக நான் புத்திசாலித்தனத்தை விரும்புவது போல நடிக்கவே செய்கிறேன். மனதுக்கு நிஜமாக அந்தப் புத்திசாலித்தனத்தில் கொஞ்சம் கூட விருப்பமில்லை.

இந்த மனம் ரொம்ப விஷேசமாக இருக்கிறது. ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு விதமாக. ஒரு நேரத்தில் இருந்ததைப் போல இன்னொரு நேரத்தில் வாய்க்க மாட்டேன்கிறது.

அந்த நேரத்தில் இருந்தது அந்த நேரத்தில் இருந்ததுதான். பிறிதொரு நேரத்தில் அது போல அதன் சாயலில் கூட இருக்க முடியாது. எல்லாம் அந்தந்த நேரத்தில் இருந்து அப்படியே கடந்து போக வேண்டியன. அதே போல மறுபடியும் இருக்க நினைத்து இந்த நேரத்தில் இருக்க வேண்டிய மனோபாவத்தை இழக்க வேண்டியதில்லை.

அந்தந்த மனோபாவத்தை அப்படி அப்படியே ஏற்க வேண்டுமென்றால் அசட்டுத்தனம் வேண்டியிருக்கிறது. புத்திசாலித்தனம் அதை ஏற்காது. புத்திசாலித்தனம் என்ன செய்யும் என்றால், முன்னர் இருந்தது போன்ற அதே அற்புதமான மனநிலையை எப்படி உருவாக்குவது என்று கிளம்பி விடும். பித்துக்குளி தனங்களை ஏற்கும் மனம் அதைப் பொருட்படுத்தாது. அது எதையும் பொருட்படுத்தாமல் அந்தந்த நேரத்து மனநிலையோடு போய்க் கொண்டு இருக்கும். பைத்தியக்கரத்தனமாக இருப்பதன் மகிழ்ச்சி அது. பைத்தியக்காரர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு புத்திசாலிதனத்தோடு இல்லாத மனநிலை முக்கிய காரணம்.

ஏதோ ஒரு நேரத்தில் ரொம்ப பிரமாதாக இருக்கும் மனநிலை பிறிதொரு நேரத்தில் சுமாராகத் தோன்றுவதும் உண்டு. சுமாராக இருந்த மனநிலையைப் பிறிதொரு நேரத்தில் ரொம்பை பிரமாதமாக நினைத்துக் கொள்வதும் உண்டு.

இப்போது எவ்வளவோ வசதி இருக்கிறது. இப்படி இருக்கும் மனநிலையை இப்படியே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் எல்லாம் இல்லை. டிவியைப் போட்டு விட்டோ, மொபைலை எடுத்து வைத்துக் கொண்டோ அல்லது போதைப் பாக்கைப் போட்டுக் கொண்டோ எப்படியெல்லாமோ மாற்றிக் கொள்ள வாய்ப்புகள் இருக்கின்றன.

மனநிலையை அப்படி ஒரு நிலையிலிருந்து இன்னொரு அதீத நிலைக்கு மாற்ற என்ன அவசியம் வந்து கிடக்கிறது? நாம் மாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் அதுவே மாறிக் கொள்ளத்தான் போகிறது. அப்படியும் மாற்ற வேண்டும் தோன்றினால் சுற்றிக் கிடக்கும் இயற்கையை, நடக்கும் வேடிக்கையைப் பார்க்க, புத்தகங்களை எடுத்து வைத்துப் படிக்க, பிடித்தவர்களோடு சில நிமிஷம் பேச, அன்போடு ஒரு செடியோடோ, பிராணியோடோ உறவாட என்று நிறைய இருக்கிறது.

வாசிக்க வாசிக்க மனதைப் போன்ற பிரமாண்ட புத்தகம் ஏது? தோண்ட தோண்ட மனதைப் போன்ற புதையல் உண்டா? யோசிக்க யோசிக்க மனதைப் போன்ற பிரமாண்டம் வேறெதும் இருக்கிறதா என்ன? விடை மேல் விடை காண மனதைப் போன்ற புதிரான உலகத்தைப் போல வேறொன்றைப் படைத்து விட முடியாது.

*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...