27 Nov 2022

செய்கூலிக்காகச் சேதாரத்தை அதிகப்படுத்திக் கொள்ளாதீர்கள்!

செய்கூலிக்காகச் சேதாரத்தை அதிகப்படுத்திக் கொள்ளாதீர்கள்!

மாய்ந்து மாய்ந்து உழைக்கிறார்கள்.

எதற்காக என்றால், அப்போதுதான் ஓய்வுக் காலத்தில் சுகமாக ஓய்வெடுக்கலாம் என்கிறார்கள்.

நீங்கள் மேலே உள்ள கூற்றைக் கவனிக்க வேண்டும்.

கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் போல அவர்கள் ஓய்வுக்கென்று ஒரு காலத்தையே வைத்திருக்கிறார்கள் பாருங்கள்.

ஓய்வுக்காலம் வரும் போதுதான் ஓய்வெடுப்பார்களாம்.

ஓய்வுக்காலம் வந்து விட்டால் ஓய்வு எடுக்க வேண்டியதுதானே? அதிலென்ன சுகமாக ஓய்வு எடுப்பது?

அவர்களின் ஓய்வுக்காலம் அநேகமாக உடல் ஓய்ந்த முதுமைக் காலத்தில்தான் வரும்.

முதுமையில் யார் சுகமாக ஓய்வெடுக்க முடியும் சொல்லுங்கள்? அப்போதுதான் ஏகப்பட்ட உடல் உபாதைகள் வந்து சேரும்.

உடல் நன்றாக இருக்கும் போது நீங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டால்தான். உடல் உபாதைகள் வந்து சேரும் போது நீங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை. அதற்காக ஓய்வுக்காலத்தையெல்லாம் நீங்கள் ஒதுக்க வேண்டியதில்லை.

ஓய்வுக்காலம் என்பது நீங்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் வந்துதான் சேரும்.

அப்படி வந்து சேரும் போது உடல் உபாதைகளைச் சுகமாக எதிர்கொள்ள மாய்ந்து மாய்ந்து உழைத்த பணம் வேண்டுமே என்றுதானே சொல்கிறீர்கள்.

நான் என்ன சொல்கிறேன் என்றால் நீங்கள் மாய்ந்து மாய்ந்து உழைத்ததால்தான் உங்களுக்கு அந்த உடல் உபாதை என்று சொல்கிறேன்.

அப்படியானால் உழைக்க வேண்டாம் என்றா சொல்கிறீர்கள் என்றுதானே கேட்கிறீர்கள்.

உழைக்க வேண்டாம் என்று யார் சொன்னது? மாய்ந்து மாய்ந்து உழைக்க வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.

செய்கூலி இருக்கும் போது சேதாரமும் இருக்கிறது. நீங்களாகச் சேதாரத்தை அதிகப்படுத்திக் கொள்ளாதீர்கள் என்றுதான் சொல்கிறேன்.

*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...