28 Jun 2023

பெண் தேடும் படலங்கள்

பெண் தேடும் படலங்கள்

ஜாதகம் பொருந்திப் போக வேண்டும். ராகு, செவ்வாய் தோஷங்கள் ஆகாது. உற்றார் உறவினர்களுக்குப் பிடித்துப் போக வேண்டும். குணமாக இருக்க வேண்டும். குணமென்றால் கோபம் கூடாது. தன்மானம், சுயகௌரவம் அறவே கூடாது. எதிர்பார்க்கும் சீர் சனத்தியும் செய்ய வேண்டும். மாப்பிள்ளை வீட்டின் கணக்கை மனதில் பிடித்து அப்படியே வரதட்சணை கணக்கை நேர் செய்ய வேண்டும். நாங்கள் என்ன கேட்கப் போகிறோம் என்ற வாக்கியம் மாப்பிள்ளை வீட்டின் சார்பில் உதிர்க்கப்படும். ஆனால் உங்கள் பெண்ணுக்கு நீங்கள் குறைத்தா செய்யப் போகிறீர்கள் என்ற வாசகத்தின் பொருள் உணர்ந்தோராகப் பெண் வீட்டார் இருக்க வேண்டும்.

பொண்ணும் நல்ல நிறமாக அழகாக இருக்க வேண்டும். கருப்பு கூடாது. நல்ல சிவப்பு முக்கியம். வத்தலாகவோ தொத்தலாகவோ இருக்கக் கூடாது. மூக்கும் முழியுமாக இருக்க வேண்டும். இவ்வளவு எதிர்பார்ப்புகளை வைத்து ஒரு பையனுக்குப் பெண் பார்க்க தொடங்கினால் ஒன்று ஒத்து வந்தால் இன்னொன்று ஒத்துப் போகாது.

இதற்காக ஐந்து வருடங்கள், பத்து வருடங்கள் என அலைந்து இன்னும் அலைந்து கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள். கடைசியில் வேறு வழியில்லாமல் அலுத்துப் போய், கிடைக்கும் பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து கொள்ள வேண்டியதாகப் போய் விடும்.

ஆண் பிள்ளைகள் நன்றாகப் படித்திருக்கிறார்கள். நன்றாக யோசிக்கிறார்கள். இருந்தும் அவர்கள் உள்ளத்தில் ஏதோ பயம் இருக்கிறது. இல்லையென்றால் அறிவை நம்பாமல் அவர்கள் ஏன் ஜாதகத்தை நம்ப வேண்டும்? யோசிக்காமல் எதையாவது செய்கிறார்கள். அல்லது யோசிக்க ஆரம்பித்து எதையும் செய்யாமல் விட்டு விடுகிறார்கள். ஜாதகங்களுக்கு என்ன அறிவியல் நிரூபணம் இருக்க முடியும்? ஏதோ அள்ளுபுள்ளிக் கணக்குகளில் புள்ளியல் குறிப்பிடும் சில சாத்தியங்களுக்கு வேண்டுமானால் அது ஒத்து வரலாம். அந்த அள்ளுபுள்ளிக் கணக்குகளுக்கு அப்படி அலமலந்து போகிறார்கள் மக்கள். ஒரு எம்.பி.பி.எஸ். டாக்டரை விட ஒரு பிரபல ஜோதிடர் மிக அதிகமாகச் சம்பாதிக்க முடிகிறது.

ஜாதகம் முடிந்தால் அடுத்த வேகத் தடையாக சாதி இருக்கிறது. இன்னும் சாதிக்குள் திருமணம் செய்வதிலேயே ஏன் நிற்க வேண்டும்? ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை எதிர்பார்த்து நீண்ட காலத்தை வீணாக்கி விடுவதைப் போலத்தான் இருக்கிறது. நாளைக்கு ஒரு நல்லது கெட்டது என்றால் சாதிக்காரர்கள் முன் நிற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எப்படியோ வந்து விடுகிறது. என் அனுபவம் என்னவோ நல்லது, கெட்டதுகளில் உற்றார், உறவினர், சாதிக்காரர்களை விட முகம் தெரியாத நட்புகளும் அன்புள்ளங்களும் முன் நின்றது அதிகம்.

நன்றாகச் சம்பாதிக்கும் ஆண் பிள்ளைகளும் பெண் வீட்டாரின் சீர் சனத்திக் குறைந்து விடக் கூடாது என்ற பயத்தில் இருக்கிறார்கள். கிடைப்பதை ஏன் விட வேண்டும் என்ற நினைப்பு காரணமாக இருக்கலாம். எரிகின்ற வீட்டில் பிடுங்கிய வரைதான் ஆதாயம் என்பதாகவும் இருக்கலாம்.

இன்னும் பையனுக்குப் பெண் தேடிக் கொண்டிருக்கிறேன், கிடைத்தபாடில்லை என்று பெருமூச்சு விடுவோர் ஏராளம். பகவான் கண் திறந்து பார்க்க மாட்டேன்கிறார் என்று கடவுளுக்குக் குற்ற உணர்ச்சியை உண்டாக்குவோர் அநேகம். பெண் தேடும் வீட்டாரின் எதிர்பார்ப்புகள் அதிகம் என்று யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். அதிகபட்சமான எதிர்பார்ப்புகளை ஓரளவு நியாயமான எதிர்பார்ப்புகளுக்குள் கொண்டு வருவதையும் ஏற்க மாட்டார்கள். அவர்களைப் பொருத்த வரையில் இந்த உலகில் பெண்கள் இல்லை. அதுவும் உண்மைதான். அவர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ற இந்த உலகில் மட்டுமல்ல, எந்தப் பிரபஞ்சத்திலும் இருக்க மாட்டார்கள்.

காலம் போன கடைசியில் வேறு வழியில்லாமல் ஒரு பெண்ணை திருமணம் செய்து வைப்பார்கள். அருமையான பல பெண்களை அவர்கள் கடந்து வந்திருப்பார்கள். மனங்களின் எதிர்பார்ப்பு அந்த அருமைகளைக் கண்ணுக்குத் தெரியாமல் அடித்திருக்கும்.

*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...