25 Jun 2022

தமிழர் என்றோர் இனமுண்டு – தனியே அவருக்கோர் சினிமா உண்டு

தமிழர் என்றோர் இனமுண்டு – தனியே அவருக்கோர் சினிமா உண்டு

            தமிழகம் முழுவதும் மின்சாரம் பரவலாகாத இருண்ட காலத்தில் நல்ல படமோ, கெட்ட படமோ எல்லா படத்தையும் மாய்ந்து மாய்ந்து தமிழ் மக்கள் பார்த்ததாக வரலாற்றுக் குறிப்புகள் சில இருப்பதாக திரை வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

            அப்போது தியேட்டர் இருக்கும் ஊரில் மின்சாரம் இருந்தது. மின்சாரம் இருந்த ஊர்களில் தியேட்டர் இருந்தது. பள்ளிக்கூடம் இருப்பதை விட ஊரில் தியேட்டர் இருப்பதை முக்கியமாக மக்கள் கருதியிருக்கிறார்கள். ஊருக்குள் தியேட்டர் இருந்தால் சொர்க்கம் இருப்பதாய் நினைத்து மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். 

            நாள் முழுவதும் பாடுபட்டு நான்கு காசு சம்பாதித்து டூரிங் கொட்டகையில் ஒரு படம் பார்த்தால் பிறவிப் பயனுக்கு அது போதும் என்று மக்கள் மகிழ்வோடு வாழ்ந்ததாக அக்காலத்தில் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்ட சன்சிமோ புகாகோ போன்ற உதவாக்கரை ஊர் சுற்றிப் பயணிகள் தங்கள் நாட்குறிப்பில் கவனமாகக் குறித்து வைத்திருக்கிறார்கள். 

            தூர்தர்ஷன் வரும் வரை அப்படி ஒரு நிலை இருந்திருக்கிறது. தூர்தர்ஷன் வந்த பிறகு வீட்டுக்கு ஒரு கழிவறை இல்லை என்றாலும் எப்படியாவது வீட்டுக்கு ஒரு டிவிப் பெட்டியை வாங்கி வைப்பது மக்களின் லட்சியக் கனவாக இருந்தது. மேலும் தூர்தர்ஷன் வந்த போது ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு தியேட்டர் வந்தததாய் நினைத்து மக்கள் ஆனந்த கூத்தாடியிருக்கிறார்கள்.

            இந்தி படம் என்றாலும் தெலுங்கு படம் என்றாலும் மலையாள படம் என்றாலும் தேசிய ஒருமைப்பாட்டு உணர்வோடு ஒன்றிப் படம் பார்த்தார்கள். பிறமொழி படங்களை டப்பிங் பண்ணி போட வேண்டிய அவசியம் எல்லாம் இல்லாமல் இருந்ததாக அக்காலத்தில் டிவியைப் பார்த்தே இந்தி கற்றுக் கொண்ட நல்லாம்பாட்டி நானாமுத்து கல்லாடனார் தெரிவிக்கிறார்.

            கால ஓட்டத்தில் கேபிள் டிவியும் ரிமோட்டும் கையில் வந்த போது ஒரு டிவியானது ஏகப்பட்ட சேனல்களை மாற்றிக் கொள்ள முடியாமல் அல்லாட ஆரம்பித்தது. ஒரு வீட்டில் இருந்த ஒரு டிவி ஒன்பது மனிதர்களால் பல்வேறு விதமாகப் பலாத்காரம் செய்யப்பட்டது.

            டிவிக்களின் பலாத்கார வழக்கு அப்போது பெரிதாக விவாதிக்கப்பட்டு வீட்டில் ஒவ்வொருவருக்கும் ஒரு டிவி என்ற தீர்ப்பு வெளிவந்தது அப்போது பெரிதாகப் பார்க்கப்பட்டது.

            அந்தத் தீர்ப்பின் விளைவாக அதுவரை சினிமா பார்த்த பெரியவர்கள் மெகா சீரியல் பார்க்கத் தொடங்கினார்கள். தம்பதியர்கள் மியூசிக் சேனல் பார்க்க ஆரம்பித்தார்கள். விடலையர்கள் பேஷன் டிவி, ஸ்டார் டிவி என்று சர்வதேச தரத்திற்குத் தங்களை முன்னேற்றிக் கொள்ள முயன்றார்கள். குழந்தைகள் சுட்டி டிவி பார்க்க தொடங்கினார்கள். தாத்தாக்களும் பாட்டிகளும் முரசு டிவி பார்க்கத் தொடங்கினார்கள்.

            மொபைல்களின் வருகை டிவிக்களை ஓரம் கட்டத் தொடங்கிய போது ஆப்புகள் ஆப்படிக்கத் தொடங்கின. ஒரு படத்தை ஒரு நிமிடம் பார்ப்பது கூட கடினமாகத் தொடங்கிய போது டிரெய்லர்கள் டீசர்களாகச் சுருக்கப் பட்டன. டீசர்களைப் பார்த்தே மக்கள் கதை சொல்லத் தொடங்கினார்கள்.

            எந்தப் படம் எந்தெந்த பிறநாட்டு படங்களிலிருந்து சுட்டெடுத்து வறுத்துப் பொரிக்கப்பட்டு பரிமாறப்படுகிறது என்பதைச் சுட சுட வழங்கினார்கள்.

            இப்போது படம் நன்றாக இருந்தால் மட்டும் ரசித்துப் பார்க்கிறார்கள். இல்லாது போனால் விமர்சனம் செய்து ரசிக்கிறார்கள்.

            ஆனால் இப்போதும் எம்.ஜி.ஆர். – சிவாஜி படங்கள் போல்தான் ரஜினி – கமல் மற்றும் விஜய் – அஜித் படங்கள் கொண்டாடப்படுகின்றன.

            எம்.ஜி.ஆர். – சிவாஜிப் படங்களை அப்போது பிறமொழிப் படங்கள் வந்து முறியடித்ததில்லை. தற்போது விஜய் – அஜித் படங்களை கே.ஜி.எப். – ஆர்.ஆர்.ஆர். போன்ற படங்கள் வந்து முறியடிக்கின்றன.

            எம்.ஜி.ஆர். – சிவாஜி காலத்தில் கிண்டிய மசாலாக்களை அதே தரத்துடன் பாரம்பாரியம் மாறாத நிறம், சுவை, திடத்துடன் விஜய் – அஜித்தும் கிண்டி வருவது தமிழ் சினிமாவின் பாரம்பரியத்தையும் மரபையும் எடுத்துக் காட்டுவதாக உள்ளது. தமிழர் என்றோர் இனமுண்டு, தனியே அவருக்கோர் குணமுண்டு என்று பொருள்பட நாமக்கல் கவிஞர் பாடிய பாடல் வரிகளுக்கு என்றும் பெருமை சேர்ப்பதாகத் தமிழ்ச் சமூகம் நடந்து கொள்வதாகப் புளாங்காகிதம் கொள்கிறது.

*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...