30 Sept 2021

நாலு ஊரு தண்ணிய குடிச்சாலும் சளி பிடிக்காது

நாலு ஊரு தண்ணிய குடிச்சாலும் சளி பிடிக்காது

            அப்போ வாய்க்கால் தண்ணிய, கொளத்துத் தண்ணிய, ஆத்துத் தண்ணிய அப்படியே அள்ளிக் குடிச்சிட்டு ஆரோக்கியமா இருந்தாம் மனுஷன். இப்போ சுத்தமான தண்ணின்னு கேன் தண்ணிய வாங்கிக் குடிச்சிட்டு ஆரோக்கியம் இல்லாம நோயாளியா இருக்காம் மனுஷன்.  

            நாலு ஊரு தண்ணி என்னா, நாப்பது ஊரு தண்ணிய குடிச்சாலும் சளி பிடிக்காது அப்போ. இப்போ பாட்டில் தண்ணிய குடிச்சிட்டே சளி பிடிச்சிட்டுதுன்னு நிக்குறாம். எல்லாத்தையும் நாம்ம ரொம்ப அசுத்தம் பண்ணிட்டோம்.

            பொதுவா நம்ம மனுஷங்களுக்கு ஒருகொணப்பாடு இருக்கு. நாம்ம நல்லா இருந்தா போதும், மித்த மித்தது எப்படிப் போனா என்னாங்ற கொணப்பாடுதாம் அது.

            நாமளும் நம்ம வீடும் சுத்தமா இருந்தா போதும், அதெ தாண்டி எது எப்படி இருந்தா என்னாங்ற நெனைப்பு நம்ம மனுஷங்ககிட்டெ அதிகம். இந்த நெனைப்புதாம் வீட்டுக்கு வெளியே ஓடுற சாக்கடையப் பத்தி எந்த சிந்தனையையும் உருவாக்காத மனுஷங்களப் படைச்சிடுச்சு. வெளியில ஓடுற சாக்கடையில நம்ம வீட்டுச் சாக்கடையும் கலந்திருக்குங்ற நெனைப்பு இவுங்களுக்கு வரவே வராது. அது வெளியில ஓடுற சாக்கடைத்தாம், அதுக்கும் நமக்கும் எந்தச் சம்பந்தமும் கெடையாதுங்ற நெனைப்புதாம் உள்ளுக்குள்ள ஓடும்.

            கோயில், சாமி, திருவிழான்னு கூடுற மக்கள் ஊரு உலகத்தெ சுத்தமா வெச்சிக்கணும்ங்றதுக்காகக் கூட மாட்டாங்க. ஒரு காலத்துல இந்த ஆறுங்க எல்லாம் எப்படி ஓடுச்சு தெரியுமா? ஆத்துலயே தண்ணி மொண்டு குடிக்குற அளவுக்கு தேங்காய் தண்ணியாட்டம் ருசிச்சிக்கிட்டு ஓடிச்சு. இப்போ சாக்கடையா ஓடிட்டு இருக்கு. அந்தச் சாக்கடையெல்லாம் நம்ம ஒவ்வொரு வீட்டுச் சாக்கடைதாம். நம்ம ஊரு ஆத்துல ஓடுற சாக்கடையில நம்ம ஒவ்வொரு வீட்டுச் சாக்கடையும் கலந்திருக்குங்றது நெஜம்.

            எது எப்படியோ போவட்டும், நாம்ம நல்லா வாழ்ந்தா போதுங்ற நெனைப்பு கடைசியில எப்படி நம்மை நல்லா வாழ வைக்கும்றதெ யோசிச்சா போதும் நாம்ம மாறுறதுக்கான துவக்கப் புள்ளி அங்கேயிருந்து உருவாகி விடும்.

            இதுல அது மட்டுமில்லாம இன்னொரு விசயமும் அடங்கியிருக்கு. நாம்ம நல்லா வாழணும்ன்னு நெனைச்சு நாம்ம கூட நல்லா வாழ்ந்துடலாம். நம்ம சந்ததிங்க? யோசிச்சுப் பார்த்தா இனுமேலும் நாம்ம போற வழியிலேயே போயிட்டு இருக்க முடியாதுங்றது புரியும்.

            ஆரோக்கியங்கறது சாதாரண விசயமில்ல. அது விலை கொடுத்து வாங்குற சமாச்சாரமும் இல்ல. அது ஒவ்வொருத்தரோட தனிமனித பொறுப்புணர்வுலேந்தும் சமூக பொறுப்புணர்வுலேந்தும் வருது.

            ஒரு நோயாளி போதும் ஊரையே நோயாளியாக்கங்றது இப்போ இந்தக் கொரோனா காலத்துல தெரியுது இல்லையா. சுகாதாரத்துலயும் ஆரோக்கியத்துலயும் நம்ம கூட்டுப் பொறுப்பு வெளிப்பட்டா நம்ம மனுஷங்க இவ்வளவு நோய்களோட திரிய வேண்டியதுமில்ல, நோய்களுக்காக இவ்வளவு காசைச் செலவழிக்க வேண்டியதும் இல்ல.

            எந்த ஊருக்குப் போனா என்ன? அந்த ஊர்ல நல்ல தண்ணி கிடைக்கணும். நல்ல தண்ணின்னா அது இலவசமாத்தாம் கிடைக்கணும். நல்ல சாப்பாடு கிடைக்கணும். நல்லா சாப்பாடுன்னா அது மலிவான விலையிலத்தாம் கிடைக்கணும். நல்ல காத்து கிடைக்கணும். நல்ல காத்துன்னா அதுவும் ஓசியிலத்தாம் கிடைக்கணும். வெலை வெச்சு விக்குற ஆக்ஸிஜன் சிலிண்டர்ல கிடைக்கக் கூடாது. இது மாதிரியான விசயங்க கிடைக்காம அந்த ஊருக்குப் போனா நல்லா சம்பாதிச்சு வாழலாம்ன்னா அதுக்குப் பேரு ஊரா என்ன? அந்த ஊரு வியாதிகளோட கொட்டாரம்தாம். நோயாளிகளுக்கான சுடுகாடுதாம்.

            எது எப்படி இருந்தா என்ன? பணத்தெ சம்பாதிச்சா போதும்ன்னு நினைச்சா, அந்தப் பணத்தைக் கடைசியா வியாதிக்குச் செலவு பண்ண அழிக்க வேண்டியதுதாம். வேற வழியில்ல. பணம் பத்தும் செய்யும்பாங்க. பத்தோட பதினொண்ணா அது வியாதியையும் செய்யும்.

*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...