25 Jun 2023

மதிப்பிழந்த ரூபாய்கள்

மதிப்பிழந்த ரூபாய்கள்

2016 ஆம் ஆண்டு

நவம்பர் மாதம்

8 ஆம் நாள்

மறக்க முடியாத நாள்.

பண மதிப்பிழப்பு குறித்த அறிவிப்பு வெளியான நாள்.

அப்போது 5 ரூபாய், 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய், 500 ரூபாய், 1000 ரூபாய் ஆகிய தாள்கள் புழக்கத்தில் இருந்தன. ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் தாள்களும் புழக்கத்தில் இருந்தாலும் அவை அதிகமாக நாணயங்களாகப் புழக்கத்தில் இருந்தன.

ரூபாய் தாள்களில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் தாள்களை பண மதிப்பிழக்கச் செய்வதாக அப்போதைய பிரதமர் நரேந்திர மோடி ஊடகங்களில் தோன்றி அறிவித்தார். கருப்பு பணத்தையும் கள்ளப் பணத்தையும் ஒழிப்பதற்காக இந்த நடிவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக அதற்கான காரணத்தை விளக்கினார்.

இந்த அறிவிப்பைப் பலர் சிலாகித்தனர். தமிழ்த் திரையின் உச்ச நட்சத்திரமாக இருந்த ரஜினி காந்த் ஆதரித்துக் கருத்து தெரிவித்திருந்தார். நாட்டில் உள்ள பல பிரபலங்களும் அதைச் செய்தனர். பிரபலங்கள் யாரும் இதற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்தாக நினைவில்லை. பிரதான எதிர்காட்சியான காங்கிரசிடமிருந்து மட்டும் எதிர்க் கருத்துகள் வந்து கொண்டிருந்தன.

மதிப்பிழக்கச் செய்யப்பட்ட 500 ரூபாயையும் 1000 ரூபாயையும் வங்கிகளிலும் அஞ்சலகங்களிலும் மாற்றிக் கொள்ள மக்கள் முண்யடித்துக் கொண்டு வரிசையில் நின்றனர். பணத்தை மாற்றுவது அடுத்து வந்த நாட்களில் பெரும் போராட்டமாக இருந்தது.

எங்கள் வீட்டில் அப்போது நகைக்கடன் மூலமாக ஆறு லட்ச ரூபாயை ஐநூறு ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் தாள்களாக வாங்கி வைத்திருந்தனர். அவ்வளவு ரூபாய் பணத்தையும் அப்படியே எடுத்துக் கொண்டு போய் வங்கியில் கணக்கு வைக்கத்தான் முடிந்தது. கையில் தற்போதைக்குப் பணத்தைத் தர முடியாது என்று வங்கியில் சொல்லி விட்டார்கள். அதாவது வங்கிக் கணக்கில் பணம் இருந்தது. கையில் பணம் இல்லை.

எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் சென்னையில் நடைபெறும் திருமணத்திற்குச் சென்றிருந்தார். கையில் இருந்த ஐநூறும் ஆயிரமும் செல்லாமல் போனதில் மொய் வைக்க முடியாமல் போனது. கையிலிருந்த நூறு ரூபாய் நோட்டுகளை மொய்யாக எழுதினால் எப்படி வீடு திரும்புவது என்ற பயத்தில் மொய் எழுதாமலே ஊர் திரும்பியதை வருத்தமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

இப்படி ஆளாளுக்குச் சொல்ல வேதனையான சம்பவங்கள் பெருகிக் கொண்டிருந்தன. பணத்தை மாற்றுவதற்காக வங்கியில் வரிசையில் காத்திருந்த சர்க்கரை நோயாளிகள் மயக்கமடித்து விழுந்தனர். மாரடைப்பால் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

பணப்புழக்கம் சிரம தசையில் இருந்தது. மதிப்பிழக்கச் செய்த 500க்கும் 1000க்கும் மாற்றாக மத்திய வங்கி (ரிசர்வ் பேங்க்) புதிய 500 ரூபாயையும், 2000 ரூபாயையும் வெளியிட்டது. புதிய 200 ரூபாய், 100 ரூபாய், 20 ரூபாய் மற்றும் 10 ரூபாய் தாள்களையும் வெளியிட்டது. அந்தப் புதிய தாள்களைப் பெறுவதில் மிகுந்த சிரமம் நிலவியது.

ஏற்கனவே இருந்த பழைய 500ம், 1000ம் 80 சதவீதத்திற்கும் மேல் அதாவது தோராயமாக 86 சதவீத அளவுக்கு நாட்டின் பணப்புழக்க மதிப்பில் இருந்தன. அவற்றிற்கு மாற்றாக புதிய ரூபாய் தாள்களை வெளியிடுவது சிரமமாக இருந்தது. 80 சதவீதத்திற்கு மேல் இருந்த நோட்டுகளை மாற்றுவது மிகுந்த சள்ளை பிடித்த வேலை என்பதை விட புதிதாக வெளியிடப்பட்ட தாள்கள் பழைய தாள்களை விட அளவில் சிறியதாக இருந்தது. இதற்காக ஏற்கனவே இருந்த பணம் கொடுக்கும் ஏடிஎம் இயந்திரங்களை மறுகட்டமைப்பு செய்ய வேண்டியிருந்தது. ஏற்கனவே கடினமாக இருந்த பணப்புழக்கத்தின் பல்வேறு சிரமங்களில் இது ஒரு புதிய சிரமமாகச் சேர்ந்து கொண்டது.

புதிய 500 ரூபாய் தாளை வெளியிட்டதைக் கூட ஏற்றுக் கொள்ள முடிந்தது. 2000 ரூபாய் தாள்களை வெளியிட்டதை எப்படி ஏற்றுக் கொள்வது என்பது புரியவில்லை. வேறு வழியில்லாமல் பழைய பணத்தை மாற்ற 2000 ரூபாய் தாள்கள்தான் அப்போதைய தற்காலிக தீர்வாக இருந்திருக்க வேண்டும். புதிய 2000 ரூபாய் தாள்களில் சிப்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்திருப்பதாகவும் பல்வேறு வதந்திகளை உருவாக்கி 2000 ரூபாய் தாள்களுக்கான நியாயங்கள் வேறு சொல்லப்பட்டன. இந்தப் புதிய 2000 தாளைக் கள்ள நோட்டாக அச்சடிக்க முடியாது என்று வியாக்கியானங்கள் சொல்லப்பட்ட வேளையில் சாதாரணமாக வண்ணத்தில் நகலெடுக்கும் இயந்திரத்திலேயே (கலர் செராக்ஸ் மிஷின்) இதை பலர் நகலெடுத்துப் புழக்கத்தில் விடடனர். அது வேறு பெருங் குழப்பத்தை உண்டு பண்ணியது. கையில் இருக்கும் பணம் நல்ல பணமா, கள்ளப் பணமா என்ற குழப்பம் ஒவ்வொரு முறை 2000 ரூபாய் தாள் கைக்கு வரும் போது ஒவ்வொருவருக்கும் இருந்தது.

2000 ரூபாய் தாள்களால் மேலும் சில புதிய பிரச்சனைகள் எழுந்தன. சில்லரை மாற்றுவதில் பெருத்த சிரமத்தை நிலவியது. எப்படிப் பார்த்தாலும் 500, 1000 எனப் பதுக்குவதை விட 2000மாகப் பதுக்குவது சுலபமானது என்பதைச் சொல்ல ஆய்வறிவு தேவையில்லை. சாதாரண அறிவுக்கேப் புலப்படும் உண்மை. இந்த உண்மையையும் பலர் அப்போது ஆவேசமாகப் பேசிக் கொண்டார்கள்.

பணத்தை மாற்றியாக வேண்டிய நிலையில் 2000 ரூபாய் தாள் கைக்கு வருவது தவிர்க்க முடியாததாக இருந்தது. என் கைக்கு 2000 ரூபாய் தாள் வந்த போதெல்லாம் பயமாக இருந்தது. பதற்றமாக இருந்தது. உடனடியாக 200க்கோ 300க்கோ இரு சக்கர வாகனத்தில் எரிபொருளை (பெட்ரோல்) நிரப்பி அதை மாற்றுவதில் குறியாக இருந்தேன். அப்போது சில்லரை தட்டுபாடில்லாமல் பணம் கிடைத்த இடம் எரிபொருள் நிலையங்கள்தான் (பெட்ரோல் பங்குகள்).

2000 ரூபாய் தாளை வெளியிட்ட நேரத்திலயே எனக்குப் பயம் இருந்தது. இந்தத் தாளை எப்படியும் திரும்பப் பெறுவார்கள் அல்லது மதிப்பிழக்கச் செய்வார்கள் என்று. உடனடியாகச் செய்யவில்லை. அதற்கு ஏழாண்டுகள் பிடித்தன.

2023

மே மாதம்

19 ஆம் நாள்

மத்திய வங்கி (ரிசர்வ் பேங்க்) 2000 ரூபாய் நோட்டைத் திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவித்து விட்டது. மாற்றிக் கொள்ளத்தான் என்னிடம் ஒரு 2000 தாள் கூட என்னிடம் இல்லை.

காலத்தின் சாட்சியமாக ஒரு 2000 ரூபாய் தாளையாவது வைத்துக் கொண்டிருந்திருக்கலாம் என்று தோன்றியது. தெரிந்த பலரிடம் கேட்டுப் பார்த்தேன். யாரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களில் ஒரு தாளையாவது வைத்திருந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. அப்போது தோன்றவில்லை. அவை இனிமேல் செல்லப் போவதில்லை என்றாலும் மதிப்பிழக்கச் செய்யப்பட்ட ரூபாய் தாள்களின் வரலாற்று சாட்சியங்கள் அல்லவா!

*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...