30 Dec 2022

வங்கிக்கடனும் வீடும் பின்னோக்கி இழுத்துச் செல்லும் பொருளாதார மாதிரிகள்

வங்கிக்கடனும் வீடும் பின்னோக்கி இழுத்துச் செல்லும் பொருளாதார மாதிரிகள்

என்னைக் கேட்டால் வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டாதீர்கள் என்பேன். நீயேன் அநாவசியமாக வங்கிகளின் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடுகிறாய் என்று கேட்கலாம்.

வங்கிக் கடன்களில் வீட்டுக்கடன்கள் பிரதான இடம் வகிக்கக் கூடியன. வீட்டுக்கடன் வழங்குவதை அடிப்படையாகக் கொண்டு துவங்கப்பட்ட ஒரு நிதி நிறுவனம் ஒரு வங்கியாகவே வளர்ச்சிப் பெற்றதைக் கொண்டு இதை நீங்கள் மேலும் புரிந்து கொள்ளலாம்.

ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் உங்கள் ஆசையில் நான் தேவையின்றி ஒரு கருத்தைத் திணிப்பதாக நீங்கள் நினைக்கலாம். வங்கியில் வீட்டுக்கடன் வாங்கி மாதா மாதாம் தவணைத் தொகைச் செலுத்துவதைப் போல நீங்கள் ஏன் தொடர்வைப்பு கணக்கு ஒன்றைத் துவங்கி மாதா மாதம் பணத்தை உங்கள் பெயரில் வரவு வைத்துக் கொள்ளக் கூடாது? அப்படி பெரும்பாலான மக்களால் செய்ய முடியவில்லை என்ற பலவீனத்தைதான் வங்கிகள் பயன்படுத்திக் கொள்கின்றன.

வீட்டைப் பற்றியும் ஓர் உண்மையை உங்களுக்குச் சொல்ல வேண்டும். உங்கள் கையில் பணம் இருந்தால் வீட்டின் விலை குறையும். உங்கள் கையில் பணம் இல்லா விட்டால் வீட்டின் விலை அதிகமாகும். இதென்ன ஆருடம் போல இருக்கிறது என்று நினைக்காதீர்கள்.

ஒரு வீட்டை வாங்குவதற்கு உரிய பணம் உங்களிடம் கையில் இருந்தால் நீங்கள் பேரம் பேசிக் குறைக்க முடியும். உங்கள் பேரம் படியாவிட்டால் வேறு இடத்தில் இருக்கும் வீட்டிற்குப் பேரம் பேசவும் முடியும். உங்களிடம் பணம் இல்லாத போது இந்தச் சுதந்திரம் போய் விடுகிறது. நீங்கள் கடனுக்குப் பணத்தை வாங்கி வாங்குவதென்றால் கடனுக்கான வட்டி விகிதம், வீட்டுக்கான விலை என்று இன்னொருவரின் பிடியில் சிக்கிக் கொண்டுதான் உங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

நீங்கள் வீடு வாங்குவது என்று முடிவு செய்து பணத்தைத் தொடர் வைப்பிலோ அல்லது முதலீட்டிலோ தொடர்ந்து செய்ய ஆரம்பித்து விட்டீர்கள் என்றால் அதற்கான கால அவகாசம் ஐந்திலிருந்து பத்தாண்டுகள் வரை நீளும். ஆனால் நீங்கள் உங்கள் வீடு குறித்த விசாரணையை பணத்தைத் திரட்டத் துவங்கும் அந்த நாளிலிருந்து துவங்கி விடலாம். உங்களுக்கு உங்கள் வீட்டைப் பற்றியும் விலையைப் பற்றியும் முடிவு செய்ய ஐந்திலிருந்து பத்தாண்டுகள் இருக்கின்றன. இந்தக் காலத்திற்குள் நீங்கள் வீடு குறித்த பல அனுபவ உண்மைகளைப் பெற்றிருப்பீர்கள். இந்தக கால கட்டத்திற்குள் நீங்கள் எதிர்பார்க்காத குறைந்த விலைக்கு வீடுகள் விற்பனைக்கு வருவதையும் பார்ப்பீர்கள். பொறுமையாகக் கவனித்து வருவதன் பலன் அது.

பத்தாண்டு கால இடைவெளிக்குள் உங்கள் பணமும் பெருகியிருக்கும். நீங்கள் எதிர்பார்க்காத குறைந்த விலையில் வீடு கிடைப்பதற்கான வாய்ப்பும் கூடியிருக்கும்.

இந்த இடைப்பட்ட காலத்தில் வீடில்லாமல் நடுரோட்டில் இருப்பதா என நீங்கள் கேட்கலாம். சொந்த வீடு வாங்குவதை விட வாடகை வீடு மிகக் குறைவான மற்றும் மலிவான ஒன்று என்பதை இந்த இடைபட்ட காலத்தில் நீங்கள் நன்றாகவே புரிந்து கொள்ளலாம்.

வாடகை வீட்டில் கிடைக்கும் நன்மைகள் சொந்த வீட்டில் கூட கிடைப்பதில்லை. அவ்வளவு நன்மைகள் வாடகை வீட்டில் ஒளிந்து கிடக்கின்றன. மிக முக்கியமாக வீட்டின் பராமரிப்பிற்காக நீங்கள் பைசா காசை ஒதுக்க வேண்டியதில்லை. இது வாடகை வீட்டில்தான் சாத்தியம்.

நீங்கள் வேலை பார்க்கும் இடம் மாறினால் வாடகை வீட்டை இஷ்டத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். சொந்த வீட்டை நீங்கள் தூக்கிச் செல்ல முடியாது, மாற்றிக் கொள்ளவும் முடியாது. குழந்தையின் படிப்பிற்காகவோ உங்கள் வேலைக்காகவோ நீங்கள் எங்கு வேண்டுமானாலும் உங்கள் வாடகை வீட்டை நீங்கள் மாற்றிக் கொண்டே இருக்கலாம். அப்போது வீடு உங்களுக்கு ஒரு சுமையாக இருக்காது. உண்மையான வீடு பேறு என்பது அதுதான் என்பதை அப்போது நீங்கள் உணர்வீர்கள்.

எனக்குத் தெரிந்த பல பேர் சொந்த வீட்டை எங்கோ புறநகரின் ஒதுக்குப் புறத்தில் கட்டி விட்டு நகரின் முக்கிய பகுதியில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து கொண்டு சொந்த வீட்டை வாடகைக்கும் விட முடியாமல், அதை என்ன செய்வது என்று புரியாமலும் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சொந்த வீட்டிற்காகத்தான் வங்கிகள் நம்மைக் கசக்கிப் பிழிகின்றன. வீட்டை இப்படித்தான் நமக்குச் சுமையாக மாற்றுகின்றன.

நீங்கள் வாடகை வீட்டில் ஐந்தாண்டுகளோ பத்தாண்டுகளோ இருப்பதால் கிடைக்கும் மற்றொரு பலன் எந்தெந்த பகுதிகளில் வீடுகள் என்ன விலைக்குப் போகின்றன? எந்தெந்த இடங்களில் வீடுகள் குறைந்த விலைக்குக் கிடைக்கின்றன? என்று பெறும் அறிவு இருக்கிறதே. அது ரொம்ப முக்கியமானது.

நீங்கள் எதிர்பார்க்காத மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் வீடு குறித்த தகவலை அந்தப் பத்தாண்டுகளுக்குள் நிச்சயம் ஒரு சில முறைகளாவது பெறுவீர்கள். நீங்கள்தான் வீட்டிற்காகப் பணத்தைச் சேர்க்க ஆரம்பித்திருப்பீர்களே. அப்போது அந்தக் குறைந்த விலை வீடு கிடைக்கும் போது உங்களுக்கு வங்கிக் கடனே தேவை இருக்காது அல்லது தேவையிருக்கும் பணத்திற்கு மிகக் குறைந்த அளவில் கடன் வாங்கினாலே போதும் என்ற நிலை இருக்கும்.

வீடு வாங்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்து விட்டால் அதற்காக வங்கியில் கடன் வாங்குவதை முதலில் யோசிக்காதீர்கள். அதற்காகப் பணத்தைத் தவணைத் தொகைச் செலுத்துவதைப் போல மாதா மாதம் பாதுகாப்பான முறையில் சேமிப்பது குறித்தும் முதலீடு செய்து குறித்தும் யோசியுங்கள். வீடு என்பது மிக எளிமையாக உங்களுக்குக் கைகூடி விடும்.

உங்கள் கையில் பணம் இருந்து சற்றே விலை கூடுதலாக ஒரு வீட்டை வாங்கினாலும் அதுவும் குறைந்து விலைக்கு வாங்கியதைப் போலத்தான். எப்படி என்கிறீர்களா? உங்களுக்கு வீட்டுக்கடனுக்கான வட்டி இல்லாமல் போய் விடுகிறது அல்லவா? அப்படியானால் குறைந்து விலைக்கு வாங்கியதாகத்தானே அர்த்தம். அப்படியானால் அவ்வளவு தொகையா வீட்டுக்கடனுக்கான வட்டி செலுத்துகிறோம் என்று கேட்கீறீர்களா? நீங்களே கணக்கிட்டுப் பாருங்கள். இல்லையென்றால் இணையத்தில் இதற்கெனப் பிரத்யேகமாக இருக்கும் கணிப்பான்களில் தொகையைக் கொடுத்துப் பாருங்கள் உங்களுக்கே தெரியும்.

*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...