25 Jun 2022

நான் ஸ்டாப் நாட்டு நடப்புகள்

நான் ஸ்டாப் நாட்டு நடப்புகள்

            மழை அதிகம் பெய்தால் விடுமுறை.

            வெயில் அதிகம் அடித்தால் விடுமுறை.

            அப்போது வானத்தின் மைண்ட் வாய்ஸ் எனக்கு இப்படிக் கேட்டது, “என்னை என்னத்தான்டா பண்ணச் சொல்றீங்க?” பாவம்தான் வானம்.

            சாயுங்காலம் பார்த்த போது அழுதழுது அதன் முகம் சிவந்திருந்தது.

*

            குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அரசாங்க அறிவிப்புகள் மீது ஒரு புதுவித ஈர்ப்பும், எதிர்பார்ப்பும் வந்து விட்டது. அவ்வபோது அரசின் அறிவிப்புகளை எதிர்பார்த்து செய்திச் சேனல்களை அவ்வளவு ஆக்ரோஷமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

            வீட்டிலுள்ள நண்டு, சுண்டு, நாவர வண்டிலிருந்து பல் கழன்ற பாட்டி வரை டிவி பார்த்துக் கொண்டிருந்தால் நான் புரிந்து கொள்வேன் அரசின் முக்கிய அறிவிப்பு ஒன்று வரப் போகிறதென்று.

            குழந்தைகளைக் கேட்டால் சொல்வார்கள், “பரீட்சையை ரத்துப் பண்ணப் போறாங்களான்னு பாத்துக்கிட்டு இருக்கோம்.”

            பெரியவர்களைக் கேட்டால் சொல்வார்கள், “பயிர்க்கடனை ரத்து செய்யப் போகிறார்களான்னு பாத்துக்கிட்டு இருக்கோம்.”

            குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புரிந்திருக்கிறது, அரசாங்கம் என்பது ரத்து செய்வதற்காகத்தான் இருக்கிறதென்று.

*

            எப்போதாவது யாராவது ஒருவர் என்னிடம் எதையாவது பற்றிக் கேட்பார்கள்.

            அப்படி நாட்டிலுள்ள புதுமை விரும்பிகளைப் பற்றி என்ன நினைக்கீறீர்கள் என்று ஒருவர் கேட்டார். நான் சொன்னேன், நீ என்ன புதுமை செய்தால் என்ன, அவரவருக்கும் அவரவர் வருமானம்தான் முக்கியம்.

            அப்படியானால் நாட்டிலுள்ள பழமை விரும்பிகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார். நான் சொன்னேன், நீ என்னதான் பழமை விரும்பியாக இருந்தால் என்ன, அவரவருக்கும் அவரவர் வருமானம்தான் முக்கியம்.

            அப்படியானால் நான் எந்த விரும்பியாக இருக்க வேண்டும் என்றார். நீ வருமான விரும்பியாக இரு என்றேன்.

*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...