29 Nov 2021

யாராகிய நானும் யாராகிய நீயும்

யாராகிய நானும் யாராகிய நீயும்

ஒவ்வொரு முறைச் சந்திக்கும் போதும்

நான் யார் என்பதைக் கண்டுபிடித்து விட்டாயா என்கிறார்

தொலைந்து விட்ட பொருளைக் கண்டுபிடிப்பது போல

சாமானியமாக இல்லை என்ற போதும்

நான்தான் நீ நீதான் நான் என்கிறேன் நான்

நானெப்படி நீயாக முடியும் நீயெப்படி நானாக முடியும்

நான் நான்தான் நீ நீதான் என்கிறார் அவர்

ஒவ்வொரு பாகமாய்க் கழித்துக் கொண்டு போனால்

பொருள் அங்கிருக்குமா என்று அவர் வினவுகையில்

ஒவ்வோரு பாகமாய்ச் சேர்த்துக் கொண்டு போனால்

பொருள் அங்கு உருவாகி விடும் என்கிறேன் நான்

சூன்யத்தை அடைவதைப் பற்றிப் பேசு என்கிறார் அவர்

இருப்பைப் பேசுவதில் தவறென்ன என்கிறேன் நான்

உனக்கு ஞானம் வேண்டுமா வேண்டாமா என்கிறார் முடிவாக அவர்

உங்கள் சரக்கை உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள் என்கிறேன் நான்

அது சரக்கல்ல கொடுக்கவோ பெறவோ முடியாது என்கிறார் அவர்

பிறகெப்படி உங்களால் விற்பனை செய்ய முடிகிறது என்றதும்

எதையும் பண்டமாய்ப் பார்ப்பதை நிறுத்து என்று சத்தமிடுகிறார்

நான் யார் என்பது குறித்து எனக்கு எந்த பிரச்சனையுமில்லை

நீங்கள் யார் என்பது குறித்துதான் அச்சமாய் இருக்கிறது என்கிறேன் நான்

சாத்தானின் குழந்தையே இங்கிருந்து ஓடி விடு என்கிறார் ஓலமிட்டபடி

அன்றொரு நாள் எல்லாரும் கடவுளின் குழந்தைகள் என்று

நீங்கள் சொன்னது பொய்யா என்கிறேன் நான்

நான் யார் என்ற கேள்வி அர்த்தமிழந்து விட்டதைப் போல

அவர் விச்ராந்தியாய்ப் பார்க்கத் தொடங்குகையில்

நீங்கள் யார் என்பது புரிந்து விட்டது போலப் புன்னகைக்கிறேன் நான்

*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...